மதுர ஜில்லா... மச்சானே!-46
அத்தியாயம்-46
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட மதுரா மெதுவாக நடந்து வெளியே வந்தாள். உடல் சற்று தேறியிருந்தாலும், மனம் இன்னும் வெறுமையோடு இருந்தது.
"மதுரா... நம்ம வீட்டுக்கு வந்துடு மா. அங்கேயே போகலாம்." என்று இளையமதி கெஞ்சினார்.
மதுரா மெதுவாக தலையசைத்தாள். ''இல்லம்மா... இப்பவே நான் அப்பா வீட்டுக்கு வந்துட்டேன்னா, 'வாழாவெட்டியா வந்துட்டா'ன்னு ஊரே பேசும். இன்னும் கொஞ்சம் நாள் போகட்டும். ஒரு வருஷம் எப்படியாவது முடிச்சிட்டு வர்றேன்." என்றாள்.
"ஏன்டி... தூரிகா சொல்றா... இனியனிடம் வெற்று பத்திரத்துல கையெழுத்து போட்டுக் கொடுத்திருக்கியாமே. அவன் அதை விவாகர்தது பத்திராமா மாத்திப்பான்னு பேசியிருக்கான்.
அப்படியிருக்க அங்கே எதுக்குடி வாழப் போற?" என்று இளையமதி வேதனையோடு கேட்டார்.
மதுரா அவரைப் பார்த்து சிரிக்க முயன்றாள்.
"நீங்க கட்டிக் கொடுத்த வீடும்மா அது. அனுபவிக்க வேண்டியதை அனுபவிச்சுட்டு வர்றேன்." அந்த பதிலைக் கேட்ட இளையமதி கல்யாண சுந்தரம் இருவரும் கண்கலங்கிப் போனார்.
"துறுதுறுன்னு சுத்திக்கிட்டு இருந்த பொண்ணை இப்படி மாத்திட்டானே... இதுல வீட்டுக்கு வாடின்னா கூட இவளும் வரமாட்டேங்கற. நமக்குக் கிடைச்ச தண்டனைன்னு நம்மளையும் பழி வாங்குறா." என்று அழுதார்.
கல்யாணசுந்தரம் மனைவியின் தோளைத் தட்டினார்.
"ஆசைப்பட்டோம்ல... பெரிய பொண்ணு நல்ல இடத்துல வாழணும்னு. இப்ப விதி என்ன எழுதியிருக்கோ அதைத்தான் அனுபவிக்கறோம்." அதற்கு மேல் யாராலும் பேச முடியவில்லை.
அந்த நேரத்தில் இனியன் காரை கொண்டு வந்து நிறுத்தினான்.
மதுரா எதுவும் பேசாமல் பின்பக்க இருக்கையில் அமர்ந்தாள். அவனுமே அத்தை மாமா பேசியதை செவிக்கொடுக்கவில்லை. அவன் மரம் போல மறித்து இருந்தான். இளையமதி கல்யாண சுந்தர் ஒரு பக்கம் நிலானி வீட்டில் இருக்க அவளையாவது நன்றாக வளர்க்க முனைந்து சென்றனர்
தூரிகாவும் மதுரா இனியனுடன் ஏறினாள். சிறிது தூரம் சென்றபின் மதுரா கண்ணாடி வழியாக, "உன்னை வேண்டும்னா வீட்டுல இறக்கிடவா?" என்று தூரிகாவிடம் கேட்டாள்.
"வேண்டாம் அண்ணி. முதல்ல உங்களை வீட்டுல விட்டுட்டு ரெஸ்ட் எடுக்க வச்சிட்டு அப்புறம் நான் போறேன்." என்றாள்.
மதுரா அதற்குபின் வற்புறுத்தவில்லை.
வீட்டிற்கு வந்ததும் வேல்விழி ஆரத்தி எடுத்துக் கொண்டு உள்ளே அழைத்துச் சென்றார்
"காபி குடிச்சிட்டு படுத்துக்கோ மா." என்று அன்போடு கூறினார். மதுரா அமைதியாகக் காபியைக் குடித்துவிட்டு அறைக்குள் சென்றாள்.
அருளாளனும் வேல்விழியும் அவள் ஓய்வெடுக்கட்டும் என்று வெளியேறினர்.
இனியன் மட்டும், "தூரிகாவை வீட்டுல விட்டுட்டு வர்றேன்." என்று சொல்லிவிட்டு மீண்டும் காரை எடுத்தான்.
