மதுர ஜில்லா... மச்சானே!-22
அத்தியாயம்-22
மதுரா தாயின் கையை இறுகப் பற்றிக் கொண்டாள்.
"அம்மா... எனக்கு பயமா இருக்கு... நேத்து..." என்று தொடங்கியவளின் குரல் உடைந்து போனது.
இளையமதி அவளை அமைதியாகப் பார்த்தார். கணவர் அண்ணனிடம் பேசிக்கொண்டிருக்க, மகளை கிச்சன் பக்கம் அழைத்து வந்திருந்தார்.
"என்னம்மா?"
"என்னால முடியலம்மா... நான் நம்ம வீட்டுக்கு வந்துடறேன். இவர் என்னை" என்று மேலும் பேச முடியாமல் அழுதாள்.
அவள் சொல்ல வருவதெல்லாம் புரிந்திருந்தாலும், இளையமதி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. "மதினி எல்லாம் சொல்லிட்டாங்க மதுரா. புருஷன்காரன்னா பொண்டாட்டியை நெருங்கத்தான் செய்வான். அதுக்கெல்லாம் இப்படி சின்னப் பிள்ளை மாதிரி அழுதுட்டு இருந்தா எப்படி?" மதுரா அதிர்ச்சியுடன் தாயைப் பார்த்தாள்.
"அம்மா..." என்று திகைக்க,
"இங்க பாரு... நீ அகிலனை நினைச்சதும், அகிலன் உன்னை நினைச்சதும், இங்க யாருக்காவது தெரிய வந்தா, ஊரே வேற மாதிரி பேசும். அதான் பெரிய பிரச்சனையா மாறிடும்." சில நொடிகள் இடைவெளி விட்டு, "இனியன் உன்னை விரும்புறாரு. உன்னோட வாழ்க்கையை ஆரம்பிக்கத்தான் முயற்சி பண்றாரு. நீ தான் அவரை பிடிக்காதவரா பார்த்துட்டே இருக்க. அதான் அவர் நெருங்கினாலே உனக்கு எல்லாமே தப்பா தோணுது."
மதுராவின் கண்களில் மீண்டும் நீர் நிரம்பியது.
"அம்மா... என் உடம்புல இருக்குற காயத்தை பார்த்தா... இப்படி பேச மாட்டீங்க..." என்றவள் குரலில் இருந்த வேதனை கூட இளையமதியின் எண்ணத்தை மாற்றவில்லை.
"ஏன்டி... முதலிரவுக்குப் பிறகு சின்னச் சின்ன காயம் வராம இருக்குமா? அதெல்லாம் சகஜம். அதுக்காக இப்படி உலகமே அழிஞ்ச மாதிரி அழக்கூடாது."
அந்த ஒரு நொடியிலேயே...
மதுராவுக்கு புரிந்துவிட்டது.
அன்னை தன்னை நம்பப் போவதில்லை.
வேல்விழி அத்தையாவது குறைந்தபட்சம் பதறி மருந்து போட்டார்... காய்ச்சலுக்கு மாத்திரை கொடுத்தார். தன்னைக் கவனித்தார். ஆனால் தன் அம்மா... தன் கண்ணீரையே குழந்தைத்தனமாகப் பார்க்கின்றார். அகிலனை மணக்க முடியாத பட்சத்தில் நான் ஏதோ இனியன் மச்சானுக்கு அவப்பெயரை உருவாக்குவதாக நினைக்கின்றார் என்று புரிய, அதற்குப் பிறகு மதுரா எதுவும் பேசவில்லை.
அவள் முகத்தில் இருந்த அழுகையும் மெதுவாக வற்றிப் போனது. அசையாமல் அமர்ந்திருந்தாள்.
அவள் அருகே வந்து அமர்ந்தான் இனியன்.
"என்னாச்சு? அத்தை எல்லாம் புரிய வச்சிருப்பாங்களே... இதெல்லாம் சகஜம்னு." என்றதும் மதுரவாணியிடம் பதில் இல்லை.
