பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-15
அத்தியாயம்-15
சாரதி எப்பவும் போல ஐந்து மணிக்கு எழுந்து மடமடவென பல் விலக்கியதும், குளித்து முடித்து வந்தான்.
லாவண்யா காதலை சொன்னதை ஏற்காவிட்டாலும், ஏதோவொரு புத்துணர்வு அவனுக்குள் இருந்தது.
பேண்ட் சட்டையுடன் சாப்பிட்டு சட்டை போடலாமென காத்திருக்க, கண்ணாடியில் ஏதோ பரு தெரியவும், அதை நோண்டிக் கொண்டிருந்தான்.
"சாரதி அதை கிள்ளாத. அதுவே சரியாகிடும்" என்று அன்னை வந்து தடுக்கவும், "ரொம்ப தூசியா பறக்குதும்மா... போன வாரம் கிள்ளி எறிந்தேன். இப்ப மறுபடியும்.. தொந்தரவா இருக்கும்மா" என்றான்.
"யாராவது உன்னை குறுகுறுனு பார்க்கறாங்க கண்ணா." என்று சிரித்தார்.
"அம்மா.. சும்மாயிரும்மா." என்றான்.
"அட... முன்ன நீ சைக்கிள்ல போறப்பவே கவனிச்சிருக்கேன். இங்க பக்கத்துல இருக்கற ராசாத்தி மக உன்னையே பார்ப்பா. இப்ப பைக்ல போறச்ச... எதிர் வீட்டு சாமந்தியோட பொண்ணு உன்னை பார்க்குது. எல்லாம் சைட் அடிக்கறாளுங்க." என்று கூற சாரதியோ ''ஆப்ட்ரால் கண்டெக்டர்மா நானு... அப்படியிருக்க ஓவரா பில்டப் பண்ணறியேம்மா. யாராவது இந்த கண்டெக்டரை சைட் அடிப்பாங்களா" என்று கூறிவிட்டான்.
சும்மாவே அம்மாவுக்கு பையன் என்றால் உசத்தி. காஞ்சனாவோ வாழ்வதே மகனுக்காக, மகனது நலனுக்காக என்று பார்த்து பார்த்து செய்பவர் இப்பேச்சை கேட்டு சும்மா இருப்பாரா, "என்னப்பா இப்படி பேசற. கண்டெக்டர்னா கேவலமா?
இங்க சொல்லிக்கற வேலைக்கு தான் மவுஸுன்னா கம்பியூட்டரை படிச்சவனும், டாக்டர், டீச்சர், போலீஸ், ராணுவ வீரன், ஐஏஎஸ் ஐபிஎஸ் இஞ்சினியரு, இப்படி காலர் அழுக்கு படியாத, ஏசில உட்காரறவனுக்கும் தானா?
இந்த கண்டெக்டர் வேலைக்கு என்ன குறைச்சல்? 20 ஆயிரம் சம்பளம் வாங்கற. இந்தா... ஆர்ட்ஸ் காலேஜில படிச்சவனுங்க எல்லாம் ஆரம்பத்துல இதே சம்பளம் தான்னு கேள்விப்பட்டேன்.
போக போக தான் ஏறுமாம். ஏன்... உன் சம்பாத்தியமும் சர்வீஸை பொறுத்து ஏறும்ல. உங்கப்பாவுக்கு எல்லாம் 35000 வாங்கினார்டா. என்ன... எல்லாம் சேர்த்து வச்சது போச்சு.." என்று பெருமூச்சை விடுத்தார்.
"அதை விடு கண்டெக்டர் வேலை ஒன்னும் கீழ்த்தரமானது இல்லை. எந்த தொழிலும் நியாயமா சம்பாதிக்கற வேலை கௌரவமான வேலை தான்.
எந்த வேலையிலும் சொல்ல தயங்கறதும், அறமில்லாத செயலும் செய்தா மட்டும் தான் தப்பு. அது தான் பெரிய இடத்துல இருந்தாலும் சொல்லற வேலையை பகிரங்கமா சொல்ல வாய் கூசணும்.