தூரிகா காபி குடித்துவிட்டு இனியனுடன் காரில் பயணித்தாள்.
"அண்ணா..." என்று இனியனை அழைக்க, கார் ஓட்டியபடி திரும்பிப் பார்த்தான்.
மதுரா அண்ணியை கஷ்டப்படுத்தாதீங்க அண்ணா." என்றதும் அவன் புருவம் சுருங்கியது. சின்ன பெண் அறிவுரை வேறு கூறப் போகின்றாளென்று.
"அது ரொம்ப நல்ல பொண்ணு அண்ணா. நான் அகிலன் தங்கச்சியா சொல்லலை. எப்படி எடுத்துச் சொல்றதுன்னு தெரியல... ஆனா மதுரா மனசுக்கு இவ்வளவு கஷ்டம் கடவுள் கூட தரக்கூடாது அண்ணா. நாங்க உங்களை எப்பவும் போட்டியாவோ, உங்களை மீறி வளர்ந்து உங்களை மட்டம் தட்டணும்னோ அப்பா நினைச்சதில்லை. அகிலன் அண்ணன் கூட நினைக்கலை. இந்த காவ்யாவை கல்யாணம் கட்டிக்கிட்டது கூட அவங்க தான் அகிலன் அண்ணன் முன்ன வந்து கேட்டுச்சு. அப்ப கூட அண்ணன் மறுத்ததுக்கு என்னென்னவோ சொல்லிடுச்சு.
பெரிப்பாவுக்கு என்ன கோபமோ, உங்களுக்கு என்ன கோபமோ, எதையாவது மனசுல வச்சி மதுராவை காயப்படுத்தாதிங்க." என்றதற்கு இனியன் அமைதியாகவே இருந்தான்.
"தயவு செய்து... அண்ணியை அத்துவிடாதீங்க. நல்லா பார்த்துக்கோங்க." இனியன் பதில் சொல்லவில்லை.
ஒரு கணம் தூரிகாவைப் பார்த்தவன், அகிலன் வீட்டிற்கு முன்காரை நிறுத்தினான். தூரிகா பேசியதற்கு எவ்வித பதிலும் உரைக்கவில்லை.
அகிலன் வீட்டில் தேங்காய் மூட்டைகளை எடைபோடும் மின்னணு தராசின் முன் நின்று ஒரு பெட்டியை எடுத்து வைத்து பார்த்துக் கொண்டிருந்தாள் காவ்யா.
"அத்தை... இருபது கிலோ இருக்கு. இன்னும் ஐந்து கிலோ ஏத்தலாமா? வேற ஏதாவது மூட்டை வைக்கணுமா?" என்றதும் மீனாட்சி சிரித்தார்.
"அகிலனைக் கேளும்மா." என்றார் அவர்.
"ஏங்க... ஏங்க..." என்றவள், 'பச்.. கூப்பிட்டா அலாவுதீன் பூதம் கணக்கா முன்னாடி வர்றதில்லை.' என்று முனங்கிவிட்டு "அகிலா." என்றாள்.
உள்ளிருந்து அகிலன், "ஏலம் விடாத காவ்யா.. வந்துட்டேன்." என்று வந்தான்.
தராசைப் பார்த்தவன், "இருபது கிலோ போதும். அதுக்கு மேல வைக்க வேண்டாம். எல்லா ஊரில் இப்ப எல்லாம் கிடைக்குது. அதோட பத்து நாள் தானே." என்று கடிந்தான்.
தூரிகாவை இறக்கிவிட்டு கிளம்பும் முன் இனியன் இதை காண நேர, தூரிகாவோ கார் கிளம்பாமல் இருக்கவும்,
"இனியன் அண்ணா... நாளை மறுநாள் அகிலன் அண்ணாவும் காவ்யா அக்காவும் வெளிநாடு கிளம்புறாங்க. அங்க அவங்க நாட்ல ரிசப்ஷன் முடிஞ்சு பத்து நாள்ல திரும்பிடுவாங்க. காவ்யா அக்காவோட அப்பா மட்டும் அங்க இருக்கற வேலைகளை முடிச்சுட்டு கொஞ்ச மாசம் கழிச்சு வருவாராம்.
இனியன் அண்ணா.. வீட்டுக்கு வந்துட்டுப் போறீங்களா?" என்று கேட்டாள்.