"நீ தான் தேவையில்லாம பயப்படுற மதுரா" என்றதும் மதுரவாணி அவனை ஒருமுறை பார்த்தாள்.
அந்த பார்வையில் பயமும் இல்லை... கோபமும் இல்லை...
வெறுமை மட்டுமே இருந்தது.
அந்த வெறுமையைப் புரிந்து கொள்ளும் மனநிலை இனியனுக்கு இல்லை.
அந்த நேரத்தில், வேல்விழியும் இளையமதியும் சமையலறை அருகே பேசிக் கொண்டிருந்தனர்.
"நேத்து கொடுத்த முறுக்கு ரொம்ப நல்லாருந்துச்சு மதி. வந்திருந்தவங்க எல்லாரும் பாராட்டிட்டுப் போனாங்க."
இளையமதியின் முகத்தில் சிறு பெருமை.
"அதெல்லாம் நீங்க சொல்லிக் கொடுத்த பக்குவம் மதினி."
இருவரும் இயல்பாகப் பேசிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் அருளாளன் கல்யாண சுந்தரத்திடம் பேசிமுடித்து, வெளியிலிருந்து உள்ளே வந்தார்.
"வாங்க அண்ணே..." என்று எழுந்து நின்றார் இளையமதி.
மதுரா மட்டும் அவரைப் பார்த்ததும் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
'இவ்வளவு வன்மத்தை வளர்த்து விட்டு பேசுற மனுஷனே இவர் தான்' என்ற எண்ணமே அவள் உள்ளத்தில் ஓடியது.
அந்தச் சமயம் இனியனின் கைப்பேசி அதிர்ந்தது.
திரையில்... Kaviya Calling... என்று காட்ட அவன் உடனே சுற்றிலும் பார்த்தான்.
அன்னை, தந்தை, மதுரா...
மூவரும் கீழே இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டவன்,
எப்படியும் அத்தை மாமா மாடிக்கு வரமாட்டார்கள் என்று சத்தமில்லாமல் மாடியறைக்குச் சென்றான்.
கதவை மூடிவிட்டு காதலியின் அழைப்பை ஏற்றான்.
"சொல்லு காவ்யா..." என்றவன் பேச்சில் முன்பிருந்த வழிசல் இல்லை. அடுத்த முனையில் சிரிப்பு.
"ஹேய் இனியன்... ஆலியா மேரேஜ் முடிஞ்சிடுச்சு. இப்பதான் டைம் கிடைச்சது. அதான் கால் பண்ணேன். ஆன்ட்டியும் அங்கிளும் என்ன சொல்றாங்க? ஏதாவது மாற்றம் தெரியுதா?" என்றாள்.
இனியன் ஒரு நொடி அமைதியாக இருந்தான். இங்கு இவனிடம் தான் மாற்றம் உண்டானது. திருமணமானதை மறைத்து, மதுராவிடம் தாம்பத்திய சுகம் கண்டவன், காவ்யாவிடம் இயல்பாக உரையாட முடியாது ம்ம்' கொட்ட மட்டும் ஆரம்பித்தான்.
"உங்கப்பா முரண்டு பிடிச்சாலும் பரவாயில்லை இனியா... நீ அம்மா செல்லம் தானே. ஆன்ட்டியையாவது நம்ம பக்கம் பேச வைக்கலாமே.. ஆன்ட்டி இருந்தா கொடுடா.. நானே பேசறேன். எங்களுக்குள்ள ஒரு பாண்டிங் கிரியேட் ஆகட்டும்." என்றாள்.
'அம்மாவா...' என்று மனதுக்குள் சிரித்தான். 'இப்போ மதுராவையே நினைச்சு கலங்கிட்டு இருக்காங்க... இதுல காவ்யாவைப் பற்றி எப்படி பேச வைக்கிறது?' என்று வெளியில் மட்டும் சமாளித்தான்.
