Forum

தகிக்கும் நிலவொன்று...
 
Notifications
Clear all

தகிக்கும் நிலவொன்று-8

8 Posts
8 Users
3 Reactions
69 Views
(@praveena-thangaraj)
Posts: 178
Member Admin
Topic starter
 
[#186]

அத்தியாயம்-8

இரண்டு நாட்கள் கழித்து ருத்ரனுக்கு நிரோஷின் எண்ணும் கிடைத்தது.

  உடனே அவனை தொடர்பு கொண்டான் 'ஹலோ... நிரோஷா?" என்றான்.

"எஸ் சார்... நான் நிரோஷ் பேசுறேன்."

"நான் இன்ஸ்பெக்டர் ருத்ரன்."

என்றதும் மறுமுனையில் சில நொடிகள் அமைதி நிலவியது.

"சொல்லுங்க சார்..." என்றான்‌ நிரோஷ். 

"உங்களை சந்திச்சு சில விஷயம் பேசணும். பார்க்க முடியுமா?" என்று கேட்க, நிரோஷ் தயங்கிவிட்டு சரி என்றான். 

   ஷ்ரத்தா படித்த கல்லூரியில் பைனல் இயர் படித்துக் கொண்டிருக்க, மப்டியில் ருத்ரன் வந்திருந்தான். 

  நிரோஷிற்கு லேசான பதட்டமிருந்தாலும் மிக இயல்பாக உன்னை பார்க்க வந்த உறவினராக பார்த்து செல்கின்றேன். பதட்டமோ பயமே வேண்டாமென்று ருத்ரன் கூறியிருந்தான். 

அதனால் நிரோஷ் பவ்யமாக கேன்டீனில் அமர்ந்திருக்க ருத்ரன் அவன் முன் இருந்தான். 

"சத்ரியனைப் பற்றி சில விஷயங்கள் கேட்கணும்." என்று நேரிடையாக ருத்ரன் ஆரம்பிக்க, நிரோஷ் ஆழமாக மூச்சை இழுத்தான்.

"சார்... உண்மையை சொல்லணும்னா... எனக்கு சத்ரியன் சாரைப் பற்றி பெருசா எதுவும் தெரியாது.

காலேஜ்ல நான் ஷ்ரத்தாவை ஒன் சைடா விரும்பினேன்.

அதனால அவங்க பின்னாடி சுத்திக்கிட்டு இருந்தேன்.

ஒருநாள் ஜான் அண்ணா அவங்களை தொந்தரவு பண்ணியது சத்ரியன் சார் கவனத்துல விழுந்து, எங்கிருந்தோ வந்தார்.

ஒரே இழுப்புல ஜானை கீழே தள்ளி அடிச்சது இன்னைக்கும் என் கண்ணுல இருக்கு சார்."

ருத்ரனின் புருவம் உயர்ந்தது.

"நான் கூட அதை மறைந்திருந்து வீடியோ எடுத்தேன் சார். பயந்து போய் அப்பறம் டெலிட் பண்ணிட்டேன். அதுக்கப்புறம் எனக்கு விழ வேண்டிய அடின்னு என் பிரெண்ட்ஸ் கூட கிண்டல் பண்ணி சொன்னாங்க. 

  ஆனா... ஷ்ரத்தா ஆர்டர் செய்த உணவை அவ கேன்சல் செய்தப்பிறகு நான்தான் சாப்பிட்டுட்டேன்.

அதனால ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆனேன். ஷ்ரத்தாவை அப்பவே பாடிகார்ட்ஸ் அழைச்சிட்டு கிளம்பிட்டாங்க.  இன்பெக்ட் நான் உயிருக்கு போராடி ஹாஸ்பிடல்ல இருந்தது ஷ்ரத்தாவுக்கு தெரியவும்

  ஷ்ரத்தா அதுக்கு சத்ரியன் சாரிடம் அழுது, என்னை பார்க்க வந்தா" என்றதும், 

"ஷ்ரத்தா உன்னை பார்க்க வந்தாளா?" என்று கண்கள் ஈடுங்க கேட்டான்.‌

"வந்தாங்க சார். சத்ரியன் சார் கூடத்தான் வந்தாங்க." ருத்ரன் உட்கார்ந்திருந்த விதமே மாறியது.

