மதுர ஜில்லா... மச்சானே!-14
அத்தியாயம்-14
மதுராவின் நம்பிக்கை தூரிகா வந்துபோன பிறகு சற்று மாறியது. முன்பு அழுதுக் கொண்டேயிருந்தவள், தற்போது 'அகிலன் மச்சான் வருவாரு.' என்று மனசுக்குள்ள நம்பிக்கையாக காத்திருந்தாள்.
காலை எழுந்ததும் வாசல் பக்கம் பார்த்து நின்றாள். மதியம் யாரின் ஆண்குரல் சத்தம் கேட்டாலும் ஓடி வந்தாள். மாலை வேறு ஏதேனும் புல்லட் சத்தம் கேட்டாலும் இதயம் துடிக்க ஓடிவந்து வாசலை ஏறிட்டாள்.
அகிலன் வராமல் போக சோர்ந்தாள். முதல் நாள்,
இரண்டாம் நாள், மூன்றாம் நாள். மதுராவின் முகத்தில் மீண்டும் சோர்வு ஆரம்பித்தது. தூரிகா அகிலனிடமும் அவர் வீட்டிலும் கூறியிருப்பாளே ஏன் வரலை? என்னாச்சு? என்ற சிந்தனையில் திரிந்தாள்.
வாசல் தாண்டி செல்லலாம் என்றாலும் புகைப்பிடித்தபடி கல்யாண சுந்தரம் மகளை தான் பார்வையிட்டார். அவருக்கு பெரிதாக வேலை வெட்டி இல்லாததால் மகளை காண்பதே முழு நேரமாக மாற்றிக் கொண்டார்.
நிலானியிடம் அகிலன் மச்சானை எங்கேனும் பார்த்தால் நேரில் வரக்கூறி கூறினாள்.
நிலானி முதலில் விழித்தவள் சரியென்று தலையாட்டிக் கொண்டாள்.
அகிலன் மறுபக்கம் தேர்தல் வேலைக்குள்ள மூழ்க முயற்சி செய்தான். ஊரில் கூட்டமும் போஸ்டர் ஒட்டுதல் எல்லாம் முதல்கொண்டு,
பஞ்சாயத்து தேர்தலுக்கு வாக்காளர் சந்திப்பு
எல்லாம் தடையின்றி நடந்தது.
எங்கு போனாலும் மதுரா ஞாபகம் கூடவே துரத்தியது. இதில் ஒரு வீட்டுக்கு ஓட்டு கேட்க போனப்பொழுது, 'மாப்பிள்ளை எப்ப கல்யாணம்?' என்று கேட்டு நிற்க, பதில் கூறமுடியாது முகம் தாழ்த்தி நின்றான்.
இனியனுக்கு மதுரா என்று பேச்சு அடிப்படாமல் இருந்தாலாவது சூசகமாக 'அத்தை பொண்ணு காத்திருக்கு என்ன அவசரம்' என்று மதுராவை சாடி தான் பேசியிருப்பான். இப்பொழுது மதுரா என்ற பெயரை கூட உதிர்க்க யோசனையில் ஆழ்ந்தான்.
அன்றைய நாள் முழுதும் மதுரா முகம் வந்து செல்லும். இரவெல்லாம் மதுரா நினைப்பு தன்னை அடுப்பிலிட்டு வாட்ட, அகிலன் தனியாக பைக்கில், மதுராவின் வீட்டு தெரு முனை வரை வந்து நின்றான்.
அத்தை மகள் வீட்டிற்கு உள்ள போக முடியாது, வெளியே நின்று பார்த்தான். அந்த வீட்டில் ஒரு விளக்கு மட்டும் எரிந்தது. அதுவும் மதுரா நிலானி இருக்கும் அறை. 'இப்பவும் அவ என்னயே நினைக்கிறாளோ...'
என்று நெஞ்சு வலித்தது. அதைமீறி தந்தை அத்தையிடம் பேசியதாக கேள்விப்பட்டது எல்லாம் அன்னை மூலமாக அறிந்தவனுக்கு மதுராவை காணாது திரும்பினான்.
தூரிகா தான் சும்மா இருக்க முடியாது தவிக்க, நிலானியை சந்தித்தாள்.
"மதுரா அண்ணி எப்படி இருக்கு?" என்று கேட்டாள். இத்தனை நாள் அண்ணி மதினி என்று கூட வார்த்தை வராதே. இன்று மதுராவை அண்ணி
என்று தான் அழைத்து கேட்டாள்.