"அதெல்லாம் பிறகு பாத்துக்கலாம் காவ்யா. இப்ப சூழ்நிலை கொஞ்சம் வேற மாதிரி இருக்கு. உனக்கு சொன்னா புரியாது." என்றான்.
"போடா.. நீ அங்கயிருக்க. நான் இங்க இருக்கேன். நமக்குள்ள பேசறதே குறையுது. இங்க அப்பா அதான் சாக்குன்னு ஆலியா வீட்டு சைட்ல கூட மாப்பிள்ளை பார்த்தார் தெரியுமா. அவன் இந்த பிசினஸ் பண்ணறான். அந்த பிசினஸ் பண்ணறான். உன்னை கூட கேட்டாங்கனு கொக்கி போட்டார்." என்றாள்.
இனியனுக்கோ காவ்யாவின் தந்தை மீது கோபம் உண்டானது. அவருக்கு ஏனோ தன்னை பிடிக்காமல் போனது ஒரு காரணம்.
"நீ தான் தூரமா இருக்க. வீடியோ கால் கூட வேண்டாம்னு சொன்னது நீ தான். பிசினு சொன்னேன். ஆனா என்னை விட நீ தான் அதிக பிசி." என்று எப்பொழுதும் போல காவ்யா மீதே குற்றத்தை மாற்றினான்.
"எப்பா சாமி நான் தான் காரணம். சாரி... அண்ட் சரி... அடுத்த தடவை வீடியோ கால் பேசலாம். இங்க எல்லாரும் இருக்காங்க. அப்பா கூட பக்கத்துல வர்றார். லவ் யூ இனியன்." என்றாள்.
"லவ் யூ காவ்யா..." என்று அழைப்பு துண்டிக்கப்பட்டது.
கைப்பேசியை மெதுவாக கட்டிலில் போட்டவன், தலையைப் பின்னால் சாய்த்துக் கொண்டான்.
"இவ வேற..." ஆழமாக மூச்சை இழுத்தான். "இன்னும் பன்னிரெண்டு மாசம்... எப்படி சமாளிக்கப் போறேனோ... இவ அப்பனுக்கு தெரிந்தா அவ்வளோ தான்." என்று தனக்குத்தானே புலம்பியபடி கண்களை மூடிக் கொண்டான்.
இனியனுக்கு ஊரில் அகிலனின் நிலைமை என்னவென்று அறியும் ஆவலுடன் தந்தையை அணுக கீழேயிறங்கினான்.
கல்யாண சுந்தரம் மாமா அப்பாவும் பேசுவதால் வேடிக்கை பார்த்தான். இளையமதியோ "மாசத்துக்கு ஒரு நாள் வந்து எட்டி பார்த்துட்டு போறேன். ஏதாவதுனா மாப்பிள்ளை போன்லயிருந்து கூப்பிடு" என்று இளையமதி கூறிடவும், மதுரா சிவனெயென்று இருந்தாள்.
அவளுக்கு முதல் முறையாக சின்ன மாமா அதியமானின் தங்கையாக காணவில்லை. பெரிய மாமா அருளாளனின் தங்கையாக தான் இளையமதி கண்ணுக்கு தெரிந்தார்..
கல்யாண சுந்தரமோ "அம்மாடி... அப்பா வரட்டா" என்று கேட்டு நின்றார்.
இருவரையும் பார்த்து அழுதபடி மாடிக்கு ஓடினாள். 'போய் வாருங்கள்' என்று கூட வழியனுப்ப மதுராவால் முடியவில்லை.
இனியன் தான் "நான் சமாதானம் செய்துக்கறேன் அத்தை. நிலானி வந்திருக்க போறா. நீங்க பாருங்க" என்று வழியனுப்பினான்.
