நின் பார்வை தவமல்லவா!-1
அத்தியாயம்-1
தமிழகத்தின் 12வது பெரிய மாநாகரம் என்ற பெயரை பெற்றது 'நாகர்கோவில்'. அதிலும் 'இயற்கை மாநகரம்' என்று நாகர்கோவிலை சிறப்பாக கூறவார்கள்.
இங்கே பெரும்பான்மையாக தென்னைமரம், பனைமரம், பாக்குமரம், மா,பலா, வாழை, தானியம், போன்றவற்றிலிருந்து காய், கனிகளை பெற்று ஏற்றுமதி செய்யவும், தென்னை நார் தயாரிப்பு, கயிறு திரித்தல், தென்னை ஓலைமுடைதல், பனை ஓலை முடைதல், பூ வணிகம் செய்தல், கைத்தறி நெசவு, இரப்பர் பொருட்கள் தயாரிப்பு, உணவு பதனிடுதல், ஆடு, மாடு, கோழி வளர்த்தல், சுற்றுலா தளங்களை மேம்படுத்தல் மற்றும் பேணி காத்தல், காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்தல், காடு, மேடுகளை செம்மைப்படுத்தி பாதுகாத்தல், திருத்தலங்களையும் அதன் வழிபாட்டு முறைகளையும் செவ்வனே பண்டைய முன்னோர்கள் வழிமுறையை கடைபிடித்து பாரம்பரிய முறையை நிலைநாட்டுதல், நாடு தழுவிய முறையை உலகிற்கு ஓர் சான்றாக பறைசாற்றுதலும், இம்மாநகரத்தின் தொழிசார்ந்து அமைந்துள்ளது.
அத்தகைய பெருமைக்குரிய ஊரில் பிறந்து வளர்ந்தவன் டாக்டர்.செழியன். எம்.பி.பி.எஸ். எம்.டி.
நாகர்கோவிலில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலின் பெயரை கூறி அதற்கு வழியை கூறி சொந்த ஊரில் பயணித்தவனுக்கு, சில இடங்களை கண்டு தன்னை தொலைத்தபடி, கடைசியாக இங்கே நடந்த நிகழ்வை எண்ணி பார்த்து கலங்க, "சார் ஹோட்டல் வந்துடுச்சு" என்று டிரைவரின் குரல் அவன் நினைவை கலைத்தது.
"ஆங்." என்று ஹோட்டலை கவனித்து காரிலிருந்து இறங்கினான்.
லேசாக எட்டி பார்த்த, சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் ஐயர்ன் செய்த உடையில் கசங்காமல் இறங்கினான். ஆறடி உயரமும் அதற்கேற்ற உடற்கட்டும் அவனுக்கு முப்பத்தியெட்டு வயது என்று கூறினால் நம்ப மாட்டார்கள். சில இடத்தில் இருந்த வெள்ளை முடியை கூட இளநரையாக கூறுவார்கள்
ஆனால் வாழ்க்கையில் தொலைக்க கூடாத வைரத்தை தொலைத்தவனாக ஒரு சோகம், அவன் முகத்தில் உன்னிப்பாக காண்பவர்களுக்கு மட்டும் கருத்தில் பதியும். செழியனின் முகத்தில் புதர்தாடியை தாண்டி அச்சோகம் எதிராளி கவனித்து, மனதில் பதிந்து பார்வையிட்டால் வயதின் ஏற்றத்தை ஒப்புக் கொள்ளலாம்.
டிரைவர் லக்கேஜை இறக்கி, ரிசப்ஷன் வரை கொண்டு வந்து விடுவதாக உரைத்திடவும், கவனம் கலைந்து பணத்தை தந்து, நன்றி நவில்ந்து முன்னே சென்றான்.
ரிசப்ஷன் அறையிலிருந்த பெண்மணியிடம், டாக்டர் செழியன் என்ற பெயரை கூறி, ஒரு மாதம் முன், இந்த ஹோட்டலில் அறையை முன்பதிவு செய்ததாக கூறினான்.
ரிசப்ஷன் பெண்ணும் காத்திருக்க கூறி, கணினிக்குள் தலையை விட்டு, அறையை முன்பதிவு செய்யும் பெயர் பட்டியலில் செழியன் பெயரை பார்த்து, "எஸ் சார் உங்க நேம்ல ரூம் புக் பண்ணிருக்கிங்க. அமௌண்ட் கூட அப்பவே பே பண்ணியதா காட்டுது" என்று கூறினாள்.
