மதுர ஜில்லா மச்சானே-33
அத்தியாயம்-33
அடுத்த நாள் கிராமத்தின் விடியல் வழக்கம்போல பசுமையோடு பிறந்தது.
இரவு லேசாக பெய்த மழையின் ஈரம் இன்னும் மண்ணில் தங்கியிருந்தது. வீட்டின் பின்புறத் தோட்டத்தில் இருந்த மல்லிகைப் பூவின் வாசனை காற்றோடு கலந்தது.
வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த மீனாட்சி, அடுப்பில் கொதித்த டீயை வடிகட்டி டம்ளர்களில் ஊற்றினார்
அந்த நேரத்தில் வீட்டின் முன் கல்லில் அமர்ந்திருந்த அகிலன், மாட்டுக் கன்றுக்கு தீவனம் வைத்துக் கொண்டிருந்தான்.
"அம்மா... இதுக்கும் தண்ணி வச்சுட்டேன்." "சரிப்பா..." என்று உள்ளே இருந்தபடியே பதில் சொன்னார் மீனாட்சி.
தூரிகா அண்ணன் இருப்பதை பார்த்தும், எதுவும் பேசாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு உள்ளே சென்றாள்.
அதைப் பார்த்த அகிலன் வழக்கம்போல மெல்ல சிரித்தான். அதை கதவோரமாக நின்ற காவ்யா அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
"இவ்வளவு நாள் பேசாத தங்கையிடமும் கோபப்படாமல் இப்படி கொஞ்ச முடியுமா.?" என்று அவள் மனம் மீண்டும் அகிலனை நோக்கி சாய்ந்தது.
அந்த நேரத்தில் ராஜாராமும் அதியமானும் வெளியே வந்து அமர்ந்தனர். "குட் மார்னிங் அங்கிள்." என்றாள்.
"குட் மார்னிங் மா" என்று சிரித்தார் அதியமான்.
மீனாட்சி ஒவ்வொருவரிடமும் டீயை நீட்டினார். அனைவரும் அமைதியாக டீ அருந்திக் கொண்டிருந்தபோது ராஜாராம் தன் மகளைப் பார்த்தார்.
"காவ்யா..." என்று அழைத்தார்.
"சொல்லுங்கப்பா." என்றாள்.
"நேத்து நான் சொன்ன விஷயத்தை யோசிச்சியா?" என்றார்
"எந்த விஷயம்?" என்று கேட்டாள்.
"ஆலியா வீட்டுல பார்த்த வரன்." என்றதும் காவ்யா அமைதியாக இருந்தாள்.
"இப்பவாவது சம்மதமா? நான் பேசட்டுமா? முன்ன தான் இனியன் இனியன்னு மறுத்த. இந்தமுறை பேசி முடிச்சி இனியன் கண் முன்ன கல்யாணத்தை நிகழ்ந்தி காட்டு" என்று கூற, அவள் மெதுவாக மறுப்பாய் தலையசைத்தாள்.
"இல்லப்பா எனக்கு அந்த வரன் வேண்டாம். எந்த வரனும் வேண்டாம்" என்றாள். ராஜாராமின் முகம் உடனே மாறியது. மகள் இனியனுக்காக மணக்காமல் வாழ போகின்றாளா என்ன? என்று கோபப்பட்டார்.
"ஏன்? இப்படி பண்ணற காவ்யா" என்று அதிகம் கண்டிக்கவும் முடியாது நின்றார். இது அவர் வீடு இல்லையே.
"எனக்கு பிடிக்கலப்பா" என்றாள்.
"அப்ப இன்னும் இனியனையே நினைச்சிட்டு இருக்கப் போறியா?" என்றவரது குரல் சற்று உயர்ந்தது.
"அப்படி இருந்தா... நாம இன்னைக்கே கிளம்பிடலாம்." அந்த வார்த்தைக்கு காவ்யா சிரித்தாள்.
"நான் ஏன்ப்பா அவனை நினைச்சிட்டு முட்டாள்தனமா வாழணும்?" என்று முன்னுக்கு பின் முரணாக பேசினாள்.
