தகிக்கும் நிலவொன்று-9
அத்தியாயம்-9
பெண் காவலர்கள், ஜெயிலர், என அனைவரும் ஷ்ரத்தாவை அழைத்து வந்திருந்தனர். அவள் ஏன் எதற்கு என்று குழம்பிய நின்றிருந்த சமயம் கீர்த்தனா முன்னே வந்து நின்றார்.
ஷ்ரத்தாவை ஆலமரத்தடியில் அமர வைத்து, அவளுக்கு முன் வளைகாப்பு விழாவுக்கான உணவும், வளையலும் எடுத்து வைத்தார்.
"அன்னிக்கு சொன்னேன். இன்னிக்கு அதை நிவர்த்தி செய்ய வந்துட்டேன்" என்றதும் ஷ்ரத்தா கீர்த்தனாவை கட்டி முடித்தாள்.
ஜெயிலர் வேடிக்கை பார்க்க, கார்த்திகா கீர்த்தனா கொண்டு வந்த பையை சரிப்பார்த்து, தட்டிலிருந்த பச்சை, சிவப்பு கண்ணாடி வளையல்களை ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கி வைத்தாள்.
ஐந்து வகை சாதமும் முன்னே வைத்திருக்க, கூடவே சந்தனமும் குங்குமம் விபூதி என்று இருந்ததை எடுத்து வைத்தாள்.
ஷ்ரத்தாவின் கைகளில் அணிவிக்க கீர்த்தனா தயங்க, ஜெயிலர் பெண்மணியோ "அட இதுக்கெல்லாம் அமங்கலி சுமங்கலினு யோசிப்பிங்களா? பூவும் பொட்டும் நாம பிறந்ததிலருந்து வச்சிட்டு வர்றோம். நீங்க போடுங்கம்மா" என்று ஊக்கினார். முதலில் கீர்த்தனா தயங்கி அணிவிக்க வந்தவர், அதன் பின்னே ஷ்ரத்தாவுமே சத்ரியன் இறந்தால் விதவை பெண்ணல்லவா? என்று சிந்தித்தார். சற்று முன் ஜெயிலர் பெண்மணி பேசியது மீண்டும் எண்ணிப்பார்த்தார். பூவும் பொட்டும் நம்ம பிறந்ததிலருந்து வைக்கறோம் என்றாரே. தன்னை வைக்க கூறியது போல, ஷ்ரத்தாவுக்கும் வயது 20 அல்லது 21 இருக்குமா? அவளும் பொட்டு வைப்பதில் தவறென்ன என்று எண்ணி வளைகாப்பு நலங்கு வைக்க ஆரம்பித்தார்.
கீர்த்தனா மனதில் எண்ணங்களை ஒதுக்கி 'கிளிங்... கிளிங்.'. என்ற ஓசையுடன் வளையல்கள் ஒன்றோடொன்று உரசிய சத்தம் அந்த அமைதியான அறையில் இனிமையாக ஒலித்தது.
ஷ்ரத்தாவின் கண்கள் கலங்கின.
"நான்... இதையெல்லாம் மறுபடியும் அனுபவிப்பேன்னு நினைக்கலம்மா..." என்று உடைந்த குரலில் சொன்னாள்.
கீர்த்தனா அவளது தலையை வருடினார்.
"சந்தோஷமா இரு. குழந்தை நல்லபடியா பிறக்கணும். இதெல்லாம் உன்னை விட உன் குழந்தைக்கு தான்." என்றார்.
அருகில் இருந்த ஒரு பெண் காவலர் சிரித்தபடி,
"மேடம்... சந்தனமும் குங்குமமும் வச்சிடுங்க..." என்று தட்டை நீட்டினார்.
கீர்த்தனா குங்குமத்தை நெற்றியில் வைத்து, சந்தனத்தை எடுத்து ஷ்ரத்தாவின் கன்னத்தில் பூசினார்.
அங்கிருந்த ரோஜாப்பூவின் உதிரி இதழ்களால் மேலே தலையில் ஆசிர்வாதம் போல தூவினார்.
ஷ்ரத்தா மனமுவந்து ஆசியை ஏற்றவளாக அமர்ந்திருந்தாள்.
அதே போல மற்ற ஜெயிலரும் செய்தார்.
