தகிக்கும் நிலவொன்று-25
அத்தியாயம்–25
ராயனின் இரண்டாவது பிறந்தநாள் விழா இனிதாக தான் முடிந்தது.
வீட்டிலிருந்த கடைசி விருந்தினரும் கிளம்பிய பிறகு, வீடு முழுவதும் மீண்டும் அமைதியாகியது.
"மேம்... எல்லாத்தையும் நாங்க கிளீன் பண்ணிக்கறோம்." என்று லட்சுமி கூற, ஷ்ரத்தா வெறுமனே தலையசைத்தாள்.
விளையாடி விளையாடி களைத்துப் போயிருந்த ராயன், நந்திதாவின் தோளில் தலை சாய்த்தபடியே தூங்கிவிட்டான்.
அவனை மெதுவாக அறைக்குள் கொண்டு சென்று படுக்க வைத்தனர்.
கீழே.. விழாவில் இருந்த சிரிப்புகளும், வாழ்த்துச் சத்தங்களும் அடங்கிய பிறகு, மூன்று பெண் பாடிகார்ட்களும் வீட்டை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது தீபா மெதுவாக, "இன்னிக்கு அது நடந்துடுச்சு பார்த்தீங்களா...?" என்றாள்.
"எது?" என்று லட்சுமி விழித்து கேட்டாள்.
"பச் இத்தனை நாள் ருத்ரன் சார் காதலிக்கறதா சென்னார்ல. யதுநந்தன் சாரும் மேமிடம் லவ்ஸ் சொன்னதை" என்று நந்திதா சிரித்தாள்.
"இரண்டு பேருமே மேம்மை விரும்புறது வெளிப்படையா தெரிஞ்சிடுச்சு." லட்சுமி பெருமூச்சு விட்டாள். "ஆனா... மேம் மனசுல இன்னும் ஒருத்தர் மட்டும்தானோ இருக்கார்." என்றவர்கள் மூவரின் பார்வையும் ஒரே நேரத்தில் சுவரில் இருந்த சத்ரியனின் புகைப்படத்தை நோக்கிச் சென்றது.
கால் மீது கால் போட்டு எதிரே இருப்பவனின் குடலை உருவும் கூர்பார்வையில் இருந்தான். புகைப்படத்திற்கு உயிர் இருக்குமா என்ற கேள்வியை எழுப்பியது போலிருந்தான் சத்ரியன்.
மேலே ஷ்ரத்தா மட்டும் தனியாக மாடி அறைக்குள் சென்றாள்.
அலமாரியை திறந்து பல வருடங்களாக தொடாத ஒரு ரெட் வொயின் பாட்டிலை எடுத்தாள். கிளாஸில் ஊற்றி மெதுவாக பருகினாள். அது போதைக்காக அல்ல... மனதை கொஞ்ச நேரமாவது மரத்துப் போகச் செய்வதற்காக.
அப்படியே தனக்குள் சரித்து கொண்டாள்.
சில நிமிடங்களில்... அவளது கண்கள் சத்ரியனின் புகைப்படத்தில் நிலைத்தன.
கையில் இருந்த கிளாஸை இறுக்கமாக பிடித்தபடி, "ஏன்டா... ஏன்டா என்னை விட்டுட்டு போன...? இப்ப பாரு... போற... வர்றவன் எல்லாம் எனக்கு வாழ்க்கை கொடுக்க துடிக்கிறான்." என்று உடைந்த குரலில் கண்களில் கண்ணீர் வழிந்து பேச ஆரம்பித்தாள்.
"ஒருநாள் ஜான் என்னை கிண்டல் பண்ணினான்னு.. அவனை அசுரத்தனமா வந்து அடிச்சியே... இப்பவும் வாடா... வந்து உன் ஸ்டைல்ல... 'யாருடா என் பொண்டாட்டிக்கிட்ட பேசுறது?'ன்னு கேளு சத்ரியா" என்று பேசி சிரிக்க முயன்றாள்.