"அப்ப நான் பார்க்கிற வரனை கட்டிக்க." ராஜாராம் உறுதியாகச் சொல்ல, காவ்யாவின் பார்வை மெதுவாக அகிலனை நோக்கிச் சென்றது.
அவன் அவர்களுடைய பேச்சை கவனிக்காமல், மாட்டுக் கன்றின் கழுத்தை வருடிக் கொண்டிருந்தான்.
அந்தக் காட்சியை சில நொடிகள் ரசித்தவள். மெல்ல திரும்பி தன் தந்தையைப் பார்த்தாள்.
"அப்பா..." என்று கூற தயங்கினாள்.
"என்ன?"
"நான்." என்றவள் ஒரு நொடி இடைவெளி விட்டாள்.
"அவரை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன்." என்று அகிலன் இருந்த திசையை சுட்டிக்காட்டி விரல் நீட்டினாள்.
ஒரே நொடியில்.. அந்த இடமே உறைந்து போனது. ராஜாராம் கையில் இருந்த டம்ளர் ஆட்டம் கண்டது. அகிலனுக்கு தர டீயுடன் வெளியே வந்த மீனாட்சி... அந்த வார்த்தையைக் கேட்டு அப்படியே நின்றுவிட்டார்.
அவருக்குப் பின்னால் ஆங்கில நாளிதழுடன் வந்த அதியமானும் அதிர்ச்சியோடு நின்றார்.
தூரிகாவும் கையில் இருந்த டம்ளரை தவறவிட்டாள்.
"டங்..." என்ற சத்தத்தோடு டம்ளர் கீழே விழுந்தது.
அகிலனும் திரும்பிப் பார்த்தான். என்ன நடக்கிறது என்பதே அவனுக்குப் புரியவில்லை.
"என்னம்மா சொல்ற?" என்று ராஜாராம் அதிர்ச்சியுடன் கேட்டார். "இனியனை பழிவாங்க... அவன் சித்தப்பா பையனான.. தம்பி முறை உள்ளவரை கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறியா?" என்றார்.
"இல்லப்பா." மிகவும் அமைதியாகச் சொன்னாள் காவ்யா. "என் நிலையும்...
அவரோட நிலையும்... ஒண்ணுதான்." என்று தத்துவம் பேச முயன்றாள்.
"காவ்யா..." ராஜாராம் கண்டிப்பாக அழைத்தார்.
"விளையாடாத.. இது மத்த விஷயம் போல இல்லை. நீ இஷ்டத்துக்கு பேச இங்க நீயும் நானும் மட்டுமில்லை." என்றார்.
"நான் விளையாடலைப்பா." என்றாள்.
"கண்ணை மூடிட்டு காதலிச்சதால தான்... இந்த நிலைக்கு வந்திருக்க.
கல்யாணத்தையும் அப்படியே முடிவு பண்ண முடியாது காவ்யா." என்று அவர் கோபமாகக் கூறினார்.
காவ்யா மெதுவாகச் சிரித்தாள்.
"இப்ப நான் கண்ணை மூடிட்டு முடிவெடுக்கலைப்ப." என்று அனைவரையும் ஒரு முறை பார்த்தவள்... மெல்ல அனைத்தையும் பேச ஆரம்பித்தாள்.
"அவருக்கு என்ன குறைச்சல்பா? சொல்லப் போனா... இனியனை விட எல்லா விதத்துலயும் உயர்ந்தவர் தான்". அகிலன் அதிர்ச்சியாக அவளைப் பார்த்தான். "நல்லா படிச்சிருக்கார். பண்பா இருக்கார். அப்பா அம்மா பேச்சுக்கு மரியாதை கொடுக்கறார். தங்கை பேசலைன்னாலும்... அவளோட பின்னாடியே சுத்தி 'தூரிகா... பேசுடா'ன்னு கெஞ்சறார்."
மீனாட்சியின் கண்கள் மெதுவாக நனைந்தன.