"ஏன்.. உன்னை பார்க்க வந்தா அதுவும் சத்ரியனே கூட்டிட்டு வந்தான்?" என்று கேட்க, "முதல்ல ஷ்ரத்தாவுக்கு என்‌மேல சாப்ட் கார்னர் இருக்கும். அதனால வந்தானு நினைச்சேன் சார்." என்றதும் ருத்ரன் பல்லை கடிக்கும் சத்தம் கேட்டிருக்க மாட்டான் நிரோஷ்.

  "ஆனா அது அப்படியில்லை.. ஒரு உயிர் என்னால சாகற வரை போகுதுனு துடிச்சு போய் வந்ததா ஷ்ரத்தா சொன்னா." என்றான் சோகமாக. 

  "வேற ஏதாவது சத்ரியன் ஆக்டிவிட்டிஸ் வித்தியாசமா இருந்ததா?" என்று கேட்க, "இல்லை சார்.. எரிச்சலோட ஹாஸ்பிடலில் ஸ்மோக் பண்ணிட்டு இருந்தார் ஆங்... ஒரு விஷயம் மட்டும் ஞாபகம் இருக்கு சார்.

சத்ரியன் சார் ஹாஸ்பிடல் வெளியே நின்னு சிகரெட் பிடிச்சிட்டிருந்தார்.

அதுக்கு ஸ்டெல்லானு ஒரு நர்ஸ் ரொம்ப திட்டினாங்க. அங்கிருப்பது சத்ரியன் என்று தெரிந்ததுக்கு அப்புறம் ஸ்டெல்லா நர்ஸ் அவர்கிட்ட தனியா ஏதோ ரகசியமா பேசினாங்கன்னு மத்த நர்ஸ்கள் பேசிக்கிட்டிருந்தாங்க."

ருத்ரன் வேகமாக மனமெனும் நோட்டில் குறித்துக் கொண்டான்.

"வேற?" என்றான்.‌

"அவ்வளவுதான் சார்.

அதுக்கப்புறம் சத்ரியன் சாரை நான் பார்த்ததே இல்ல. ஷ்ரத்தா அவரை காதலிக்கிறாங்கன்னு எனக்கு அப்புறம் தான் தெரிஞ்சது. அதை தெரிஞ்சதும் நான் மொத்தமா ஒதுங்கிட்டேன்.

   மலையோட மோத முடியுமா? ஷ்ரத்தாவை அதுக்குபிறகும் நான் நேசிக்கறதா இருந்தா 'செத்த உடலுக்கும் உயிர் வந்து சாகடிக்க வந்து நிற்க மாட்டார்." என்றதும் ருத்ரனோ அடக்கப்பட்ட கோவத்துடன், 'செத்ததுக்கு பிறகும் வருவானா' என்று ஏளனமாக இருந்தான்.

  "அவங்களும் அதுக்கப்புறம் யார்கிட்டயும் சரியா பேசவே இல்ல. எப்பவும் சோகமாவே இருப்பா. உண்மையிலேயே...

ஷ்ரத்தா சத்ரியன் சாரை கொன்னாங்கன்னு கேட்டப்ப...

எனக்கே அதிர்ச்சிதான் சார்." ருத்ரன் கண்களை மூடிக் கொண்டான். சத்ரியன் புராணம் அவனுக்கு கேட்பதற்கே சலிப்பானது. 

மீண்டும் வெறும் கைகளே விடையாக கிடைத்த உணர்வு. 

"தேங்க்ஸ்." என்று மட்டும் கூறி கிளம்பினான்.

காருக்குள் ஏறி அமைதியாக அமர்ந்தான். டிரைவர் சேகர் ரியர் மிரரில் ருத்ரன் முகத்தை பார்த்தான்.

