மதுர ஜில்லா... மச்சானே!-20
அத்தியாயம்-20
அதிகாலையின் அமைதி இன்னும் வீட்டை விட்டு அகலவில்லை.
மாடியறையின் திரைச்சீலை வழியாக சூரிய ஒளி மெதுவாக உள்ளே நுழைந்தது. பொதுவாக ஏசி என்பதால் முழுவதும் அடைப்பட்டு இருக்க, சூரியன் வெளிச்சம் வழங்கினால் அறைக்குள் தெரியப்படுத்த, சில கண்ணாடி ஜன்னலை மட்டும் வைத்திருந்தனர்.
இனியன் ஆழ்ந்த உறக்கத்தில் புரண்டு படுத்தான். அப்பொழுது அந்த ஒளி முகத்தில் பட்டுத்தெறித்தது.
அப்போது அவனது சோம்பல் முறித்த கை அருகில் படுத்திருந்த மதுராவின் கரத்தின் மீது பட்டது.
சட்டென புருவம் சுருங்கியது. நேற்று தனக்கு திருமணமாகி மதுரவாணியிடம் அத்துமீறியது எல்லாம் கண்முன் காட்சியாக விரிந்தது.
இதுவரை அனுபவித்திராத மோகம், மதுரவாணியிடம் பெற்றப்பின் சிறு புன்னகை கூட கர்வமாய் உதிர்த்தது. வேண்டாம்னு ஒதுக்கியவளை அடக்கி ஆள துவங்கிய கர்வம் கூடியது.
ஆனால் அதிக நேரம் அவன் சிந்தனையில் ஓடவில்லை. தடைப்படும் விதமாக அவள் தேக சூட்டை உணர்ந்தான். "என்ன இது...?" ஏசி முழு வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தது. மதுராவின் கை நெருப்பைப் போல கொதித்தது.
உடனே கண்களைத் திறந்தவன் அவளை நோக்கினான். மதுரா அசைவின்றி படுத்திருந்தாள்.
முகம் வெண்மையாக வெளிறியிருந்தது. கண்ணிமைகள் மூடியபடியே இருந்தன. நேற்று இரவு கட்டியிருந்த மல்லிகைச் சரம் கட்டிலில் சிதறிக் கிடந்தது.
சேலை கலைந்து போயிருந்தது.
அதைப் பார்த்த நொடியே இனியனின் இதயம் ஒரு துடிப்பைத் தவறவிட்டது.
"ஷிட்..." என்று தலையைப் பிடித்துக் கொண்டான்.
"மதுரா.. ஏய் மதுரா..." அவளை மெதுவாக உலுக்கினான்.
"மதுரா... எழுந்திரு..." என்று அசைக்க எந்த பதிலும் இல்லை.
அவள் சுவாசம் இருந்ததை கண்டதும் நிம்மதியுற்றாலும்
அவள் விழிக்கவில்லையே.
அந்த நிலையில்தான் இனியன் செய்ததின் தீவிரம் அவனுக்கே புரிய ஆரம்பித்தது. அவனுக்கு தெரியாதா.. இது கிட்டதட்ட கற்பழிப்புக்கான அறிகுறி. தாலி கட்டியதால் மட்டும் தாம்பத்தியமென சேர்த்திட முடியாது.
அவசரமாக கட்டிலில் கிடந்த சேலையை எடுத்து அவளை ஒழுங்காக மூடினான். சற்றே திறந்திருந்த ஜாக்கெட்டின் கொக்கிகளை நடுங்கிய கைகளால் மாட்டிவிட்டான்.
அவளது முகத்தை மூடிய முடியைச் சரி செய்தான். என்ன செய்வதென்று தெரியாமல் அறை முழுவதும் இரண்டு முறை நடந்து திரும்பினான்.
"இப்ப என்ன பண்ணுறது." என்று நகத்தைக் கடித்தான்.
வேறு வழியே தெரியவில்லை.
கதவைத் திறந்து படிக்கட்டு அருகே வந்து, "அம்மா...!
அம்மா" என்று அழைத்தான்.
கீழே சமையலறையில் இருந்த வேல்விழி தலை தூக்கினார்.
"என்னடா?" என்றார்.
"அம்மா... கொஞ்சம் மேல வாங்க... ப்ளீஸ்..." என்று கூப்பிட, அவன் குரலில் இருந்த பதற்றம் அவரை பயமுறுத்தியது.