"அம்மாவையும்... தங்கச்சியையும் இவ்வளவு அன்பா பார்த்துக்கறவர். நாளைக்கு வர்ற மனைவியையும் நல்லா பார்த்துக்க மாட்டாரா?" என்று கேட்க யாரிடமும் பதில் இல்லை. உண்மை தானே அகிலன் தனக்கென வருபவளை தாங்குவான்.
தந்தை ராஜாராமை பார்த்து காவ்யா மீண்டும் அகிலன் புகழை ஆரம்பித்தாள். "நாம முதல் தடவை சந்திச்சப்ப..
நாம யாருன்னே தெரியாது. ஆனா... உதவி செய்ய ஓடி வந்தார். அதோட மழை வந்துடுச்சுனு விட்டுட்டு போகலை. டிரைவருக்கு மெக்கானிக் நம்பர் கொடுத்தார்.
மழையில நனைஞ்ச நம்மளை ஞேப்பா வீட்டுக்கு கூட்டிட்டு வந்தார்." என்றதும், அதியமான் அமைதியாக மகனைப் பார்த்தார்.
"இங்க வந்தப்பிறகு அவரோட எதிரி...இனியனோட காதலி நான்னு தெரிஞ்ச பிறகும். நம்மளை ஒரு வார்த்தை கூட சொல்லி வெளியே அனுப்பலை." என்றதும் காவ்யாவின் குரல் இன்னும் உறுதியானது.
"ஊர்ல அரசாங்க குழாய் உடைஞ்சப்ப... யாராவது வரட்டும்னு நிக்காம... தானே இறங்கி சரி பண்ணினார். மரக்கன்றுகள் நட்டார். ஸ்கூல் பசங்களுக்கு லைப்ரரிக்குப் புத்தகம் வாங்கி கொடுக்கறார்.
அதுவும் அவரோட சொந்த செலவுல." என்றதும் அகிலன் தலைகுனிந்தான்.
அவனைப் பற்றி இவ்வளவு கவனித்திருக்கிறாளா என்ற வியப்பு அவனுக்கே வந்தது.
"இதையெல்லாம் விட..." சிறிது புன்னகைத்தாள்.
"வீரம்.. காளையை அடக்கறது லேசுப்பட்ட விஷயமில்ல. அன்னைக்கு அந்த வீடியோ பார்த்தப்பவே... அவர்மேல மரியாதை வந்துச்சு. ஏன் இனியன் இவர் மேல கோபமாயிருக்கார்னு அப்ப புரியலை. இப்ப இனியன் தப்புனு புரியவும் அகிலன் ரைட்டுனு தெரிது." ஒரு பெருமூச்சு விட்டாள்.
"இனியனை விட... அகிலன் தான் எனக்கு உயர்ந்தவரா தெரியறார்." என்று கூறி முடித்து அகிலனை தான் கண்டாள்.
"இது சரிவராது." ராஜாராம் எழுந்து நின்றார். "யோசிக்காம பேசற." என்றார்.
"நான் நேத்துல இருந்து நல்லா யோசிச்சுட்டுத்தான் இருக்கேன்ப்பா. எனக்கு இதுல எந்தத் தப்பும் தெரியல." என்று உறுதியாகச் சொன்னாள்.
ராஜாராம் திரும்பிப் பார்த்தார்.
மீனாட்சியும் அதியமானும்...
சில நொடிகளாக அங்கேயே நின்று எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தனர்.
அவர் முகத்தில் சங்கடம் பரவியது. ஆனால்... காவ்யாவோ தயங்கவே இல்லை.
நேராக அவர்கள் இருவரிடமும் சென்று நின்றாள்.
"அங்கிள்..." என்று அதியமானைப் பார்த்தாள்.
"நீங்க தானே அவருக்கு பொண்ணு பார்க்கறீங்க?" அவர் அமைதியாகத் தலையசைத்தார். "உங்க பையன் எந்த பொண்ணு போட்டோவையும் பார்க்கலை தானே?" சிறிது நிறுத்தினாள். அதியமான் தயங்கி நிற்க, "என்னை ஏன் அவர் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது?" என்றாள்.
