தகிக்கும் நிலவொன்று-12
அத்தியாயம்-12
லேபர் ரூம் கதவு மூடப்பட்டு கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாகிவிட்டது.
வெளியே இருந்த ஒவ்வொரு நிமிடமும் ருத்ரனுக்கும், யதுநந்தனுக்கும் ஒரு யுகமாகவே நகர்ந்தது.
ஷ்ரத்தா அழுகையின் வலியையும் இருவருமே வெளியேயிருந்து கேட்டனர்.
"வலிக்குது டாக்டர்... முடியலை டாக்டர். அம்மா" என்ற வார்த்தை மாற்றி மாற்றி வந்து அழுது கதறுவதை கேட்டு ருத்ரன் காதை மூடிக்கொண்டான்.
திடீரென்று குழந்தையின் அழுகுரல் முழு நடைபாதையையும் நிரப்பியது.
அந்த சத்தம் கேட்டவுடன் வெளியே நின்றிருந்த அனைவரும் ஒரே நேரத்தில் கதவைப் பார்த்தனர்.
ருத்ரனின் இதயம் வேகமாக துடித்தது. யதுநந்தனின் முகத்திலும் வேர்வை பூக்கள் பூத்திருக்க, தானாகவே ஒரு நிம்மதி தோன்றியது.
கதவு திறந்ததும் "ஆண் குழந்தை..." என்று புன்னகையுடன் கூறிய செவிலியரை பார்த்ததும், அனைவரின் முகத்திலும் நிம்மதி மலர்ந்தது.
"தாயும்... குழந்தையும் நல்லா இருக்காங்க." அந்த ஒரு வாக்கியம் அனைவரையும் ஆசுவாசப்படுத்தியது.
அதே நேரத்தில் அவசரமாக ஓடிவந்தார் கீர்த்தனா.
"எப்படி இருக்கா அந்த பொண்ணு?" என்று மூச்சு வாங்கியபடி கேட்டார்.
"நல்லா இருக்காங்க மா. ஏன்மா உடனே வரலை." என்றான் ருத்ரன்.
"டேய்... குழந்தை பிறந்தா தேவையானதை வாங்கிட்டு வர கடைக்கு போனேன்." என்று குழந்தை பிறந்ததும் கையில் வாங்க ஒரு குட்டி மெத்தையை நீட்டினார்.
அதற்குள் செவிலியர் சிறிய வெள்ளைத் துணியில் சுற்றப்பட்டிருந்த குழந்தையை வெளியே கொண்டு வந்தார்.
"யாராவது வாங்கிக்கோங்க..." என்று சொல்லவும், கீர்த்தனா தன்னையறியாமல் இரு கைகளையும் மெத்தையோடு நீட்டினார்.
அந்த சின்னஞ்சிறு உயிர் அவரது கரங்களில் வந்து சேர்ந்தது.
"அம்மாடி... எவ்வளவு அழகா இருக்கான்..." என்று கீர்த்தனா கூறினார்.
சிவந்த கன்னங்கள், சிறிய மூக்கு, மூடியிருந்த கண்கள், சுருங்கிய விரல்கள், சின்னஞ்சிறு உதடுகளை சப்பிக்கொண்டே தூங்கிக் கொண்டிருந்தான்.
"கடவுளே..." என்று அவனது நெற்றியில் முத்தமிட்டார் கீர்த்தனா. அருகில் நின்றிருந்த ருத்ரன் மெதுவாக அருகே வந்தான். "அம்மா..." என்றான்.
கீர்த்தனா சிரித்தபடி குழந்தையை அவனிடம் காட்டினார். முதலில் சத்ரியன் குழந்தை என்ற வெறுப்பு கூட இல்லை. குழந்தை என்றால் வெறுக்க தோன்றுமா?
ருத்ரன் மெதுவாக ஒரு விரலை குழந்தையின் உள்ளங்கையில் வைத்தான்.
அடுத்த நொடியே அந்தச் சின்ன விரல்கள் அவனது விரலை இறுகப் பிடித்துக் கொண்டன.
ருத்ரன் தன்னையறியாமல் சிரித்தான். "அம்மா..." என்று மெதுவாக அன்னையை பார்த்தான்.
மறுபக்கம் நின்றிருந்த யதுநந்தனும் அருகே வந்தான்.
"நானும் குழந்தையை பார்க்கலாமா?" என்று கேட்டான்.
"பாருங்க." என்று கீர்த்தனா குழந்தையை சற்றுத் திருப்பிக் காட்டினார். யதுநந்தன் குழந்தையின் கன்னத்தை மெதுவாக வருடினான்.
"ஹாய் சாம்பியன் உலகத்தை பார்க்க வந்தாச்சா" என்று சிரித்தான். அவன் குரலைக் கேட்டதும் குழந்தை கண்களை சுருக்கி முகத்தை அசைத்தது.
