தகிக்கும் நிலவொன்று-5
🔥தகிக்கும் நிலவொன்று🌜
அத்தியாயம்-5
ஒரு வாரம் சிறைச்சாலைக்குள் நாட்கள் நகர்வதே தெரியாமல் சென்றன.
அன்று காலை வழக்கம்போல் வேலைகளை முடித்துவிட்டு, ஒரு எம்பிராய்டரி செய்துக்கொண்டிருந்தாள். அவளுக்கு பிடித்த பெயர் சத்ரியன் என்று எழுதி அங்கே பூ வரைந்துக் கொண்டிருந்தாள்.
"ஷ்ரத்தா." என்று பெண்காவலர் கார்த்திகா அழைத்தார்.
ஷ்ரத்தா புத்தகத்தை மூடிவிட்டு எழுந்தாள்.
"என்ன மேம்?"
"உங்களை பார்க்க ஒரு விசிட்டர் வந்திருக்கார்."
ஒரு நொடி அவளது முகம் மலர்ந்தது. "வினோத் அண்ணாவா இருக்கும்" என்று ஆர்வமாக சென்று பார்த்தாள்.
அங்கே அட்வகேட் யதுநந்தன் அமர்ந்திருந்தார்.
ஷ்ரத்தா முகத்தில் தோன்றிய மகிழ்ச்சி மறைந்தது.
விசிட்டர் அறையில் இரும்பு கம்பிகள் இல்லாத சாதாரண சந்திப்பு அறை.
அறைக்குள் நுழைந்த ஷ்ரத்தா
நாற்காலியில் அமர்ந்திருந்த யதுநந்தனை பார்த்தாள்.
அவன் ''வாங்க." என்று சிரித்தான்.
"வணக்கம் சார்..." என்றாள்.
"உட்காருங்க." இருவரும் எதிரெதிரே அமர்ந்தனர்.
"என்ன ஷ்ரத்தா ஆசையா ஓடிவந்தது போலவும்
என்னை பார்த்ததும் கொஞ்சம் டல்லா ஆயிட்டீங்க?" என்றான்.
அவள் சங்கடமாக சிரித்தாள்.
"இல்ல சார்... அது வந்து... வினோத் அண்ணா வருவார்னு நினைச்சேன். ஆனா நீங்க என்றதும் எதிர்பார்ப்பு பொய்யாகிடுச்சு" என்றாள்.
"அப்படியா ரியலி சாரி... உங்க எதிர்பார்ப்பை ஏமாத்திட்டேனே.
எப்பவும் வக்கீலா வந்து பேசுறது எனக்கு பிடிக்கலை. அதனால இப்ப நண்பனா வந்தா நல்லாருக்கும்னு தான் வந்தேன்." என்றான்.
அந்த வார்த்தை அவனது முகத்தில் இயல்பான புன்னகையை வரவழைத்தது.
"நீங்க கேட்ட மெடிக்கல் புக்ஸ்..."
என்று ஆரம்பித்தான். ஷ்ரத்தாவின் கண்கள் ஒளிர்ந்தன.
"கிடைச்சுதா?" என்றாள்.
"கொஞ்சம் கஷ்டம்தான்.
ஆனா... வாங்கிட்டேன். ஜெயிலர் மேம் பர்மிஷனோட...
ஜெயில் லைப்ரரில பதிவு பண்ணிட்டாங்க." என்றான்.
"உண்மையாவா?" என்று ஆச்சரியழ்பட்டாள். வினோத் அண்ணாவை தவிர்த்து தனக்கான தேவையை தேடி தந்திருக்கின்றான்.
"ம்ம்... தேவைப்படும்போது வாங்கி படிக்கலாம்." வெளியே எடுத்துட்டு போகக்கூடாது.
ரெஜிஸ்டர்ல சைன் போட்டுதான் நீங்க வாங்கணும்."
ஷ்ரத்தாவின் கண்கள் கலங்கின.
"ரொம்ப தேங்க்ஸ்..." என்றாள்.
"எனக்கு எதுக்கு?" என்றான்.
