தகிக்கும் நிலவொன்று-23
அத்தியாயம்-23
ராயனின் பிறந்தநாளை எங்கே கொண்டாடலாம் என்று யோசித்த ஷ்ரத்தாவின் மனதில், திடீரென அந்த பங்களா தோன்றியது தான்... சத்ரியனோடு வாழ்ந்த வீடு.
ராயனின் முதல் பிறந்தநாளைக் கூட கொண்டாட முடியவில்லை.
இரண்டாவது பிறந்த நாளையாவது அவன் அப்பாவின் வீட்டில் கொண்டாட வேண்டும் என்று மனம் சொன்னது.
அதற்காக பல மாதங்களுக்குப் பிறகு, மீண்டும் அந்த பங்களாவிற்கு கிளம்பினாள்.
வாசலில் கார் நின்றதும், பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் அவசரமாக கேட்டைத் திறந்தனர்.
"வாங்க மேம்..." என்று மரியாதையுடன் வரவேற்றனர் உள்ளே சென்றவள் ஒரு நொடி அப்படியே நின்றுவிட்டாள்.
அந்த வீட்டில் பல மாற்றங்கள் தெரிந்தன. தீ விபத்தில் பாதிக்கப்பட்டிருந்த ஹாலின் சில பகுதிகள் புதிதாக மாற்றப்பட்டிருந்தது.
ஆனால்... வீட்டின் பழைய தோற்றம் மாறாமல் பாதுகாக்கப்பட்டிருந்தது.
சில முகங்கள் அவளுக்கு பரிச்சயமாக இருந்தது.
சத்ரியனின் பழைய பாடிகார்ட்களில் சிலர் இன்னும் அங்கேயே இருந்தனர்.
சிலர் மட்டும் புதிய முகங்கள்.
அவர்களில் ஒருவர் முன்னே வந்து, "வாங்க மேம்... வீட்டை எல்லாம் சுற்றி பார்க்கலாமா?" என்று மரியாதையாக கேட்டான்.
ஷ்ரத்தா அமைதியாக சத்ரியன் இல்லாத வலியுடன்,
வீட்டை சுற்றிப் பார்த்துக் கொண்டே சென்றாள். அவள் மனதில் ஒரு கேள்வி எழுந்தது.
''நான் இங்க இல்ல... சத்ரியனும் இல்ல... அப்புறம் இந்த வீட்டுக்கு இவ்வளவு பாதுகாப்பு? இவங்களுக்கு சம்பளம்... வேலை... இதெல்லாம் எப்படி?''
அவள் கேட்டதும், அந்த நபர் புன்னகைத்தான்.
"மேம்... இந்த இடம் எப்பவும் சாரோட இடம் தான். சார் இருந்தாலும் இல்லாட்டினாலும் இதை பாதுகாப்பா வச்சுக்கணும் என்பது எங்களுக்கான வேலை. ஐந்து வருஷம் எங்களுக்கான சம்பளமும் ஏற்கனவே ஏற்பாடு பண்ணிட்டாங்க." என்றதும் ஷ்ரத்தா புரியாமல் பார்த்தாள்.
"நீங்க ஒருநாள் கண்டிப்பா திரும்பி வருவீங்க. அப்புறம் மீண்டும் இந்த வீட்ல நடமாடுவீங்கன்னு...
எங்களை இங்க சேர்த்த பீட்டர் சார் சொன்னார் மேம்."
மற்றொருவன் உடனே, "யோகேஷ் சாரும் அதேதான் சொன்னார் மேம்."
என்றான். மூன்றாவதாக நின்றவன், "நான் வினோத் சார் மூலமா வந்தவன் மேம். எனக்கும் அதே இன்ஸ்ட்ரக்ஷன் தான்." என்று கூறினார்கள்.
ஷ்ரத்தாவின் கண்கள் மெதுவாக கலங்கின.
அவள் வீட்டை ஒருமுறை சுற்றிப் பார்த்தாள்.
"இல்ல..." என்று மெதுவாக தலையசைத்தாள்.