அடுத்து கார்த்திகா என்ற பெண் அதிகாரியும் குங்குமத்தை எடுத்து வைக்கும்போது, அந்த நேரத்தில் ஷ்ரத்தா முகத்தை சற்று குனிந்திட, கார்த்திகா விரலில் இருந்த சிறிதளவு குங்குமம், நெற்றிப் பொட்டுக்கு மேலே வகிட்டில் மெல்ல பதிந்துவிட்டது.
"அடடா..." என்று கீர்த்தனா பதறி விரலை நீட்டினார். அழித்திட எண்ணி கையை உயர்த்தியவர்,
ஒரு கணம் தயங்கி நின்றார்.
அந்தச் சிறிய சிவப்பு கோடு ஏனோ அவருடைய மனதை ஏதோ செய்தது. அவர் எதுவும் பேசாமல் கையை மெதுவாக இறக்கிக் கொண்டார்.
அந்த காட்சியை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ருத்ரன்.
எதுவும் சொல்லாமல் தனது மொபைலை மீண்டும் எடுத்தான்.
க்ளிக்... ஒரு புகைப்படம் எடுத்த சப்தம் கேட்டது. ஷ்ரத்தா திரும்பிப் பார்த்தாள்.
"எதுக்கு... போட்டோ எடுத்தீங்க?" என்று கோபமாக கேட்டாள். ருத்ரன் அமைதியாக மொபைலை அவளிடம் நீட்டினான்.
"முதல்ல பாரு." ஷ்ரத்தா திரையை பார்த்தாள்.
"ஏதாவது அப்நார்மலா தெரியுதா?" என்று கேட்டான்.
ஷ்ரத்தா புகைப்படத்தை உற்றுப் பார்த்தாள்.
தன் முகம், கண்ணாடி வளையல்கள், நெற்றிப் பொட்டு
பக்கத்தில் கீர்த்தனா ஆன்ட்டி எல்லாமே இயல்பாகத்தான் இருந்தது.
"எனக்கு எதுவும் தெரியல்லையே" என்று குழப்பமாக தலையசைத்தாள்.
உள்ளுக்குள் மட்டும் 'மறுபடியும் என்னை அவமானப்படுத்த ஏதாவது காரணம் தேடுறாரோ? என்று பதற்றமடைந்தாள்.
"ருத்ரா..." என்று கீர்த்தனா அழைத்தார். அவன் அருகே வந்தான். "என்னடா ஏதாவது பிரச்சனை பண்ணறியா?" என்றார்.
"அம்மா... நெற்றி வகிட்டுல..." என்று மொபைலை காட்டி கிசுகிசுத்தான். அப்போது தான் கீர்த்தனாவும் கவனித்தது போல, துடைக்க கையை நீட்டினார்.
ருத்ரன் மெதுவாக சொன்னான்.
"அம்மா... ஜெயிலர் மேடம் தான் குங்குமம் வைக்க சொன்னாங்க. அவங்க முன்னாடியே இப்ப அதை அழிச்சா... ஏதோ தப்பா நினைப்பாங்க இருக்கட்டும் அவங்க தானே சொன்னாங்க. பூவும் பொட்டும் பிறந்ததிலருந்து வைப்பது தானேனு.." கீர்த்தனா குழப்பமாக நின்றார்.
"அப்ப என்ன பண்ண?"
"இப்ப ஒன்னும் பண்ண வேண்டாம்."அவன் அமைதியாக அருகிலிருந்த தட்டைக் காட்டினான்.
"அம்மா... பூவும் வாங்கியிருக்கீங்களா." என்று அப்போது தான் கார்த்திகா கேட்க கீர்த்தனா கூடையில் இருப்பதை கவனித்தார்.
வளையல் கடைக்காரர் கொடுத்திருந்த இரண்டு முழம் காகித மல்லிப்பூ அங்கே இருந்தது.
இது என் பக்கத்துல இருந்த பொண்ணு வாங்க விலை கேட்டுச்சு. கடைக்காரர் எனக்கும் சேர்த்து பில் போட்டுட்டாரா?' என்று சிந்தித்தார்.
அதற்குள் கார்த்திகா "வாம்மா." என்று ஷ்ரத்தாவின் முடியில் அந்த மல்லிப்பூவை மெதுவாக சூட்டினார். ஷ்ரத்தாவின் கண்கள் மீண்டும் கலங்கின.