"என்னால... மறுபடியும் புத்தகத்தை தொட முடியும் என்று நினைக்கவே இல்ல." என்றாள்.
"படிங்க. நீங்க தண்டனை காலம் முடிந்து வந்து, மீண்டும் தேர்ட் இயர் படிப்பை தொடருவிங்க தானே" என்றான்.
அந்த வார்த்தையை கேட்டதும்
அவள் தன்னிச்சையாக வயிற்றை வருடினாள்.
"உடம்பு எப்படி இருக்கு?" என்றான்.
"நல்லா இருக்கு." என்றாள்.
"டாக்டர் என்ன சொன்னாங்க?"
வயிற்றின் மீது கையை வைத்தாள்.
"குழந்தை நல்லா வளருதுனு சொன்னாங்க" என்றாள்.
"எத்தனாவது மாசம்?" என்றான். ஏனெனில் நிறை மாசமாக இருந்தால் அதற்கேற்றவாறு வருகையை அதிகரிக்க நினைத்தான்.
"ஏழாவது ஆரம்பிச்சிருச்சு." என்றாள்.
"வாவ்..." என்றவன்...
வயிற்றை பார்த்து சிரித்தான்.
"இன்னும் கொஞ்ச நாள்ல...
உலகத்தை பார்க்க குட்டி வந்துடுவான்." என்றதும் ஷ்ரத்தாவின் முகத்தில்
ஒரு தாயின் மென்மையான புன்னகை மலர்ந்தது.
"ஷ்ரத்தா..." என்று யதுநந்தன் அவளை ஏறிட, "ம்ம்..." என்றாள்.
"நான்... ஒரு கேள்வி கேட்கலாமா? எனக்கு அந்த உரிமை இருக்கா தெரியலை" என்றான் பீடிகையுடன்.
"கேளுங்க எங்கப்பா வழியில எனக்குன்னு இருக்கற நட்பு நீங்க தான்." என்றாள்
"வக்கீலா இல்ல... நண்பனா ரொம்ப நாளா கேட்க நினைச்சது." என்றதும் அவள் தலையசைத்தாள்.
"உங்களுக்கு அந்த உரிமை இருக்கு கேளுங்க" என்றதும் யதுநந்தன் ஆழமாக மூச்சை இழுத்தான்.
"உங்கப்பாவை சத்ரியன் கொன்றதாகத்தான் எல்லாரும் நம்புறாங்க." ஷ்ரத்தாவின் முகம் மாறியது.
"ஆனா... நீங்க... அவருக்கு ஆசை நாயகியா இருந்திங்க. அப்புறம்... குழந்தைக்காக அவரையே சுட்டீங்கன்னு சொன்னீங்க. எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரியல. குழந்தைக்காக சத்ரியனை கொல்ல துணிந்த நீங்க. உங்களுக்காகவே கொன்றுயிருக்கலாமே. ஏன் அப்ப செய்யாம.. " என்றதும் சில நொடிகள் அமைதி.
பிறகு... மெதுவாக ஷ்ரத்தா சொன்னாள். "சத்ரியன்
எங்கப்பாவை கொல்லலை." என்றாள். யதுநந்தனின் முகம் உறைந்தது.
"என்ன? அவர் கொல்லலையா?" என்று அதிர்ச்சியானான்.
''ம்ம் சத்ரியன் எங்கப்பாவை கொல்லலை" என்றாள்.
"நிஜமா. அப்ப... உங்கப்பா இறப்புக்கு யார் காரணம்." என்றதும் ஷ்ரத்தா கண்களை மூடினாள்.
"நான்." யதுநந்தன் நாற்காலியிலிருந்து பாதி எழுந்தான்.
"வாட்?" என அதிர, அவள் மெதுவாக ஆரம்பித்தாள்.
"எனக்கு மெடிக்கல் சீட் வேணும்னு ஆசை. அப்பா...
சத்ரியன்கிட்ட உதவி கேட்டார்.
அவர்... கேஸை ஜெயித்ததுக்கு எனக்காக சீட் வாங்கி கொடுத்தார்."