இனியன் சோர்வாகத் தலையசைத்தான்.
"அப்புறமா வர்றேன்மா... மனசு சரியில்லை. உங்க மதுரா அண்ணி மேல இனி காயப்படுத்தற மாதிரி எதுவும் செய்யமாட்டேன்" என்றான்
அவ்வளவுதான். கார் மீண்டும் மதுரா இருக்கும் வீட்டை நோக்கிப் புறப்பட்டது.
'அட யார் காரு. இனியன் வந்தானா? அவனை இருக்க சொல்லி காபி டீ போடலாம்ல" என்று மீனாட்சி அப்பொழுது தான் கவனித்து கூற, தூரிகாவோ "பச் அவர் டீ காபி குடிக்கற மூட்ல இல்லை." என்று சின்ன அண்ணனை கண்டு முகம் திருப்பி சென்றாள்.
"இனியன் அண்ணா மூட் சரியில்லைனு அவனிடம்.. சாரி.. சாரி அவரிடமெல்லாம் பேசிட்டு போறா உங்க தங்க. இங்க நீங்களும் தான் அவ பேசலைனு முகம் வாடி இருக்கிங்க. இதெல்லாம் கண்ணுக்கு தெரியாதா? இருந்தாலும் இந்த நாத்தனார் பார்ஷியாலிட்டி பார்க்குதுப்பா" என்று அகிலனிடம் கூறினாள்.
"நாம அதுக்கு ஒன்னும் பண்ண முடியாது. சில நேரம் நாம எதுவும் செய்யாம இருந்தாலே நல்லது நடக்கும்னு சொல்வாங்களே. அது போல விட்டுடணும்" என்றான் அகிலன்.
'ம்கூம்.. ஒன்னும் செய்யாம பேபிக்கு தர்ற முத்தம் மாதிரி தந்து எஸ்கேப் ஆகறது. இருடி.. அமெரிக்கால ரிஸப்ஷன் மட்டுமில்ல.. பஸ்நைட்டே கொண்டாடிட்டு தான் திரும்பறது' என்று முடிவெடுத்தவளாக நின்றாள் காவ்யா.
"ஏதாவது சொன்னியா?" என்றான் அகிலன். இல்லை என்று காவ்யா தலையாட்ட அகிலனோ 'ஏதாவது முனங்கிட்டே கிடக்கறது. கேட்டா ஒன்னுமில்லைனு தலையாட்டறது' என்று அவனும் முனங்கினான்.
இந்த மூன்று நாட்களாக நன்றாக தான் இருவரும் பேசிக் கொள்கின்றார்கள். அகிலனிடம் செல்லம் கொஞ்சி, சிணுங்கி, அவனை தொட்டு பேசி, அணைத்து கொள்வதெல்லாம் காவ்யா அவளிஷ்டம் போல செய்ய, அகிலன் அவளது கை பிடித்து, தோளில் சாய்த்து, முத்தத்திற்கு பதில் முத்தம் எல்லாம் தந்து அவனால் முடிந்த முதலடிகளை எடுத்து வைத்து முயல்கின்றான். ஆனாலுமே அதை தாண்டி இருவருமே அடியெடுத்து வைக்கவில்லை.
---
இங்கே வீட்டுக்குள் நுழைந்த இனியன், மதுரா இருந்த அறைக்கதவை மெதுவாகத் திறந்தான்.
மெத்தையில் சாய்ந்து, ஜன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டிருந்த மதுரா, இனியன் காலடி சத்தம் கேட்டு மெதுவாகத் திரும்பினாள்.
இருவருக்கும் இடையே சில நொடிகள் அமைதியே பேசிக் கொண்டிருந்தது.
இனியனே பேச்சை ஆரம்பித்தான். "உடம்பு பரவாயில்லையா?" என்று கேட்டான்.
"ம்." என்று மட்டும் தலையசைத்தாள். சில நிமிடம் அவன் உடலை பற்றி கேட்கவும், "ஒன்னா இருக்கறதுக்கு இன்னும் ஒரு மாசம் ஆகட்டும்னு டாக்டர் சொன்னாங்க" என்றாள்.
திடீரென்று இனியன் சிரித்தான்.
அந்தச் சிரிப்பில் சந்தோஷம் இல்லை. வலி மட்டுமே இருந்தது.