அந்த நேரத்தில் தட்டை எடுத்த மற்றொரு பெண் காவலர் தவறுதலாக இடறினார்.
சந்தனமும் குங்குமமும் சிறிது ஷ்ரத்தாவின் வெள்ளைச் சேலையில் சிதறியது.
"சாரி... சாரி..." என்று பதறினார். ஆனால் கீர்த்தனா சிரித்துவிட்டார்.
"பரவாயில்லை மேம்." என்று ஷ்ரத்தா தன் கையாலேயே சந்தனத்தை சற்று சரிசெய்தாள்.
குங்குமமும் ஆங்காங்கே பதிந்திருந்தது.
காகித மல்லிப்பூ, பச்சை சிவப்பு வளையல்கள், நெற்றியில் சந்தனம், வெள்ளைச் சேலையில் மஞ்சளும் சிவப்பும் கலந்த நிறங்கள். சில நிமிடங்களுக்கு முன்பு கைதியைப் போல இருந்த ஷ்ரத்தா.
இப்போது எளிமையான சுமங்கலிக் கோலத்தில் மின்னினாள்.
"ருத்ரா... நாலைந்து போட்டோ எடுடா நான் எடுத்தா ஷேக் ஆகுது." என்றதும் ருத்ரன் மொபைலை வாங்கினான்.
முதலில் முகத்தை மட்டும் எடுக்க முயன்றான். நலங்கு போல வைத்தவர்களையும் எடுக்க முனையும் பொருட்டு சற்று பின்னால் நின்றான்.
அந்த நேரத்தில் அவன் பார்வை, ஷ்ரத்தாவின் நிறைமாத வயிற்றின் மீது நின்றது.
அறியாமலேயே, அந்த வயிற்றையும் சேர்த்து புகைப்படம் பதிவு ஆனது.
அதைப் பார்த்தவனே ஒரு நொடி அமைதியாக நின்றான்.
அந்தப் படத்தில் ஒரு குற்றவாளியாக ஷ்ரத்தா தெரியவில்லை.
ஒரு கர்ப்பிணித் தாய் மட்டுமே அவன் கண்ணுக்கு தெரிந்தாள். மேலும் அவனுக்கு தோன்றிய உணர்வை உடனே மனதுக்குள் புதைத்துவிட்டு, "அம்மா... நான் வெளியே இருக்கேன்..." என்று திரும்பி நடந்தான்.
அதே நேரத்தில் எதிரே வேகமாக நடந்து வந்தான் அட்வகேட் யதுநந்தன்.
ருத்ரனை பார்த்ததும் அவன் நடை நின்றது. முதலில் பேசியது யதுநந்தன் தான். "கோர்ட் ஆர்டர் வாங்கின பிறகும் இங்க வந்திருக்கீங்களா?" என்றதும் ருத்ரன் சிரித்தான்.
"நான் அதிகாரியா வரலை. என் அம்மா கூட வந்திருக்கேன்." என்றான் தெனாவட்டாக.
"பொய் சொல்லாதிங்க. இந்த பொய்யை கோர்ட்டும் கேட்காது." என்றார் யதுநந்தன்.
"கேட்காட்டி போகட்டும்."
ருத்ரன் ஒரு அடி முன்னே வந்தான்.
"உங்க கிளையண்டை நான் இன்னிக்கு விசாரிக்கலை. அதான் உண்மை" என்றான்.
"அதை நான் பார்த்துக்கறேன்." என்றார் யதுநந்தன்.
"வேணும்னா நீங்களே போய் கேளுங்க." என்றான் ருத்ரன்.
யதுநந்தன் குரல் கொஞ்சம் கடினமானது.
"என் கிளையண்ட் ஏழு மாத கர்ப்பிணி. தீர்ப்பு வந்த பிறகும் வாரம் வாரம் வந்து மனஅழுத்தம் கொடுக்கிறதை சட்டம் அனுமதிக்காது. அதோட அவங்க வயிற்றில் வளருற குழந்தைக்கும் பாதிக்கும்" என்றதும் ருத்ரன் சிரிப்பை நிறுத்தினான்.
"நீங்க ஷ்ரத்தா மீது ரொம்ப அக்கறை காட்டுறீங்க மிஸ்டர் யதுநந்தன்" என்றான்.