மூவரின் முகத்திலும் தெரியாமல் சிரிப்பு வந்தது.
அந்த நிமிடம் ருத்ரனுக்கும் யதுநந்தனுக்கும் இடையே இருந்த சண்டை கூட மறைந்தது. இருவரின் கவனமும் அந்தச் சிறிய உயிரின் மீதே இருந்தது.
"ஷ்ரத்தாவை பார்க்கலாமா?" என்று யதுநந்தன் செவிலியரிடம் கேட்டான்.
"ஒருத்தர் மட்டும் வாங்க." என்று கூறியதும், "போயிட்டு வாங்க தம்பி." என்று கீர்த்தனா கூற யதுநந்தன் உள்ளே சென்றான்.
ருத்ரன் அப்படியே கதவின் அருகே நின்றான். உள்ளே போக ஏனோ மனம் வரவில்லை.
'அவளை இஷ்டத்துக்கு கத்த வச்சி மனழுத்தம் தந்தது நான் தான். இப்ப நான் போய் அவளை பார்க்கவும் முடியுமா?' என்ற எண்ணம் மட்டும் மீண்டும் மீண்டும் மனதை அழுத்தியது.
'நான் அப்படி பேசாம இருந்திருந்தா... அவளுக்கு இவ்வளவு சீக்கிரம் வலி வந்திருக்காதோ...?' முதல் முறையாக தான் செய்த செயலுக்காக குற்றவுணர்ச்சி அவனை முழுவதுமாக ஆக்கிரமித்தது.
அறைக்குள் படுக்கையில் சோர்வாக படுத்திருந்தாள் ஷ்ரத்தா. முகம் வாடியிருந்தது.
ஆனால் தாய் ஆன ஒளி மட்டும் முகத்தில் மிளிர்ந்தது.
யதுநந்தன் மெதுவாக அருகே வந்தான். "கங்கிராட்ஸ் ஷ்ரத்தா..." என்று புன்னகைத்தான்.
ஷ்ரத்தாவும் சோர்வாக சிரித்தாள். "தேங்க்ஸ் சார்..."
கொஞ்ச நேரம் முன் தான் கார்த்திகா நடந்ததை முழுவதும் ஷ்ரத்தாவிடம் சொன்னாள்.
ஷ்ரத்தா மயங்கியதும், லேபர் பெயின் வர ஆரம்பிச்சதும் ருத்ரனே தூக்கிட்டு ஓடினாரு.
இங்க வந்ததும், யதுநந்தன் சார் ருத்ரன் சாரை அடிச்சிட்டார். கிட்டதட்ட சண்டை... ஆனா இந்த முறை ருத்ரன் சார் அமைதியா இருந்தார்' என்று கூறியிருந்தாள்.
யதுநந்தன் வாழ்த்தவும், ஷ்ரத்தாவின் கண்கள் அவனை நோக்கின "எனக்காக... அவரை தாக்கியதா கார்த்திகா மேம் சொன்னாங்க" என்றாள்.
"அது பெரிய விஷயமில்லைங்க." என்று தவிர்க்க முயன்றான்.
"இல்லை.. இருந்தாலும் தேங்க்யூ." என்றாள் ஷ்ரத்தா.
யதுநந்தன் பேச்சை மாற்றினான். "வினோத்துக்கு சொல்லணும்னு சொன்னிங்களாம். நான் கடந்த ஒரு வாரமா ட்ரை பண்ணிட்டு இருக்கேன். போன் ஸ்விட்ச் ஆஃப்தான் இருக்கு. கான்டாக்ட் பண்ணவே முடியலை." என்றான். அந்த வார்த்தை கேட்டதும் ஷ்ரத்தாவின் கண்கள் கலங்கின. கண்ணீர் மெதுவாக வழிந்தது.
"ஷ்ரத்தா..." என்று யதுநந்தன் பதறினான்.
"ஒ... ஒன்னுமில்லை..." என்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
கார்த்திகா அருகில் வந்து, "மேடம்... அவர் வரலன்னா... ஏதாவது முக்கியமான வேலையில இருப்பார். என்னைக்கு என்றாலும்... உங்களை தேடி கண்டிப்பா வருவார்." என்றாள்.
ஷ்ரத்தா மெதுவாக தலையசைத்தாள். அந்த நேரம் கீர்த்தனா குழந்தையை கையில் ஏந்திக்கொண்டு உள்ளே வந்தார். "பாரும்மா உன் பையன். என்ன அழகா ராஜா மாதிரி இருக்கான்." என்று குழந்தையை காட்டினார்.
ஷ்ரத்தாவின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.
ருத்ரனும் அமைதியாக கதவின் அருகே நின்று அந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தான்.
