மதுர ஜில்லா... மச்சானே!-17
அத்தியாயம்-17
வெற்றி ஊர்வலம், வாழ்த்து, கைத்தட்டல் என்று எல்லாவற்றையும் தாண்டி தான் அகிலன் வீட்டிற்கு வந்தான்.
வீட்டு வாசலில் பைக் நின்ற சத்தம் கேட்டதும் மீனாட்சி வெளியே வந்தார்.
மகன் தேர்தலில் வென்றிருப்பதை நினைத்து, ஏற்கனவே ஆலத்தை கரைத்து வைத்திருந்தார்.
அகிலன் பைக்கிலிருந்து இறங்கியதும், "நில்லுடா..."
என்று கூறி ஆலத்தை சுற்ற ஆரம்பித்தார்.
அகிலனுக்கோ அந்த செயல் நெஞ்சை இன்னும் வலிக்க வைத்தது.
"எதுக்கும்மா இந்த திருஷ்டி எல்லாம்?" என்று சோர்வாக கேட்டான்.
"என்னடா கேள்வி இது? என் பையன் ஊர் தேர்தல்ல ஜெயிச்சிட்டு வந்திருக்க. ஆலம்சுத்தாம என்ன பண்ணுவாங்க?" என்று கூறியபடி சுற்றினார்.
அகிலன் கசப்பாக சிரித்தான். "நான் ஜெயிச்சிட்டேனா அம்மா?
நான் தான் மொத்தமா தோத்துட்டேனே." என்றான்.
மீனாட்சி கை சட்டென நின்றது.
அவன் கண்கள் சிவந்து கிடந்தன. மதுரா திருமணத்தை கூறுவது புரிந்தது.
"என்னடா பேசற?" என்றார் மீனாட்சி. "மதுராவை இனியன் போட்டிக்காக கல்யாணம் கட்டிட்டான். அதை கூட காப்பாத்த முடியல. நான் நேசிச்ச பொண்ணு இன்னொருத்தன் பொண்டாட்டியா போயிட்டா.
இதுக்கு மேல என்ன தோல்வி வேணும்?" என்று உடைந்து சொன்னான்.
ஒரு நொடி மீனாட்சியின் முகமும் வலியில் சுருங்கியது.
ஆனால் உடனே தன்னை மீட்டுக்கொண்டார். "ஏன் இந்த உலகத்துல அவ ஒருத்தி தான் பொண்ணா? அவளை மறந்துடு அகிலா. இன்னாருக்கு இன்னார்னு பிறந்தப்பவே முடிவாகியிருக்கும்.
நீ இப்ப தேர்தல்ல ஜெயிச்சிருக்க. உன் வாழ்க்கை இப்ப தான் ஆரம்பிக்குதுனு நினை. அம்மாவா நான் என் பையனுக்கு ஆலம்சுத்தறேன்.
அதை பண்ண விடு." என்றார்.
அந்த நேரம் வாசலில் கார் வந்து நின்றது. அதியமானும் தூரிகாவும் இறங்கினார்கள். மீனாட்சி பார்த்தவுடனே கோபமாக, "இந்தா...
பத்திரிக்கை வச்சிட்டாங்கன்னு போயிட்டு வந்திருக்கார் உங்கப்பாவும் தங்கச்சியும்.
இவருக்கு தன் பையனை விட அண்ணன் பையன் வாழ்க்கை தான் முக்கியம். வாழ்த்திட்டு வந்திருக்கார். இவ.. மதுராவுக்காக அப்படி பேசி அறை வாங்கினா.. இப்ப முதல் ஆளா கிளம்பியிருக்கா" என்று கசப்பாக உதிர்த்தார்.
அதியமான் எதுவும் சண்டைப் பிடிக்கவில்லை. அந்த வார்த்தைகள் தன் மீதான கோபமல்ல. ஒரு தாயின் வலி என்பதை அவர் புரிந்திருந்தார்.