"என்னாச்சு சார்? ரொம்ப டல்லா இருக்கீங்க." ருத்ரன் சோர்வாக சிரித்தான்.

"எங்க போனாலும்... ஒரு முட்டு வந்துடுது சேகர். ஒருத்தன்கிட்ட ஒரு க்ளு கிடைக்கும்னு நினைச்சா... அவனும் 'எனக்கு எதுவும் தெரியாது'ன்னுதான் சொல்றான்." சேகர் காரை மெதுவாக இயக்கினான்.

"விடுங்க சார். ஒருநாள் இல்ல ஒருநாள்... ஏதாவது க்ளு கிடைக்கும்." சில நொடிகள் கழித்து டிரைவரே கேட்டான்.

"சார் உண்மையாவே கிங்பின் சத்ரியன் உயிரோட இருக்கார்னு நம்பறீங்களா?" என்றதும், ருத்ரன் ஜன்னல் வழியே வெளியே பார்த்தான்.

"தெரியல சேகர்... என் கண்ணால... அவன் உடலை பார்த்தேன். ரத்தம் வெள்ளத்தில, புகை மண்டலத்துல.. அவன் செத்தொழிந்ததா பார்த்தேன்.

ஆனா... மனசு மட்டும்... 'இது முடிவு இல்ல'ன்னு சொல்லிக்கிட்டே இருக்கு." என்றதும் சேகர் யோசித்தான்.

"சார்... ஒருவேளை அவர் உயிரோட இருந்தா... ஏன் உலகத்துக்கே செத்துட்டதா நம்ப வைக்கணும்?" ருத்ரன் மெதுவாக தலையசைத்தான்.

"அதுக்குத்தான் பதில் கிடைக்கலை. ஆமா அன்னிக்கு செய்தியாளரா வேஷம் போட்டு உன்னை கூட்டிட்டு போனா நீ என்ன நிஜமான செய்தியாளரா கேள்வி கேட்கற" என்றதும் "சாரி சார்" என்றான் சேகர். 

 காருக்குள் மீண்டும் அமைதி.

ருத்ரனின் எண்ணம் ஷ்ரத்தாவிடம் சென்றது.

'அவளை அழுத்தி விசாரிச்சா... உண்மை சொல்ல வாய்ப்பு இருக்கு. ஆனா சத்ரியனுக்காக உயிரையே கொடுக்க தயாரா இருக்கிறவ... உண்மையை மட்டும் சொல்லிடுவாளா? அதே பல்லவி பாடுவா.' என்று 

அவனுக்கே பதில் தெரிந்திருந்தது.

"ச்சே..." என்று எரிச்சலுடன் இடது கையை பார்த்தான்.

இன்னும் முழுமையாக குணமாகவில்லை. 'இந்த கை வேற... இப்பவே ஜானை நேர்ல போய் விசாரிக்கணும்னு தோணுது. பைக்கே எடுத்துட்டு போக முடியல.' அவன் பற்களை கடித்தான்.

அந்த நேரம் இரண்டு நாட்களுக்கு முன்பு ஷ்ரத்தா உளறிய வார்த்தை மீண்டும் நினைவுக்கு வந்தது.

'என் சத்ரியன்... 126 குழந்தைகளை.' அதற்குப் பிறகு அவள் அமைதியாகி விட்டாள்.

'126 குழந்தைகளா? என்ன அர்த்தம்? அது ஏதாவது கேஸா? இல்ல... வேற ஏதாவது ரகசியமா?' என்று மனதிற்குள்  முணுமுணுத்தபடி நகத்தை கடித்தான். 

அதே நேரத்தில் ஜானும் இன்னும் இரண்டு நாட்களில் சென்னை வருவதாக தகவல் வந்திருந்தது.

'ஜானாவது ஒரு துருப்பு கொடுக்கணும்.' என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டான் ருத்ரன்.

   இரண்டு நாட்கள் கழித்து...

     மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்.