ஆனால் அந்த சிரிப்பு உடனே அழுகையாக மாறியது. "உன்னை கண்டாளே பிடிக்காம சுத்தின நான்.. நீ மட்டுமே வேண்டும்னு இங்க துடிக்கறேன்டா. ஏன்டா... தனியா விட்டுட்டு போன...? இன்னும்... என்னென்ன பார்க்கணும் நான்...? ஆங்... எவ்வளவு சோதனை பார்க்கணும்...?" என்றவள் குரல் நடுங்கியது.
"ராயனுக்கு அப்பா வேணும்னு... அந்த ருத்ரன்கிட்ட கேட்கிறான். அவனும்... நானே அப்பாவா வர்றேன்னு பேசுறான். இதுல... எங்கப்பா... என்னை யதுநந்தன் மாதிரி ஒரு வக்கீலுக்கு கட்டிக்கொடுக்க ஆசைப்பட்டார்னு... அந்த ஓல்ட் மேன் சொல்லிட்டாரு.
இத்தனை நாள் தயங்கி நின்ன யதுசாரும்... இன்னைக்கு என்னை காதலிக்கிறேன்னு சொல்லிட்டாரு." அவள் புகைப்படத்தை பார்த்து விரக்தியாக சிரித்தாள்.
"ஒரு பக்கம்... கடமை... கட்டுப்பாடுன்னு... போலீஸ் மாப்பிள்ளை. இன்னொரு பக்கம்... நீதி... நேர்மைனு... லாயர் மாப்பிள்ளை. யார் பொண்டாட்டிக்கு யார்டா மாப்பிள்ளை? ஆங்.." என்று குழறி தள்ளாடினாள்.
சத்தம் கேட்டு தீபா நந்திதா லட்சுமி என்று எட்டி பார்த்தார்கள்.
"நான் இங்க இரண்டுமே இல்லாம... ஒரு கிங்பின்னை காதலிச்சு... காந்தர்வ மணம் முடிச்சு... ஒரு குழந்தைய பெத்து வச்சிருக்கேன். அப்பவும்... கட்டிக்கறேன்னு வர்றானுங்க.. பிகாஸ்.. தாலினு ஒன்னு ஊரறிய நீ கட்டவேயில்லையே... அதோட நீ தான் செத்துட்டியே..." என்று அவள் விரக்தியாக பேசி மெதுவாக தன் முகத்தை தொட்டாள்.
"எல்லாத்துக்கும் இந்த அழகு தானே காரணம்...? இந்த அழகை அழிச்சிடவா சத்ரியா...?
இந்த வயசு... காதலிக்கிற வயசுன்னு தானே வர்றாங்க.
ஏஜ் லுக்குல வயசானவளா என்னை மாத்திடவா...? சொல்லுடா... எல்லாத்தையும் முன்னாடியே திட்டம் போட்டு காய் நகர்த்துறவனாச்சே நீ.
என்னை... இப்படி... ரெண்டு தடி மாடுங்க பின்னால சுத்தும்னு... திங்க் பண்ணினியா...? சொல்லுடா... சத்ரியா" என்றவளின் கடைசி வார்த்தையோடு அவள் கதறி அழுதாள்.
வாசலில் நின்றிருந்த தீபா, நந்திதா, லட்சுமி மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
லட்சுமி மெதுவாக அருகே வந்தாள்.
"மேம்... போதும்... குடிச்சது போதும்." என்று தடுக்க ஷ்ரத்தா சிரித்தாள்.
"இல்ல லட்சுமிக்கா... உங்க பாஸ்... உங்களை எல்லாம்... நான் கைதியா உள்ள போறதுக்கு முன்னாடியே.. எனக்கு பாதுகாப்பா அனுப்பி வச்சாரு. எனக்கு தெரியும்... நீங்க சாதாரண வேலைக்காரங்க இல்ல. கார்த்திகா மேடம் மூலமா... சத்ரியன் அனுப்பின... வெல் ட்ரெய்ன்டு லேடி பாடிகார்ட்ஸ் தானே?!" என்றதும் தீபா மெதுவாக தலையசைத்தாள்.