அமைதியாக அகிலன் அருகே வந்தார். அவன் தோளில் கை வைத்தார்.
"அகிலா..." என்று அழைத்தார்.
அகிலன் தந்தையை பார்த்தான்.
"எல்லார் வாழ்க்கையிலயும் உடைஞ்சு போற நேரம் வரும்.
அதுலயே நாம தேங்கி நின்னுடக்கூடாது." என்றார்.
அகிலன் எப்பொழுதும் போல அமைதியாக கேட்டான். "உனக்கு தெரியுமா? தூரிகாவுக்கு முன்னாடி உன் அம்மா வயித்துல இன்னொரு உயிர் இருந்துச்சு." என்றார்.
அகிலன் தலை தூக்கி பார்த்தான். அன்னை தான் சில நேரம் இதை பற்றி கூறியிருந்தார். தந்தை அரிதாகவே அந்த விஷயத்தை பேசுவார். "அந்த குழந்தை போனப்ப... நானும் உன் அம்மாவும் உடைஞ்சு போயிட்டோம். வாழ்க்கையே முடிஞ்ச மாதிரி இருந்துச்சு.
பல நாள் எங்களால சிரிக்க கூட முடியல. அப்புறம் தான் தூரிகா பொறந்தா. அப்ப தான் வாழ்க்கை மீண்டும் நகர ஆரம்பிச்சது." அவர் குரல் மெதுவாக உடைந்தது.
"சில வலிகளுக்கு மருந்து காலம் தான். அதுபோல உன் வாழ்க்கையிலும் ஒரு நாள் வரும். இப்ப வலிக்கும். ரொம்ப வலிக்கும். ஆனா அதுக்காக உடைஞ்சு போயிடாத."
என்றார்.
மீனாட்சியோ கண்களில் நீருடன், "அப்பவும் உங்க அண்ணன் தான் நம்ம நிம்மதியை கெடுத்தார்.
இப்பவும் அவர் தான்.
இத மட்டும் மறந்துடாத அகிலா."
என்று கூறிவிட்டு உள்ளே சென்றார். அகிலன் அதற்கும் பேசவில்லை. அவனுக்குள் கோபம் வரவில்லை.
வன்மம் வரவில்லை. வலி மட்டும் இருந்தது. மதுரா நினைவு மட்டும் இருந்தது.
'மச்சான்... மச்சான்' என்று பின்னால் ஓடிவந்த சிறுப்பெண்.
தன்னை பார்த்தாலே சிரித்த பெண். இன்று வேறொருவனின் மனைவியாக நிற்கிறாள்.
அதை நினைக்கவே நெஞ்சு இறுகியது.
கண்களில் தேங்கிய கண்ணீரை அவசரமாக துடைத்தான். அப்போது தூரிகா அருகே வந்து நின்றாள். அவள் முகமும் வெளிறியிருந்தது. மெதுவாக அண்ணனின் தோளில் கை வைத்தாள். "அண்ணா..."
என்றாள். அகிலன் திரும்பி பார்த்தான். "மதுராவும் அழுதுச்சுண்ணா..." அவன் கண்கள் சட்டென உயர்ந்தன.
"மூணாவது முடிச்சி நான் தான் அண்ணா போட்டேன்." தூரிகாவின் குரல் உடைந்தது.
"என் அண்ணன் கல்யாணத்துல நான் போட வேண்டிய முடிச்சியை...
இன்னைக்கு நான் போட்டேன்." அகிலனின் நெஞ்சு நொறுங்கியது.
"உன்னை மாதிரியே தான் இடிஞ்சி போன மாதிரியிருந்தா அண்ணா. உயிரே இல்லாத ஜடம் மாதிரி. மணக்கோலத்துல உட்கார்ந்திருந்தா." என்று கூறிவிட்டு உள்ளே ஓடிவிட்டாள்.