உனக்கென்னடா... தைரியமா நெஞ்சை நிமிர்த்தலாம். கவர்மெண்ட் வேலை, மாச சம்பளம் வந்துடும், அரசாங்க சலுகைகள் இருக்கு, இப்ப நாலு வருஷ அனுபவம் இருக்கு. இனி போக போக பாரு சம்பளமும் ஏறும். இனி அம்மா எதிர சலிச்சிட்டு சொல்லாத" என்று தாடை பிடித்து கொஞ்ச, "ஓகேம்மா.. சலிச்சிக்கலை. சப்போஸ் எவளாவது நீ சொல்லற மாதிரி என்னை சைட் அடிக்கறவ கண்டெக்டர்னு ஏத்துக்கிட்டா என்ன செய்வ?" என்றான்.
"ம்கூம்.. டேய்.. சாமந்தியோட பொண்ணோ, ராசாத்தி பொண்ணோ பார்த்து வைக்காதடா. எல்லாம் பொண்ணுங்களா அதுங்க. காலையில லேசுல எந்திரிக்காதுங்க. எல்லாம் லபோ-திபோனு கத்தும். மேக்கப்புக்கே பாதி சம்பளம் போயிடும். அழகோ நிறமோ முக்கியமில்லை சாரதி. பொண்ணு குணமா இருக்கணும்.
உனக்கெல்லாம் தங்கமான பொண்ணு தேடி வருவா, நீ வேண்டுமின்னா பாரு. பவுடரே அடிக்காட்டியும் பளிச்சி களையா ஒரு சிரிப்பு சிரிச்சா, நாள் முழுக்க உட்கார வச்சி அவளை ரசிக்கற மாதிரி இருக்கறவதான் வருவா" என்றார்.
சாரதியோ சிரித்தபடி அன்னையோடு கதையளந்து காக்கி உடையான கண்டெக்டர் சட்டையை மாட்டினான்.
"அம்மா... ஒரு முடிவோட இருக்க" என்று சாரதி கிளம்பினான்.
இன்று சைக்கிளில் கிளம்பினான். ஒரு நாள் சைக்கிள், ஒரு நாள் பைக் என்ற ரீதியில் தான் அவன் வீட்டிலிருந்து வருகின்றான்.
அப்படி கடக்கும் பொழுது லாவண்யா வீட்டை கடந்தான்.
அவள் அப்பொழுது தான் அவசரமாய் துணியை உலர்த்த மாடியில் சென்றிருந்தாள்.
அவளை பார்த்தவாறு நிதானமாக சென்றான். தேவி வீட்டை தாண்டும் நேரம் தேவி சாரதியை கவனித்தாள்.
சாரதி செல்வதை கவனித்தவள், லாவண்யா இன்று ஏதாவது பேசினால் அவளது மனநிலைக்கு தகுந்தது போல எடுத்து சொல்ல வேண்டுமென தேவி முடிவெடுத்தாள்.
சாரதி உற்சாகமாய் கையெழுத்து போட்டு பையையும், டிக்கெட்டையும் எடுத்துக் கொண்டு விசில் ஊதும் கருவியையும் கழுத்தில் அணிந்து வேகமாய் நடந்தவன் சற்று ஓட்டமும் கொண்டவனாக படியில் ஏற, லாவண்யாவோ அதற்குள் வந்து சேர்ந்ததால், அவனை பார்த்ததும் முறுவலிட்டாள்.
தேவியோ 'அதுசரி' என்று உச்சரிக்க, முத்து அண்ணனோ, சாரதியை பார்க்க, நாயகனோ விசிலடித்தவாறு லாவண்யாவை கண்டான்.
அவள் நின்றுக் கொண்டிருக்க, மெதுவாக டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தான். லாவண்யாவிடமும் சற்று பருமனாக இருந்த பெண்ணிடமும் வாலாட்டிய இளைஞன் காணவில்லை. மாறாக அவனது கூட்டாளிகள் இருந்தனர்.