"எஸ்... ரூம் நம்பர் என்ன? கீ கொடுக்க முடியுமா?" என்று ஆங்கிலத்தில் கேட்டான். அவனுக்கு தெரிந்தவர் யாரேனும் காண்பதற்குள் அறைக்குள் முடங்கும் உத்தேசத்தில் கேட்டான்.
அந்த பெண்ணும் சாவியை நீட்டினாள். கூடவே துணைக்கு அறையை காட்ட ஹோட்டல் சிப்பந்தியை அனுப்பினாள்.
அங்கிருந்த சிப்பந்தியும் செழியனின் லக்கேஜை எடுத்து வருவதாக கூறி லிப்டில் செல்ல, பிறந்து வளர்ந்த ஊரில், தன் சொந்த வீடு இருந்தும், யாருமில்லாதவன் போல ஹோட்டலில் தங்குவதை எண்ணி மெதுவாக லிப்டில் ஏறினான்.
"நாகர்கோவிலுக்கு இதுக்கு முன்ன வந்திருக்கிங்களா சார்? ரொம்ப அழகான ஊர் சார். இயற்கையை ரசிக்க நிறைய இடமிருக்கு. இங்க வந்தா மனபாரம் எல்லாம் நீங்கும்னு வந்து போனவங்க சொல்வாங்க" என்று சிப்பந்தி பணிவாய் கேட்டு அவனது அனுபவத்தை பகிர்ந்தான்.
செழியனோ "இங்கே வந்திருக்கேன்" என்று மென்னகைத்தான்.
சொந்த ஊர் என்று கூறினால் யார் என்ன என்ற விவரத்தை ஆராயலாமென பேச்சை நறுக்கு தெரித்து பேசினான்.
சிப்பந்தியோ ஹோட்டல் அறைக்கு வந்து கதவை திறந்து, "உங்களோட ரூம். காற்றோட்டமா வெளிச்சமா இருக்கும் சார். உங்களுக்கு ஏதாவது வேண்டுமென்றால் போன்ல சொல்லுங்க எல்லாம் நாங்களே கொண்டு வந்து தருவோம்" என்று பணிவாக கூற, அவனுக்கு பணத்தை தந்து அனுப்பினான் செழியன்.
சிப்பந்தி பணத்தை பெற்று நன்றி கூறி அகன்றதும், நிம்மதியாக பெருமூச்சை விடுத்து, பால்கனி பக்கம் சென்றான்.
இதமான காற்று அவனை அணைத்தது.
அவனுமே அந்த அணைப்பில் தன்னை தொலைக்க, இடது பக்கமிருக்கும் திசையை வெறித்தான்.
அவ்வழி பாதையில் சில கிலோ மீட்டர் சென்றால் அவனது வீடு. ஆனால் செழியன் செல்ல மாட்டான். அந்தளவு மனகட்டுப்பாடு விதித்து கொண்டான்.
இத்தனைக்கும் அவனுக்கு கூடபிறந்த உறவுகள் என்று யாருமில்லை. அப்பா அம்மாவிற்கு ஒரே பிள்ளை. அப்பாவிடம் மாதம் இரு முறை போனில் பேசுவான். அம்மாவிடம் பேசி பத்து வருடமிருக்கும்.
தேதியை நினைவேட்டிலிருந்து புரட்ட, ஆம் பத்து ஆண்டுகளுக்கு மேலாக இருக்குமென்று மூளை எடுத்துரைத்தது.
அந்த நாள், இந்த ஊர், அவன் வாழ்வில் புரட்டி போட்டுவிட்டது. அப்படியிருந்தும் செழியன் இங்கே கால் பதித்து உள்ளது அவனது தொழில் சம்பந்தமாக.
இங்கே நடைப்பெறும் மருத்துவ மாநாட்டிற்கு தான் செழியன் தவிர்க்க இயலாமல் வந்துள்ளான்.
NCMHS - National Conference on Medical Health Sciences
இங்கிருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஹோட்டல் 'டாபோடில்ஸ் பேரடைஸ்' இடத்தில் நடைப்பெறுகின்றது.
மருத்துவ மாநாடு என்பது மருத்துவத் துறையில் உள்ளவர்கள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்வு. மருத்துவ மாநாடுகளில், புதிய மருத்துவ தொழில்நுட்பங்கள், ஆராய்ச்சி முடிவுகள், சிகிச்சை முறைகள், சுகாதார விளைவுகள் ஆகியவை பற்றி விவாதிக்கப்படும்.