"எதுக்குடா?" என்றார். ஆனாலும் எழிலரசனுக்கு சாப்பாடு கட்டி கொடுத்ததால், "நீ காலேஜுக்கு கிளம்பு" என்று டிபன்பாக்ஸை தந்துவிட்டு, மாடிக்கு நடையிட்டார். மதுராவுக்கு பிடிக்காமல் தான் அவள் வீட்டில் திருமணம் செய்து வைத்தது வேல்விழி அறிவாரே. அதனால் ஏதாவது பூச்சிமருந்தை குடித்து விட்டாளா? என்று பயந்து தான் வந்தார்.
"சீக்கிரம் வாங்கம்மா... மதுராவுக்கு... பீவர் மாதிரி தெரியுது..." என்று தடுமாறினான். வேல்விழி நிம்மதியுற்றவராக விரைந்து மாடியேறினார்.
அறை வாசலில் நின்றிருந்த மகனை பார்த்தார்.
அவனது முகம் வெளிறியிருந்தது. "என்னடா... நல்லா தானே இருந்தா. ஏன் காய்ச்சல் வந்துச்சு?" என்று கேட்டபடியே உள்ளே நுழைந்தார்.
கட்டிலில் கிடந்த மதுராவை பார்த்த அடுத்த நொடி... அவர் உடம்பே நடுங்கியது.
"அய்யோ. என்னடா இது." என்று ஓடிப்போய் அவளது நெற்றியில் கை வைத்தார். என்ன தான் இனியன் சேலையை போர்த்தி வைத்து முடித்தாலும், வேல்விழிக்கு அந்த கோலமே திகிலை தந்தது.
"உடம்பு கொதிக்குதே..."என்று பதறினார். பிறகுதான் அவளது சோர்வான முகம், வீங்கிய கண்கள், காய்ச்சலால் சிவந்த கன்னங்கள், ஆங்காங்கே ரத்த சிலப்பு திட்டுகள், பற்தடம், எல்லாம் அவருக்கு தெளிவாகத் தெரிந்தது.
திரும்பி மகனை முறைத்தார்.
"என்னடா பண்ணி வச்சிருக்க?"
இனியன் பதில் சொல்ல முடியாமல் நின்றான்.
"முதல்ல ஏசியை ஆஃப் பண்ணு!" அவரது குரல் முழு வீட்டையும் அதிர வைத்தது.
இனியன் ஓடி சென்று ஏசியை அணைத்தான். வேல்விழி மதுராவின் கன்னத்தை மெதுவாகத் தட்டினார்.
"மதுரா... அம்மாடி... கண்ணை திறந்து பாரும்மா..." என்று தட்டி தட்டி தண்ணீரை கொண்டு மெல்ல முகத்தில் அடித்து எழுப்பினார். அவளது இமைகள் லேசாக அசைந்தன.
பிறகு சிரமப்பட்டு கண்களைத் திறந்தாள்.
மதுராவின் பார்வை இனியனின் மீது விழுந்தது.
அடுத்த நொடியே அவள் பயந்து சற்றே பின்னால் நகர முயன்றாள். அந்த அச்சத்தை வேல்விழி தெளிவாகக் கண்டார்.
"இனியா..." என்று கடுமையாக அழைத்தவர், "நீ கீழே போ."
என்றார். "அம்மா..." என்று மறுக்க முயன்றான்.
"போன்னு சொன்னேன்." அவரது குரலில் இருந்த கண்டிப்பை இதற்கு முன் இனியன் கேட்டதே இல்லை.
தலையைக் குனிந்தபடி கைக்கு கிடைத்த டீஷர்டை அணிந்து கீழே இறங்கிவிட்டான். அவன் செய்த தவறு தான் அவனுக்கும் தெரியுமே.
வேல்விழி கதவை மூடிவிட்டு மீண்டும் மதுராவிடம் வந்தார்.
"ஒன்னும் பயப்படாதம்மா..."
என்று அவள் கையை வருடினார். வெந்நீர் கொண்டு வந்து முகத்தைத் துடைத்தார்.
சிறிது நேரத்தில் காய்ச்சல் மாத்திரை எடுத்துவந்தார். முதலில் இனியன் செய்கையை நியாயப்படுத்தவோ கண்டித்து கூட பேசவில்லை.
வேல்விழி தானே குளியலறைக்குள் அழைத்துச் சென்று வெதுவெதுப்பான நீரில் குளிக்க வைத்தார். சுத்தமான உடை மாற்றிக் கொடுத்தார்.
அறையையே ஒழுங்குபடுத்தினார்.
சூடான கஞ்சி செய்து கொண்டு வந்து கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டினார். மருந்தைக் கொடுத்து மீண்டும் படுக்க வைத்தார்.
அதுவரை இனியன் கீழே ஹாலிலேயே அமர்ந்திருந்தான்.