"நான் இனிமே இந்த வீட்டுக்கு வர மாட்டேன்." அவர்கள் எல்லோரும் அதிர்ச்சியாக பார்த்தனர்.
"எனக்கு... அப்பா வீடு தான் இப்போ பெஸ்ட். அவரில்லாத இடத்துல முழுவதும் தங்க வரமாட்டேன்." என்று மட்டும் சொல்லிவிட்டு உள்ளே நடந்தாள்.
மாடிப்படிகளை ஏறி... சத்ரியனின் அறைக்குள் நுழைந்தாள். அந்த அறை...
அவன் இப்போதும் கதவைத் திறந்து உள்ளே வந்து விடுவான் என்ற உணர்வை கொடுத்தது. மெதுவாக கட்டிலின் ஓரத்தில் அமர்ந்தாள்.
கண்ணீர் தானாக வழிந்தது.
'ஒரு நாள் ராயனையும் இங்க கூட்டிட்டு வரலாமா.?' என்று ஒரு எண்ணம் தோன்றியது.
அடுத்த நொடியே அதை மறுத்தாள். 'வேண்டாம்...'
இந்த பெரிய பங்களா... இந்த நீச்சல் குளம்... இந்த தோட்டம்... இதையெல்லாம் பார்த்துட்டு, அம்மா... நம்ம இங்கயே இருக்கலாமே..' ன்னு அவன் கேட்டா... என்னால என்ன பதில் சொல்ல முடியும்?
சத்ரியன் இல்லாத இந்த வீடு. எனக்கு வெறும் சுவர்கள் மட்டும்தான். அவன் நினைவோட மட்டும் இங்க வாழ... என்னால முடியாது.
அப்பா வீட்டுல இருக்கற அமைதிதான்... இப்போ எனக்கு தேவை.
படிப்பும்... ராயனும்... அதுதான் இப்போ என்னோட உலகம். அதை நினைத்தவள் சத்ரியனின் தலையணையை மார்போடு அணைத்துக் கொண்டு அமைதியாக அழுதாள்.
இந்த அறையில் எத்தனை முறை அவனோடு உல்லாசமாக இருந்தது. அவன் அவளை கொஞ்சி கொண்டு, முத்தம் வழங்கி, செல்லமா சண்டையிட்டு, அந்த ஆறடி உயரம் தன் காதலுக்காக தன் காலை பிடித்து முத்தமிட்டு முன்னேறியதெல்லாம் நினைத்து பார்த்தாள்.
ஷ்ரத்தாவுக்கு மூச்சு முட்டியது. அவளால் இங்கே வாழ முடியாத அளவிற்கு சத்ரியன் நினைவுகள் துரத்தியடித்தது.
தன் கைப்பையை எடுத்துக் கொண்டு வேகமாக வெளியேறினாள்.
முன்பு இங்கே வெளியே வந்தாலே 'யாராவது தன்னை கொல்ல முயல்வதாக தடுத்து இழுத்து சென்றான். இன்று சாதாரணமான வீட்டில் நடமாடியும் உயிர் பயம் துளியும் இல்லாமல் இருக்க தீபாவோ "மேம்... கிளம்பலாமா?" என்று கேட்க, அழுதபடி சென்றாள்.
அன்றைய நினைவுகள் அவளை கொல்லாமல் கொல்ல, மனீஷா வீட்டிற்குச் சென்றாள்.
ஷ்ரத்தா மனிஷா வீட்டின் முன் காரை நிறுத்தியபோது, வாசல் முழுவதும் செருப்புகள் வரிசையாக இருந்தன.
"என்ன விசேஷம்?" என்று மனதிற்குள் யோசித்தபடியே உள்ளே செல்ல முற்பட்டாள்.
அந்த நேரம் வீட்டின் கதவு திறந்தது.
உள்ளிருந்து நான்கு ஐந்து பேர் சிரித்தபடியே வெளியே வந்தனர்.
நடுத்தர வயதுடைய தம்பதியர்... அவர்களுடன் இளைஞன் ஒருவன்... கூடவே இன்னும் இரண்டு உறவினர்கள்.
