தகிக்கும் நிலவொன்று-6
🔥தகிக்கும் நிலவொன்று🌜
அத்தியாயம்-6
மருத்துவ விடுப்புக்கு பதிலாக டெஸ்க் டியூட்டியில் அமர்த்தப்பட்டிருந்தான் ருத்ரன்.
இடது கை ஸ்லிங்கில் தொங்கிக் கொண்டிருந்ததால், வெளிப்புற ரோந்து, ரெய்டு, கைது நடவடிக்கைகள் என எதற்கும் அவன் செல்லவில்லை. செல்லவும் இயலாது.
அதற்கு பதிலாகதான் பல மாதங்களாக மூடப்பட்டு கிடந்த பழைய கேஸ் பைல்களை ஆராயும் பொறுப்பு அவனிடம் ஒப்படைக்கப்பட்டது.
அது மற்ற அதிகாரிகளுக்கு ஒரு சாதாரண அலுவலக வேலையாக இருந்தாலும், ருத்ரனுக்கு அது ஒரு வேட்டையாக மாறியது.
தன் மேசை முழுவதும் கோப்புகளை பரப்பி வைத்திருந்தான்.
முதலில் தந்தை ராகவன் இறந்த நாளிலிருந்து எல்லா சம்பவங்களையும் தேதி வாரியாக எழுத ஆரம்பித்தான்.
ஒரு வெள்ளை சார்ட் பேப்பரை சுவரில் ஒட்டி, ஒவ்வொரு தேதிக்கும் கீழே நடந்த சம்பவங்களை குறிப்பிட்டான்.
• தந்தை ராகவன் மல்கோத்ரா சந்திப்பு நிகழ்ந்த தேதி
• ராகவன் சத்ரியனை கைது செய்த தேதி
• கைது செய்யும்போது சத்ரியன் எந்த எதிர்ப்பும் காட்டாமல் ஒத்துழைத்ததை குறித்து கொண்டான்.
• நீதிமன்றத்தில் தந்தை ராகவனின் துப்பாக்கியை எடுத்து சத்ரியன் கோர்ட்டில் மற்ற பாடிகார்ட்ஸையே கொலை செய்தது.
அதற்கு தந்தை ராகவன் மீது பழிவரவும், வீட்டில் அம்மாவிடம் தெரிவித்தது.
• அதற்கு மறுநாளே தந்தை ராகவன் அகால மரணம்.
ருத்ரன் மார்க்கரை நிறுத்தினான். தந்தை இறப்பு மீண்டும் நெஞ்சில் வலித்தது.
"இங்கதான் தனது பழிக்கு எல்லாமே ஆரம்பிச்சிருக்கு" என்று தனக்குத்தானே முணுமுணுத்தான்.
அடுத்ததாக...
• அட்வகேட் திவாகர் மரணம்.
• சத்ரியனின் டிரைவர் சிறைக்குள் மர்மமாக இறந்தது.
• மல்கோத்ரா இறந்ததாக வந்த தகவல்.
ஒவ்வொன்றையும் எழுதிக்கொண்டே இருந்தான். அவனறிந்த தேதிகளோடு குறிப்பிட்டு வரிசையிட்டு இருந்தான்.
பிறகு ஷ்ரத்தா சம்பந்தப்பட்ட கோப்புகளை எடுத்தான்.
அவளை முதல் முறையாக சத்ரியன் சந்தித்த நாளை குறித்தான்.
ஜான் என்ற சீனியர் மாணவனை சத்ரியன் தாக்கிய சம்பவமும் குறித்துக் கொண்டான்.
பிறகு ஷ்ரத்தா ஹாஸ்டலில் சேர்ந்த நாளும், அதற்கு பிறகு மீண்டும் சத்ரியனோடு தங்க கூறியதையும் குறித்தான். இதற்கு நடுவில் யாமினி இறப்பு, ஓட்டு போட்டுவிட்டு வந்த அன்று சத்ரியனுக்கு துப்பாக்கி சூடு நிகழ்ந்தவையை குறித்தான்.
அதன்பின் மைக்கெல் மரணம் கேள்விப்பட்டான்.