ருத்ரன் தன் மேசையில் இருந்த கோப்புகளை புரட்டிக் கொண்டிருந்தான்.

அப்போது ஒரு கான்ஸ்டபிள் உள்ளே வந்தான். "சார்... கோர்ட்டிலிருந்து ஆர்டர் வந்திருக்கு." ருத்ரன் கோப்பை வாங்கிப் புரட்டினான்.

முதல் வரியைப் படித்ததும் அவன் புருவம் சுருங்கியது.

'மனுதாரர்-அட்வகேட் யதுநந்தன்.' என்று போட்டிருக்க, அடுத்தடுத்த வரிகளைப் படிக்கப் படிக்க... ருத்ரன் முகம் இறுகியது.

'கைதி ஷ்ரத்தா ஏழு மாத கர்ப்பிணி. தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னரும் இன்ஸ்பெக்டர் ருத்ரன் அடிக்கடி சிறைச்சாலைக்கு வந்து என் கட்சிக்காரருக்கு மனஅழுத்தம் கொடுத்து வருகிறார். குழந்தை பிறக்கும் வரையில் தேவையற்ற நேரடி விசாரணைக்கு தடை விதிக்க வேண்டுமென விண்ணப்பித்து இருப்பான் போல. 

கடைசி பக்கத்தைப் பார்த்தான்.

நீதிமன்ற உத்தரவும் இருந்தது. 

'அவசர விசாரணை இல்லாத பட்சத்தில் கைதி ஷ்ரத்தாவை நேரடியாக சந்தித்து விசாரணை நடத்தக் கூடாது. விசாரணை அவசியமெனில் நீதிமன்ற அனுமதியுடனும் சிறை அதிகாரிகள் முன்னிலையிலும் யதுநந்தன் முன்னிலையில்  மட்டுமே நடத்த வேண்டும்." என்றிருக்க கோப்பை படாரென்று மேசையில் போட்டான்.

"டேம் இட்..." என்று பற்களை கடித்தான். 'ஒரு போலீஸ் அதிகாரியையே கோர்ட் கட்டுப்படுத்துதா? என்றவன் நாற்காலியில் இருந்து எழுந்து ஜன்னலருகே சென்றான்.

"யதுநந்தன்..." அவன் பெயரை அழுத்தமாக உச்சரித்தான்.

'இவன் ஏன் ஷ்ரத்தாவை பாதுகாக்கறான்?' அந்த சந்தேகம் மீண்டும் அவனுக்குள் எழுந்தது.

  இதற்காகவே மதுநந்தனை கோபப்படுத்தவே வேண்டுமென்றே ஷ்ரத்தாவை நேரில் சந்திக்க நினைத்தான். ஆனால் கோர்ட் ஆர்டரை தாண்டி, சென்றால் வேலைக்கு வேட்டும் வைத்திட வாய்ப்புண்டு என்று காரணம் ஏதவாது தேடினான்.  

அந்த மாலை வீட்டிற்கு வந்தான். அவனுக்கு ஏற்றது போல சமயம் கிடைத்தது. 

சோபாவில் அமைதியாக அமர்ந்திருந்த கீர்த்தனா அவனை பார்த்தார்.

"ருத்ரா..." என்று கீர்த்தனா அழைக்க, 

"என்னம்மா?"

"நாளைக்கு அந்த பொண்ணுக்கு வளையல் வாங்கப் போகணும்' என்றதும் ருத்ரன் நிமிர்ந்து பார்த்தான்.

"யாருக்கு?" என்றான். வளையல் என்றதுமே அது இவன் நெஞ்சில் குடையும் ஷ்ரத்தாவுக்கு என்று கணித்துவிட்டான். 

"ஷ்ரத்தாவுக்கு." என்று கீர்த்தனா கூறவும் அவன் முகமே மாறியது.

"அம்மா... இன்னும் அதையே நினைச்சிட்டு இருக்கீங்களா?அதெல்லாம் வேண்டாம்மா..." என்று சொல்லியிருந்தாலும், மனம் வேறு ஒரு கணக்கை போடத் தொடங்கியது.