மீனாட்சி அதிர்ச்சியில் அவளைப் பார்த்தார்.
"ஆன்ட்டி... நான் குட் கேர்ள் இல்லையா?" அந்தக் கேள்விக்கு... மீனாட்சியால் பதில் சொல்ல முடியவில்லை.
அதியமான் ராஜாராமை பார்த்தார். ராஜாராம்
அதியமானைப் பார்த்தார்.
இருவருக்கும் என்ன பேசுவது என்றே தெரியவில்லை.
அவர்களின் அமைதியை உடைத்தவள் காவ்யாதான்.
"ஒருவேளை... உங்க பையன் சம்மதிக்க மாட்டாரோ?"
என்று கேட்டவள் பதில் வரக் கூட காத்திருக்கவில்லை.
மெல்லத் திரும்பினாள்.
அகிலன் நின்றிருந்த இடத்தை நோக்கி, உறுதியான அடிகளை எடுத்து வைத்தாள்.
அவள் நேராக அகிலனின் முன்னால் வந்து நின்றாள்.
அகிலனோ என்ன நடக்கப் போகிறது என்ற பதற்றத்தோடு அவளைப் பார்த்தான்.
"ஏங்க நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டிங்களா?" என்று கேட்டாள்.
அகிலனோ எல்லாரையும் பார்த்து, "உங்க அப்பா சொல்லறது போல நீங்க யோசிக்காம பேசறிங்க. நீங்க உங்க அப்பா சொல்லற நபரை மணந்துக்கலாம். இனியனை பழிவாங்கறதா நினைச்சு என்னை மணக்கற தவறான முடிவை எடுக்க வேண்டாம் அதோட இது சரிப்பட்டு வராது." என்றான் முடிவாக.
"ஏங்க.. நீங்க மதுராவை நேசித்திருக்கிங்க. நான் இனியனை நேசித்திருக்கேன்.
மதுராவுக்கு உங்க அண்ணாவோட கல்யாணம் நடந்ததால், இப்ப நீங்க மதுராவை விரும்பியதை மறக்க நினைக்கறிங்க தானே? அதே போல என்னால மறக்க முடியும். இன்பேக்ட் அவனுக்கு கல்யாணமாகிடுச்சு என்றதும், அவன் என்னிடம் டபுள் கேம் ஆட நினைச்சப்பவே நான் அவனை மறந்துட்டேன்.
அப்படியிருக்க.. உங்க மனசுலயும் என் மனசுலயும் சேம் பீலிங் தான்.
எப்படியும் உங்களை ஒருத்தி புரிந்து கட்டிக்க வர்றப்ப ஏத்துப்பிங்க. அதுக்கு எல்லாம் தெரிந்த நானா இருந்துக்கறேன். இதுல என்ன தப்பு?" என்றாள்.
அகிலன் மறுக்க முயன்று பேசும் போது, "ஆன்ட்டி.. அங்கிள்.. நான் சொல்வது தப்பா? டேடி.. நான் ஏதாவது வியர்டா சொல்லறேன்னா?" என்று கேட்க, ராஜாராமிற்கோ மகள் பேசுவது நியாயமாகப்பட்டது. ஆனால் இவ்வூரில் இம்மனிதர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்களென்ற பயமிருந்தது.