"எஸ் மேம்... அதை மறுக்க மாட்டோம். சார் கொடுத்த கடைசி வேலை தான்... உங்களை பாதுகாக்கணும்." என்றாள் நந்திதா.
"சார் இல்லன்னாலும்... அந்த வேலையை நாங்க தொடர்றது... எங்க கடமை." என்றாள் தீபா.
சிறிது இடைவெளிக்குப் பிறகு, "ஆனா... நீங்க இப்படி டிரிங்க் பண்ணுறது நல்லதில்ல மேம். நாளைக்கு... ராயன் இதை பார்த்தா...? அவனுக்கு என்ன கத்துக் கொடுப்பீங்க...?" என்றாள் லட்சுமி.
அந்த கேள்வியில் ஷ்ரத்தாவின் முகம் மாறியது.
நந்திதாவும் அருகே வந்தாள். "மேம்... ராயன்... உங்களை பார்த்துதான் வளரப் போறான். அவனுக்கு... எந்த கெட்ட பழக்கமும்... உங்க மூலமா தெரியக் கூடாது. ருத்ரனையும்... யதுநந்தனையும்... ஹாண்டில் பண்ணுறது ரொம்ப ஈஸி. நீங்க சம்மதிச்சா தான்... யாராலும் உங்க வாழ்க்கைக்குள்ள வர முடியும். அதுவரைக்கும்.. அவங்க பேசுறதெல்லாம்.. ஜஸ்ட் இக்னோர் பண்ணிடுங்க மேம்" என்று தீபா தொடர்ந்தாள்.
"பாஸோட கனவு... நீங்க பெரிய டாக்டரா ஆகணும். அதுக்கு மேல... வேற எதுவும் முக்கியமில்லை. உங்க கவனம்... டிஸ்ட்ராக்ட் ஆகக் கூடாது." என்று நந்திதா எடுத்துரைத்தபடி கையிலிருந்த பாட்டிலை வாங்கிட, ஷ்ரத்தா மெதுவாக கண்களை துடைத்தாள்.
"சாரி." என்று மட்டும் சொல்லிவிட்டு அறைக்குள் சென்றாள். அதற்குப் பிறகு ஷ்ரத்தா வெகுவாக மாறினாள்.
முன்பைவிட இன்னும் தைரியமாக கல்லூரியிலும் வீட்டிலும் நடமாடினாள்.
ராயன் தன்னை பார்த்து வாழ்வதாக எண்ணியதும், தன் நடை உடை பாவணை எல்லாம் தைரியசாலியாக காட்டினாள்.
மரணம் நெருங்குமென்று தெரிந்தும் சத்ரியன் பயப்படவில்லை. அப்படியிருக்க மகனும் எதற்கும் அஞ்சாதவனாக பாவிக்க நினைத்தாள்.
படிப்பிலும் அதிக கவனம் செலுத்தி மதிப்பெண்ணை ஈட்டினாள்.
தேவையில்லாத பேச்சு இல்லை. தேவையில்லாத சிரிப்பு இல்லை. அவளுக்கென்று ஒரு உலகம். அதில் யாருக்கும் அனுமதி இல்லாமல் பார்த்துக் கொண்டாள்.
ருத்ரன் பலமுறை வீட்டிற்கு வந்தான். ஒவ்வொரு முறையும்... ''மேம் உங்களை பார்க்க விரும்பலை சார்" என்று நந்திதாவே சொல்லிவிடுவாள்.
ருத்ரனுக்கு கோபம் உருவாக "அட்லீஸ்ட்... ராயனை மட்டும் பார்க்க விட சொல்லுங்க" என்று ருத்ரன் கத்தினாலும் ராயனையும் பார்க்க முடியாதபடி பார்த்துக் கொண்டாள்.
அது ருத்ரனின் ஈகோவை நேராக தாக்கியது. 'ஒரு முன்னாள் கைதி...' என்னை வீட்டுக்குள்ளேயே விட மாட்டேங்கறாளா...?' என்று பற்களை கடித்தான்.