"நான் வாக்கு கொடுத்துட்டேன் ருத்ரா." அமைதியாகச் சொன்னார்.

"வாக்கு கொடுத்தா... கண்டிப்பா போகணுமா?" என்று கேட்க, 

"வாக்கை காப்பாத்தணும்

அவ்வளவு தான்." என்று கூற, ருத்ரன் எரிச்சலாகச் சிரித்தான்.

"அவ... சத்ரியனோட காதலிம்மா. அதோட அவளை அடிக்கடி சந்திச்சு விசாரணை செய்ய கூடாதுனு கோர்ட்ல எனக்கு ஆர்டர் வந்திருக்கு. " கீர்த்தனா மெதுவாக மகனை பார்த்தார்.

"சத்ரியன் மனைவினு எனக்கும் தெரியும்." என்றார்.

"அப்புறமும் போனா என்ன அர்த்தம்?" என்றான்.

"அவ ஒரு கர்ப்பிணிடா." ஒரே வரியில் பதில் வந்தது.

"அவளுக்கு இப்ப தேவை... அன்பு... தண்டனைக்கான தீர்ப்பு இல்லை." ருத்ரன் அமைதியாக நின்றான்.

கீர்த்தனா மீண்டும் சொன்னார். "நான் தனியா போயிடுறேன்." என்றார்.

"இல்ல. நானும் வர்றேன்" என்று ருத்ரன் உடனே மறுத்தான்.

"நான் கூட்டிட்டு போறேன்." கீர்த்தனா அவனை ஆச்சரியமாக பார்த்தார்.

"கோர்ட் என்னை அவளை விசாரிக்கக் கூடாதுன்னுதான் சொல்லிருக்கு.

உங்களை கூட்டிட்டு போகக்கூடாதுன்னு சொல்லலை." என்றவன் உதட்டில் மெல்லிய சிரிப்பு.

"நீங்க வளையல் போடுங்க...

நான் வெளியில இருப்பேன்."

அதை கேட்ட கீர்த்தனா எதுவும் பேசவில்லை.

மகன் மனதில் இன்னும் ஏதோ ஓடிக் கொண்டிருப்பது மட்டும் புரிந்தது.

அடுத்த நாள் கீர்த்தனா நகரத்தில் இருக்கும் வளையல் கடைக்குச் சென்றார்.

பச்சை, சிவப்பு கண்ணாடி வளையல்களை தேர்ந்தெடுத்தார்.

"கர்ப்பிணி பொண்ணுக்கு இதுதான் நல்லா இருக்கும்." என்று கடைக்காரர் கொடுத்தவற்றை எல்லாம் வாங்கினார்.

பூ, மஞ்சள், குங்குமம், சந்தனம், எல்லாவற்றையும் கேளாமலேயே வளைகாப்பு விழாவிற்கென வைத்தார் கடைக்காரர்.

வீட்டிற்கு வந்ததும் தன் கையால் ஐந்து வகை சாதங்களை சமைத்தார்.

எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், தயிர் சாதம், புளியோதரை, சர்க்கரை பொங்கல் ஒவ்வொன்றையும் தனித்தனியாக பாத்திரங்களில் அடுக்கினார்.

அவற்றைப் பார்த்த ருத்ரன்

எதுவும் பேசாமல் நின்றிருந்தான்.

காலையில் அனுமதி பெற்று ரீத்ரனும் கீர்த்தனாவும் மத்திய சிறைச்சாலைக்குள் நுழைந்தனர்.

வாசலில் ஜெயிலர் வரவேற்றார்.

"வாங்க மேடம். எல்லா ஏற்பாடும் பண்ணிட்டோம்." கீர்த்தனா நன்றி கூறினார்.

பெண் கைதிகள் இருக்கும் பகுதியின் சிறிய மண்டபத்தில்,

ஒரு நாற்காலி மட்டும் போடப்பட்டிருந்தது.