அவர்களை வழியனுப்ப மனிஷாவின் அப்பாவும் அம்மாவும் வாசல் வரை வந்திருந்தனர்.
"சரி... நாங்க கிளம்புறோம். யோசிச்சுட்டு நல்ல பதிலா சொல்லுங்க. எங்களுக்கு பொண்ணு ரொம்ப பிடிச்சிருக்கு." என்றபடி பேசிக் கொண்டே அவர்கள் வெளியே வந்தனர்.
அந்த சமயம் வாசலில் நின்றிருந்த ஷ்ரத்தா காரிலிருந்து இறங்கவில்லை.
மனீஷா வீட்டிலிருந்து வந்தவர்கள் வெளியேறியதும் ஷ்ரத்தா இறங்கினாள்.
மனிஷாவின் அம்மா உடனே, ஷ்ரத்தாவை அடையாளம் கண்டு, "அட நம்ம ஷ்ரத்தா.. மனீஷா பிரெண்ட்." என்றார்.
மனீஷா தந்தை யாரென்று நினைவேட்டில் தவற விட, "அட திவாகர் சாரோட பொண்ணுங்க. அந்த சத்ரியன்" என்றதும் நினைவு வந்தவராக, "ஆங்.. நினைவிருக்கு. வாம்மா... உள்ள வா.." என்று புன்னகையுடன் அழைத்தார்.
ஷ்ரத்தாவும் மரியாதையாக, "எப்படியிருக்கிங்க ஆன்ட்டி அங்கிள் மனிஷா நல்லா இருக்காளா?" என்று விசாரித்தாள்.
"எல்லாரும் நல்லாயிருக்கோம்மா நீ ரிலீஸ் ஆனதா மனீஷா சொன்னா." என்று வரவேற்றார்.
ஷ்ரத்தா உள்ளே நுழைந்ததும் தான், வீட்டில் இன்னும் இனிப்புகள், பழத்தட்டுகள், எல்லாம் அப்படியே இருந்ததை கவனித்தாள். அதைப் பார்த்தவளுக்கு எல்லாம் புரிந்துவிட்டது.
"என்ன ஆன்ட்டி... பொண்ணு பார்க்க வந்திருந்தாங்களா?" என்று கேட்டாள்.
அந்த கேள்வியைக் கேட்டதும், சமையலறை பக்கம் இருந்து வந்த மனிஷா வெட்கத்திலும் தோழியை பார்த்த சந்தோஷத்திலும், "ஏய் ஷ்ரத்தா.. நானே கால் பண்ணணும்னு நினைச்சேன்.?" என்று அவளை நோக்கி வந்தாள்.
வீட்டிலிருந்த அனைவரும் சிரித்தனர். மனிஷாவின் அம்மாவோ, "இப்போதான் கிளம்பினாங்கம்மா. நீ கொஞ்சம் முன்னாடி வந்திருந்தா அவங்களையும் பார்த்திருப்ப." என்று கூறிக்கொண்டே ஷ்ரத்தாவை அமர வைத்தார்.
"முதல்ல உட்காரும்மா... காபி எடுத்துட்டு வர்றேன்." என்று அன்போடு உள்ளே சென்றார்.
ஷ்ரத்தா புன்னகையுடன் மனிஷாவைப் பார்த்தாள்.
"என்னடி... பொண்ணு பார்க்கற விஷயத்தை மறைச்சிட்டியே?" என்று குறும்பாக கேட்டாள்.
மனிஷா வெட்கத்தில் "அட... இன்னும் எதுவுமே முடிவாகல. அதுக்குள்ள உன்கிட்ட என்ன சொல்ல. பார்த்துட்டு போயிருக்காங்க" என்று அவள் தோளில் மெதுவாக அடித்தாள்.
வீட்டில் ஒரு இலகுவான, சந்தோஷமான சூழல் பரவியது.
பிறகு ராயனின் பிறந்தநாளை கொண்டாட முடிவு செய்து வரவேற்றாள்.
மனீஷா தந்தையோ, "உங்க அப்பா இருந்திருந்தா.. ஊர் கூடி கல்யாணம் நடத்தி அசத்தியிருப்பார்.
