மொஹபத் முதல் நிக்காஹ் வரை-6
அத்தியாயம்-6
உண்மையிலே தொழுகை தீமையைத் தடுக்கிறது.
-குர்ஆன் 29:45
அன்பு இல்லாத இடத்தில் நன்மை இல்லை.
-நபிகள்.
அடுத்த நாள் கிச்சன் முழுக்க வழக்கம்போல பரபரப்பாக இருந்தது. இன்று பிரணவ் மனம் வேறொரு இடத்தில் ஓடிக் கொண்டிருந்தது. இன்று என்றல்ல இப்பொழுது எல்லாம் அவனை அறியாமல் காய்கறி வெட்டிக்கொண்டே, அவன் பார்வை அடிக்கடி வால் க்ளாக் பக்கம் சென்றது.
அதை கவனித்த ஒருவர், "பிரணவ் பிரேக் டைம் வர இன்னும் ட்வென்டி மினிட்ஸ் இருக்கு" என்று சிரித்தார்.
பிரணவ் உடனே, "இல்ல செஃப்… ஜஸ்ட் டைம் பார்த்தேன்" என்று சமாளித்தான்.
"ஆஹ்.. நீ எதுக்கு டைமை பார்க்கறேனு தெரியுது. கேப் கிடைச்சா லாபிக்கு போற வழியில் ஒரு விசிட் பண்ணிட்டு வரலாம்னு தானே?" என்று அருகில் இருந்த மற்றொருவர் கேலி செய்ய, அங்கே சிலர் சிரித்தார்கள்.
பிரணவ் முகம் சற்று வெட்கப்பட்டு மாறியது.
"அப்படி எதுவும் இல்ல" என்றாலும், அவனது முகத்தில் இருந்த உணர்வுகள் எல்லாவற்றையும் சொல்லிவிட்டது.
பிரணவ் மனமே லாபிக்கு தானே ஓடி செல்ல துடித்தாய் என்று கேலி பேசியது. பிரேக் டைம் வந்து செஃப் ஆட்கள் மாற்றம் பெற்று, பிரணவிற்கு நேரம் கிடைத்தாலும் இம்முறை மற்றவர்கள் கேலி செய்வதால் லாபியை தவிர்த்து அங்கிருந்த நண்பன் ஒருவனிடம் பேசி நேரத்தை ஓட்டினான்.
"என்ன பிரணவ் லாபிக்கு போகலை" என்ற செஃப் ஒருவர் கேட்டு நிற்க, "நோ ஃபாரூக் அடுத்த டிஸ் செய்யணும். சும்மா லாபிக்கு போவாங்களா?" என்று சமாளித்தான்.
இங்கு வந்து இரண்டு மாதம் கடந்திருக்க, தியானாவை எட்டி பார்க்க லாபிக்கு செல்வதை கூட வேலை செய்யும் பலரும் அறிந்து வைத்திருக்க, பிரணவிற்கு அவர்களிடம் எல்லாம் அப்படியல்ல என்று கூற முற்பட்டு தோற்றான்.
ஏதோ தனக்கும் தியானாவுக்கும் ஓடுகின்றதென பணிப்புரியும் பலர் மறைமுகமாக கூறத்துவங்கி விட்டார்கள். தனக்கு அதை கேட்கும் பொழுது உள்ளுக்குள் நன்றாக தான் இருக்கின்றது. ஆனால் வெளிப்படையாக கேலியை ஏற்க தான் முடியவில்லை.
இந்த இரண்டு மாதத்தில் நன்றாக பேசுவதால் நிறைய நட்பை பெற்று விட்டாயிற்று. சம்பளத்தை தனக்கு தேவைக்கு சேமிப்பில் வைத்துவிட்டு, அன்னை மகாலட்சுமிக்கு ஒரு பங்கை அனுப்பிவிட்டான். இதில் இங்கு வருவதற்கு அண்ணன நிர்மல் மூலமாக கடன் வாங்கி வந்திருக்க அவனுக்கும் சம்பள பணத்தில் ஒரு பகுதியை அனுப்பியுள்ளான்.