யதுநந்தன் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான்.
"ஆனா... ஆதிகேசவ்... என்னோட சீட்டுக்காக நிர்மல் என்ற மாணவனிடம் பணம் வாங்கியிருக்க, எனக்கு சீட் வந்ததும் அப்பாவை கொன்றால், நான் துவண்டு வரமாட்டேன்னு நினைச்சிருக்கார். அதோட சீட் அவர் பணம் தந்த பையனுக்கே போகும்னு கணக்கு போட்டு அப்பாவை ஆம்புலன்ஸ்ஸால இடிச்சி ஆக்சிடென்ட் பண்ணிட்டார்.
அந்த சீட்டுக்காக வாங்கிய பணத்தை ஏமாத்தியதா நிர்மலும் ஆதிகேசவும் ஒருத்தருக்கு ஒருத்தர் கொலை முயற்சியில இறந்துட்டதா நியூஸ் போச்சே. அது தான் சத்ரியன் எனக்காக செய்த கொலைகள்.
எங்கப்பாவை கொன்றது ஆதிகேசவ். ஆதிகேசவை கொன்றது சத்ரியன்.. என்னோட சத்ரியன்." என்றாள்
யதுநந்தனின் முகத்தில் நம்ப முடியாத அதிர்ச்சி பரவியது.
அந்த கேஸ்... செய்திதாளில் வந்து சென்றதை யதுநந்தனும் அறிந்ததே.
யதுநந்தன் பேச முடியாமல் அமர்ந்திருந்தான். அவன் மனதில் பல மாதங்களாக உண்மை என்று நம்பியிருந்த கதை... ஒரே நொடியில் சிதறிக் கொண்டிருந்தது.
யதுநந்தனின் மனதில் பலமுறை எதிரொலித்தது.
சில நிமிடங்கள் அவனால் பேசவே முடியவில்லை.
"அப்படின்னா... அவர்...
உங்கப்பாவை கொல்லலையா." என்று மீண்டும் கேட்டாள்.
ஷ்ரத்தா மெதுவாக சிரித்தாள்.
அந்த சிரிப்பில் வலி மட்டுமே இருந்தது.
"எங்கப்பாவை கொன்றுயிருந்தா நான் அவரை காதலிச்சிருக்க மாட்டேனே." என்றாள்.
"எங்கப்பா இறந்ததும் சத்ரியன் மேல கோபம் இருந்தது.
நானும்... அவரை வெறுத்தேன்.
ஆனா... அவர் என்னை கடத்திட்டு போனதுக்கு அப்புறம் தான்... உண்மை ஒவ்வொன்னா தெரிஞ்சது." அவள் கண்களில்...
சத்ரியனின் நினைவுகள் ஒளிந்தாடின.
"அவர்... என்னை ஒருநாளும் ஆசைநாயகியா நடத்தலை."
யதுநந்தன் அமைதியாகக் கேட்டான்.
"எனக்கான உரிமையை எனக்கு தந்தார்." மெதுவாக தன் வயிற்றின் மீது கை வைத்தாள்.
"நான்... சத்ரியனோட ஆசைநாயகி இல்ல. அவரோட மனைவி." அந்த வார்த்தையை சொல்லும் போது அவள் முகத்தில் இருந்த பெருமையை
யதுநந்தன் கவனித்தான்.
"இந்த குழந்தையே... அதுக்கு சாட்சி." அறையே சில நொடிகள் அமைதியாகியது.
"அப்ப..." என்று யதுநந்தன் மெதுவாக ஆரம்பித்தான்.
"இவ்வளவு காதலிச்ச ஒருத்தரை... எப்படி..." என்று அவன் கேட்க தயங்கினான்.
"சத்ரியனை கொல்ல மனசு வந்துச்சு?" என்ற அந்த கேள்வி
நேராக ஷ்ரத்தாவின் இதயத்தை கிழித்தது.
அவளது விரல்கள்... வயிற்றின் மீது இறுகப் பதிந்தன.