"மேடம்... குழந்தைக்கு தடுப்பூசியும் டேக்கும் போடணும்." என்று செவிலியர் கூறவும், "இதோ கொண்டு வர்றேன்." என்று கீர்த்தனா குழந்தையுடன் வெளியே சென்றார்.
யதுநந்தனோ "குழந்தைக்கு என்ன பெயர் வைக்க ஐடியா. ஏதாவது யோசித்திங்களா? இல்லை.. இருந்த நேரமெல்லாம் குழந்தையோட அப்பாவை பத்தின நினைப்பா?" என்றதும் "அவரை மறந்தா தானே நினைக்க... சாரி.. பெயர் எல்லாம் யோசிக்கலை சார்" என்றாள்.
"ஏதாவது நீங்களும் அவரும் பேசி வச்ச மாதிரி ஏதாவது பெயர் இருக்கா?" என்று கேட்க, பல்லை கடித்து, "முதல் முறை அபார்ஷன் ஆனாப்ப சத்ரியன் ரொம்ப உடைஞ்சு போயிட்டார். நான் ரொம்ப வருத்தமா சுத்திட்டு இருந்தப்ப சத்ரியன் தான் ஒரு குழந்தை தானே போச்சு. இன்னொரு குழந்தை பெத்துக்கலாம்னு சொல்லி, என் மனசை மாத்த ட்ரை பண்ணினார். அப்ப தான் கப்பல்ல போனோம். பெரிய கப்பல்... நிறைய பேசினோமே தவிர, எந்த பெயரும் குறிப்பிட்டு வச்சி பேசினதில்லை." என்றாள்.
அந்த நேரம் யதுநந்தனுக்கு அந்த சந்தேகம் பிறந்தது. சத்ரியன் குழந்தையை அழிக்க வந்தான் நான் அவனை சுட்டு சாகடிச்சிட்டேன்னு சொன்னாளே. இப்பொழுது... முதல்ல கருவுற்ற போது அபார்ஷன் ஆகவும் ரொம்ப சத்ரியன் உடைஞ்சு போயிட்டார்னா என்ன அர்த்தம்?' என்று தேன்றியது. ஆனால் பிரசவம் முடித்து ஓய்ந்தவளிடம், சந்தேகப்பட்டு கேட்டால் நன்றாக இருக்காதே
அதுவுமில்லாமல் இதே காரணத்தால் தானே ருத்ரன் அவளை நோண்டி நோண்டி கேள்வி கேட்டு இம்சை தருவதாக தானே கண்டித்தது. இப்பொழுது அதையே நான் செய்ய இயலாது. எதுவானாலும் பொறுத்திருந்து பார்ப்போமென "நான் வெளியே வெயிட் பண்றேன் ஷ்ரத்தா" என்று கிளம்பினான்.
அறைக்குள்ளிருந்து யதுநந்தன் வரவும், ருத்ரன் அவசரமாக உள்நுழைய முற்பட்டான்
ஷ்ரத்தா மட்டும் இருக்க ருத்ரன் அறைக்குள் சில நொடிகள் அமைதியாக நின்றான்
"சாரி..." என்று முதலில் சொன்னது ருத்ரனே. ஷ்ரத்தா மெதுவாக கண்களைத் திறந்தாள்.
"ப்ளீஸ்... எனக்கு அடிவயிறு சுள்ளுனு இருக்கு. என்னால கத்தக்கூட முடியலை. உடம்புல சில சொல்ல முடியாத இடத்துல தையல் போட்ட மாதிரி இருக்கு.
நீங்க.. என்ன கேட்டாலும்... இப்ப என்னால பதில் சொல்ல முடியாது. அப்படியே சொன்னாலும் என் சத்ரியனை பத்தி எதுவும் என் வாயிலருந்து வெளிய வராது.
சத்ரியன் உயிரோட இருக்கார்னு நினைச்சா... ஆமா... அவர் உயிரோட இருக்கார்... என் மனசுல... உயிரோட இல்லன்னு நினைச்சா ஆமா.. உயிரோட இல்லை...
இது மனசு சம்பந்தப்பட்ட விஷயம் போதுமா?" என்றாள்
ருத்ரன் அமைதியாக நின்றான்.
ஷ்ரத்தாவோ "சப்போஸ்.. ஸ்டெல்லா அவங்க பொண்ணு ஐரீனை... ஒருநாள் மீட் பண்ணுவீங்க. அப்ப...
அவங்ககிட்டயே கேளுங்க. என் சத்ரியன் யாருனு." அவளது கண்களில் பெருமை தெரிந்தது. "அவங்க சத்ரியனை கடவுளா கொண்டாடுவாங்க. அதர்வைஸ்.. என் சத்ரியன்.. பொட்ட இல்ல... கோழை இல்ல... அவர்.. அவர்.." சிறிது இடைவெளி விட்டாள். அடங்காத திமிர் அரசன்... தீ லீடர்." அந்த வார்த்தைகள் ருத்ரனுக்குள் ஏதோ ஒன்றை உலுக்கியது.