"அது என் வேலை. கடமை அதனால உங்களுக்கு என்ன?" என்றான் யதுநந்தன்.
"வேலையா... கடமையா.. இல்ல வேற ஏதாவது காரணமா?"
யதுநந்தன் நேராக அவன் கண்களை பார்த்தான்.
"வேற காரணம்னா.. வாட் யூ மீன். நான் ஷ்ரத்தாவை காண வருவதும், பாதுகாப்பாக அவங்களுக்காக யோசிப்பதற்கும் யார்கிட்டயும் விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை." என்றான் யதுநந்தன். பிறவியிலேயே யதுநந்தன் அமைதியான சுபாவம் கொண்டவன். ஆனால் அவன் குரல் ருத்ரனிடம் அதிகபட்ச கோபக்காரனின் அனலே வீசியது.
ருத்ரன் கைகளை கட்டிக் கொண்டான். "லாயர் திவாகர் சாரோட பொண்ணு என்பதால கேஸுக்காக வாதாடினிங்க. அது முடிஞ்சு பல நாளாச்சு. இன்னும் ஒரு கைதிக்காக இவ்வளவு ஓடுறது... கொஞ்சம் ஓவரா தெரியலையா? அப்ப என்னனு சொல்லறதாம்" என்றதும் யதுநந்தன் சிரித்தான்.
"நேர்மையான மனிதர்களுக்கு கடமைன்னு ஒரு வார்த்தை இருக்கு இன்ஸ்பெக்டர். அதோட ஷ்ரத்தாவை பற்றி யோசிக்க இங்க நான் ஒருத்தன் இருக்கேன். தேவையில்லாம வார்த்தை விடாம இருப்பது உங்களுக்கு நல்லது"
"அது எல்லாருக்கும் புரியாது."
ருத்ரனின் புருவம் சுருங்கியது.
"என்ன சொல்ல வர்றீங்க? ஒரு கர்ப்பிணிப் பெண்ணை குற்றவாளின்னு தீர்ப்பு வந்த பிறகும் தினமும் வந்து கேள்வி கேட்டு மனசை உடைக்கிறதுக்கு பதிலா... சட்டப்படி பாதுகாக்கறது தான் நான் செய்தது. உங்களோட அப்பா இறந்ததுக்கு நீங்க இவங்க மேல கோபமா சுத்தறதும் வதைக்கறதும் தடுக்கறேன்னு உங்களுக்கு என் மேலயும் கோபமா இருக்கு." என்றார்.
ருத்ரனோ "நீங்க ஒன்னுமில்லாத விஷயத்துக்கு மனு போட்டீங்க. ஒரு போலீஸ் அதிகாரியோட வேலையை தடுக்க பிளான் பண்ணறிங்க." என்றான்.
"எது.. வாரம் வாரம் நாள் தவறாம வந்து என் கிளையண்டிடம் ஏதாவது பேசி அழவச்சிட்டு போறது தான் உங்க வேலையா.?" என்று யதுநந்தன் வார்த்தைகளை அழுத்தமாக உச்சரித்தான்.
ருத்ரனோ "என் விசாரணை இன்னும் முடியலை. அது கோர்ட்டுக்கும் தெரியும். சத்ரியன் கேஸ்ல இன்னும் நிறைய கேள்விகள் இருக்கு." என்றான்.
யதுநந்தனோ "அதுக்காக சட்டத்தை மீற முடியாது." என்றார் அவரும்.
"நான் ஒரு நாள் உண்மையை கண்டுபிடிப்பேன்." என்று ருத்ரன் ஆக்ரோஷமாய் கூற "நானும் அதைத்தான் விரும்புறேன்." என்று யதுநந்தன் அமைதியாகச் சொன்னான்.
மேலும் "ஆனா அந்த உண்மையை தேடுற பேர்ல ஒரு கர்ப்பிணிப் பெண்ணோட மனநிம்மதியை அழிக்கக்கூடாது. இப்ப அவங்களுக்கு தேவை மனநிம்மதி. பிரசவ காலத்தில் ஏற்படுற உடல்நிலை மாற்றமே அவங்களால் அக்சப்ட் பண்ண நேரமெடுக்கும். இதுக்கு நடுவுல உங்களை கண்டதும் வர்ற பிரஷர் பீபி, தேவையில்லாம எக்ஸ்ட்ரா உடல்நிலையை கெடுக்கும். ஏன்னா நீங்க இருந்தாலே ஷ்ரத்தா பதட்டமாகறாங்க" என்றதும்
இருவரின் பார்வையும் மோதியது.