இளையமதிக்கு லேசான வருத்தம் இருந்தாலும், எங்கே ஆதரவு தரும் விதமாக பேசினால் இங்கிருந்து வந்து பிறந்த வீட்டில் அடைந்துக் கொண்டால் அசிங்கமாயிற்றே என்று புறப்பட்டார்.
அருளாளனோ "இந்த பொட்டக்கழுதைக்கு என்ன அதுப்பு பார்றேன். பெத்தவங்க போறாங்க முகத்தை திருப்பிட்டு போகுது. இனியா... இதெல்லாம் தொடர விடக்கூடாது. பேசற விதத்தில் பேசிடு. இந்தாடி... பொட்டப்புள்ள இல்லைன்னு தலைக்கு மேல தூக்கி வைக்காத" என்று வேல்விழிக்கும் அர்ச்சனை நிகழ்ந்தது.
இனியன் வந்த பொழுது முட்டிக்கட்டி அழுத மதுராவின் முதுகை தான் கண்டான். குலுக்கி அழவும், அவளது தோள்கள் அதிர, இனியன் மென்தீண்டலில் முதுகில் பதிய வைத்திட, திடுக்கிட்டு எழுந்துக் கொண்டாள்.
"அத்தை மாமா போயாச்சு. அவங்க மேல என்ன கோபம்? மதுரா.. ஏய்." என்று கையை பிடிக்க, கையை பின்னால் மறைத்துக் கொண்டாள்.
"ப்ளீஸ்... நான் நமக்கு நடந்த கல்யாணத்தையே ஜீரணிக்க முடியாம இருக்கேன். எனக்கு கொஞ்சம் அவகாசம் தாங்க" என்று வார்த்தையை உதிர்த்தாள். சாட்சிக்காரனிடம் காலில் விழுவதை காட்டிலும் சண்டைக்காரன் காலில் விழுவது மேல் என்று இனியனிடம் கெஞ்சினாள்.
இனியனுக்கு சொல்லக் கூடாதென்று மனம் நினைத்தாலும், மூளை கட்டுப்பாட்டை இழந்தது. இளையமதி மதுரவாணி பேச்சை கேளாமல் சென்றது ஒரு காரணமாக கூட இருக்கலாம். மதுரவாணி இவனது நெருக்கத்தை தள்ளி தள்ளி செல்வதும் கோபத்தை பன்மடங்கு கூட்டியதும் ஒரு காரணமாக அமைந்தது.
"நானும் பார்க்கறேன். அதென்னடி.. நான் தொட்டா ஒதுங்கி போயிட்டே இருக்க. அவன் தொட்டா இனிக்குதோ?" என்றான்.
மதுரவாணியால் அதிர்ச்சி மாறாத விழியால் இனியனை நோக்கினாள்.
"தெரியாதுனு நினைச்சியா? சீம்பால் பாத்திரத்தை தர வந்தப்ப, அந்த அகிலன் பைக் சத்தம் கேட்டு குடுகுடுனு ஓடி கீழே விழந்து அவன் பிடிக்க, நீ ஸ்தம்பிக்க, அவன் இடுப்பிலிருந்து கையை எடுக்கவேயில்லையே. அப்ப மட்டும்... சுகமா இருந்ததா? நான் தொடறப்ப விலகற.
அவனும் மாமன் மகன். நானும் மாமன் மகன். இதுல நான் தாலி கட்டியிருக்கேன். எந்த விதத்துல என் தீண்டல் உனக்கு குத்துது?" என்றான் கோபத்துடன்.
மதுரவாணி அழுகையோடு தேம்பி, "நீங்க அப்ப வேண்டுமின்னே தானே என்னை கல்யாணம் கட்டியிருக்கிங்க? உங்களுக்கு என்மனசுல அகிலன் மச்சான் இருந்தது தெரியும் தானே? அப்ப.. ஏட்டிக்கு போட்டியா என்னை கட்டியிருக்கிங்க? அப்படி தானே?" என்று தைரியம் வரவழைத்து கேட்டாள்.