அவன் மெதுவாக அங்கும் இங்கும் திரும்பி பார்த்து, "தண்ணீர் இருந்தா எடுத்து தந்திருப்பேன். ரொம்ப தம் பிடிச்சி பேசிட்ட.. எமோஷனல் ஸ்பீச்... நான் சத்ரியனை பத்தி இனி உன்னிடம் பேச மாட்டேன். ப்ராமிஸ்.." என்றவன் கதவின் அருகே நின்று திரும்பிப் பார்க்காமல் சொன்னான்.
"முதல்ல உன்னை இந்த நிலைமையில் அதிகம் தொந்தரவுப்படுத்திட்டதுக்கு சாரி கேட்டேன். இப்ப.. கங்கிராட்ஸ்... பையன் பிறந்திருக்கான்ல அதுக்கு." என்றவன் இரண்டு அடிகள் நடந்தவன் மீண்டும் நின்றான்.
"ஆங்.. யதுநந்தனிடம் சொல்லிடு.. இனிமேலும் ஹீரோ மாதிரி சீன் போட்டா. போலீஸ்காரன் அடி எப்படி இருக்கும்னு... ஒருநாள் திருப்பி தருவேன். நான் ஒன்னும் அப்பா இறந்ததும் அவருக்கு பதிலா இங்க போஸ்டிங் வாங்கிட்டு வரலை. முறையா டிரைனிங் முடிச்சி வந்திருக்கறவன்" என்றதும் ஷ்ரத்தா சோர்வாக ஏளனமாக சிரித்தாள்.
கதவைத் திறக்கப் போனவன்... மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்த்தான்.
"இன்னொரு விஷயம். நீ... எந்த அசெசரீஸும் போடலைன்னாலும்... அழகாத்தான் இருக்க. நேச்சுரல் ப்யூட்டி" அதைச் சொல்லிவிட்டு, ஒரு நொடி கூட நிற்காமல் வெளியே சென்றான்.
ஷ்ரத்தா அப்படியே அவன் சென்ற கதவையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
ருத்ரன் தான் இவ்வளவு பேசியும் அமைதியாக சென்றுவிட்டான். இதில் தன்னை 'அழகான பெண்' என்று பாராட்டி இருக்கிறான்.
இது நல்லதற்கா? அல்லது ஏன் இப்படி? என்ற அந்த அதிர்ச்சியிலேயே அவளது விழிகள் மெதுவாக மூடியது. குழந்தை பெற்று எடுத்த அசதியில் நிதானமாக மூச்சை விட்டாள்.
இமை மூடியவளுக்குள், 'வினோத் அண்ணாவுக்கு சொல்லனும். அவரோட பாஸ் சத்ரியனுக்கு ஆண் வாரிசு பிறந்ததை தெரிந்தா சந்தோஷப்படுவாங்க. வினோத் அண்ணாவுக்கு எப்படி தெரிவிக்கறது. சத்ரியா.. உனக்கு ஆண் வாரிசு பிறந்திருக்கு... உனக்கு அதெல்லாம் தெரியுமா?' என்று இ
ல்லாதவனை நினைத்து நினைத்து வருந்தி பல்லை கடித்து இமை மூடினாள்.
அசதியின் காரணமாக சற்று நேரத்திலேயே கண் அயர்ந்தாள்.
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்.
தகிக்கும் நிலவொன்று.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 12)
அடப்பாவி..! இந்த ருத்ரன் சைக்கிள் கேப்ல சிந்து பாடுறானோ..? முதல்ல சாரி சொன்னான், அப்புறம் கங்கிராட்ஸ் சொன்னான், அதற்கப்புறம் யதுநந்தனை ரெண்டு திட்டுத் திட்டினான் சரி, அப்புறமும் எதுக்கு ஷ்ரத்தாவை நேச்சுரல் ப்யூட்டின்னு சொல்றான், ஒருவேளை ருத்ரன் அவளை லவ் பண்ண ஆரம்பிச்சிட்டானோ...? இது சத்ரியனுக்குத் தெரிஞ்சால்..?
😊😊😊
CRVS (or) CRVS 2797
-
தகிக்கும் நிலவொன்று-17
22 minutes ago
-
தகிக்கும் நிலவொன்று-16
15 hours ago
-
தகிக்கும் நிலவொன்று-8
17 hours ago
-
தகிக்கும் நிலவொன்று-7
17 hours ago
-
தகிக்கும் நிலவொன்று-6
18 hours ago
- 25 Forums
- 215 Topics
- 758 Posts
- 0 Online
- 329 Members
