Forum

மதுர ஜில்லா... மச்ச...
 
Notifications
Clear all

மதுர ஜில்லா... மச்சானே!-47

3 Posts
3 Users
0 Reactions
15 Views
(@praveena-thangaraj)
Posts: 179
Member Admin
Topic starter
 
[#238]

அத்தியாயம்-47

அமெரிக்கா செல்லும் நாள் விடிந்திருந்தது. வீட்டுக்குள் காலையிலிருந்தே சுறுசுறுப்பு நிலவியது. மீனாட்சி விடியற்காலையிலேயே எழுந்து, பயணத்திற்காக சாப்பாடு, பலகாரம், ஊறுகாய், கைமுறுக்கு, அதிரசம் என்று அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார்.

"அம்மா... அங்க எல்லாமே கிடைக்கும்மா." என்று அகிலன் எத்தனை முறை சொன்னாலும்,

"கிடைக்கிறதுக்கும், அம்மா கையால செஞ்சு சாப்பிடுறதுக்கும் வித்தியாசம் இருக்கு." என்று பதில் சொல்லிவிட்டு மீண்டும் வேலையில் மூழ்கினார்.

காவ்யா அதை பார்த்து சிரித்தாள். "அத்தை... இன்னும் கொஞ்சம் போட்டா சூட்கேஸ் மூடவே முடியாது" என்று தலையில் கை வைத்துக் கொண்டாள் காவ்யா.

அதியமான் சிரித்தார். "நீ விடும்மா. இவ மனசு நிறையணும்."

காவ்யா சிரித்தபடி,‌"சரி... ஆனா வெயிட் அதிகமாயிடுச்சுன்னா ஏர்போர்ட்ல என்னையே தூக்கி வெளியே போட்டுடுவாங்க." என்றாள் கிண்டலாக.

"உன்னை யாரு வெளியே போடுவா? எங்க மருமகளை." என்று மீனாட்சி உரிமையாகச் சொல்ல, காவ்யாவின் முகத்தில் மலர்ச்சி தோன்றியது.

ராஜாராமும் தயாராகி வெளியே வந்தார். "எல்லாம் ரெடியா?"

"ரெடிப்பா." என்றாள் காவ்யா.

அகிலனும் பாஸ்போர்ட், டிக்கெட், தேவையான ஆவணங்களை ஒருமுறை சரிபார்த்துக் கொண்டான்.

அதை பார்த்த அதியமான் திருப்தியாகத் தலையசைத்தார்.

"சரி... கிளம்பலாம்ப்பா."

அந்த ஒரு வார்த்தை வந்ததும் வீட்டில் இருந்த சிரிப்பெல்லாம் கொஞ்சம் குறைந்தது.

மீனாட்சி அகிலனை அருகே அழைத்தார். "அகிலா..." என்றழைக்க, "சொல்லும்மா." என்றான்.

" அங்க போயிட்டு... அம்மா அப்பாவை மறந்துடாத." என்றார். அதற்கு  அகிலன் சிரித்தான்.

"ஏம்மா... பத்து நாள்னு திட்டமிட்டுத்தானே போறோம்." என்றான்

"அது தெரியும்." அவர் ஒரு நொடி பேசாமல் நின்றார்.

"என்னமோ... அங்க போனா உனக்கு அந்த நாடு பிடிச்சு... அங்கேயே இருந்துடுவியோன்னு..." அதற்கு மேல் பேச முடியாமல் நின்றார்.

அதியமானும் பார்வையைத் திருப்பிக் கொண்டார்.

அவருக்கும் அதே பயம் இருந்தது. ஆனால் மகனிடம் காட்டிக் கொள்ள விரும்பவில்லை.

அகிலன் இருவரையும் மாறி மாறிப் பார்த்தான். பிறகு மெதுவாக அன்னையின் கையைப் பிடித்தான். "அம்மா..." என்றான்.

"ம்ம்ம்..." என்றார் மீனாட்சி. 