அந்த நேரத்தில் உள்ளிருந்து ஷ்ரத்தாவின் குரல் கேட்டது.
"யது சார்..." இருவரும் திரும்பிப் பார்த்தனர்.
வளையல் அணிந்து, காகித மல்லிப்பூ சூடி, சந்தனமும் குங்குமமும் பூசி, வெள்ளைச் சேலையில் மஞ்சளும் சிவப்பும் கலந்திருந்த ஷ்ரத்தாவைப் பார்த்ததும், யதுநந்தன் சில நொடிகள் பேச முடியாமல் மெய்மறந்து நின்றான்.
அவனது பார்வையில் ஆச்சரியமும் நிம்மதியும் மட்டுமே இருந்தது.
அதைப் பார்த்த ருத்ரன் ஷ்ரத்தாவிடம் "சத்ரியன் இல்லன்னா கூட, உன்னை பாதுகாக்க யாராவது வந்துடறாங்க போல...." என்று கிண்டலாக சொல்லிவிட்டு, அவள் முகம் சுணங்க, உற்றுப் பார்த்தான்.
கீர்த்தனாவோ "அம்மாடி.. நாங்க அப்ப கிளம்பறோம். நீ உடலை கவனிச்சிக்கோ.. ருத்ரா.. வா போகலாம்" என்று மகனை இழுத்து சென்றார். ருத்ரன் வேண்டுமென்றே சண்டையிடுவதை தவிர்த்தார் எனலாம்
யதுநந்தன் ருத்ரனை கண்டு ஷ்ரத்தாவிடம், "இப்படி உங்களை பார்க்க ரொம்ப அழகாயிருக்கு." என்று பாராட்டினான்.
ஷ்ரத்தாவோ "இந்த சந்தோஷத்துக்கு எல்லாம் காரணம் கீர்த்தனா ஆன்ட்டி. " என்று கூறினார்.
"யூ மீன்.. ருத்ரனோட அம்மாவா?" என்று யதுநந்தன் கேட்டான்.
ஆமோதிப்பதாக ஷ்ரத்தா தலையாட்டி, "அங்கிள் இறந்தநாளுக்கு உணவு வினியோகிச்சாங்க. அப்ப வளையல் போட்டு சின்னதா வளைகாப்பு நடத்துவதா சொல்விட்டு போனாங்க. இன்னிக்கு வந்து அந்த வாக்கை நிறைவேத்தினாங்க." என்று விவரித்தாள்.
"ஆனா.. இந்த ருத்ரன் உங்களை ரொம்ப எரிச்சல்படுத்தறதா கேள்விப்பட்டு தான் கோர்ட்டில் மனு எழுதி போட்டேன். இனி அவர் அடிக்கடி வரக்கூடாதுனு. அதை மீறி வந்திருக்காரேனு கத்தினேன். ஒரு மார்க்கமா பேசிட்டு போறார்." என்று கூறினான்.
சத்ரியன் இல்லைன்னா யதுநந்தன் வந்து பராமரிப்பதாக அல்லவா பேசிவிட்டு சென்றான்.
"அவர் பேசியதை மனசுல வச்சிக்காதிங்க யதுநந்தன். சில உண்மைகள் தெரிய வந்தா.. ஏன் பேசினோம்னு வருத்தப்படலாம்." என்று பூடகமாக பேசினாள்.
'இந்த நிமிஷம் எனக்கொரு அம்மா கூடவே இருந்திருக்கலாம்னு தோணுதுங்க." என்றதும் ஷ்ரத்தா ஏன் என்பது போல பார்க்க, "அவங்களை அழைச்சிட்டு வந்து உங்களுக்கு வளைகாப்பு நடத்திருப்பேன்." என்று கூற, ஷ்ரத்தாவோ ''என்ன மாதிரி சிறைக்குள் சுத்திட்டு இருக்கற ஆளுக்கு இதெல்லாம் குறைச்சல்." என்று கையை தூக்க, கண்ணாடி வளையல் சப்தமிட்டது.