இதற்கு பிறகு, ஷ்ரத்தாவை உணவில் விஷம் வைக்க, நிரோஷ் என்ற மாணவன் பாதிக்கப்பட்டது. அவனை பார்க்க வந்த நாட்கள்.
எல்லாவற்றையும் வரிசைப்படுத்தினான்.
"ஹூம்..." என்று நாற்காலியில் சாய்ந்தான். 'ஷ்ரத்தா வாழ்க்கைக்குள்ள சத்ரியன் வந்ததிலிருந்து, எல்லா சம்பவமும் ஒரு செயின் மாதிரி கனெக்ட் ஆகுது.' என்று குறிப்பெழுதினான்.
அடுத்ததாக... ஆதிகேசவ் மற்றும் நிர்மல் மரண கேஸை திறந்தான். அந்த மரண செய்தியும் ஷ்ரத்தா கல்லூரி பெயர் அடிப்பட்டதால் சேகரித்து வைத்திருந்தான்.
இரண்டு போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்களையும் மீண்டும் படித்தான். 'ஒருத்தரை ஒருத்தர் தாக்கி இறந்திருக்காங்க.' என்ற அதிகாரப்பூர்வ முடிவு.
ஆனால்... "இது உண்மையாவா?" என்று சந்தேகம் எழுந்தது.
அந்த கோப்பை ஓரமாக வைத்துவிட்டு... கல்லூரி சம்பவங்களை மீண்டும் பார்த்தான். ஆதிகேசவ் நிர்மல் உடலெங்கும் இருந்த காயங்கள் வெட்டுகள் ஒரு மருத்துவராக செய்த காயங்களாக தெரியவில்லை. ஒரு கிங்பின் தலைவன் பழித்தீர்க்கும் அடையாளம் போல இருந்தது.
ஜான் - நிரோஷ். இந்த இரண்டு பேரின் பெயரையும் சிவப்பு பேனாவால் வட்டமிட்டான்.
"இவங்க இரண்டு பேரையும் நேர்ல சந்திக்கணும்." என்று முடிவு செய்தான்.
உடனே இருவரின் தற்போதைய முகவரியையும் தேடச் சொன்னான்.
சில மணி நேரங்களில் தகவல் வந்தது. "சார்.. ரெண்டு பேரும் வெளிமாநிலத்துல மேற்படிப்பு படிக்கிறாங்க." என்றார் ஏட்டு.
ருத்ரன் ஏமாற்றமாக மூச்சுவிட்டான்.
"நம்பர் இருக்கா?"
"அவங்களோட நம்பர் இல்ல சார். நீங்க கேட்டா அடுத்து தேடி தர்றோம் சார்" என்றதும் ''டூ இட்" என்றான்.
'திரும்பி முதல்ல இவங்க ரெண்டு பேரையும் பார்க்கணும்.' என்று மனதில் குறித்துக் கொண்டான்.
அடுத்த இரண்டு நாட்களும், காலை முதல் மாலை வரை.
சத்ரியனின் வாழ்க்கையை படிப்பதிலேயே மூழ்கிக் கிடந்தான்.
சத்ரியனை சந்தித்தவர்கள், அவனுடன் வேலை செய்தவர்கள் என்று
பழைய தகவல் தேடினான்.
எல்லாருடைய வாக்கு மூலங்களையும் மீண்டும் படித்தான்.
அப்போதுதான்... ஒரு விஷயம் அவன் கண்களில் பட்டது. நடுவில் ஸ்டெல்லா என்ற நர்ஸ் சத்ரியனை தேடி பலமுறை வந்ததாக தகவல் குறித்திருக்க, அந்த நர்ஸ் நிரோஷ் உடல்நிலை பாதிப்பால் இருந்த மருத்துவமனை பெயரை கவனித்தான். அதனால் ஸ்டெல்லா பெயரையும் வட்டமிட்டான்.
தந்தை ராகவன் இறந்த காலத்திலும், திவாகர் இறந்த காலத்திலும், மல்கோத்ரா காணாமல் போன காலத்திலும், வினோத் கூடவே இருந்தான்.