"பின்ன.. உன்னை யாரு கட்டிப்பா. அவனை பழிவாங்க தான் உனக்கு தாலி கட்டியது. ஆமா.. அவனை காதலிச்சிட்டு என்னை எப்படி கட்டிக்க வீட்ல சம்மதிச்ச? அத்தை அரட்டி மிரட்டினாங்களா" என்று உண்மை வன்மத்தை கக்கினான்.
அவளது அழுகையிலேயே இளையமதியின் செயல் புரிபட, "மச்சான் பத்திரிக்கை பார்த்துட்டு வந்து இதை சொல்லுச்சு. நான் தான் அவர் மேலயிருந்த கோபத்துல எனக்கு என்ன நடந்தா உங்களுக்கு என்னனு கத்திட்டேன்.
"அப்ப... உன்னை கட்டியது அப்படி தான்னு உனக்கு தெரியும். இருந்தும் கட்டியிருக்க. என்ன தைரியம்டி? நான் கூட உன்னை இன்னோசென்ட் என்று நினைச்சேன்." என்று கழுத்தை பிடித்தான்.
"நீங்க பெரிய மாமா மாதிரி இவ்ளோ வன்மம் பிடிச்சவர்னு நான் நினைக்கலை." என்று மூச்சு விட கடினப்பட்டு வார்த்தை உதிர்த்தாள்.
இனியனோ, "பார்டா... இதோ வந்துட்டு போனாங்களே அத்தை மாமா... ஐ மீன் உங்க அப்பா அம்மா. அவங்களுக்கும் தெரியும் தானே? ஆனா என்னை மணக்க அவங்க இல்லாத கட்டளை விதிச்சு உன்னை பார்த்துக்கிட்டாங்க. பெத்த பொண்ணு வாழ்க்கையில அவங்களுக்கு இல்லாத அக்கறை. எனக்கு எதுக்கு? நான் வன்மம் பிடிச்சவன்னா... உங்க வீட்ல இருக்கறவங்களுக்கு பெயர் என்ன? செல்பிஷ்ஷா? உங்கப்பனுக்கு என்ன பெயரு?" என்று அவளை மெத்தையில் தொப்பென விடுவித்தான்.
மூச்சு வாங்க, கழுத்தை பிடித்தவள், அழுகையை உதிர்க்க, "தேங்காட்... உன்னிடம்
இனியும் ஓவரா கொஞ்சி நடிக்க தேவையில்லை." என்றவன் புயலாக வெளியே புறப்பட்டிருந்தான்.
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்.
Kindly register and login to read. Thank u Readers
மதுர ஜில்லா..மச்சானே ..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 22)
இப்ப போய் இனியனை கேள்வி கேட்டு என்ன பிரயோஜனம்..?
அகிலன் அப்பவே சொன்னான் தானே, இனியன் அகிலனை பழி வாங்கத்தான் அவளை கல்யாணம் கட்ட சம்மதிச்சிருக்கான்னு சொன்னான் தானே..? இவ தான், பெரிய சண்டியராட்டம் அதைப் பத்தி உனக்கென்னன்னு கேட்டு இனியனையே கட்டி சீரழிஞ்சிட்டிருக்காள். இவளுக்குத் இது தேவை தான்.
😔😔😔
CRVS (or) CRVS 2797
Iniyan thappu ah unga mela vachi kitu appa vum paiyan epadi Madhura ah va blame panriga athuvum ne madhura ah ivolo kutham sollura ippo konjam nerathuku munnadi ne enna pannitu irundha ah kaviya kita phone la pesi kitu than ah irundha iru da unmai oru nall veliya varum appo iruku unnaku
-
மதுர ஜில்லா... மச்சானே!-46
18 minutes ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-45
23 hours ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-44
2 days ago
-
மதுர ஜில்லா... மச்சானே-43
3 days ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-42
4 days ago
- 25 Forums
- 215 Topics
- 763 Posts
- 1 Online
- 329 Members