அவன் இம்மூவரை பற்றி வேறு விசாரணையையும் தொடங்கினான்.
கார்த்திகா மூலம் வந்த இந்த மூன்று பெண்கள்.. உண்மையிலேயே கார்த்திகா அனுப்பியவர்களா...?
இல்ல... முன்னாடியே யாரோ திட்டமிட்டு ஷ்ரத்தாவுக்கு பாதுகாப்பாக வைத்தவர்களா...? யாரோ என்ன யாரோ சத்ரியன் ஏற்பாடா? என்று ஜெயில் பதிவுகளை தோண்ட ஆரம்பித்தான்.
அந்த மூன்று பெண்கள் சிறைக்குள் வந்த தேதிகள் எல்லாம் சத்ரியன் காணாமல் போகும் முன் இருபது நாளில் வந்தவர்கள். ஷ்ரத்தா வரும் முன் வந்திருக்கின்றனர்.
ஷ்ரத்தா வந்தப்பின் அதற்கு முன்பும் பின்பும் நடந்த சம்பவங்கள். ஒவ்வொன்றாக ஒப்பிட்டுப் பார்த்தான்.
அப்போதுதான் சிறைக்குள் 'ஆஷா' என்ற கைதியின் விவரம் அவன் கையில் கிடைத்தது. ஆஷா என்ற கைதி இறந்திருக்க, அதுவும் சந்தேகத்தை கிளப்பியது
அவள் ஷ்ரத்தாவை கொல்ல வந்தவளாக இருந்தால் என்ற ரீதியில் அலசினான்.
அதற்குப் பிறகுதான்... ஷ்ரத்தா ராயனை தூக்கி கொண்டு பாலூட்ட சென்றதும் ஆஷா தனித்து செல்ல, இந்த மூவரும் கார்த்திகாவும் கூட காமராஜர் பிறந்த நாளன்று சிசிடிவியில் காணாமல் இருந்தனர்.
ஆஷா இறந்த டெத் ரிப்போர்ட் பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாக வந்திருக்க, இந்த மூன்று கைதிகளும் அந்த நேரம் சிசிடிவியில் இல்லை.
அப்பொழுதே தெளிவானது.
இந்த மூன்று பெண்களும் எப்போதும் ஷ்ரத்தாவை சுற்றியே இருந்திருக்கின்றனர் என்று தெளிவானது.
'அப்படின்னா... முன்னாடியே யாரோ பாதுகாப்பு ஏற்பாடு பண்ணியிருக்காங்க...' என்று போலீஸ் மூளை வேகமாக கணக்கிட்டது.
ஆனால்... எப்போதும் போல... கணக்கு சரியாக இருந்தாலும்... ஆதாரம் மட்டும் இல்லை. தந்தை மரணத்திலிருந்து, சத்ரியனின் மரணம் வரை, இதுவரை நடந்த ஒவ்வொரு மர்மமும்... அவன் இறப்பை போலவே இருந்தது. கொலையா... விபத்தா...? யாராலும் நிரூபிக்க முடியவில்லை.
மேலும் ஷ்ரத்தாவை வேறு கோணத்தில் அணுக நினைத்தான். இந்த ஆதாரமே அவனது தந்தையின் நண்பரான அதிகாரியின் உதவியால் கிடைத்தது.
இதில் யதுநந்தனும் ஒருமுறை ஷ்ரத்தாவை பார்க்க வந்தான்.
"மேம்... காலேஜ்ல இருந்து வந்துட்டு ரொம்ப டயர்டா இருக்காங்க. அடுத்த வாரம் வாங்க சார்." என்று தீபா கூறினாள்.
யதுநந்தன் ருத்ரனை போல வீம்போ சச்சரவோ கத்தலோ எதுவும் சொல்லாமல் திரும்பிச் சென்றான்.
அவனை ஷ்ரத்தா ஒதுக்கவும் இல்லை. நெருங்கவும் விடவில்லை.