அவள் இன்னும் ஒரு நொடி நின்றிருந்தால் அழுதிருப்பாள்.
அகிலன் மட்டும் அங்கேயே நின்றான். மூச்சு விடவே வலித்தது. காதல் வலி ஒரு நாளில் மாற்றம் பெற்றிடுமா?
அதே நேரம்... மதுரா இனியனின் வீட்டில் இருந்தாள். மறுவீட்டு சடங்குகள் நடந்து கொண்டிருந்தன. வேல்விழியின்
உறவினர்கள் சுற்றி அமர்ந்திருந்தனர். "மாப்பிள்ளைக்கும் பொண்ணுக்கும் பால் கொடுங்க." "பழம் ஊட்டுங்க."
என்று ஒருவர் பின் ஒருவராக நச்சரித்து கூறினார்கள்.
மதுராவுக்கு எதுவும் செய்ய தோன்றவில்லை. அவள் கைகள் மடியில் இறுக இணைந்திருந்தன.
"மதுரா..." என்று வேல்விழி அழைத்ததும் கூட மெதுவாக தலை தூக்கினாள்.
"பால் வாங்கும்மா." என்று நீட்டினர். மதுரா தயங்கினாள்.
அந்த நொடியே அருகில் இருந்த இனியன் அவள் கையை பிடித்தான். வெளியில் பார்ப்பவர்களுக்கு அது சாதாரணமாக இருந்தது.
புதிய மாப்பிள்ளை மனைவியை வழிநடத்துவது போல. ஆனால்... அவன் விரல்கள் அவள் மணிக்கட்டில் இறுக பதிந்தன.
தேவைக்கு அதிகமாக.
வலிக்கும் அளவுக்கு அழுத்தினான். மதுரா திடுக்கிட்டு அவனை பார்த்தாள். இனியன் முகத்தில் சிரிப்பு இருந்தது. ஆனால் கண்களில் இல்லை. "வாங்கு." என்று பற்களை கடித்தபடி முணுமுணுத்தான். மதுரா வேறு வழியின்றி கிளாஸை வாங்கினாள்.
பிறகு பழம் சாப்பிட வைத்தனர். பிடித்தமின்றி இனியன் எச்சியை விழுங்கினாள் என்பதே உண்மை. பிறகு மற்ற சடங்குகள் நடந்தேறியது.
ஒவ்வொரு முறையும் அவள் சற்று தயங்கினாலே, அவன் கை மீண்டும் அவள் கையை அழுத்தியது. யாருக்கும் தெரியாமல். யாரும் கவனிக்காதபடி. ஆனால் மதுராவுக்கு அந்த அழுத்தத்தில் ஏதோ புதிதாக அச்சத்தை உணர்த்தினான்.
அது அன்பான பிடியே இல்லை.
உரிமை இல்லை. ஏதோ...
தன்னை வென்றுவிட்டேன் என்று நிரூபிக்கிற பிடிவாதம்.
பழிவாங்கும் குணத்தின் முதல் நிழல். மதுராவின் உள்ளத்தில் முதல் முறையாக ஒரு சிறிய பயம் பிறந்தது. அவளுக்கு இப்படி தான் என்ற யூகமும் இருந்தது. அகிலன் மச்சானை பழிவாங்க தன்னை மணந்து பிரிவை ஏற்படுத்தி, சாதிக்க நினைக்கும் மனபாவம்.
மதுராவே திருமணத்தை நிறுத்த முடியாது முதலில் தவித்தவளுக்கு, பிறகு அகிலன் மச்சான் வந்துவிட்டால், தைரியம் துளிர்விடுமென நினைத்தாள். ஆனால் அகிலன் வர தயங்கியதும், மதுரா மனம் மாறிவிட்டது. எனக்கு நீ தரும் முக்கியத்துவம் இவ்வளவு தானா? என்ற வலி பெருகிவிட்டது.