அப்படியிருக்க தியானா மூலமாக புது பிரச்சனை நேர்ந்திடாமல் கடந்திட முடிவெடுத்தான்.
மாலை ஷிப்ட் முடிந்து வெளியே வந்தவன், தெரியாமலே பார்வையை அந்த டாக்ஸி வெயிட்டிங் ஏரியா பக்கம் திருப்பினான்.
அங்கே தியானா இல்லை.
அந்த ஒரு விநாடிக்கு ஏதோ வெறுமை சூழ்ந்தது.
'இன்னிக்கு சீக்கிரமா போயிட்டாளா... சே.. இதுக்கு பிரேக் டைம் அப்பயாவது ஒரெட்டு பார்த்துயிருக்கலாம்'
என்று நினைத்தவன் நடக்க ஆரம்பித்தான்.
"பிரணவ்… பிரணவ்" என்ற இனிமையான அந்த குரலில் சட்டென திரும்பினான்.
தூரத்தில் இருந்து அவசரமாக நடந்துவந்தாள் தியானா.
"அச்சோ… போயிட்டீங்கனு நினைச்சேன்" என்றாள் மூச்சை சரி செய்தபடி.
"நானும் நீங்க போயிடாடிங்களோனு நினைச்சேன்” என்று பிரணவ் சிரித்தான்.
"இன்னிக்கு லேட்டாகிடுச்சு. ஒர் கெஸ்ட் பிராப்ளம் கிரியேட் பண்ணிட்டாங்க. இது அடிக்கடி நடக்கும்" என்றவள், "ஆமா.. கேட்கணும்னு நினைச்சேன். நீங்க தினமும் இந்த நேரத்துக்கு காத்திருந்து போறதா தெரியுதே... இது தற்செயலா... இல்லை..." என்று புருவம் உயர்த்தினாள்.
பிரணவ் ஒரு நொடி தடுமாறினான். கூட வேலை பார்க்கும் நண்பர்கள் கேலி செய்வது போல பேசியது. இவளும் அதே போல கேட்டால் பதில் கூற தயங்கினான். இப்படியா அப்பட்டமாக தெரிகின்றது? என்று பயந்தான்.
ஆனாலும் உடனே ஆமோதிக்க இயலுமா?!
"துபாய் கிளைமேட் நல்லாருக்கே… அதான் பொறுமையா நடந்துட்டே இருப்பேன். பார்க்கற உங்களுக்கு காத்திருப்பதா தெரியுதோ என்னவோ" என்று சமாளிக்க முற்பட்டான்.
"ம்ம்ம்… சரி. அந்த நடைபயணம் தினமும் இந்த இடத்துல தான் ஆரம்பிக்குதா?" என்றாள் சிரிப்பை அடக்கிக்கொண்டு.
பிரணவ் இந்த முறை சிரித்தே விட்டான்.
"அப்படியில்லைங்க.. உண்மையை சொல்லிடட்டா... இங்க துபாய்ல ஜப்ரான் ஹோட்டலுக்குள் நுழைஞ்சா நிறைய என்னை போல செஃப் நட்பு இருக்கு. அவங்க எல்லாம் அந்த குக் பண்ணற இடம் இந்த ஹோட்டலுக்குள்ளயே பேச்சு முடிவடையுது. அதை தவிர சூர்யா என்ற ரூம்மேட் இருக்கார். ஆப்டர் ரூமுக்கு போனதும் அவனிடம் பேசுவேன்.
நடுவுல அம்மாவிடம் கால் பண்ணுவேன். இதுக்கு நடுவுல நீங்க இங்க டாக்ஸிக்கு காத்திருக்கும் போது உங்களிடம் இரண்டு நிமிஷம் பேசுவேன். எல்லாம் நேரம் போகறதுக்கான ஒரு வழி." என்றான் உண்மையாக.
தியானா அவனுடன் நடந்துக்கொண்டே "ஊர்ல உங்க பிரெண்ட்ஸ் கூட சாட் பண்ணலாமே?" என்று யோசனை தந்தாள்.