"உண்மையிலேயே திவாகர் சார் இருந்தா உங்க ரேஞ்சே வேறங்க. அவருக்கும் இப்ப தான் நினைவு நாள் போச்சுல?" என்றவன் துக்கம் தொண்டையை அடைக்க,
"ஆனாலும் இந்த கோலம் ரொம்ப அழகாயிருக்கு. இங்க ருத்ரன் வந்ததா கேள்விப்பட்டதும் ஓடி வந்துட்டேன். எனிவே.. குழந்தை நல்லபடியா பிறக்க வாழ்த்துகள். யார் கண்டா சாரே உங்க வயிற்றில் பிறக்கலாம்" என்றான்.
அதற்குள் போன் அடிக்கவும், யதுநந்தன் 'பச்.. ஒரு கிளையெண்ட் வர்றதா சொன்னாங்க. அதை மறந்து இங்க ஓடி வந்துட்டேன். சாரி ஷ்ரத்தா நான் அவசரமா போறேன். மன்னிச்சிடுங்க... நான் தான் போறேன். நினைவு எல்லாம் இன்னிக்கு இங்க தான் சுற்றும்." என்று புறப்பட்டான்.
ஷ்ரத்தாவோ 'அப்ப.. இங்க இவரும் ஏதோ ஒரு ஸ்பையை வச்சியிருக்கார். ருத்ரன் வர்றது எப்படியாவது அவருக்கு தெரியுது. ஒருவேளை தந்தையோட வழில இவர் அணுகினா 126 குழந்தைகளை பத்தி நான் இவரிடம் உலறுவேன்னு யாராவது முயற்சிக்கறாங்களா? ஏற்கனவே வாய்தவறி ருத்ரனிடம் உலற வந்தேன். அவர் அதே கவனிச்சாரா தெரியலை. இப்ப யதுநந்தன் அப்பாவோட ஜீனியர் என்றதால இவரிடம் உலறிடக்கூடாது. எதுனாலும் வினோத் அண்ணா வரட்டும். நம்பிக்கையான உறவுன்னா.. இப்ப வினோத் அண்ணா மட்டும் தான். ஆனா யதுநந்தனுக்கு அப்பாவோட நினைவு நாள் வரை நினைவில் வச்சி பழகறார். அவரு
க்கு அப்பா மேல ரொம்ப மரியாதை இருக்கும் போல. அப்பா இவரை போல நல்ல மனிதரையும் பெற்றிருப்பது சந்தோஷமா இருக்கு' என்றவள் கைகள் வளையலில் அகமகிழ்ந்து போனாள்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்
தகிக்கும் நிலவொன்று.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 9)
அட.. ஷ்ரத்தா விஷயத்துல ருத்ரன் அண்ட் யதுநந்தனுக்குள்ள அடிக்கடி அக்னி நட்சத்திரம் மூவி ஹீரோஸ் போல முட்டிக்குதே, இதுக்கு ஏதாவது ரீசன் இருக்குமோ..?
ஷ்ரத்தாவுக்கு நடக்கிறதை எல்லாம் பார்த்தால், நிச்சயமா சத்ரியன் உயிரோடத்தான் இருக்கிறான்னு நல்லாவேத் தெரியுது.
ஆனால், இந்த வினோத் எங்கே போனான் ? யாராவது அவனை பிடிச்சிட்டாங்களா, இல்ல திரும்பவும் சத்ரியனோடவே கமிட் ஆகிட்டானா ?
😊😊😊
CRVS (or) CRVS 2797
Chathriyan uyir oda than irupano oru vela Shardha oda punishment mudincha piragu avan entry kudupano .
Rudhran eppo lam chance kidaichalum Shardha ah va hurt pannurathu ah vida matan polayae .
Shardha yadhu moolama kooda vishyam veliya theriya vandhudum nu usharu ah iruku ah parpom.
-
தகிக்கும் நிலவொன்று-17
21 minutes ago
-
தகிக்கும் நிலவொன்று-16
15 hours ago
-
தகிக்கும் நிலவொன்று-8
17 hours ago
-
தகிக்கும் நிலவொன்று-7
17 hours ago
-
தகிக்கும் நிலவொன்று-6
18 hours ago
- 25 Forums
- 215 Topics
- 758 Posts
- 0 Online
- 329 Members