கால்கள் ஓயாமல் ஆடிக் கொண்டிருந்தன. மனதுக்குள் ஏதோ பாரம் கூடியது.
வேல்விழி கீழே இறங்கி வந்து, "இனியா... இங்க வா."
என்றார். அவன் அமைதியாக பின்தொடர்ந்தான்.
பெற்றவர்கள் அறைக்குள் அழைத்துச் சென்றதும் கதவை மூடினார் வேல்விழி. ஒரு நொடி கூட யோசிக்காமல், "நேத்தே உன்னை கண்டிச்சிருக்கணும்."
என்றார். இனியன் அமைதியாக நின்றான். "அவளை ஆசையா கட்டிக்கிட்டதால கொஞ்சம் அவசரப்பட்டிருப்பேன்னு நினைச்சேன். ஆனா... இப்படி உடம்பே முடியாம போற அளவுக்கு இப்படி நடந்துக்கிட்ட?" என்றதும் இனியன் தலையைக் குனிந்தான்.
"அம்மா... அது வந்து" என்று கூற தயங்க, "பேசாத. முதல்ல அவ மனசு எந்த நிலையில இருக்குன்னு புரிஞ்சிக்க. இதுக்கு முன்ன மதுராவை பார்த்திருக்கியா? என்ன மாதிரி துள்ளிட்டு இருந்த பொண்ணுடா. இங்க புதுசா வந்திருக்கா. உன்னிடம் இலகுவா பேசியிருக்காளா? அப்பறம்... மத்ததெல்லாம் நடக்க பயமா இருக்காது. அந்த பயத்தையும் புரிஞ்சிக்காம நடந்தா... வாழ்க்கை எப்படி நல்லா போகும்?" ஒவ்வொரு வார்த்தையும் இனியனை குற்றவாளி ஆக்கியதால் அமைதியானான்.
அந்த நேரத்தில் அருளாளன் குறுக்கே வந்தார். இருவரையும் பார்த்து, "என்னாச்சு?" என்று கேட்டார். அம்மாவும் மகனும் அங்கும் இங்கும் பதட்டமாய் நடமாட கேட்டு நின்றார்.
வேல்விழி திரும்பிப் பார்த்தார்.
"என்னாச்சுன்னா... மதுராவுக்கு உடம்பு முடியாம கிடக்கா. உங்க பையன் அந்தளவு காயப்படுத்தியிருக்கான்." என்று மட்டும் தெரிவித்தார்.
அருளாளன் அசட்டையாக, "அட இதுக்கெல்லாம் இவ்வளவு டென்ஷனா? பையனை வசைப்பாடற" என்றவரை வேல்விழி அதிர்ச்சியுடன் பார்த்தார்.
அருளாளனோ "கல்யாணம் பிடிக்காம சோறு தண்ணி சரியா சாப்பிடாம கொஞ்சம் பலவீனமா இருப்பா. புதுசா கல்யாணம் ஆயிருக்கு. இனியன் நெருங்கி போனதுல என்ன குத்தம் கண்ட. அவ சீக்காலியா கிடக்கா, நல்லா திங்க சொல்லு. இனியனை ஏன் திட்டுற?" என்றதும் வேல்விழியின் முகம் இறுகியது.
"நீங்க புரியாம பேசாதீங்க. அவ எந்த நிலையில இருக்கான்னு நான் பார்த்தேன். அவ அரை உசுரா இருக்கா." என்றார் வேல்விழி.
அருளாளன் சற்றே அலட்சியமாக, "முழு உசுரு போயிடலையே. போகப் போக எல்லாம் சரியாயிடும். இதுக்கெல்லாம் பையனை அதட்டிட்டு கிடக்க. புருஷன் பொஞ்சாதிக்குள்ள உனக்கென்ன வேலை."
என்றார். வேல்விழி கோபமாக அவரைப் பார்த்தார்.
"நமக்கு பொண்ணு பிறக்கலைங்க... அப்படி பிறந்திருந்தா... இதையே உங்க பொண்ணுக்குன்னு நினைச்சு சொல்ல முடியுமா?" என்றதும் அந்த ஒரு கேள்வியில் அருளாளன் கோபமானார்.
"இந்தா.. நான் வாரிசா இரண்டும் ஆம்பள சிங்கத்தை பெத்திருக்கேன். எனக்கெதுக்குடி பொட்டக்கழுதை.
எனக்கு என்ற மகன் மட்டும் தான் முக்கியம். ரொம்ப பேசாத.. மாமியாரா இருக்க பாரு." என்று கண்டித்தார்.