நிலானி அழுதபடி "அக்கா இன்னும் அகிலன் மச்சான் வருவாருன்னு தான் நம்பிட்டு இருக்கு. ஆமா.. ஏன் மச்சான் வரலை? மச்சான் எங்க அக்காவை விரும்பலையா? அக்கா மட்டும் தான் மச்சானை நினைக்குதா?" என்று கேட்டாள்.
அதை கேட்டு தூரிகாவுக்கு நெஞ்சடைத்தது. 'உங்கம்மா நிறைய பேசிடுச்சு. ஏதோ எங்கண்ணா போட்டிக்கு தான் மதுராவை நினைப்பதா. இதுல எங்கப்பா என் தங்கை கால்ல விழவானு கேட்கறார். அவரும் உங்கப்பா அம்மாவிடம் எங்கண்ணாவுக்காக பேசியிருக்கார். என்னயிருந்தாலும் அத்தைக்கு பெரியண்ணா மேலயும் பெரியண்ணன் பையனுங்க மேலயும் பாசம் கொட்டுது.
ஏன் நிலானி அந்த எழிலரசனை கட்டிக்க இப்பவே உன்னையும் பரிசம் போட்டாச்சாமே. உங்கம்மாவுக்கு இத்தனை நாளா அகிலன் அண்ணா உசத்தியா இருந்துட்டு இப்ப கருப்பா இருக்காருனு வேற பேசறாங்க" என்று கேட்டாள்.
"எனக்கு என்ன சொல்ல தெரியலையே மதினி. அக்காவோ நானோ பேசினா கேட்கற இடத்துலயா இருக்கோம். உங்க வீட்லயாவது அத்தை உங்க பேச்சை காது கொடுத்து கேட்பாங்க. ஆனா எங்கப்பா எதிர்த்து பேசினாலே என்னை தூக்கி போட்டு மிதிப்பார். அக்கா வாசலை தாண்டினா அம்மா அரளி விதையை அரைச்சு திண்ணுபுடுவேன்னு அதட்டுது. அக்காவும் அரளி விதையை கையில வச்சிட்டு அதுவும் மிரட்டிடுச்சு. அம்மை தான் அப்ப வா குடும்பமா நாண்டுட்டு செத்துடுவதா சொல்லுதே. எங்கக்காவை பார்த்தா பாவமா தெரியுது." என்றாள்.
தூரிகாவுக்கு தன் தந்தை மானமிழந்து மதுரா வீட்டுக்கு வந்து அகிலன் அண்ணாவிற்கு கட்டிக்கொடுக்க சமரசமாக பேசுவதா? அல்லது மதுரா வாழ்க்கையை அவள் தாய் தந்தையே மாற்றுவதை கண்டு தான் என்ன செய்வது? அகிலன் அண்ணா தான் முடிவெடுக்க வேண்டும். ஆனால் அவர் அப்பாவின் பேச்சுக்கு எப்பவும் போல கட்டுப்படுவதும் பிடிக்கவில்லை.
கல்லூரி படிக்கும் பெண்ணும், பிளஸ் டூ பள்ளி படிக்கும் மாணவியும் என்ன முன்னெடுப்பது?
"சரி மதினி நான் கிளம்பறேன்." என்று நிலானி நடந்தாள்.
இனியனோ தூரிகா நிலானி பேசுவதை தூரத்தில் கண்டவன், தூரிகா செல்லவும், காய் நகர்த்த ஆரம்பித்தான்.
"என்ன நிலானி வெயில்ல நடக்க. வா பைக்கில ஏறு மச்சான் வீட்ல விட்டுட்டு போறேன்" என்று சாதாரணமாக கூறினான்.
"இல்லை மச்சான்.. நான் நடந்தே போறேன்" என்றாள்.
"அட மச்சான் தானே. நாளைப்பிறவு அக்கா வீட்டுக்காரராக போறேன். வர என்ன தயக்கம்.?" என்றான்.
"பரவாயில்லை மச்சான்.. வீடு பக்கம் தான். தினமும் நடந்து பழகிடுச்சு" என்று நடந்தாள்.