நீ உன் தந்தை பேச்சை கேள். நானும் அப்படியே கேட்டுக் கொள்கின்றேன் என்ற மடத்தனமான பிடிவாதம், கூடவே கல்யாண பத்திரிக்கை அடித்து முடித்தப்பின் மாற்றவும் மனமில்லை. இந்தளவு வரை விட்டுவிட்டப்பின் ஊர் வாயில் விழ மதுராவும் தயாராகயில்லை. தன் குடும்பத்தை அசிங்கப்படுத்தவும் நினைக்கவில்லை.
தன் தலையெழுத்து எப்படியோ அப்படியே போய் தொலையட்டும். தனக்கென ஆசை பாசம் நேசம் காதல் எதுவும் இங்கே யாரும் பார்க்கப் போவதில்லை, யோசிக்கவும் செய்ய மாட்டார்களென்று தான் கல்லை போல மண்டபத்தில் இருந்தாள்.
இங்கும் நடைப்பிணமாக நடமாட, இனியன் செய்கை அச்சத்தை தருவித்தது.
மதுரா அருகே நிலானி அமர வைக்கப்பட, தங்கை கைகளை இறுகப்பற்றினாள்.
இனியன் அதை கவனித்தபடி, "நிலானி... அத்தை ஏதோ கூப்பிட்டாப்ள இருக்கு. என்னனு கேளுப்போ" என்று கூற, அக்காவை பார்த்தாள். மதுரா கையை பிடித்திருக்க, நிலானி எழவும் முடியாது இனியனையும் மதுராவையும் ஏறிட்டாள்.
"மதுரா... அவ கையை விடு. அவ போகட்டும். வேண்டுமின்னா என் கையை பிடிச்சிக்கோ" என்று நீட்ட, மதுரா மறுப்பாய் தலையாட்ட, "பிடிச்சிக்கோனு சொன்னேன்" என்று பல்லை கடித்து பேசினான்.
"நிலானி.. நீ போகலை" என்றதும் அக்காவை பார்த்து பார்த்து இளையமதி அருகே சென்றாள்.
இளையமதி நேரம் காலமின்றி "ஏன்டி.. உன்னை அவ பக்கத்துல இருனு சொன்னேன். வந்துட்ட" என்று கடிந்தார்.
"இல்லைம்மா.. மாமா தான் நீ ஏதோ கூப்பிட்டனு இங்க அனுப்பிடுச்சு" என்றதும், இளையமதி "சரி சரி, இந்த ஸ்வீட் பலகாரம் எல்லாம் இந்த டிபன் பாக்ஸில போட்டு விடு வந்தவங்களுக்கு கொடுக்க" என்று வேலை ஏவினார்.
ஏற்கனவே அங்கே எழிலரசன் அந்த வேலையில் தான் மூழ்கியிருந்தான்.
நிலானி எதிரே அமர்ந்துக் கொண்டு அன்னை கூறியதை செய்ய ஆரம்பித்தாள்.
ஒருபுறம் கல்யாண சுந்தரம் அருளாளனிடம் சரிக்கு சமமாக பேசி சிரித்தார்கள்.
அருளாளன் கூட தம்பியை பற்றி மட்டம் தட்டி கல்யாண சுந்தரம் பேசவும் அதை ரசித்தார்.
வேல்விழி சாந்தி முகூர்த்தம் நடைப்பெற தேவையான வேலைகளை ஆயத்தமாக, "எழிலரசா.. இந்த பூ பழம் தட்டு எல்லாம் அங்க வைச்சிட்டு வா" என்று கூற நிலானியை கண்டு அன்னை கூறிய வேலையில் சென்றான்.