மீண்டும் இனியனை நோக்கி,
"எதுனாலும்... வீட்டை தாண்டி சத்தம் வரக்கூடாது. பொண்டாட்டி உன் பேச்சைக் கேட்கணும். அதுக்கு நீயே பார்த்துக்க. உனக்கும் தான்... என்ற வார்த்தையை மீறி நீயா ஏதாவது உதவிட்டு கிடக்காத. அப்பறம் அவளுக்கு குளிர்விட்டு போயிடும்." என்றார். "அவ உங்க தங்கச்சி பொண்ணுங்க" என்றதற்கும், "அதனால தான் அவளை கட்டி வச்சது. இல்லைன்னா படிக்காதவளை என்ற மகனுக்கு கட்டி வச்சி அழகு பார்க்க எனக்கென்ன தலையெழுத்தா?" என்று சொல்லிவிட்டு சென்றார்.
வேல்விழி அதிர்ச்சியுடன் கணவர் செல்வதை பார்த்தார். பிறகு மகனைப் பார்த்தார்.
"இனியா... அப்பா ஏதோ சொல்லறார்னு அவர் பேச்சை கேட்காதடா. இனிமேல் மதுராவை அவசரப்படுத்தாத. முதல்ல அவளை நிம்மதியா இருக்க விடு. அவ மனசை ஜெயிக்க முயற்சி பண்ணு." என்றார்.
"அம்மா.. அவ மனசை நான் ஏன் ஜெயிக்கணும். இந்த கல்யாணமே அப்பாவோட திருப்திக்கு தான் செய்தது. நான் மதுராவை விரும்பி மணக்கலையே." என்று கூறிவிட்டு அடுத்த வேலையை தொடர முயன்றான்.
மதுராவுக்கு பீவர் என்றதுமே பல் கூட விளக்காமல் காபி தண்ணி கூட குடிக்காமல் பயந்து நின்றான். தந்தை பேசி செல்லவும் தான் மீண்டும் அலட்சியம் உருவானது.
வேல்விழிக்கு கணவரும் மகனும் செய்வதில் நியாயம் இல்லை என்று உணர்ந்து, மீண்டும் மதுரா படுத்திருந்த அறையை நோக்கி நடந்தார். கணவராவது தன்னை கட்டியதிலிருந்தே அப்படி தான் பேசுவார். இனியன் ஏன் இப்படி பேசுகின்றான் என்ற கவலை உண்டானது. அவனை சரியாக வளர்க்கவில்லையோ என்று வருந்தினார்.
இனியனோ அதை பற்றி எல்லாம் கவலைக் கொள்ளாமல், அங்கே வாயை கொப்பளித்து காபியை பருக துவங்கினான்.
அன்னையின் வார்த்தைகளும்,
தந்தையின் வார்த்தைகளும்,
இரண்டும் மனதில் மோதிக் கொண்டிருந்தன. அதை தாண்டி அகிலனின் கொட்டம் அடங்கியதா? இல்லையா? என்று அறிந்திட ஆவல் பிறந்தது. எப்படியும் ஊரில் அவன் செல்லும் இடங்களுக்கு சென்று பார்த்தாலே அவன் முகம் காட்டி கொடுக்குமென்ற எண்ணம் தோன்றியது. ஆனால் எப்படியும் இரண்டு நாளுக்கு வெளியே போகவும் மனம் ஒப்பவில்லை. ஏனோ மதுரவாணியை சுற்றி வரவே மனம் சண்டித்தனம் செய்தது.
அதனால் அன்னை கீழே வந்ததும் மாடிக்கு பறக்க காத்திருந்தான்.
எழிலரசன் எல்லாம் கல்லூரிக்கு சென்றதால் இங்கே நடக்கும் அக்கப்போர் எதுவும் தெரியாது.
வேல்விழி மதுராவை காண, அவளோ துவண்ட நாறாக காட்சியளித்தாள்.
இளையமதியும் கல்யாணசுந்தரமும் மாலை வருவதாக இருக்க, மதுரா இவ்வாறு இருந்தால் பார்த்து அதிர்வாரே என்று பயந்தார்.
மகனது அறையிலேயே இருக்க முடியுமா? கீழே வேலைகள் கிடந்தது. பந்தல்காரன் வண்ண விளக்கு கட்டியவன் எல்லாம் அருளாளன் பார்த்துக் கொண்டார். வேல்விழி மற்ற வீட்டு வேலையில் ஒதுக்குவதை பார்க்க வேண்டுமே என்று மதுரா உறங்கவும் கீழிறங்கி வந்தார்.