"நீயும் அப்பாவும் தான் எனக்கு உயிர் தந்தவங்க. நீங்க தான் எங்க உலகம்." பிறகு வீட்டைச் சுற்றி ஒரு பார்வை பார்த்தான்.

"இந்த வீடு... இந்த மண்... நம்ம விவசாயம்... நம்ம ஊரு... இதையெல்லாம் விட்டுட்டு என்னால பத்து நாளுக்கு மேல இருக்க முடியும்னு நினைக்கிறிங்களா?" என்றதும் மீனாட்சியின் கண்கள் கலங்கின.

"அங்க போய் ரிசப்ஷன் முடிச்சுட்டு, மாமனார் வேலை முடிக்க வேண்டியதை முடிச்சுட்டு, பத்தாவது நாள் முடிஞ்சா... பதினோராவது நாள் இங்க இருப்பேன்ம்மா. நம்ம பொழப்பை பார்க்க வேண்டாமா? இங்க எவ்வளவு வேலை காத்திருக்குது."

அதியமான் மகனின் தோளைத் தட்டினார்.

அதைப் பார்த்துக் கொண்டிருந்த காவ்யா திடீரென்று சிரித்தாள்.

"மாமியார்.. உங்க பிள்ளையை நான் தட்டி தூக்கிட்டுப் போறேனா? இப்படி பயப்படறிங்க?" என்றாள் கேலியாக. மீனாட்சி கண்களை விரித்தார்.

"ஆங்.. புயல் மாதிரி வந்த, என் பையனையும் எங்களையும் அசைச்சிட்ட. இப்ப உன் கூடவே காற்று போல இழுத்துட்டு போற" என்றார்.

"அய்யோ மாமியார். பத்து நாள்ல திரும்பி வந்துடுவோம்" என்றாள். "வந்து தானே ஆகணும்." என்றார் மீனாட்சி.

"லேட்டனா நீங்களே அமெரிக்கா வந்து பிடிச்சுக்கிட்டு போயிடுவிங்க போல" என்றதும் வீட்டில் இருந்த அனைவரும் சிரித்தனர்.

அகிலன் மட்டும், "போதும் காவ்யா..." என்றான்.

"ஏன்? உண்மையைத் தானே சொல்றேன்." என்றாள். 

வாடகைக்கு பேசிய கார் வாசலில் வந்து நின்றது. சூட்கேஸ்கள் ஏற்றப்பட்டன.

ராஜாராம் முன்பக்க இருக்கையில் அமர்ந்தார்.

அகிலனும் காவ்யாவும் பின்னால் நிற்க, தூரிகா மெதுவாக அருகே வந்தாள்.

அவள் முகத்தில் இன்னும் பழைய உற்சாகம் இல்லை.

அகிலன் அதை கவனித்தான்.

"தூரி..."அவள் நிமிர்ந்து பார்த்தாள்.

"அண்ணா?" என்றாள். அவன் அவள் தலையை வருடினான்.

"இன்னும் கோபமா?" என்றான்

"இல்ல அண்ணா." என்றாள் 

"பொய்." என்று கூற தூரிகா கண்களைத் தாழ்த்தினாள்.

"அண்ணா..." என்று பேச தயங்கினாள். 

"நல்லா கேட்டுக்கோ தூரிகா.. தனக்குத்தான் வலி அதிகம், எதிரே இருப்பவங்களுக்கு  வலி இல்லைனு எந்த பிரிவும் கிடையாது தூரிகா

  அவங்க அவங்க வலி... அவங்க அவங்களுக்கு தான் பெருசு.

சில நேரம் சூழ்நிலை நம்மள... நம்ம முடிவை எடுக்கவே விடாது." தூரிகா மெதுவாகத் தலையெழுப்பினாள்.க்ஷ

"அந்த நேரத்துல நாம கோழை கிடையாது. விதின்னு ஒண்ணு இருக்கு. அது நடந்தாகணும்னு இருந்ததால தான் நடந்திருக்கு."

தூரிகாவின் கண்களில் நீர் மிதந்தது.