இனியனோ "இப்படி கல்லு மாதிரி இருந்தா எப்படி மதுரா? என்கிட்ட பேசு? எச்சி தந்த பால் பழத்தை குடிக்க சாப்பிட அஷ்டகோணலா முகத்தை வைக்கற. கைப்பிடிச்சா உருவிக்கறதுலயே இருக்க? ஆங்.. நமக்கு கல்யாணம் ஆகிடுச்சு தெரியும்ல..." என்று தாலி கயிற்றை எடுத்து காட்டினான்.
சட்டென அருகே வந்து கைகள் தீண்டி தாலி கயிற்றை எடுக்கவும் திடுக்கிட்டு நகர, "ஏய்... நான் கிட்ட வந்தா நகர்ந்துட்டே இருக்க. ஐ ஹேட் திஸ். அகைன் இப்படி பண்ணாத." என்றான்.
மதுரா உதட்டை கடித்து அன்னையை கவனிக்க, அவரோ தீவிரமாக வேல்விழியோடு பேசி சிரிப்பதை கவனித்தாள். தந்தை பெரியமாமாவிடம் கதை அளக்க, நிலானி சிவனேயென்று பலகார பையில் கவனம் செலுத்துவதை கவனித்தாள். இங்கு தாய் தந்தை தங்கை என்று எல்லாரும் இருந்தாலும், இனி தனித்த பிறவியாக தான் தனது நிலை என்று நொடியில் புரிந்திட, கஷ்டப்பட்டு நிதர்சனத்தை ஏற்றாள். இனி இனியன் சொல்வதற்கு செவித்தீட்ட வேண்டுமோ என்ற அச்சம் கூடியது. ஏனெனில் இனியன் "அம்மா.. நாங்க வேண்டுமின்னா மாடி ரூம்ல இருக்கேன்." என்று கூறிவிட்டு மதுராவின் கையை பிடித்து இழுக்க, அவளோ மிரண்டு போய் தொண்டை அடைக்க நின்றாள்.
தொடரும்...
பிரவீணா தங்கராஜ்.
மதுர ஜில்லா..மச்சானே ..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 17)
அதான் கல்யாணமே நடந்து முடிஞ்சிடுச்சே, இனி என்ன ஃபீல் பண்ணி, என்ன ஆகப் போகுது..?
நேத்து வந்தவன் தட்டிக்கிட்டுப் போயிட்டான், இலவு காத்த கிளியையே கொத்திக்கிட்டுப் போயிட்டான். கிணத்து தண்ணியை ஆத்து வெள்ளம் வாரி சுருட்டிக்கிட்டுப் போயிடுச்சு.
இனிமேல் தான் மதுராவுக்கு இருக்கு போல. பேச வேண்டிய இடத்துல பேசிடணும், அப்படி இல்லைன்னா... இப்படித்தான் மாட்டிக்கிட்டு முழிக்கணும்.
CRVS (or) CRVS 2797
மதுர ஜில்லா..மச்சானே ..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 17)
அதான் கல்யாணமே நடந்து முடிஞ்சிடுச்சே, இனி என்ன ஃபீல் பண்ணி, என்ன ஆகப் போகுது..?
நேத்து வந்தவன் தட்டிக்கிட்டுப் போயிட்டான், இலவு காத்த கிளியையே கொத்திக்கிட்டுப் போயிட்டான். கிணத்து தண்ணியை ஆத்து வெள்ளம் வாரி சுருட்டிக்கிட்டுப் போயிடுச்சு.
இனிமேல் தான் மதுராவுக்கு இருக்கு போல. பேச வேண்டிய இடத்துல பேசிடணும், அப்படி இல்லைன்னா... இப்படித்தான் மாட்டிக்கிட்டு முழிக்கணும்.
CRVS (or) CRVS 2797
-
மதுர ஜில்லா... மச்சானே!-46
18 minutes ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-45
23 hours ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-44
2 days ago
-
மதுர ஜில்லா... மச்சானே-43
3 days ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-42
4 days ago
- 25 Forums
- 215 Topics
- 763 Posts
- 2 Online
- 329 Members