அவள் செல்லும் வழியை மறைத்து "ஏறு... நானும் உங்க அக்காவை பார்க்க உங்க வீட்டுக்கு தான் போறேன்." என்றான். இதற்கு மேல் தவிர்க்க இயலாது ஏறினாள்.
பைக்கில் செல்லும் நேரம், உம்மென்ற முகத்துடன், கடந்திட, ரகு வேறு அதை பார்த்து அகிலனிடம் எடுத்துரைத்தான்.
"என்னடா இனியன் நிலானியை அழைச்சிட்டு பைக்ல போறான்" என்று கேட்க, அகிலனுக்கோ எப்படி விளக்குவது?
அதியமானோ ''குடும்பமா ஒன்னும் மன்னா போகுது. இதுல நீ தான் அகிலா முடிவெடுக்க முடியாத நிலையில இருக்கோம்." என்று வருந்தினார்.
ரகு பிறகு என்ன ஏதென கேட்க, அகிலன் மாறாத முகபாவத்துடன், ''மதுராவை இனியன் வீட்ல இருந்து போய் பரிசம் போட்டிருக்காங்க. அத்தைக்கும் இனியனை பிடிச்சிடுச்சு மாமாவும் சம்மதிச்சுட்டார்." என்றான்.
"என்னடா சொல்லறா? அப்ப மதுரா...?" என்று கேட்க, கையை விரித்தபடி நடந்தான். நண்பன் கொஞ்ச நாட்களாக உயிர்பின்றி நடமாடுவதற்கான காரணம் இன்று புரிய ரகு அருளாளனை திட்டி தீர்த்தான்.
"மச்சான்... நீ வீடு புகுந்து பொண்ணை தூக்குடா. உனக்கு இல்லாத உரிமையா... அந்த இனியனுக்கு" என்று உசுப்பேற்றினான்.
"அவனுக்கும் அதே உரிமை இருக்கேடா. அதோட அத்தை மாமா இனியனை ஏற்க ரெடியா இருக்காங்க. என்னை கன்சிடரே பண்ணலையே. நான் மதுராவை விரும்புவதை கேட்டும் பரிசம் போட்டாச்சுனு பேசறாங்க. இதுல அப்பா..." என்று தந்தையும் அத்தையும் பேசியதையும் தெரிவித்தான்.
ரகுவோ ''சந்தர்பவாதின்னா அது உங்க அத்தை தான்டா. எப்படிடா மனசு வந்துச்சு. ஏன் நிலானியை நீ நல்ல இடத்துல கட்டி தரமாட்டியா? அதென்ன மதுராவுக்கு இனியன் நிலானிக்கு எழிலரசன்னு முடிவுக் கட்டி பேசறாங்க." என்று கத்தினான்.
அகிலனோ, "என்னயென்ன பண்ண சொல்லற. அப்பா.. மாமா அத்தையிடம் ஒருக்கா பேசியிருக்கார். சம்மதிக்கலை... அம்மா என் மனசுல மதுரா இருப்பதா சொல்லவும், அப்பா அத்தை கால்ல விழுந்து கெஞ்சியிருக்கார். அத்தை ஏன்னா எங்க வீட்ல நல்லது நடந்தா பிடிக்கலையா. மதுரா இனியனை கட்டிக்கிட்டு வெளிநாட்டுக்கு எல்லாம் போவா, நிலானி கூட வெளிநாட்ல படிக்க வாய்ப்பு வரும். அதெல்லாம் கெடுத்துக்க முடியாதுனு பேசியிருக்காங்க." என்றான்.
ரகு இதற்கு மேல் என்ன சொல்வான். அருளாளனுக்கு ஏற்ற தங்கையாக இளையமதி இருக்க, தலையிலடித்து நின்றான்.
இங்கு அகிலன் வருத்தம் சுமந்து நிற்க, இனியனோ ஆனந்தமாய் மதுராவை பார்க்க வந்ததான்.
நிலானி இறங்கியதும், சமையக்கட்டு பக்கம் ஓடினாள். இனியன் பைக்கை வரும்போதே மெதுவாக தான் செலுத்தி வந்தான். சத்தமின்றி நிறுத்திவிட்டு வர, "என்னடி இன்னிக்கு விரசா வந்துட்ட?" என்று இளையமதி நிலானியிடம் கேட்க, "அம்மா.. மச்சான் கூட பைக்ல வந்தேன். வெளிய தான் இருக்கார்" என்று கூறியதும், மதுரா அகிலன் தான் வந்திருப்பானென, எழுந்து ஹாலுக்கு ஓடிசெல்ல அங்கே இனியன் நின்றியிருந்தான்.