பேருந்து நகரவும், ஆளாளுக்கு பேச்சு சப்தம் கேட்டது. தேவியோ ''இத்தனை நாள் என்டர்டெயின்மெண்டே இல்லை... ஆனா இனி ஜோரா டைம் பாஸாகும் போல." என்று சாரதி கடக்கும் நேரம் கூறினாள். லாவண்யாவோ "சும்மாயிருக்க மாட்டியா? நேத்தேல்லாம் நல்லா யோசித்து முடிவெடுனு சீனை போட்ட" என்று அதட்டினாள்.
"உண்மை தான்... நான் உன் காதலை தடுக்க பார்த்தேன்.
எனக்கு நேத்து சிலது புரிந்தது.
இத்தனை நாள்.. நானும் அவரை பார்த்துட்டு தான் வர்றேன். நல்ல குணமான மனுஷன்.
அதை தாண்டி நேத்து நீ பார்க்ல நின்ன, அவரிடம் நீயா பேசனும்னு கூப்பிடலை. அவரா உன்னை கடந்து போனப்ப, அவரிடம் தான் நீ பேச வந்தேன்னு புரிந்துக்கிட்டு, திரும்பி வந்து பார்க்ல வண்டியை நிறுத்திட்டு பேச வந்தார். நீயுமே அவர் வந்ததும் பேசின.
இந்த சொல்லாம புரிஞ்சுட்டு இரண்டு பேரும் கண்லயே ஒரு கவிதையை உருவாக்கினிங்க பாரு... நேத்து நைட் அதையே யோசித்தேன்.
லாவண்யா ஏன் இவரை காதலிக்கறதா பிணாத்தறானு புரிஞ்சுடுச்சு. இது மனசு சம்பந்தப்பட்ட விஷயமா தான் காதல் ஊடுருவியிருக்குனு கன்பார்ம்." என்றாள் தேவி.
லாவண்யாவோ தேவி கூறியதும், சாரதி அவனாக புரிந்து செயல்பட்ட நேற்றைய விஷயம், அதை தேவி கூறிய விதம், என்று மகிழ்ந்தாள்.
அதிலும் நேற்றெல்லாம் தேவி லாவண்யா காதலிப்பதை வேண்டாவெறுப்பாய் கேட்டிருக்க, இன்றோ ஆதரவாய் பேசவும், "என்ன... என்னை பலமா யோசிக்க சொன்ன... இப்ப எனக்கு சப்போர்ட் பண்ணற." என்றாள்.
"அதான் காரணம் சொன்னேனே. ஆல் தி பெஸ்ட்." என்று கை கொடுக்க, "ஆமா... நீ தான் வாழ்த்தற. என் காதலை யாரும் கண்டுக்கிட்டதா தெரியலை" என்றாள் லாவண்யா வருத்தமாய்.
அந்த நேரம் கண்டெக்டர் இருக்கையில் சாரதி அமர, தேவியும் லாவண்யாவுமே அதற்கு முன்னிருக்கையில் அமர்ந்தனர்.
"அட... கண்டுக்காம தான் நீ விசில் சத்தம் கேட்டா காதை பொத்துவனு, நீ இருக்கறப்ப கையில விசிலடிக்கறாராக்கும். எல்லாம் முட்டி மோதி ஓகே சொல்வாப்ள. நீ தான் ஓகே சொல்வாரோ இல்லையோனா பவுடர் கூட அடிக்காம ஓடி வந்துட்ட" என்று லாவண்யாவை கேலி செய்து கூறினாள் தேவி.
லாவண்யா புன்னகைத்து, சாரதியை திரும்பி பார்க்க, சற்று முன் இன்று காலையில் அன்னை சொன்ன, 'பவுடரே அடிக்காட்டியும் பளிச்சினு களையா ஒரு சிரிப்பு சிரிச்சா நாள் முழுக்க உட்கார வச்சி அவளை ரசிக்கற மாதிரி இருக்கறவ தான் வருவா சாரதி' என்றது நினைவு வர, திக்குமுக்காடி லாவண்யாவை ஏறிட்டான்.
இதயம் ஏதேதோ நினைப்பில் தவித்து துடித்து வேகமெடுத்தது.