ஆனால் ஆதிகேசவ், நிர்மல், ரிதுராஜ் மூவரின் இறப்பில் வினோத் இந்த சம்பவங்களுக்கு பிறகுதான் காணாமல் போனதாகவும் குறிப்பு இருந்தது.
ருத்ரனின் புருவம் சுருங்கியது. "ஏன்?" என்று மெதுவாக முணுமுணுத்தான்.
மீண்டும் சத்ரியனின் கப்பல் பயணத்திற்கான பின்பும் நடந்த சம்பவங்களை ஒப்பிட்டுப் பார்த்தான்.
அங்கேயும் வினோத்தின் பெயர் அடிபடவில்லை. சத்ரியனின் திடீர் நடவடிக்கை மாற்றம் என்று தான் அனைவரும் குறிப்பிட்டிருக்க கண்டான்
அனைத்தும் ஒரே நேர்கோட்டில் நின்றது போல மாயை தோன்றியது. ருத்ரன் திடீரென்று எழுந்து நின்றான்.
"இல்ல... சத்ரியன் அந்த நேரத்துல... வேற ஏதோ பெரிய வேலையில இருந்திருக்கான்." ருத்ரன் கண்களில் மீண்டும் அதே தீ. அந்த வேலை என்னவா இருக்கும்?" என்று சுவரில் ஒட்டியிருந்த சார்ட்டை வெறித்துப் பார்த்தான்.
பதில் இன்னும் கிடைக்கவில்லை.
ஆனால் உண்மைக்கு இன்னும் கொஞ்சம் நெருக்கமாக வந்து கொண்டிருப்பதை மட்டும் ருத்ரனின் போலீஸ் உள்ளுணர்வு உறுதியாக சொல்லிக் கொண்டிருந்தது.
ஜான் நிரோஷிடம் பேசிவிட்டு மீண்டும் ஒரு யூகத்தை கணிக்க நினைத்தான்.
இருவரது எண்ணுடன் ஸ்டெல்லாவின் எண்ணையும் கேட்டான்.
மூவரது எண்ணும் வந்துவிட்டால் அடுத்த பாதைக்கான தெளிவுக்கிடைக்குமென எண்ணினான்.
இதெல்லாம் அலுவலகம் வீடு என்று மாறி மாறி வேலை பார்த்தான்.
அலுவலகத்தில் கூட சற்று மந்தமாக வேலைக்கான சிந்தனைக்குள் இறங்குவான். வீட்டில் அவனது அறையில் சத்ரியனின் வரலாறுகள் மட்டுமே இருக்கும். அந்தளவு வீடு முழுக்க அவனது சாம்ராஜ்யத்தை தான் ஒட்டி ஒட்டி ஆராய்ந்தான் ருத்ரன்.
ருத்ரனின் அன்னை கீர்த்தனாவோ, "என்ன ருத்ரன் இது? புதுசா கல்யாணம் ஆனா வீட்டில் மல்லிகை தோரணம் அலங்காரம்னு உன் மெத்தை காட்சி தர நினைச்சா.. நீ இப்படி சத்ரியனின் வரலாற்று காவ்யமாக அவன் நியூஸா வச்சியிருக்க. செத்தவனுக்கு ஏன் இத்தனை ஆர்வமா தோண்டற. அவன் இறந்துட்டானே." என்றார்.
"அம்மா.. அவன் இறந்துட்டானோ இல்லையோ... எனக்கு என் புத்தி சொல்லணும். என்று கத்தினான்.
கீர்த்தனாவோ "ருத்ரா.. நீ சத்ரியனை பழிவாங்கணும்னு எல்லாத்தையும் இழக்கற" என்றார்.
அன்னை அடிக்கடி கல்யாணமென்று ஆரம்பித்து இம்சை தரவும், "கல்யாணம் செய்யாம இருப்பது பெரிய இழப்பா?" என்று கடிந்தான்.