அங்கே ஷ்ரத்தாவை அழைத்து வந்தனர். அவள் ஆச்சரியமாக சுற்றிப் பார்த்தாள். அவளுக்கு  இது சொல்லாமல் ஆச்சரியமூட்ட நினைத்தனர்.‌

"என்ன மேடம்?" என்று ஜெயிலரிடம் கேட்டாள். கீர்த்தனா தோளில் கையை வைத்து புன்னகைத்தார்.

"நான் வாக்கு கொடுத்தேன்லம்மா." என்றதும் 

ஷ்ரத்தாவின் கண்கள் கலங்கின.

ருத்ரன் மட்டும், சற்று தள்ளி, கைகளை கட்டிக்கொண்டு அமைதியாக நின்றிருந்தான்.

அவள் முகத்தை விட்டு பார்வையை திருப்ப முடியாமல் நின்றான். அது வெறுப்பா விசாரணைக்கான ஆர்வமா? இல்ல மனசுக்கே புரியாத வேறொரு ஈர்ப்பா ருத்ரனுக்கே பதில் தெரியவில்லை.

-தொடரும். 

-பிரவீணா தங்கராஜ்

 


 
Posted : July 18, 2026 6:19 am
(@dharsinipriya)
Posts: 59
Trusted Member
 

Super sis nice epi 👍 👌 😍 evan en eppo shratha va eppdi pakkuran🤔🧐 dei ava chathriyan wife da avan kaiyala dhan saaga pora pola😕


 
Posted : July 18, 2026 7:02 am
(@kalidevi)
Posts: 56
Trusted Member
 

etho onu edikuthe ruthran sharadha va pakiura parvaila enava irukum oru vela love pani irupana 


 
Posted : July 18, 2026 11:45 am
(@guna-sundari)
Posts: 56
Trusted Member
 

Wow super super.  Sharadha will.happy for this baby shower. Chatriyian come back soon. Very intresting sis.


 
Posted : July 18, 2026 2:04 pm
(@kavi-bharathi-arunkumar)
Posts: 49
Trusted Member
 

Rudhran annaiku Shardha sonna 126 kuzhandhai enna nu ippo yosikka aarambichitan yae 


 
Posted : July 18, 2026 3:02 pm
(@crvs2797)
Posts: 103
Estimable Member
 

தகிக்கும் நிலவொன்று.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 8)

நிரோஷ் கிட்ட கேட்டால் மட்டும், அப்படி என்ன பெருசா ஆதாரம் கிடைக்கப்போகுது. அந்த ஜானோட சேர்த்து, இவனும் ஒருத்தலையா லவ் பண்ணி விஷ சாப்பாட்டை சாப்பிட்டது தவிர பெருசா வேறொன்னும் கிடைக்கப் போறதில்லை.

அட.. இந்த ருத்ரன் எதுக்கு ஷ்ரத்தாவை அப்படி வைச்ச கண்ணை எடுக்காமல் பார்க்குறான்...? பாசமா பார்க்குறானா, இல்ல பாயாசத்தை போட்டுடலாமான்னு பார்க்குறானா ? பாவமேன்னு பார்க்குறானா, பாவின்னு பார்க்குறானா...?

😊😊😊
CRVS (or) CRVS 2797


 
Posted : July 18, 2026 3:27 pm
(@kothaihari)
Posts: 54
Trusted Member
 

கதையாசிரியர் பீரவிணா அக்கா தயவு செய்து ஷ்ரத்தாவுக்கு இந்த ருத்ரா யதுநந்தன் இரண்டு பேரையும் ஜோடியா போடாதிங்க ... எப்போதுமே ஷ்ரத்தாவுக்கு சத்ரியன் தான் ஜோடியாக இருக்கனும் 


 
Posted : July 22, 2026 2:10 am
(@krishna-krishna)
Posts: 8
Active Member
 

@praveena-thangaraj சூப்பர் மா வாழ்த்துக்கள்


 
Posted : July 26, 2026 3:58 pm

Scroll to Top