அகிலன் தொடர்ந்தான்.

"இன்னைக்கு என் செயலுக்கு உனக்கு கோபமா இருக்கலாம்." என்றதற்கு "அப்படியில்லை அண்ணா..." என்றவளிடம், "பரவாயில்லை." அவன் சிரிக்க முயன்றான்.

"ஒருநாள்... இந்த அண்ணன் ஏன் அப்படி முடிவெடுத்தான்னு உனக்கே புரியும்." தூரிகா ஏதோ சொல்ல வாயெடுத்தாள்.

"அண்ணா... நான்..."வார்த்தைகள் வெளியே வரவில்லை. அகிலன் அவளது தலையை வருடிவிட்டு, "வர்றேன்டா. அப்பா அம்மாவை பார்த்துக்கோ" என்றான்.

தூரிகா அவன் கையைப் பிடிக்க நினைத்து பாதியில் நிறுத்திக் கொண்டாள்.

அவன் காரில் ஏறிவிட்டான்.

கார் மெதுவாக வாசலை விட்டு நகர்ந்தது.

தூரிகா அப்படியே நின்று பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் கண்களில் இருந்த கண்ணீர் இப்போது கன்னத்தில் வழியத் தொடங்கியது.

விமான நிலையத்தை அடைந்ததும் ராஜாராம் தேவையான ஆவணங்களைச் சரிபார்த்து, செக்-இன் நடைமுறைகளை முடித்தார்.

"என்ன சார்... டென்ஷனா?" என்று காவ்யா மெதுவாகக் கேட்டாள்.

"இல்ல... வேடிக்கை பார்க்கறேன்." என்றான். 

விமானத்தில் தங்களுக்கான இருக்கையில் அமர்ந்தனர்.

ஜன்னல் பக்க இருக்கையில் அகிலன் அமர, அவன் அருகில் காவ்யா அமர்ந்தாள்.

விமானம் புறப்படத் தயாரானது.

சீட் பெல்ட்டை அணிந்து கொண்டிருந்த அகிலனைப் பார்த்த காவ்யா, "இதுக்கு முன்னாடி பிளைட்ல போயிருக்கீங்களாமே" என்றாள். 

"ம்ம்... உனக்கு யார் சொன்னாங்க?" என்றான்.

"அத்தை சொன்னாங்க." என்றாள்.

"போயிருக்கேன்... எல்லாம் ஊர் சுத்தி பார்க்க" என்றான்.‌

"எங்கெல்லாம் போயிருக்கிங்க?" என்றாள்.

"ஒரே ஒரு முறை லண்டன், பேரீஸ் போயிருக்கேன். 

சிங்கப்பூர், தாய்லாந்து, கோவா அப்புறம் காஷ்மீர்." என்றான்.

"வாவ்..." என்றாள்.

"அப்புறம் சென்னை பெங்களூரு, திருச்சி, தூத்துக்குடி, திருநெல்வேலி லோக்கல் பக்கம் சும்மா டிரஸ் வாங்க, ஏதாவது பிரெண்ட்ஸ் கூட போவேன். ரகு கூட தான் ஊர் சுத்தறது." என்றதும்  காவ்யா சிரித்தாள்.

"உங்களைப் பார்த்தா வெளிநாடு சுத்துன மாதிரியே தெரியல." என்றாள்.

"ஏன்?" என்றான் புருவம் சுருக்கி. 

"எப்ப பார்த்தாலும் வேஷ்டி... சட்டை... தோட்டம்... வயல்... கூட்டம்... இப்படி தானே நான் பார்த்திருக்கேன்." அகிலனும் சிரித்தான்.

"விவசாய வேலை செய்யறப்ப பேண்ட் போட்டா வசதியா இருக்காது. வேஷ்டி கட்டிக்கிட்டா மடிச்சு கட்டிக்கலாம். நம்ம சௌகரியத்துக்குத்தான் டிரஸ்.