கீர்த்தனாவோ மறுப்பாய் தலையசைத்து, "இல்லைடா கண்ணா... அப்பா இறந்த நாள் வர்றது கூட தெரியாம இருக்க. அதை தான் சொல்ல வந்தேன். நீ நமக்கான வாழ்க்கையில நடக்கற நல்லது கெட்டதை கூட இழுந்து மறந்து நிற்கற" என்றார்.
ருத்ரனுக்கு அன்னை சொன்னதும் தேதியை கவனித்தான்.
தந்தை இறந்த நாள் வரப்போகின்றதை அப்பொழுது தான் கவனித்தான்.
எப்பவும் ஆசிரமத்துல சாப்பாடு போடறது வழக்கம். நீ அதுக்கான ஏற்பாடு செய்யலை. நான் நானா பணத்தை மட்டும் தந்துட்டேன். ஏன்னா கடைசி நேரத்துல உணவு வழங்குவதாக சொன்னதுக்கு அன்னைக்கு வேறொரு பணக்காரர் அன்னதானம் தருவதா சொல்லிட்டாங்களாம். பணம் மட்டும் அனுப்பி அடுத்த நாளுக்கு உபறோகப்படுத்த சொல்லிட்டேன். இந்த முறை உங்கப்பா இறந்த நாளுக்கு எந்த நல்லதும் செய்ய முடியலை." என்று குறைப்பட்டார்.
ருத்ரனோ "அம்மா.. கவலைப்பட வேண்டாம். நான் ஜெயிலரிடம் பேசறேன். அங்க கைதிகளுக்கு சாப்பாடு போடலாம். இட்ஸ் சிம்பிள்மா இதுக்கு போய்" என்று அலுத்துக் கொண்டான்.
"என்னவோம்பா... மறந்துடாம பேசிவை." என்று கூறிவிட்டு நகர்ந்தார்.
அதன்பின் ருத்ரன் மளமளவென வேலைகளுக்குள் ஜெயிலரிடம் தந்தை நினைவு நாளை முன்னிட்டு கைதிகளுக்கு மதிய உணவை வழங்கும் ஏற்பாட்டிற்கு அனுமதி கேட்டான்.
"நாளை மறுநாள் தானே.. தாராளமா வாங்க" என்று ஜெயிலரும் கூறியிருக்க, "அம்மா.. உட்கார்ந்த இடத்திலயே வேலையை முடிச்சிட்டேன். எந்த வேலையையும் நான் இழக்கலை. எதையும் மறந்தாலும் ஆல்டர் விஷயம் பண்ணிட்டேன்.
அப்பா இறப்பை மறக்கலமா.. அப்பாவோட இறப்புக்கு ஏதாவது ஒரு பக்கம் பழிவாங்கவும், நியாயம் பெறவும் போராடுறேன்." என்றான்.
"என்னவோடா.. எனக்கு நீ மட்டும் தான். உன்னை ஒருத்திக்கு கட்டி வச்சிட்டு, ஒருத்தி கையில உன்னை ஒப்படைச்சிட்டா... உங்கப்பா போன இடத்துக்கு நானும் போகணும். அவ்ளோ தான்" என்றார் கீர்த்தனா.
இங்க ஒருத்தி கையை பிடிச்சி தள்ளி விட்டேன். ஷ்ரத்தா கர்ப்பமா வேற இருக்கும் பொழுது நான் நடந்துக்கிட்ட விதம் தப்பு. ஆனா அவளிடம் கொஞ்சம் கூட கருணை வரமாட்டேங்குது. நாளை மறுநாள் அவளை பார்க்கும் பொழுது முடிஞ்சா சாரி கேட்டு பார்க்கணும்.' என்றவன் கண்ணாடியில் ருத்ரன் பிம்பத்திடம், 'முடிஞ்சா.. சாரி கேட்காவிட்டாலும் ஒன்னும் பிரச்சனையில்லை. உன் தகுதியை குறைச்சிடாத ருத்ரன்.' என்று அதையும் சொல்லிக் கொண்டான்.
இன்ஸ்பெக்டர் ராகவனின் நினைவு நாளும் வந்தது.
காலை முதலே கீர்த்தனா வீட்டில் விளக்கேற்றி, கணவரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து, மகன் காணாது அமைதியாக கண்ணீர் துடைத்துக் கொண்டிருந்தார்.