என்ன பண்ண உனக்கு கல்யாணமானதே எங்களுக்கு தெரியாது. இதுல கர்ப்பமா இருப்பதா தெரியவந்ததே நியூஸ்ல படிச்சி தான் தெரிந்துக்கிட்டோம்." என்றார்.
ஷ்ரத்தா லேசாக அமைதிக்காத்தாள். தந்தை இருந்திருந்தால் இதோ போல பெண் பார்க்க அவர் ஏற்பாடு செய்து சத்ரியன் வந்து பார்த்திருப்பானோ என்று எண்ணி பார்த்தாள். ஆனால் தந்தையிருந்தால் சத்ரியனை மணக்கவே விடமாட்டார்.
ஆனால் அவர் இருந்தால் இது போன்ற சூழல் அமைந்திருக்கும். தானும் சாதாரணமான பெண்ணாக வாழ்ந்து மடிந்திருக்கலாம். இன்று... சத்ரியனை எண்ணி உருகி உருகி வாழும் பேதையாக தன் நிலை. இதில் தந்தையை நேரில் காணாத மகன் ராயனின் நிலை.
மனிஷாவிடமும் அவர் தாய் தந்தையிடமும் ராயனின் பிறந்த நாளுக்கு வரக்கூறி கோரிக்கை வைத்தாள். அவர்களும் நிச்சயம் வருவதாக கூறினார்கள். மாலை சிற்றுண்டியை அங்கேயே முடித்தாள்.
இரவு கனிமொழியை காண சென்ற போது அவள் அப்போழுது தான் எம்பிபிஎஸ் முடித்து, எம்.டி டெர்மினாலஜி படிக்க சென்றிருக்க சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது.
கனி ஷ்ரத்தாவை "இந்நேரம் நீயும் எம்பிபிஎஸ் முடிச்சிருக்க வேண்டியதுல ஷ்ரத்தா... ம்ம் காலம் வேகமா ஓடுது. ஏய் சீனியர் ஜானை பார்த்தியா? ஆர்த்தோ படிச்சிருக்கார்.
நிரோஷ் வந்து.. என்று யோசிக்க, "கனி.. நான் அவங்களை பத்தி யோசிக்கலை விடு. நீ நல்லாயிருக்கியா அது போதும்." என்றாள்.
"ரொம்ப மாறிட்ட ஷ்ரத்தா... எனக்கு எப்படினு சொல்ல தெரியலை. ஆனா முன்ன மாதிரி இல்லை." என்றாள். இருவரும் சாப்பிட்டபடி பேசி கிளம்பினார்கள்.
தீபா தான் "மேம் இனி வீட்டுக்கு தானே?" என்று கேட்க ஆமென்றாள்.
வீட்டுக்கு வந்தப்பொழுது நந்திதா லட்சுமி இருவருமே கையை பிசைந்து நின்றனர்.
"என்னாச்சு... ஏன் பதட்டமா இருக்கிங்க?" என்றாள்.
"மேம்.. ராயனை அந்த சார் கூட்டிட்டு போயிருக்கார். எவ்வளவோ சொல்லியும் 'எங்களை மீறி அழைச்சிட்டு போயிட்டார். ராயனும் சொல்லறதை கேட்காம மம்மியிடம் நான் சொல்லிக்கறேன்னு போயிட்டார்.' என்றதும், "யாரு.. ரு... ருத்ரனா?" என்று கேட்க, ஆமா மேம்." என்றார்கள்.
"ஷிட்.. உடனே கால் பண்ணிருக்கலாமே." என்று கேட்க, இரண்டு பேரோட போனையும் அவரே வாங்கிட்டு போயிட்டார் மேம். வேற நம்பர்ல இருந்து கான்டெக் பண்ணினோம். ஆனா நீங்க எடுக்கலை." என்று கூற போனை கண்டு, எரிச்சலுடன் ருத்ரனுக்கு அழைத்தாள்.
அவனோ வேண்டுமென்றே எடுக்காமல் அழுச்சாட்டியம் செய்தான்.