"ஹாய்... என்ன இவ்ளோ ஆர்வமா. மச்சானை பார்க்க?" என்று கேட்டதும் மதுரா கண்ணீரை மறைத்து தூணுக்கு பின் நகர்ந்தாள்.
"வா இனியா" என்று இளையமதி வரவேற்றார். இளையமதி கூட மச்ஞான் என்றதும் அகிலன் தான் வீடு தேடி வந்துவிட்டானோ என்று அஞ்சினார்.
"ஒன்னுமில்லை அத்தை இந்த பக்கமா வந்தேன் அப்படியே நிலானியை இங்க நம்ம வீட்ல விட்டுட்டு, மதுராவை பார்த்து பேசலாம்னு வந்துட்டேன். மத்த பிள்ளைங்க மாதிரி மதுரா போன் எதுவும் வச்சியில்லையே... அதுக்கூட பேசணும்னா நேர்ல தான் வரணும்னு வந்துட்டேன்" என்று இழுத்தான்.
''அதுக்கென்ன பேசுங்க" என்று கல்யாண சுந்தரம் வந்தார்.
தோட்டத்துப்பக்கம் மாலை நேரம் மதுரா கற்சிலை போல இருக்க, இனியனோ "என்னை பார்த்து ஆசையா வருவனு பார்த்தா, சைலண்டா நிற்கற மதுரா. வெளிநாட்ல இருந்து இங்க வர்றப்ப அப்பா கல்யாணம் பண்ணிக்கறியானு கேட்டு உன்னை பரிசம் போட கேட்டதும், எவ்ளோ யோசித்தேன் தெரியுமா? சொந்தத்துல கல்யாணம் செய்ய... ஆனா உன்னை பார்த்ததும் கட்டிக்கறதா அப்பாவிடம் சொல்லிட்டேன்.
ஆனா உன் முகம் பரிசம் போட்டதுலயிருந்து டல்லா தெரியுது. ஏன் மதுரா... என்னை பிடிக்கலையா மதுரா?" என்று உருகும் விதமாக கேட்டான். மதுரா பதில் சொல்ல முடியாமல் நின்றாள்.
இனியனோ "பரவாயில்ல. கல்யாணத்துக்கு அப்புறம் என்னை பிடிச்சிடும். உன்னை அந்தளவு பார்த்துப்பேன்." என்று சொல்ல மதுராவோ கையை பிசைந்து நின்றாள்.
அகிலன் வருவானென ஓடிவந்து தான் என்றதும் தவித்து அழுகையை அடக்கிய மதுராவை கண்டு ஆனந்தப்பட்டான் இனியன். காலம் தாழ்த்தாமல் திருமணத்தை முடிக்கவும் சிந்தித்தான்.
--
மறுபுறம் அடுத்தடுத்த நாளில் தேர்தல் சூடு இதே நேரம் என்பதால் தேர்தல் நெருங்கவும் அகிலன் அந்த வேலைக்கும் தள்ளப்பட்டான். அகிலனுக்கு மக்கள் ஆதரவு அதிகரிக்கவும் செய்தது. இனியனுக்கு அந்தளவு ஆதரவில்லை என்பதும், தோற்பது உறுதி என்பது வரை கணித்தான். இம்முறை தோல்வியை மிகவும் ஆனந்தமாக தான் வரவேற்க தயாரானான். ஏனெனில் அடுத்த தலைவர் அகிலனாக இருந்தாலும் அவன் ஆசைப்பட்ட வாழ விரும்பிய மதுராவுடனான வாழ்க்கை அமையாது என்று வில்லனாக தான் யோசித்தான்.
அருளாளனுக்கு மட்டும் தேர்தலிலும் அகிலன் வெற்றி பெறுவது பிடிக்காதவராக இருந்தார். அந்த கோபத்தை எல்லாம் தங்கை இளையமதியிடம் அன்பாய் பொழிவது போல நடித்தார்.
மதுரா முதல் முறையாக முற்றிலும் உடைந்தவளாக நின்றாள். இளையமதியிடம் திருமண சேலை என்று உடல் முழுவதும் ஜரிகை இருக்க நாலைந்து புடவை வீட்டிற்கே வந்து சேர்ந்தது.