ருத்ரன் சந்தன நிற சட்டையும், அடர் கருநீல பேண்டும் அணிந்து வந்து புகைப்படத்தின் முன் நின்றான்.
சில நொடிகள் எதுவும் பேசவில்லை. அன்னை அழுவது அவன் அறியாததா?
பிறகு மெதுவாக 'அப்பா... நீங்க இருந்திருந்தா இவ்வளவு கேள்விகளோட நான் அலைய வேண்டியிருக்காது.' என்று மனதிற்குள் சொல்லிவிட்டு, புகைப்படத்தை வணங்கினான்.
கீர்த்தனா அவன் அருகே வந்து, "கிளம்பலாமா?" என்று கேட்டார். "ம்..." என்றவன் கேப் புக் செய்திருந்தான். அவனால் தான் வண்டியை ஓட்ட இயலாதே.
உணவுகள் எல்லாம் ஒரு பக்கம் தனி கேட்டரிங் வண்டியில் தயாராகியிருந்தது.
மத்திய சிறைச்சாலையின் வாசலில் கேப் நின்றது. பணத்தை கொடுத்துவிட்டு இறங்கினான்.
முன்கூட்டியே அனுமதி வாங்கப்பட்டிருந்ததால், ஜெயிலர் அவர்களை வரவேற்றார்.
"வாங்க இன்ஸ்பெக்டர். வணக்கம் மேம்." என்று கீர்த்தனாவும் மரியாதையாக வணங்கினார்.
"உங்க அப்பாவோட நினைவு நாள்னு சொன்னதுமே, அனுமதி கொடுத்துட்டோம். இன்னைக்கு மதிய உணவு முழுக்க நீங்க ஸ்பான்சர் பண்ணிருக்கீங்க. கேட்டரிங் வண்டி உணவை எல்லாம் கொண்டு வந்து தயாரா வச்சிட்டாங்க" என்றார்.
"தேங்க்ஸ் மேம்." ருத்ரன் மெதுவாக தலையசைத்தான்.
ஜெயிலர் கீர்த்தனாவை பார்த்தார். "ராகவன் பற்றி ரொம்ப கேள்விப்பட்டிருக்கேன். நேர்மையான அதிகாரின்னு எல்லாரும் சொல்லுவாங்க." கீர்த்தனாவின் கண்கள் கலங்கின.
"அவர் உயிரோட இருந்தப்போ... ஒவ்வொரு வருஷமும் பிறந்த நாளுக்கு ஆதரவற்றவங்களுக்கு சாப்பாடு போடுவாரு. 'பசிச்ச வயிறு சாபம் விடாது கீர்த்தனா'ன்னு சொல்லுவாரு. அதனால... அவர் இல்லன்னாலும் அந்த வழக்கம் நிற்கக்கூடாதுன்னு இறந்த நாளுக்கும் வந்திருக்கோம் " என்றார்.
ஜெயிலர் மரியாதையுடன் தலையசைத்தார். "அவருக்கு இதுதான் உண்மையான அஞ்சலி." என்று கூறினார்.
சிறைச்சாலையின் பெரிய உணவுக்கூடம்.
அனைத்து கைதிகளும் வரிசையாக அமர்ந்திருந்தனர்.
அன்று வழக்கத்தை விட சாப்பாடு சிறப்பாக இருந்தது.
சாதம், சாம்பார், பொரியல், அப்பளம், பாயசம் எல்லாமே பரிமாறப்பட்டது.
சிறை ஊழியர்களுடன் சேர்ந்து ருத்ரனும், கீர்த்தனாவும் கைதிகளுக்கு உணவு வழங்க ஆரம்பித்தனர்.
"இன்னும் கொஞ்சம் சாதம் வேணுமா?"
"போதும்மா..."
"சாம்பார் ஊத்துங்க." என்று கைதிகள் பேசிக் கொண்டிருந்தனர்.
ருத்ரன் ஒவ்வொரு தட்டிலும் அமைதியாக உணவை வைத்துக் கொண்டே சென்றான்.