இதன் நோக்கம் தொழில் முன்னேற்றம், நோயாளி சிகிச்சை மேம்பாடு, சுகாதார விளைவுகளை மேம்படுத்துதல்,
புதிய மருத்துவ தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ளுதல், புதிய திறன்களைப் பெறுதல்,
மருத்துவத் துறையில் உள்ள முக்கியமானோருடன் சந்திப்பு, ஆராய்ச்சி முடிவுகளை வெளியிடுதல், புதிய தொழில் வாய்ப்புகளைப் பெறுதல் போன்ற பல்வேறு காரணத்தால் நடைப்பெறும்.
அதில் கலந்துக் கொள்ள பல டாக்டர் வருவதில் இவனும் இணைந்திட வந்துள்ளான்.
ஏற்கனவே ஒரிரு முறை தவிர்த்ததால், இந்த முறை இவனை கண்டிப்பாக வர கூறி அவனது நண்பன் ஆர்யனின் வேண்டுக்கோள்.
கடிகாரத்தில் நேரத்தை கவனித்தான் செழியன். அதிகாலை இறங்கி வந்ததால் யூகித்தது போல நேரத்திற்கு வந்துவிட்டான்.
இனி குளித்து முடித்து சாப்பாட்டை வரவழைத்து, மாநாடு நடைப்பெறும் ஹோட்டலுக்கு செல்ல வேண்டும்.
தற்போது இருக்கும் மனநிலைக்கு சாப்பாடு உள்ளே இறங்காது. அதனால் தன்னை தூய்மைப்படுத்திக் கொண்டு செல்வதில் மும்முரமானான்.
ஷவரில் குளித்து முடித்து அலைப்பாயும் கேசத்தை ஜெல் கொண்டு அடக்கினான்.
என்ன தான் தலைவாறினாலும், க்ளீன் ஷேவ் செய்யாததால், முட்புதர் தாடியை ட்ரிம் செய்தான். ஒரளவு காடு போல இல்லாமல் அடிக்கடி செய்யும் தொழிலுக்கு ஏற்றார் போல கவனித்து கத்தரிப்பான். இல்லையேல் தேவதாஸிற்கு தோழனாக காட்சி அளிப்பான். அழகாக அளவாக கத்தரித்து இருந்ததால் மஜ்னுவாக தான் திகழ்ந்தான் செழியன்.
தன் கைபட்டனை சரிசெய்து கோர்ட் அணிந்தவன், கதவை பூட்டிவிட்டு லிப்டில் இறங்கினான்.
எதிரே காலையில் சந்தித்த சிப்பந்தி "சார் பிரேக்பஸ்ட் சாப்பிடலையா. இங்க நம்ம ரெஸ்டரண்ட்ல கூட சாப்பிடலாம்" என்று சுட்டிக்காட்ட, ''நோ தேங்க்ஸ்" என்று ஹோட்டலிலிருந்து புறப்பட்டான்.
ஏற்கனவே கேப் புக் செய்த காரணத்தால் வாசலில் நிற்க, ஓடிபி சொல்லவும் அவனை ஏற்றிக்கொண்டு ரதம் பறந்தது.
மணி பத்தாகவும் அவன் இறங்கி, அவன் செல்ல வேண்டிய இடத்தில் நுழையவும் நேரம் சரியாக இருந்தது. பத்து முப்பதுக்கு மருத்துவ மாநாடு துவங்கியது. ஒவ்வொருத்தரும், தங்கள் கற்றறிந்த மருத்துவத்தின் பயனை பேசினார்கள். புதிது புதிதாக வரும் நோயை பற்றியும் அதை தடுக்கும் விதமும் பலரும் பேசப்பட்டது. இதில் செழியன் சந்திக்க விரும்பிய தொழில் நண்பர்களும் பேசினார்கள்.
இவ்வாறு நேரங்கள் நகர, மாநாடு முடிந்தது. அடுத்து ஃபப்பே முறையில் உணவு பக்கத்து அறையில் வழங்கப்பட்டது.
அதுவும் பெரிய அறை, ஆங்காங்கே நான்கு ஐந்து இருக்கையை கொண்ட மேஜைகள் போகும் வழியெல்லாம் இருந்தது.
உணவை வாங்கிக் கொண்டு அமர்ந்து சாப்பிடும் முறை என்றதால், செழியன் நண்பன் ஆர்யனோடு நகர, எதிரே அவன் இத்தனை நாட்களாக காண துடித்த பெண் இவனை கடந்து நடந்து சென்றாள்.
செழியனுக்கு சிறகில்லாமல் வானத்தில் மிதப்பது போல உணர்வு வந்தது.