யதுநந்தனின் மனதிலும்.. அதே கேள்வி அரித்துக் கொண்டிருந்ததே.
'சத்ரியன்... உயிரோட இருக்கானா...? இல்ல... உண்மையிலேயே இறந்துட்டானா...?'
திவாகர் சாரை சத்ரியன் கொல்லவில்லை. அத்துடன் சத்ரியனை ஷ்ரத்தா விரும்பியிருக்கின்றாள்.
அவன் ஒன்றும் பிடிக்காதவளை பிடித்து நிறுத்தி வலுக்கட்டாயமாக வாழவில்லை. ஷ்ரத்தாவே காதலித்து தான் வாழ்ந்திருக்கின்றாள்.
இதில் ஷ்ரத்தா அணிந்துள்ள அந்த மோதிரம், அந்த புகைப்படத்தில் மாலை வேண்டாமென்ற ஷ்ரத்தாவின் உறுதியான அமைதி.
எதுவுமே சத்ரியனின் முடிவு இது தான் என அவனால் ஏற்க விடவில்லை. ஷ்ரத்தா ஏதோ மறைப்பது ஆரம்பத்திலிருந்தே அவனால் உணரமுடிந்தது.
'ஒரு பெண்... தன் கணவன் உயிரோட இருக்கானா இல்லையான்னு... எவ்வளவு நாளா மறைச்சு வைக்க முடியுமா...?' என்று யோசித்தான்.
ஒருபுறம் சத்ரியன் உயிரோடு இருக்க வாய்ப்பு. மறுபுறம்... அவன் இறந்துவிட்டான் என்ற ஆதாரங்கள். இரண்டுக்கும் நடுவே சிக்கிக் கொண்டான்.
அதிலும்... சத்ரியன் இறந்தானா உயிரோடு இருக்கின்றானா என்று அறிய முற்படும் முடிவு அனைத்தும், 'இந்த கேஸை அதிகம் விசாரித்தது ருத்ரன் அவரிடம் கேளுங்க சார்' என்று தான் மற்றவர்கள் கைகாட்டுகின்றனர்
ருத்ரனிடம் இதை பற்றி பேசலாமா...? வேண்டாமா..? என்ற குழப்பமும் சேர்ந்து கொண்டது.
இப்படியாக ஒவ்வொருவரும், ஒவ்வொரு தேடுதலில் மூழ்கியிருக்க, காலம் மட்டும் அமைதியாக முன்னோக்கி நகர்ந்தது.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
தகிக்கும் நிலவொன்று.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 25)
அடேய்..தீ வட்டி தடியன்களா ?
ஒண்ணு லவ் சொல்லி டார்ச்சர் பண்றிங்க, இல்லையா சத்ரியன் இருக்கானா, இல்லையான்னு
பட்டி மன்றம் வைக்குறிங்க.
அவன் இருந்தாலும் இல்லைன்னாலும் அது ஷ்ரத்தாவோட தலைவலி. நீங்க ஏன் டா அநாவசியமா மூக்கை நுழைக்கிறதும் இல்லாமல், மண்டையை வேற குழப்பிக்கறிங்க..? போங்கடா, வேறெதாவது உருப்படியான வேலை இருந்தால் பாருங்கள்.
வந்துட்டான்ங்க, திருடன் பெருசா, போலீஸ் பெருசான்னு வெட்டிப் பந்தா காட்ட.
😊😊😊
CRVS (or) CRVS 2797
-
தகிக்கும் நிலவொன்று-50 (முடிவுற்றது)
2 weeks ago
-
தகிக்கும் நிலவொன்று-49
2 weeks ago
-
தகிக்கும் நிலவொன்று-48
2 weeks ago
-
தகிக்கும் நிலவொன்று-47
2 weeks ago
-
தகிக்கும் நிலவொன்று-46
2 weeks ago
- 25 Forums
- 330 Topics
- 1,588 Posts
- 1 Online
- 420 Members