உதடுகள் நடுங்கின.
ஆனால் பதில் சொல்லவில்லை.
மெல்ல எழுந்து ஜன்னல் அருகே சென்று நின்றாள்.
வெளியே சிறை வளாகத்தில் இருந்த மரத்தை வெறித்துப் பார்த்தாள்.
கண்களில் நீர் வழிந்தது. அதை துடைக்கவும் இல்லை. யதுநந்தன் புரிந்து கொண்டான்.
அந்த கேள்விக்கான பதில்
இப்போதைக்கு கிடைக்காது என்று.
அவன் வேறு பேச்சுக்கு மாறினான். "ருத்ரன்... ஏன் உங்களை பார்த்தாலே சந்தேகப்படறார்னு இப்ப எனக்கு புரியுது." என்றான் யதுநந்தன்.
"ஏன்?" என்று விழிவிரித்து அவனை பார்த்தாள்.
"ஒரு பொண்ணு உயிருக்கு உயிரா காதலிச்சவனை,
கொன்றிருக்க முடியும்னு அவரால நம்ப முடியல." என்றதும் ஷ்ரத்தா எதுவும் பேசவில்லை.
"உண்மையா சொல்லணும்னா... இப்ப எனக்கும் சத்ரியனை நீங்க தான் கொன்றிங்களானு சந்தேகமா இருக்கு" என்று கூறினான்.
"சில சமயம் ருத்ரன் மாதிரி ஆட்களுக்கு அப்படித்தான் தோணும்." என்றவள் அமைதியாக இருந்தாள்.
யதுநந்தன் மீண்டும் சொன்னான். "ருத்ரன் ஒரு போலீஸ்காரன். அவன் வேலையே சந்தேகப்படுறது.
அதனால... அவனை நான் தப்புன்னு சொல்ல முடியாது. அதிலும் அவன் அப்பா சத்ரியனால கொல்லப்பட்டு இறந்திருப்பது தெரியும்.."
ஷ்ரத்தா மெதுவாக ஆமோதித்தாள்.
"எனக்கு... சத்ரியன் ஒரு பெரிய தொழிலதிபர்னு தான் தெரியும்.
அதுக்கு பின்னாடி... அவன் கிங்பினா... இல்ல வேற யாரா... எனக்கு தெரியாது." ஷ்ரத்தா சற்றே புன்னகைத்தாள்.
"எனக்கு மட்டும்... அவர் யாருன்னு தெரியும்." அந்த புன்னகையை பார்த்த யதுநந்தன்.
மீண்டும் அதே கேள்விக்குள் சிக்கிக் கொண்டான்.
இவ்வளவு காதலிக்கிறவள்... எப்படி அவனை சுட்டிருப்பாள்.?
"இந்த விஷயம்... ஐ மீன்.. உங்க அப்பாவை கொன்றது சத்ரியன் இல்லை என்ற உண்மை யாருக்காவது தெரியுமா?" என்றான்.
ஷ்ரத்தா தலையசைத்தாள்.
"அப்பறம்.. ஆதிகேசவ்... நிர்மல்...
அவங்களை சத்ரியன்... கொன்றது தெரியுமா?" என்று கேட்க, "அதுவும் யாருக்கும் தெரியாது. அவங்களுக்குள் கொலை முயற்சின்னு தான் உலகத்துக்கு தெரியும்" என்றாள்.
யதுநந்தன் நாற்காலியில் சாய்ந்தான். "ஓ மை காட்..."
என்று தலையை கோதிக் கொண்டான்.
"அப்படின்னா... இத்தனை மாதமா நான் தவறான கதையைத்தான் நம்பிட்டு இருந்திருக்கேன்?" என்றதற்கு ஷ்ரத்தா அமைதியாக நின்றாள்.
"சில உண்மைகள்... வெளியே வரவே கூடாது சார்." என்றாள்.
"ஏன்?" என்றான்.
"அதனால... நிறைய உயிர் போயிடும்." என்றாள்.
யதுநந்தன் அவளை பார்த்தபடியே இருந்தான்.