அதுவும் இனியனோ 'உன்னை கூட்டிட்டு போய் தான் புடவை எடுப்பதா இருந்தேன். ஆனா பாரு.. அத்தை மாமா உன்னை ரொம்ப கட்டுப்பாட்டு கொண்ட பொண்ணா வளர்த்துட்டாங்க. பரிசம் போட்டா படி தாண்ட கூடாதுனு சொல்லிட்டாங்க. அதனால நானே ஐந்து புடவை செலக்ட் பண்ணிருக்கேன். இதுல எது கல்யாணதுக்குனு கட்ட விரும்பறியோ கட்டு. தேர்தல் முடிவு அப்ப தான் நம்ம கல்யாண நாள்' என்று அதையும் கூறிச் சென்றான்.
நிலானியிடம் மதுரா உடைந்தவளாக, "ஒருவேளை நான் தான் தப்பா புரிஞ்சிக்கிட்டேனா நிலானி. அகிலன் மச்சானுக்கு என்னை விட தேர்தல்ல ஜெயிக்கறது தான் பெருசா? தூரிகா வந்துட்டு போனப்பிறகும் வரலை. நீ வேற அம்மா தான் ஏதோ பேசியதா சொல்லற" என்று உடைந்தவளாக கேட்டாள்.
அதே சமயம் தூரிகா உண்மையை சொல்லியதை, நிலானி அன்னை தந்தை தள்ளி இருக்கும் நேரமாக பார்த்து, "அக்கா... மச்சான் உன்னை விரும்புறது உண்மை. ஆனா சின்ன மாமாவுக்காகவும் அவர் குடும்பத்துக்காக பின்வாங்குறாரு. அம்மாவிடம் சின்ன மாமா ஏதோ பேசியிருக்கு. அம்மா என்ன சொல்லுச்சோ அதுலயிருந்து மாமா வீட்ல உன்னை பார்க்க வர்றதை அகிலன் மாமா தவிர்க்கறார்." என்றாள்.
இதை கேட்டதும் மதுராவுக்கு பெரிய அடியாக இதயத்தில் தாக்கியது.
மதுராவோ, "என்ன சொல்லற... அகிலன் மச்சான் தவிர்க்கறாரா?" என்று ஸ்தம்பித்தாள் அகிலனுக்கு வரவேண்டுமென்றால் வந்திருப்பான். இந்த கல்யாணத்தை தடுக்கும் விதமாக கத்தி கூச்சலிடலாம். அகிலனுக்கு இல்லாத உரிமையா இனியனுக்கு உள்ளது.
அப்படியிருக்க இனியனுக்கு மணக்க ஏற்பாடு நடந்தும் வேடிக்கை பார்ப்பதாக இருந்தால், அகிலன் மச்சான் என் மனதை சற்றும் யோசிக்காமல் இருக்கின்றாரா' என்ற எண்ணமே வலித்தது.
மதுரா உயிரற்ற பொம்மையாக நடமாட, நிலானியும் அக்காவின் நம்பிக்கையை தகர்ந்திடவும், அன்னையிடம் அக்காவுக்காக ஆதரவாய் பேசினாள்.
" வாயை மூடுடி. உன்னையும் அவளையும் கரை சேர்க்க, கடவுளே வழி தந்திருக்கார். உன்னை படிக்க வைக்கவும், கட்டி கொடுக்கவும் ஈஸியா கடவுள் வழி தர்றது புரியலை. இதே ஊர்ல படிச்சி, இங்கயே சுத்திட்டு இருக்கான். இனியனை மாதிரி நாலு இடம் பார்க்க வேண்டாமா?" என்று அதட்டிவிட்டார்.
"நீ பெரிய செல்ஃப்பிஷ்மா" என்று நிலானி கூறிவிட அவளை அறைந்து "அப்படி தான் வச்சிக்கோ" என்று கோபமானார்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
Hi கீழ comments box la write பண்ணிட்டு add reply கொடுத்தா comments பதிவாகும்.
நான் approval செய்து விடுவேன்.
-
மதுர ஜில்லா... மச்சானே!-46
17 minutes ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-45
23 hours ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-44
2 days ago
-
மதுர ஜில்லா... மச்சானே-43
3 days ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-42
4 days ago
- 25 Forums
- 215 Topics
- 762 Posts
- 1 Online
- 329 Members