ஆனால் அவள் எப்படி இங்கே? என்றும், அவளிடம் பேசும் பேராசையும் சேர்ந்து அவளருகே அவசரமாய் நடந்தான். எதிரே இடைப்புகுந்தவர்களிடம் மன்னிப்பு கேட்டபடி செல்ல, அவளும் செழியனை கண்டு கால்கள் அவ்விடத்திலேயே வேரூன்றியது போல சிலையாக நின்றாள்.
"ஹாய்... நீங்க வர்ஷினி தானே?" என்று கேட்க, "ஆமா வர்..ஷினி தான்." என்று கூறியவளுக்கும் ஏதோ அதிர்ச்சி தாக்கி, கொஞ்சம் நிதானப்படுத்தி சமனிலை அடைவதை செழியனால் உணர முடிந்தது.
"நீங்க எங்க இங்க?'' என்றவன் முகத்தில் புதையலை கண்ட மகிழ்ச்சி.
இந்த மருத்துவ மாநாட்டில் கலந்துக்கொள்ள அனுமதிக்கும் பயனியர் அட்டை போல அவளது கழுத்தில் தொங்கியதை கண்டு வியந்தான்.
"ஆர்யனோ... ஹே செழியன்.. இவங்க டாக்டர் வர்ஷினி. எங்க ஊர் பொண்ணு தான். உனக்கு முன்னவே தெரியுமா?" என்று கேட்டு நின்றான்.
செழியனும் ஆர்யனும் சென்னையில் படித்த நண்பர்கள். செழியன் சென்னையில் பெரிய ஹாஸ்பிடலில் வேலை பார்க்க வேண்டுமென்றது செழியனின் தாயார் சுகந்தியின் பேராசை.
"ம்ம்ம்.. தெரியும்" என்றவன் வர்ஷினியை காயப்பட்ட வலியுடன் பார்வையிட, "ஓகே ஓகே.. அப்ப பேசிட்டு இருங்க. நான் சீப் கெஸ்ட்டா வந்தவங்களை கவனிச்சிட்டு வந்துடறேன்." என்று சென்றான்.
ஆர்யன் சென்றதும் செழியன் வர்ஷினி மட்டும் உணவை வாங்கி தனியாக அமர்ந்தனர்.
"பைனலி... உன்னை பத்து வருஷம் கழிச்சு சந்திச்சு இருக்கேன். அதுவும் டாக்டரா சந்திச்சிருக்கேன். நல்லாயிருக்கியா?" என்று பேசினான்.
ஹர்ஷினியோ ஸ்பூனால் சாதத்தை எண்ணிக் கொண்டிருந்தவள், "நல்லாயிருக்கேன். நீங்க.." என்றவளுக்குள் தொண்டையை யாரோ பிடித்துக் கொண்டு பேச சொல்வது போல வலி.
மனதிலிருந்து வார்த்தை வெளிவர மிகவும் பிரம்ம பிராயத்தனப்பட்டாள்.
"ம்ம்ம் ஃபைன்." என்றவன் அவசரமாய் அவளது சங்கு கழுத்தை ஆராய நினைத்தான். ஆனால் தன்னை அளவிடும் விதமாக, வர்ஷினி தன் முகத்தையே பார்க்கும் போது அவளது பார்வையை தாண்டி கழுத்துக்கு கண்களை கொண்டு செல்ல தயங்கினான்.
அதோடு காலர் வைத்த சுடிதார் வேறு, அவனை இம்சித்தது.
"உன்னை இங்க சந்திப்பேன்னு நினைக்கலை" என்று அவனும், "உங்களை இங்க சந்திப்பேனு நினைக்கலை" என்று அவளும் பேசினார்கள்.
"நீங்க இங்க வருவிங்கன்னு தெரியாது" என்று அவளும், "நீ இங்க வருவன்னு எதிர்பார்க்கலை" என்று அவனும் ஒரே நேரத்தில் பேசிட, இருவரும் லேசான முறுவலை பகிர்ந்தார்கள்.
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்
kindly register & login to Read Thank u
-
நின் பார்வை தவமல்லவா!-10 (முடிவுற்றது)
3 weeks ago
-
நின் பார்வை தவமல்லவா!-9
3 weeks ago
-
நின் பார்வை தவமல்லவா!-8
3 weeks ago
-
நின் பார்வை தவமல்லவா!-7
3 weeks ago
-
நின் பார்வை தவமல்லவா!-6
3 weeks ago
Currently viewing this topic 1 guest.
- 25 Forums
- 215 Topics
- 754 Posts
- 2 Online
- 329 Members