இன்று... ஷ்ரத்தாவிடம் இருந்து அதிகபடியாகவே பேசிவிட்டது புரிந்தது. அவனது சில கேள்விகளுக்குப் பதிலும் கிடைத்தது.
ஆனால் அந்த பதில்களே இன்னும் ஆயிரம் புதிய கேள்விகளை உருவாக்கி இருந்தன.
அந்த நேரம் வெளியே மணி ஒலித்தது. விசிட்டிங் ஹவர்ஸ் முடிந்துவிட்டது என்று.
பெண்காவலர் உள்ளே வந்தார்.
"டைம் முடிஞ்சுச்சு சார்."
யதுநந்தன் எழுந்தான்.
"சரி ஷ்ரத்தா. நான் கிளம்பறேன். தேங்க்ஸ்..." என்றான்.
"எதுக்கு?" என்றாள்.
"நண்பனா வந்ததுக்கு மதிப்பு கொடுத்து பேசியதுக்கு." என்று யதுநந்தன் சிரித்தான். ஷ்ரத்தாவோ சிரிக்க முயன்றாள்.
"ஷ்ரத்தா... இனிமேலும்...
நண்பனாத்தான் வருவேன் உடம்பை பாத்துக்கோங்க." என்றான்.
"ம்." என்ற ஒற்றை சப்தம் பதிலாக தந்தாள்.
அவன் திரும்பி நடக்க ஆரம்பித்தான். வாசலை அடைந்ததும் ஒருமுறை ஷ்ரத்தாவை திரும்பிப் பார்த்தான்.
அங்கே தன் வயிற்றை வருடியபடி அமைதியாக நின்றிருந்தாள் ஷ்ரத்தா.
அந்த காட்சி யதுநந்தன் மனதில் அழியா ஓவியமாக பதிந்தது.
ஷ்ரத்தாவோ யதுநந்தனிடம் இதுவரை பேசியதை எல்லாம் எண்ணி பார்த்து, ஏதாவது உலறிவிட்டோமா?' என்று சிந்தித்தாள். ஏனெனில் 126 சிறுமிகளை பற்றி அறிய முற்படும் நபர்கள் யார் ரூபத்திலும் வந்து உலவு பார்க்கலாம். இவளாக எதையும் வார்த்தை விடாமல் இருப்பது தானே அந்த குழந்தைகளுக்கு நல்லது.
இதுவரை எதையும் உலறவில்லை. முக்கியமாக 126 குழந்தைகளை பற்றி மூச்சு விடவில்லை என்றதும் மனம் நிம்மதியடைந்தது.
வினோத் அண்ணா வந்திருந்தால் கூடுதலாக மகிழ்ந்திருப்பாள். ஆனால் வினோத் வராதது ஏனோ ஷ்ரத்தாவுக்கு வருத்தமாக இருந்தது. என்ன தான் யதுநந்தனிடம் மனம் விட்டு பேசியது போல தெரிந்தாலும், வினோத் வந்திருக்கலாம். ஏன் வரவில்லை.. அவருக்கு ஏதேனும் ஆபத்தா என்று இல்லாத கவலைகளை இழுத்து கொண்டாள்.
மனம் ஏற்கனவே கர்ப்பிணி பெண்களுக்கான ஏக்கத்நை வேறு இதயத்தை நிரப்பி அழுத்துகின்றது. இதில் புது கவலையா என்று விடுபட்ட வேலையான எம்பிராய்டரி வேலையில் சத்ரியனுக்கு அருகே ஷ்ரத்தா என்ற பெயரை எழுத துவங்கினாள்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
-
தகிக்கும் நிலவொன்று-17
21 minutes ago
-
தகிக்கும் நிலவொன்று-16
15 hours ago
-
தகிக்கும் நிலவொன்று-8
17 hours ago
-
தகிக்கும் நிலவொன்று-7
17 hours ago
-
தகிக்கும் நிலவொன்று-6
18 hours ago
- 25 Forums
- 215 Topics
- 758 Posts
- 0 Online
- 329 Members