வெளியூர் மீட்டிங்... ஆபீஸ்... ஏதாவது அதிகாரிகளை பார்க்கணும்னா பேண்ட் ஷர்ட்."

"ஓ" காவ்யா அவனை முழுவதுமாகப் பார்த்தாள்.

இன் செய்திருந்த வெள்ளை சட்டை. அடர் நீல நிற ஜீன் பேண்ட். கையில் கடிகாரம்.

முடியை ஒழுங்காக சீவியிருந்தான்.

அவள் பார்வை நுட்பமாக எடைப்போட, "என்ன?" என்றான் அகிலன்.

"ஒண்ணுமில்லை." என்றாள்.

"ஏதோ மார்க்கமா பார்க்கற." என்றான்.

"இந்த லுக்குலயும் நல்லாத்தான் இருக்கீங்க." என்றதும் அவன் சிரித்தான்.

சில நிமிடங்கள் இருவரும் அமைதியாக இருந்தனர்.

காவ்யா மெதுவாக அவன் விரலோடு தன் விரலைக் கோர்த்தாள்.

அகிலன் கீழே பார்த்தான். அவளது விரல்கள் அவனுடைய விரல்களை இறுகப் பற்றியிருந்தன.

  சிறிது நேரம் கழித்து காவ்யா மீண்டும் கேட்டாள்.

"நீங்களா எதுவுமே பேச மாட்டிங்களா?" என்றாள். 

"பேசுறேன்ல." என்றான்.

"நான் கேட்டதுக்கு பதில் சொல்றீங்க." என்றாள்.

"ம்."

"நீங்களா கேள்வி கேட்டு பேச ஆரம்பிக்க மாட்டேன்றிங்களே?" என்றதும் அகிலன் யோசித்தான்.

அவள் கைப்பிடியை விடாமல் "ஒரு விஷயம் கேட்கட்டுமா?" என்றான்.

"கேளுங்க." என்றாள்.

"இந்த கலருக்கும்... இந்த கலருக்கும் மேட்ச் ஆகுமா இல்லையான்னு யோசிக்கலையா?" என்றான்.

"எந்த கலர்?"

"நீ... நான்" என்று அவனது கரத்தை சுட்டி காட்டினான்.

"நான் கொஞ்சம் நிறம் கம்மி."

சொல்லிவிட்டு அவளைப் பார்த்தான்.

அருளாளனும் இளையமதியும் ஒரு நாள் பேசியது நினைவுக்கு வந்தது அகிலனுக்கு.

'காவ்யாவுக்கு நீ சரியா இருப்பியா?' என்ற கேள்வி அவன் மனதில் இன்னும் எங்கோ இருந்தது.

காவ்யா சில நொடிகள் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

பிறகு நிதானமாக "நிறத்துல என்ன இருக்கு? என்றாள்.

"நல்லா பாரு. நான் உனக்கு டிபரெண்டா தெரியலையா?" என்றான்.

"பார்த்துட்டுத்தான் இருக்கேன். கோதுமை நிறம்..." என்றாள்.

"இல்ல..." அகிலன் புருவம் உயர்த்தினான். "கொஞ்சம் பிரவுன் ஷேடு." காவ்யா சிரிப்பை அடக்க முடியவில்லை.

"சோ வாட் மேன்." அவன் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான்.

"கலரை வச்சு என்ன பண்ணப் போற? ஆக்சுவலி..." அவள் அவனது தோளில் சாய்ந்துக் கொண்டாள்.

"அமெரிக்காவுல நான் தான் கருப்பு தெரியுமா?" அகிலன் ஆச்சரியமாகப் பார்த்தான்.

"அங்க இருக்கிற வெள்ளைக்காரங்க கூட நின்னா... நான் டிபரெண்டா தான் தெரிவேன்." என்றாள்.

"சின்ன வயசுல அம்மா ஜேனட் மாதிரி வெள்ளையா பிறக்கலையேன்னு ஃபீல் பண்ணியிருக்கேன். அப்புறம் புரிஞ்சுச்சு" என்றாள்.