"ஏன்.. மறுபடியும் ஏதாவது குழந்தை உருவானா அழிக்கணுமா? அவ்வளவு ஆர்வமா" என்றதும் மதுரா அவ்வார்த்தையில் துடித்தாள்.
"அன்னிக்கு கிச்சன்ல ரத்த வெள்ளத்தில இருந்தியே டி. அப்பவே என் பாதி உயிர் போயிடுச்சு. இதுல டாக்டர்... 'குழந்தைய காப்பாத்த முடியல'ன்னு சொன்னப்ப..." என்றவன் குரல் தடைப்பட்டது.
"என் காதுல எதுவுமே விழல. செத்துட்டேன்டி.. செத்துட்டேன்" என்றவன் கண்களை மூடி நின்றவன், "என்னோட குழந்தை..." என்று சொல்லிவிட்டு சுவரில் தன் கையை வைத்து குத்துவிட்டான்.
சுவரில் அவன் கை முஷ்டி இடிபோல இடித்ததை கண்டு பயந்தாள்.
"என்னோட ரத்தத்துல உதிக்கும் என்ற ஒரே காரணத்துல அழிச்சிட்டியே" என்றான்.
அவன் குரல் கரகரத்தது.
"ஒரு தடவையாவது... ஒரே ஒரு தடவையாவது... அந்த குழந்தை பிறந்து வளர்ந்தா எப்படி இருந்திருக்கும்னு யோசிச்சியா? அந்த குழந்தை பொண்ணா.. பையனா...? என் மூக்கு மாதிரி இருக்குமா? உன் கண் மாதிரி இருக்குமா ஏதாவது யோசிச்சியா? இந்த உலகத்துல உன்னையும் என்னையும் மாதிரி அப்பா அம்மா கிடைப்பாங்கனு தெரியாமலேயே ரத்தத்தோட ரத்தமா அனுப்பிட்ட." என்று தலையைப் பிடித்துக் கொண்டான்.
அவன் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. அந்த அழுகையைப் பார்த்த மதுராவின் விரல்கள் நடுங்கின. இனியனுக்கும் அவனது குடும்பத்துக்கும் தரப்படும் தண்டனை என்று தான் மதுரா நினைத்தது. ஆனால் அவளுக்கு டி.என்.சி செய்தப் பொழுது அவளுக்கு காட்டப்பட்ட சிறு உருவமற்ற வட்டவடிவ உயிரை கண்டு அவளுமே துடித்துவிட்டாள்.
அந்த வலியும் வேதனையும் அனுபவித்த வலியினால் எதுவும் பேசவில்லை.
சில நொடிகளுக்குப் பிறகு இனியன் முகத்தைத் துடைத்துக் கொண்டான்.
"உன்னை மட்டும் திட்டணும் கொல்லணும்னு மனசு சொல்லுது. ஆனா... நீ இப்படி ஆகற அளவுக்கு காரணம் யாருன்னு யோசித்தா நானும் தானே குற்றவாளி. உன்னை ஒவ்வொரு நாளும் வார்த்தையால கொன்றிருக்கேன், பயமுறுத்தி இருக்கேன்.. உனக்குனு என் மேல நம்பிக்கையே இல்லாம நடந்திருக்கேன். உ..உன்.. உன்னை கற்பழிச்சிருக்கேன் ரைட்.. அதனால தானே நீ.. எனக்கு பெரிய தண்டனை தந்துட்ட... என் கு..குழந்" என்றவனால் அந்த வார்த்தையைச் சொல்ல முடியவில்லை.
திடீரென்று கண்களைத் திறந்தான். இனியன் பார்வை மீண்டும் கடினமாயிற்று. வேகமாக பீரோவை திறந்து அன்று இவளிடம் வெத்து பத்திரத்தில் வாங்கிய கையெழுத்தை கொண்டு வந்து சுக்குநூறாக கிழித்து அவள் கண்ணெதிரே வீசினான்.
"பாரு... ஒன்னுமே எழுதாத பத்திரம். வெத்து பத்திரம். இதுல கையெழுத்து வாங்கியதால உன்னை விட்டுடுவேன்னு முடிவே கட்டிட்டல்ல.. நான் தான் அப்படி பேசியது. உன்னிடம் முரட்டுத்தனமா நடந்தது. நீயா முரண்டு பிடிக்காம வந்தப்பிறகு, நான் ஏதாவது உன்னை அடிச்சேன்? காயப்படுத்தினேன்? டீயை ஊத்தியதும் உங்கப்பா போலீஸை அழைச்சிட்டு வந்ததும் அதுக்கு பிறகு நான் உன்னிடம் கேவலமா நடந்துக்கிட்டேன்னு எனக்கே புரியவும் அந்த மாதிரி ஆக்டிவிட்டிஸை குறைச்சிட்டேனே.