அவன் முகத்தில் கோபமோ, அதிகார தோரணையோ இல்லை.
இன்று ஒரு மகனாக மட்டுமே இருந்தான்.
அதை தூரத்தில் நின்று பார்த்த ஜெயிலர் மனதிற்குள், "ராகவன் சார் நல்ல மனிதரை வளர்த்துட்டு போயிருக்காரு." என்று நினைத்தார்.
கீர்த்தனா பெண்காவலர்களுடன் சேர்ந்து ஒவ்வொருவருக்கும் உணவை கொடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது வரிசையின் கடைசியில், வயிற்றை தாங்கியபடி மெதுவாக வந்து நின்றாள் ஷ்ரத்தா.
அவளை பார்த்த கீர்த்தனாவுக்கு, அவள் கர்ப்பிணி என்பதால் ஒரு கணம் மனம் இளகியது.
எதுவும் பேசாமல், மற்ற கைதிகளுக்கு கொடுத்த அதே அளவில் உணவை அவளது தட்டிலும் வைத்தார்.
"நல்லா சாப்பிடும்மா..." என்று மட்டும் சொன்னார்.
ஷ்ரத்தா ஆச்சரியமாக அவரை பார்த்தாள். ஏனெனில் ருத்ரன் இன்று போலீஸ் சீருடையில் இல்லாமல் வந்திருந்தான். அவன் பார்வை அவளை தான் ஊடுருவியது. இதில் உணவை வழங்கியவரை 'அம்மா மெதுவா பரிமாறுங்க" என்று அழைத்ததை கவனித்தாள்.
"தேங்க்ஸ்..." என்று மெதுவாக கூறினாள். அவளுக்கு இது யாருடைய அன்னதானம் என்று தெரியவில்லை. ருத்ரன் வந்திருக்க, குழப்பமாய் இருந்தாள்.
அருகில் நின்றிருந்த கைதி ஜெயிலரிடம் கேட்டாள்.
"இன்னைக்கு என்ன விசேஷம்?" பெண்காவலர் பதிலளித்தார்.
"போலீஸ் அதிகாரி ருத்ரனோட அப்பாவுக்கு நினைவு நாள். அவரோட நினைவாக எல்லா கைதிகளுக்கும் மதிய உணவு வழங்கிருக்காங்க. ருத்ரனோட அம்மா." அந்த வார்த்தை கேட்டதும்...
ஷ்ரத்தாவின் கை ஒரு நொடி நடுங்கியது. அப்படியென்றால் இது சத்ரியனால் சாகடிக்கப்பட்ட காவலதிகாரி ராகவனின் நினைவு நாளா? ஒரு வார்த்தை கூட பேசாமல் தட்டைப் பார்த்தபடி நின்றாள்.
வாழ்க்கை எவ்வளவு விசித்திரமானது.
ஒரு பக்கம் போலீஸ் அதிகாரியாக இருந்த ராகவனின் மகன். மறுபக்கம் லாயர் திவாகரின் மகள்.
இருவரும் ஒரே சிறைச்சாலைக்குள், ஒரே நினைவுகளின் சுமையை சுமந்து கொண்டிருந்தனர். தந்தையின் இழப்பென்னும் நினைவை.
ருத்ரனோ 'இவ லாயர் திவாகரின் மகளா இருந்தப்ப சந்தோஷமா இளவரசியா வாழ்ந்திருப்பா. சத்ரியனோட இருந்தப்ப ஒரு ராணியா வாழ்ந்திருப்பா. இப்ப சிறைகைதிகளோட கைதியா தட்டேந்தி நிற்கற நிலை' என்று விசித்திரமாக எண்ணினான்.
ருத்ரன் ஷ்ரத்தாவையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க, கீர்த்தனாவோ கைதிகளுக்கு உணவை வழங்கிவிட்டு, மகனை கண்டவருக்கு மகனது பார்வை ஒரு கர்ப்பிணி பெண் மீது படிய, அந்த பெண்ணும் சாப்பிடாமல் தட்டை வைத்து யோசிப்பதை கவனித்தார். உடனடியாக கீர்த்தனாவுக்கு அது ஷ்ரத்தா என்று தெரிந்துவிட்டது.