அதுவுமில்லாமல் இனியனை பழிவாங்க இந்த வழி சரியாகவும் இருந்தது. அதியமானுக்கும் கூட அதே எண்ணம் உதித்தது. காலையில் கோவிலில் கூட, ராஜாராம் இதை பற்றி கேட்டார். 'ஏங்க உங்கண்ணா இத்தனை செய்தும் பழிவாங்க தோன்றலை?' என்று கேட்டதற்கு, 'இதுவரை அப்படி நினைப்பு கூட வந்ததில்லை சார். ஆனா அகிலன் விரும்பின மதுராவை கட்டிக்கிட்டு நின்றப்ப எம்பையன் அகிலனுக்காக ஏதாவது செய்யணும்னு தோணும். என்னத்த செய்ய? பழிவாங்கி எல்லாம் பழக்கமில்லை சார். அண்ணனுக்காக விட்டு கொடுத்தே பழகிடுச்சு. ஒருவேளை பழிவாங்க சந்தர்ப்பம் அமைந்தா அடுத்த முறை விட்டுட மாட்டேன்.' என்றார். அதனால் அதியமானுக்கும் காவ்யா பேசபேச அகிலனுக்கு இந்த பெண்ணை மணமுடித்தால் என்ன? அதிலும் இனியன் வெத்து பத்திரத்தில் மதுராவிடம் கையெழுத்து வாங்கியிருக்க, மகன் இன்று மணமுடிக்காமல் நாளை மதுராவை ஒருபரிதாபத்துக்காக மணந்தால்...? அது இந்த நிலையை விட கீழ்த்தரமாக மாறிடுமே என்று பயந்தார். அகிலன் அவ்வாறு செய்ய மாட்டானென்றாலும் பயம் யாரை விட்டது.
அதற்கு காவ்யாவிற்கு மணமுடித்து வைத்தாலாவது இனியனை பழித்தீர்த்தது போலவும் அகிலனுக்கு இப்படியொரு பெண் அமைந்தது போலவும் இருக்குமென்று மனைவியை கவனித்தார்.
கணவன் முகபாவனையில் யூகித்த மீனாட்சியோ, "ஒரு பெத்தவளா... இந்த பொண்ணு அகிலனை பத்தி உசத்தியா பேச பேச மனசுக்கு வேறென்ன வேண்டும். அகிலா... உன்னை உசத்தியா நினைக்கற ஒரு பொண்ணு உன்னை தேடி வந்திருக்காயா?" என்று ஆனந்தமாய் உரைத்தார்.
அகிலனோ தனக்கு திருமணமே வேண்டாமென கத்த தோன்றியது. ஆனால் இங்கே அன்னை தந்தை விடுவதாக
அவர்களது பார்வை புரிய, மறுப்பாய் தலையசைத்தான்.
அவனை போலவே தூரிகாவுமே இது நடக்கக்கூடாது நடக்கவே கூடாது என்பது போல தலையாட்டினாள்.
தொடரும்.
பிரவீணா தங்கராஜ்.
மதுர ஜில்லா மச்சானே !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 33)
ஆக மொத்தம், பெத்தவங்களும் மத்தவங்களும் இப்பக்கூட அகிலனுக்கு கல்யாணம் நடக்கணும்ன்னு நினைக்கலை, அவங்கவங்க ஆதாயத்துக்கு ஏத்த மாதிரி எரியுற வீட்ல உருவுற கொள்ளி லாபம்ங்கிற மாதிரி, அதியமான் மகன் எங்க திரும்பவும் மதுராவையே கட்டிப்பானோ என்கிற பயத்துல மண்டையை ஆட்டுறாரு, ராஜராமுக்கு இனியனை பழி வாங்கணும், மீனாட்சிக்கு அகிலனை உசத்தியா பேசறவளே மனைவியா வரணும்,
அவ முன்னாடி இனியனை லவ் பண்ணியிருந்தாலும் பரவாயில்லை, தூரிகாவுக்கு இனியன் காதலிச்ச பெண்ணோட, இனியனை காதலிச்ச காவ்யாவோட திருமணம் நடக்கக் கூடாது... இப்படி ஆளாளுக்கு ஒரு எண்ணத்துல் அவாய்ட் பண்ண பார்க்குறாங்க. இதுல அகிலன் மனநிலையைப் பத்தி யோசிக்க யாருமில்லை. சொல்லப்போனால் அவனே கூட இல்லை, என்ன கொடுமையடா கோபாலு...?
😔😔😔
CRVS (or) CRVS 2797
-
மதுர ஜில்லா... மச்சானே!-46
39 minutes ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-45
22 hours ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-44
2 days ago
-
மதுர ஜில்லா... மச்சானே-43
3 days ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-42
4 days ago
- 25 Forums
- 215 Topics
- 758 Posts
- 1 Online
- 329 Members