பிரணவ் சிரித்துக் கொண்டே, "ஆளாளுக்கு கல்யாணம் செய்து குடும்பஸ்தனா இருக்காங்க. எங்க பேசறது. எல்லா பொண்ணுங்களும் சொல்வாங்க. கல்யாணமான தோழிகளோட டச் போயிடும்னு. சில ஆண்களோட நிலைமையும் இதான். அந்த கேட்டகிரி நான்" என்றவன், தியானா பேசிக்கொண்டே தன்னுடன் நடந்து வந்ததை அப்பொழுது தான் உணர்ந்தான்.
"அச்சோ... நீங்க பேசிட்டே என்கூட நடந்து வந்துடிங்க. டாக்ஸி பிடிக்கவா?" என்று கேட்டான்.
"பரவாயில்லை.. அடுத்த டாக்ஸி ஏறுற இடம் வரை நடந்து வர்றேன்." என்றாள்.
பிரணவிற்கு குதூகலமாக இருந்தது. "ஆமா இங்க வேற ஏதும் பொழுது போகலையா? எஃப்.பி, இன்ஸ்டா, ட்விட்டர்னு போனாலே டைம் ஓடிடுமே" என்றாள்.
"அட இப்ப வெறும் அரசியல் பதிவு தாங்க போகுது. எங்க திரும்பினாலும் ஆளுங்கட்சி எதிர்கட்சினு முட்டிக்கறாங்க.
நானும் ஒரு வாரம் பார்த்தேன். இது இன்னிக்கு முடிஞ்சிடும் நாளைக்கு முடிஞ்சிடும்னு. எங்க..... ஆளுங்கட்சியோட குறைகளை எதிர்கட்சி பேச அதை காபி பேஸ்ட் பண்ண, நம்ம மக்கள் எக்ஸ்ட்ரா பொரி தூவி பொடி போட்டு போஸ்டா வருது.
இல்லையா... எதிர்கட்சி ஆண்ட லட்சணத்தை குறையா அடுக்கி ஆளுங்கட்சி அபிமானிகள் அவங்க பங்குக்கும் போஸ்ட்ல பேசறாங்க.
ஆக மொத்தம் மக்கள் இங்க வேடிக்கை பார்க்க நல்ல எண்டர்டெயின்மெண்ட்.
என்னவோ எனக்கு அதுல ஆர்வமே போகலை. பேசறவன் செய்ய மாட்டான். செய்யறவன் பேச மாட்டான்.
அரசியல் அலைகள் ஓயட்டும்னு அந்த பக்கமே போறதில்லை.
அப்படியே அரசியலை தவிர்த்து எட்டி பார்த்தா இந்த செலிபிரெட்டி சேனல்னு அவனவன் சமைக்கறது கப்பீல்ஸா சேர்ந்து சுத்தறது, அதெல்லாம் கிட்டதட்ட கட்டிலறை காட்சி மாதிரி இருக்கு. இதுல அவனவன் ஒரு சேனல்ல ஒரு நியூஸ் போட்டு ஆத்து ஆத்துனு ஆத்தறாங்க.
நம்ம நேரம் தாங்க போகுது. நாம என்ன கிழிச்சோம்னு பார்த்தா ஒன்னும் பண்ணிருக்க மாட்டோம்.
அதனால ஒரு டைம் வச்சியிருக்கேன். எல்லாத்துக்கும் குறிப்பிட்ட டைம். அந்தந்த அலாரம் அடிக்க அந்தந்த நேரத்துக்கு நீங்க சொன்ன முகநூல் இன்ஸ்டா ட்விட்டர் எல்லாத்திலும் சில நேரம் தான். ஆனாலும் ஏதோ வெறுமை திங்குதுங்க." என்றான்.
தியானாவோ சம்மந்தமேயில்லாமல் சில எண்ணை உதிர்த்தாள்.
"என்னது..?" என்று புரியாமல் கேட்டான்.
"என்னோட போன் நம்பர். ரொம்ப நாளா தரணும்னு இருந்தேன். ஆனா நீங்களா கேட்கற மாதிரி தெரியலை. ஒரே இடத்துல வேலை பார்க்கறோம். சந்திக்க திணற வேண்டாம். இனி... பேசணு..ம்..னா... இதுல கூட சாட் பண்ணுங்க" என்றாள்.