"ருத்ரா." என்று அழைக்க, "அம்மா." என்று திரும்பினான்.
"லாயர் திவாகரோட பொண்ணா?" என்று கேட்டு ஷ்ரத்தா அருகே வந்தார்.
ருத்ரனோ இளக்காரமாக, "இல்லைம்மா... கிங்பின் உலகத்து ராஜாவான சத்ரியனோட ஆசை நாயகி." என்றான்.
ஷ்ரத்தா அவனை அனலாக உறுத்த, "தட்ல சாப்பாட்டை வச்சிட்டு சாப்பிடாம இருக்க கூடாது. சாப்பிடுமா" என்றார் கீர்த்தனா.
''பசிக்கலை" என்றாள். உண்மையில் சத்ரியன் ராகவனை கொன்று இருப்பதாக வினோத் தெரிவித்திருக்க, இன்று ராகவனின் நினைவு நாளில் ருத்ரன் உணவை தரவும் அது தொண்டையில் இறங்குமா? அதுவும் சத்ரியன் தான் தன் தந்தையை கொன்றதாக சதா எந்நேரமும் இரைச்சலாக கூறும் ருத்ரனே முன்னால் நிற்க, அதனால் உணவை சாப்பிட இயலாது தவிர்க்கவே நினைத்தாள்.
கீர்த்தனாவுக்கு அவ்விஷயம் புத்திக்கு தெரிந்ததோ என்னவோ "வயிற்று பிள்ளைக்காரி சாப்பிடாம இருக்க கூடாது" என்று அவர் கையால் ஊட்டி விட்டார்.
ருத்ரனோ அன்னை ஷ்ரத்தாவுக்கு ஊட்டவும், சற்று தள்ளி போனில் யாரிடமோ பேசுவதற்கு தள்ளி வந்துவிட்டான்.
ருத்ரன் அவ்விடம் விட்டு நகரவும், கீர்த்தனா கையில் உணவுடன் ஷ்ரத்தாவுக்கு ஊட்டவும், ஷ்ரத்தா என்ன நினைத்தாளோ கண்ணீர் துளியுடன் 'ஆ' வாங்கிக் கொண்டாள். கூடவே இன்னிக்கு எங்கப்பாவுக்கும் நினைவு நாள்' என்றாள்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
Super sis nice epi semmaiya pogudhu story 👍 👌 😍 shratha romba paavam pa avanga appkum ninaivunaal romba kashtapaduva ella😕🙄
Very emotional sis. Sharadha life is still question mark. Chatriyian only can give answer to her. Very intresting sis.
தகிக்கும் நிலவொன்று.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 6)
பரவாயில்லை, ருத்ரன் கை உடைஞ்சதுல உருப்படியான வேலையைத்தான் பார்த்திருக்கான். இதே வேகத்தல போனால், அந்த நூத்தி இருபத்தியாறு குழந்தைகளையும், அந்த நர்ஸ் ஸ்டெல்லாவையும் கண்டு பிடிச்சிடுவான்னுத் தோணுது.
அட ராமா..! ஆடு பகை, குட்டி உறவுங்கிற மாதிரியே நடக்குதே.
😊😊😊
CRVS (or) CRVS 2797
Divagar avar oda ninavu nall um innaiku than la rudhran ku mattum Shardha ennaikum Chathriyan oda lover than ivan oda police moolai stella varaikum note panni irukan yae appo innum konjam investigate panna andha kuzhandhai ga pathi na vishyatha ah find out panniduvan polayae
-
தகிக்கும் நிலவொன்று-17
21 minutes ago
-
தகிக்கும் நிலவொன்று-16
15 hours ago
-
தகிக்கும் நிலவொன்று-8
17 hours ago
-
தகிக்கும் நிலவொன்று-7
17 hours ago
-
தகிக்கும் நிலவொன்று-5
18 hours ago
- 25 Forums
- 215 Topics
- 758 Posts
- 0 Online
- 329 Members