இனியன் அம்மாவின் தலை மறையவும், மாடிக்கு எட்டி தாவி வந்து சேர, மதுராவை உற்று நோக்கினான்.
புதுசேலை அணிந்து, தலைக்கு குளித்து தலைவிரித்து, ஒருகளித்து படுத்திருக்க, அவளது சிகையோ தொகை வண்ண மயிலை போல விரிந்திருந்தது.
அதை தடவிக்கொண்டே முன்னே வந்தவன் நெற்றியில் கை வைக்க, உடல் சூடு இன்னமும் இருந்தது.
மதுராவுக்கு நேற்று தன்னை ஸ்பரிசித்த, இனியனின் கரத்தின் சூட்டை உணர்ந்து திடுக்கிட, "ஏய்... சில் சில்... பீவர் எப்படி இருக்குனு ஜஸ்ட்... தொட்டு பார்த்தேன்" என்றான்.
மதுரா அப்படியே போர்வையோடு பின்னால் செல்ல, "இதான் வெறுப்பாகுது. நான் நெருங்கினா ஏன் பின்னால போற? ஐ அம் யுவர் ஹஸ்பெண்ட். அதை இங்கயும் இங்கயும் பதிய வச்சிக்கோ" என்று நெற்றியிலும் இதயபகுதியிலும் தொட்டு நிறுத்தினான்.
இதயப்பகுதியில் கை சென்றதும், ஆள்காட்டி விரலால். நடு நெஞ்சில் கையை வைத்து "நமக்கு கல்யாணமாகிடுச்சு. புரிதா?" என்று தாலியை சுட்டிக் காட்டினான்.
தலை குனிந்து அதை கண்டவள் தலையை மெதுவாக ஆட்டினாள்.
"மச் பெட்டர்... அந்த உரிமையில தான் உன்னை தொட்டது. நீ தான் தேவையில்லாம பயந்து நார்மலா நடந்த விஷயத்தை பெரிசுப்படுத்திட்ட. நீ ஏன் இவ்வளவு பயப்படுறன்னு எனக்குப் புரியல. அம்மா வேற என்னையே குற்றவாளி மாதிரி திட்டிட்டாங்க. இனிமேலாவது இப்படி நடுங்கி பயப்படுறதை விடு. சாதாரணமா நடந்துக்க பழகு. தயவு செய்து இப்படி படிக்காத முட்டாளா நடந்துக்காத. கொஞ்சமாவது யோசி." என்று கடிந்தான்.
மதுரா திட்ட, இனியன் யோசிக்க வேண்டிய தருணம். ஆனால் அவனோ நாசூக்காய் அவள் பக்கம் பந்தை எட்டி உதைத்து அவள் மீதே குற்றத்தை சுமத்தும் விதமாக பேசவும் செய்வதறியாது விழித்தாள்.
தற்போது காய்ச்சலும் உடல் வலியும் தவிர அவளால் மற்
ற விஷயத்தை சிந்திக்கவும் மனமில்லை.
இனியனோ தன்னை பற்றி புகாரிட்டு பேசாத அளவிற்கு வாயடைத்து எழுந்துக் கொண்டான்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்
மதுர ஜில்லா..மச்சானே ..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 20)
நான் தான் அப்பவே சொன்னேனே, இவனெல்லாம் காய்ஞ்ச மாடை விட கேவலமானவன். இவனோட அப்பன் இவனுக்கும் மேல. அவரை எதுலயும் சேர்க்க முடியாது. அந்த வீட்ல வேல்விழி மட்டும் தான் மனசாட்சி உள்ளவரா இருக்கிறான்ங்க.
இந்த இனியன் இப்ப எப்படி மதுராவை தொட்டுட்டுத் பின்னாடி அவளை கழட்டி விடறதலயே இருக்கிறானோ..
அது அப்படியே தலைகீழா மாறி அவளையே சுத்தி சுத்தி வர காலம் கூடிய சீக்கிரமே வரணும். அதுவும் அவளோட நிழலைத்தொடக் கூட கெஞ்சி கெஞ்சி கேட்கணும். அப்பத்தான் இந்த மாதிரி திமிரு பிடிச்சு கொழுப்பெடுத்து போயிருக்கிற ஆண்கள் எல்லாம் திருந்துவாங்க.
😔😔😔
CRVS (or) CRVS 2797
-
மதுர ஜில்லா... மச்சானே!-46
17 minutes ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-45
23 hours ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-44
2 days ago
-
மதுர ஜில்லா... மச்சானே-43
3 days ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-42
4 days ago
- 25 Forums
- 215 Topics
- 762 Posts
- 1 Online
- 329 Members