ஷ்ரத்தாவுக்கு எரிச்சல் கூடியது. இருபது நிமிடம் கழித்தே ருத்ரன் பைக்கில் முன்னே ராயன் அமர்ந்து முகமெல்லாம் மலர்ச்சியாக, வந்தான்.
ருத்ரன் வந்ததும் ராயனை எதுக்கு சொல்லாம கொள்ளாம அழைச்சிட்டு போன?" என்று ராயனை பிடுங்காத குறையாக தூக்கினாள்.
"யாரை கேட்கணும்.. அவனை கூட்டிட்டு போக? அவனுக்கு பெர்த்டே வருது. என் ஆசைக்கு அவனுக்கு கூட்டிட்டு போய் டிரஸ் வாங்கினேன். உனக்கென்ன? சாதாரணமா சந்திக்க விடறியா?" என்றான்.
"அவனுக்கு என்ன வேண்டுமோ வாங்கி தர நான் இருக்கேன். நீயாருடா வாங்கித்தர. உன்னை பார்த்ததிலருந்து தலைவலியா இருக்கு.
முன்ன உங்கப்பாவை கொன்றது சத்ரியன்னு சொல்லிட்டு வந்த. சத்ரியன் எங்க அவன் சாகலைனு என்னை நோண்டின. இப்ப சத்ரியன் செத்துட்டான்னு என்னை காதலிப்பதா பிணாத்துற. இதுல என் குழந்தையை வேற உன் பக்கம் திருப்ப பார்க்கறியா. அறிவில்லை.." என்று அக்கம் பக்கம் சென்றவர் திரும்பி பார்த்தார்கள்.
"அவனுக்கு அப்பாவை நிறுத்தறேன்னு சொல்லிருக்கேன். செத்துப் போனவனை எப்படி நிறுத்தறது. அதனால தான் நானே அவனுக்கு அப்பாவா வர ஆசைப்படறேன்." என்றதும் ஷ்ரத்தா கொதித்து போய் இடி போல அறைந்து நின்றாள்.
''ராயனுக்கு அப்பா... சத்ரியன் மட்டும் தான். கண்டதை பேசிட்டு முன்ன வந்த, உன்னை கொன்னுட்டு ஜெயிலுக்கு போக தயங்க மாட்டேன்." என்று கூற, "மம்மி.. ருத்ரா பாவம்" என்றான் ராயன்.
"ரியன் ஷட் அப். உள்ள போ." என்றாள்.
இதற்கு முன்னும் ருத்ரனை அறைந்தாலும் இந்தளவு கோபமில்லை. அதுவும் குழந்தையிடம் கோபத்தை காட்டியதில்லை.
அன்று அந்த அதட்டலை இதுநாள் வரை அறியாத குழந்தை பயந்தபடி உள்ளே சென்றான்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
தகிக்கும் நிலவொன்று.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 23)
அச்சோ...! திரும்பவும் ஏன் சத்ரியன் வாழ்ந்த பேலஸ்க்கு
போகணும்..? நினைவுகள் ஒரேயடியா கொன்னுடுமே.
இந்த ருத்ரா பண்றதைப் பார்த்தால் நமக்கே கோபம் வரும் போல. சரியான கிறுக்கன், பொண்ணுன்னா நம்ம இஷ்டத்துக்கு வளைச்சிடலாம்ன்னு நினைச்சானோ..? ஷ்ரத்தா, எங்க பேரையும் சொல்லி, இன்னும் நாலு சாத்து அவனை சாத்தியிருக்கணும்.
😊😊😊
CRVS (or) CRVS 2797
-
தகிக்கும் நிலவொன்று-50 (முடிவுற்றது)
2 weeks ago
-
தகிக்கும் நிலவொன்று-49
2 weeks ago
-
தகிக்கும் நிலவொன்று-48
2 weeks ago
-
தகிக்கும் நிலவொன்று-47
2 weeks ago
-
தகிக்கும் நிலவொன்று-46
2 weeks ago
- 25 Forums
- 330 Topics
- 1,589 Posts
- 1 Online
- 420 Members