"என்ன புரிந்தது?" என்றவன் கேட்க, "அவங்க அவங்க நாட்டுக்கு... அவங்க நிலத்துக்கு... அவங்க காலநிலைக்குனு ஒரு நிறம் இருக்கும். அதை மாத்த முடியாது. அதை ஏத்துக்கிட்டா போதும். எனக்கு அப்பா வழி நிறம் கடவுள் தந்திருக்கார்னு. இந்த ஊருக்கு நான் நல்ல நிறம்." என்றதும் அவன் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான்.

"உங்க நிறம் எனக்கு ஒரு பெரிய விஷயமே இல்ல." அகிலனின் உதட்டில் மெதுவான புன்னகை.

காவ்யா அவன் கன்னத்தை மெதுவாகத் தொட்டாள்.

எனக்கு பிடிச்சிருக்கு. இந்த அகிலன் வேஷ்டி போட்டாலும், பேண்ட் போட்டாலும், வெயில்ல நின்னாலும், மழையில நனைஞ்சாலும், நீங்க நீங்க தான்." அகிலனின் முகம் வெட்கத்தில் சிவந்தது.

"யூ டோன்ட் வொர்ரி மேன்." என்றவள் தோளில் சாய்ந்தாள்.

"வேற..." என்று தலையை நிமிர்த்த, அது அகிலனின் தாடையில் இடித்தது. "வேறன்னா?." என்றான் 

"வேற என்ன பேச?" காவ்யா நெற்றியில் அடித்துக் கொண்டாள். அகிலன் சுற்றி முற்றி பார்த்து விழிக்க, "ஐயோ... உங்க பொண்டாட்டி பக்கத்துல உட்கார்ந்திருக்கா. வேற என்ன பேசலாம்னு தெரியலையா?" என்றதும் அவன் உண்மையாகவே தலையைச் சொறிந்தான்.

"இப்ப இது பப்ளிக் பிளேஸ். இங்க என்னத்த பேசறதுனு சத்தியமா தெரியலை" என்றான். 

"அய்யோ... அய்யோ " அவள் சிரித்தபடியே முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

அகிலன் இரண்டு நிமிடம் அமைதியாக இருந்தான்.

பிறகு "சரி... நீ என்ன பிசினஸ் பண்ணப் போற?" காவ்யா மெதுவாகத் திரும்பிப் பார்த்தாள்

"அதைப் பற்றி யோசிச்சியா?" என்றான்

"பச் யோசிச்சேன்." என்றாள்

"நான் மதுரையில ஒரு பிசினஸ் ஆரம்பிக்கணும்னு நினைக்கிறேன்."

"என்ன பிசினஸ்?" என்றான்.

"ம்மம்... உங்க விவசாயிகளுக்கு உதவுற பிசினஸ்." என்றாள் சலிப்பாக.

"என்ன லந்தா?" என்றவன் கீழே இறங்கு.. சென்னை வந்துடுச்சு. அடுத்து இன்டர்நேஷனல் ஏர்போர்ட் ப

க்கம் போகணும்" என்று கூற, காவ்யா 'ம்கூம்' என்று உதடு கோணித்து நடந்தாள். 

  அகிலன் அவளை கண்டு சிரிப்புடன் பின் தொடர, ராஜாராம் மாப்பிள்ளை மகளை முன்னே அனுப்பி பின்னால் ரசித்து பார்த்து நடந்து வந்தார்.‌

-தொடரும். 

-பிரவீணா தங்கராஜ்

 


 
Posted : July 28, 2026 7:06 am
(@kothaihari)
Posts: 55
Trusted Member
 

Nice


 
Posted : July 28, 2026 7:19 am
(@dharsinipriya)
Posts: 60
Trusted Member
 

Super sis nice epi semmaiya pogudhu story 👍 👌 😍 renduperum pesikiradhu avlo azhaga eruku pa nalla pair dhan😘🥰😍


 
Posted : July 28, 2026 8:39 am

Scroll to Top