பிரணவ் கூர்மையாக அவளை ஏறிட்டு அவளது எண்ணை தனது போனில் பதிய வைத்துக் கொண்டான்.
"நா..நான் டாக்ஸி பிடிச்சி போகலாம்னு இருக்கேன்." என்று கூற தலையாட்டினான்.
டாக்ஸியை நிறுத்தி அதில் ஏறியமர்ந்துக் கொண்டவள், நீங்களும் வர்றிங்கன்னா போகலாம். ஆன் தி வே தானே உங்க அக்கமெண்டேஷன்" என்றாள்.
பிரணவிற்கு டாக்ஸியில் ஏற தயக்கம் இருந்தது. ஆனால் டிரைவர் ஒரு மாதிரி பார்க்கவும் ஏறினான்.
தியானாவும் பேசவில்லை. போன் நம்பரை அவளாக கொடுத்து விட்டு, காரிலும் ஏற கூறிவிட்டு பிரணவ் என்ன நினைப்பானோ என்று தயக்கமாக தான் பார்வையிட்டாள்.
காரில் பலத்த அமைதியும் நிலவியது.
பிரணவும் எதுவும் பேசாமல் தவித்தான். அவனுக்கும் தியானா தானாக வந்து போன் எண்ணை தந்ததில் வியப்பாக தான் இருந்தது. அவன் கூட சில நேரம் அலைப்பேசி எண்ணை கேட்க நினைத்து தயங்கியிருந்தான். எங்கே தன்னை தவறாக எண்ணிவிடுவாளோ என்று எத்தனை நாள் தவிர்த்திருந்தான்.
இன்று தியானாவே தரவும் ஆச்சரியம் அடைந்தான். அதில் பேச்சற்றும் போனான்.
"இங்க தான். பிரணவ்.. நீங்க இறங்க வேண்டிய இடம்" என்று கூற, "சாரி... ஏதேதோ யோசித்து இறங்க வேண்டிய இடத்தை கவனிக்கலை." என்று இறங்கினான்.
"நான்... அப்ப... கிளம்பறேன்" என்று கூற, தியானாவும் தலையாட்டினாள்.
அவள் பர்தா உடை உடலில் அணிந்திருக்க, முகத்தில் அணியும் ஹிஜாப் வடிவில் போர்த்தியிருக்க, மனக்கண்ணில் அவளது தலையாட்டலுக்கு, ஒரு ஜிமிக்கி அணிவித்து, நெற்றியில் பொட்டு வைத்தும் அழகு பார்த்து சிரித்தான்.
டாக்ஸி கிளம்பியதால் தியானா நகம் கடித்து சிந்தித்தாள்.
பிரணவுக்கு நம்பர் தந்துட்டேன். ஏன் தந்தேன். எப்படி தந்தேன். எதுக்கு தந்தேன். ஒன்னுமே புரியலை. அவன் அடிக்கடி லாபிக்கு தலைக்காட்டி லேசா சிரிச்சிட்டு போவான். இரண்டு வாரமா காணோம்னு எனக்குள்ள ஏன் ஏமாற்றம் வந்துச்சு. அவர் தற்செயலா காத்துட்டு இருக்கார். ஆனா நான் அவர் வெயிட் பண்ணுவதா தான் ஓடறேன். ஏன் இந்த உணர்வு?
இப்ப நம்பர் தந்துட்டு அல்லாடறேன். நான் செய்தது தப்பா சரியா? ஆனா ஒரு நட்பு ரீதியா...' என்று எண்ணும் போதே "டாக்ஸி டிரைவர் இடம் வந்துவிட்டதாக கூறவும் அவசரமாக இறங்கினாள்.
வீட்டுக்கு வந்தப்போது வாப்பா இருக்கவும் தியானா தலையில் ஹிஜாப் சரிசெய்து உள்ளே நுழைந்தாள்.
இனி அவளது கனவுலகில் கூட பிரணவ் நுழைய முடியாது. அந்தளவு தந்தையின் கட்டுக்கோப்பில் நேரங்கள் நகரும்.
இங்கு பிரணவ் தான் தியானா என்ற பெயரை சேமித்து வைத்தபடி, நெஞ்சில் போனை அணைத்து படியில் நடந்தான்.