அதெல்லாம் நீ யோசிக்கவேயில்லை. உன்னை கட்டிக்கிட்ட முறை பழிவாங்க என்றதாலும், உன்னிடம் முதல்ல சில நாள் முரட்டுத்தனமா நடந்துக்கிட்டதாலும் மட்டும் தண்டிச்சிட்ட. என்னை தண்டிச்சிட்ட.. இல்லை.. நம்ம குழந்தையை ஏன்டி தண்டிச்ச?உனக்கு என் மேல கோபமிருந்தா, வெறுப்பிருந்தா, பழிவாங்கற எண்ணம் உருவாகினா, என்னை தண்டிக்க, எவ்வளவோ வழி இருக்கே. என்னை உங்கப்பா கூட்டிட்டு வந்த போலீஸ்ல மாட்டி விட்டு கம்பி என்ன வச்சியிருக்கலாமே. இல்லை நீயே போலீஸ் ஸ்டேஷன் போய் கம்பிளைன் பண்ணிருக்கலாம்.
எனக்கு சோத்துல விஷம் வச்சிருக்கலாமே. இல்லையா.. வாழவெட்டியா நீ மட்டுமா இருக்க போற. எனக்கும் அதே பெயர் பொண்டாட்டி விட்டுட்டு போயிட்டானு பெருமையா சொல்லற மாதிரி மாத்தியிருக்கலாமே.
ஒரு தப்பும் செய்யாத நம்ம குழந்தையை ஏன்டி பலியாக்கின? அந்த உயிரை உருத்தெரியாம பண்ண வேண்டிய அவசியம் என்ன?" என்றதும், மதுராவின் கண்களிலும் கண்ணீர் வழிந்தது.
"நா..நான்..." என்று தொடங்கினாள் மதுரா.
இனியன் உடனே கையை நீட்டி தடுத்தான். "வேண்டாம். இப்ப எந்த விளக்கமும் வேண்டாம். என்னால கேட்க முடியாது. உன் மேல கோபப்படணும்னு தோணுது. அதே நேரம்... உன்னை இந்த நிலைக்கு கொண்டு வந்தது நான் என்பதால் அதையும் பண்ண முடியலை. என்னையே நான் வெறுக்க ஆரம்பிச்சிட்டேன் டி" என்றான்.
இனியன் மெதுவாக கதவை நோக்கி நடந்தான். கைப்பிடியில் கை வைத்தபடியே நின்று, "இப்ப நீ செய்த தப்புக்கு உன்னை மன்னிக்கிற நிலையிலையும் நான் இல்ல... உன்னை தண்டிக்கிற மனநிலையிலையும் நான் இல்ல. நான் செய்த தப்புக்கா நீ தந்த தண்டனையை தாங்கமுடியாம, இப்ப என்னையே புரிஞ்சிக்க முடியாமவும் நிக்கறேன்." என்று சொல்லிவிட்டு வெளியேறினான்.
மதுரா அப்படியே அமர்ந்திருந்தாள். அவன் சென்ற கதவையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது கண்ணீர் மட்டும் அமைதியாக வழிந்தது.
உண்மை தானே.. ஒரு பாவமும் அறியாத குழந்தையை ஏன் தண்டித்தோம். தனக்கே தண்டனையாக அல்லவா இந்த வலி உணர்த்தி விட்டதேயென துடித்தாள்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்
Kindly Register Login To Read.
Thank u Readers
-
மதுர ஜில்லா... மச்சானே!-45
21 hours ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-44
2 days ago
-
மதுர ஜில்லா... மச்சானே-43
3 days ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-42
4 days ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-41
5 days ago
Currently viewing this topic 1 user ( thangamani ) and 1 guest.
Recently viewed by users: Dharsinipriya 11 minutes ago, Spr 29 minutes ago, kothaihari 25 minutes ago, Praveena Thangaraj 37 minutes ago.
- 25 Forums
- 214 Topics
- 753 Posts
- 37 Online
- 329 Members