சூர்யா வரும் முன்னரே வந்துவிட்டான். காரில் பயணமென்பதால் அறைக்கு வரும் நேரம் விரைவானது. அறைக்கதவை திறந்து, சட்டை பட்டனை கழட்டி, குளித்து முடித்து வந்தான். என்ன தான் ஹோட்டலில் நல்ல காற்றோட்டமான ஏசி பேன் வசதி இருந்தாலும், லேசாக குளிப்பது பிரணவ் வழக்கம்.
நிதானமாக ஷார்ட்ஸ் அணிந்து, தண்ணீரை குடிக்கும் நேரம் சூர்யாவோ "என்னப்பா... கதவு திறந்து இருக்கு. நீ என்ன குயிக்கா வந்துட்ட? எப்பவும் இன்னும் கால் மணி நேரம் ஆகுமே." என்று கேட்டான்.
"கார்ல வந்தேன்" என்றான் பிரணவ்.
"பார்டா.." என்று சிரித்துவிட்டு, முகம் துடைக்க, உடை மாற்ற சூர்யா ஆரம்பிக்க, நிதானமாக பிரணவ், "தியானா கூட கார்ல வந்தேன். அவ தான் டிராப் பண்ணினா." என்றான்.
சூர்யாவோ தலையில் டீஷர்ட் நுழையாமல் மாட்டிக் கொள்ள, "ஏ... பிரணவ்... என்னடா சொன்ன?" என்று கேட்க, பிரணவ் சூர்யாவை பார்த்து, "தியானா அவ போன டாக்ஸில என்னை டிராப் பண்ணினா. அதோட போன் நம்பர் தந்திருக்கா" என்று கூற, சூர்யா சட்டென டீஷர்டை இழுத்து தலையில் நுழைக்க பட்டன் பிய்ந்து உதிர்ந்தது.
அதை பொருட்படுத்தாமல், "ஏ... என்னடா சொல்லற?" என்று கேட்க, பிரணவோ "ம்ம்.. நம்பர் கொடுத்தா..." என்று அமைதியின் சொரூபமாக கூறினான்.
-தொடரும்
-பிரவீணா தங்கராஜ்.
மொஹபத் முதல், நிக்காஹ் வரை!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 6)
அட ராமா..! பிரணவ் தான் துபாய்க்கு வந்திருக்கிறான், அதனால அவனுக்கு துபாயை பத்தி எதுவும் தெரியாது. பட்.. தியானாவுக்கு தெரியும் தானே, அதுவும் அவளோட அப்பா நஸீரைப் பத்தி தெரியும் தானே ? ஒருநாள், பர்தா இல்லாமல் வந்ததுக்கே அந்த காய்ச்சு
காய்ச்சினவர். முஸ்லிம் எல்லாம் அவங்களோட மதத்திற்கும், கட்டுப்பாடுகளுக்கும் நிறைய முக்கியத்துவம் கொடுப்பவர்கள், இதுல பிரணவ் & தியானா நட்புன்னு பூசி மெழுகியே ஒருத்தரையொருத்தர் விரும்புறாங்களோன்னு நமக்கே சந்தேகம் வரும்போது மத்தவங்களுக்கு வராதா, இல்லை
கலாய்க்கத்தான் மாட்டார்களா...?
பார்த்திங்களா, போன் நம்பர் பகிர்ந்துக்கிற அளவுக்கு வந்தாச்சு, இனி பிரச்சினையும் ஆரம்பிச்சிடும், அப்படித்தானே ?
😴😴😴
CRVS (or) CRVS2797
-
மொஹபத் முதல் நிக்காஹ் வரை-8
1 week ago
-
மொஹபத் முதல் நிக்காஹ் வரை-7
1 week ago
-
மொஹபத் முதல் நிக்காஹ் வரை-5
3 weeks ago
-
மொஹபத் முதல் நிக்காஹ் வரை-4
3 weeks ago
-
மொஹபத் முதல் நிக்காஹ் வரை-3
4 weeks ago
- 25 Forums
- 215 Topics
- 758 Posts
- 1 Online
- 329 Members