"அண்ணா... விசில் போடுங்க. வண்டி எடுக்க வேண்டாம்" என்று தேவி சாரதியை வேறு ஓட்டினாள்.
சாரதியோ லேசாக பார்வையை திருப்பி, "பின்னாடி டிக்கெட் இருந்தா எடுங்க. சார்... அவர் டிக்கெட் எடுத்துட்டாரானு கேளுங்க" என்று உறங்கி வழிந்தவரை சுட்டி காட்டி கேட்க, அவரோ திடுகிட்டு எழுந்து, "ஆங்.. டிக்கெட்டா எடுத்தாச்சு. தூங்கிட்டு இருந்த என்னை ஏன்பா எழுப்பற. நானே ஒன் ஹவர் டிராவல்ல நல்லா தூங்கலாம்னு இருந்தேன்" என்று முனுமுனுத்தார். சிலருக்கு பேருந்தில் எது நடந்தால் தனக்கென்ன? நிம்மதியாக அத்தனை இரைச்சலிலும் உறக்கம் மட்டும் சொர்க்கம் போல கிட்டும். அதை தான் அந்த பயணி தொடர்ந்தார்.
லாவண்யாவோ "தூக்கத்தை கெடுக்கறதே வேலையா போச்சு. இந்த ஒரு வாரம் என் தூக்கம் போச்சு தெரியுமா?" ஜன்னலோரம் இருந்தவள், இடது புறம் பார்த்து பேசினாள்.
பின்னால் நடத்துனர் இருக்கையில் இருந்தவனோ இடது பக்கம் பார்வையை சுழற்றி, தன்னிடம் தான் பேசுகின்றாளென புரிந்து, "அண்ணா நகர் அண்ணா நகர். இறங்குங்க" என்று கத்தினான். லாவண்யா அசையாமல் இருக்க, "தங்கச்சி... இறங்குங்க" என்றான் தேவியை பார்த்து.
"அவ அசைய மாட்டேங்கறாளே அண்ணா" என்றாள்.
சாரதியோ "ஏய்... காலேஜ் வந்துடுச்சு இறங்கி போறியா?" என்றான் அதட்டலாய்.
"புரசைவாக்கம் இரண்டு" என்று பணத்தை அவன் முன் நீட்டி, கேட்டாள்.
விசிலடித்து பேருந்தை கிளப்பிவிட்டு, "காலேஜ் கட் அடிச்சிட்டு இப்படி பேசிட்டு சுத்தாத. அடுத்த ஸ்டாப்ல இறங்கி போ. ஈவினிங் டிப்போல பேசறேன்." என்றான்.
"அதெல்லாம் இறங்க முடியாது." என்றாள் லாவண்யா.
"கிறுக்குத்தனமா பேசாத?" என்றான்.
"அண்ணா... அவங்க அக்காவுக்கு எங்கேஜ்மெண்ட் நடக்கப்போகுது. அவ சிலது பர்சேஸ் பண்ண புரசைவாக்கம் போறா அண்ணா. இன்னிக்கு காலேஜ் கட் அடிச்சிட்டோம். பாவம் அண்ணா நீங்க... ஈவினிங் டிப்போல மீட் பண்ணலாம்னு வார்த்தை விட்டுட்டிங்க." என்று சிரித்தாள்.
அதன் பின்னரே அவசரப்பட்டு நேரில் பேச வாய்ப்பை தந்ததை உணர்ந்து, "சாரி... ஈவினிங் சந்திக்க எல்லாம் வேண்டாம். நான் வரமாட்டேன். சும்மா... இந்த நேரம் அவளை இறங்க வைக்க பேசினேன். தயவு செய்து என்னை தேடி பேச வேண்டாம். நான் இவளிடம் பேச தயாராயில்லை." என்றான்.
"தேவி... என் போன் நம்பர் அவரோட அம்மா டைலரிங் நோட்ல இருக்கு. தேவைப்பட்டா நோட் பண்ணி பேச சொல்லு." என்றாள்.
இங்கிருந்தால் கூடகூட பேசுவதை அறிந்து, 'முத்து அண்ணா.. இதோ வர்றேன்' என்று முன்னே நடந்து சென்றான்.
"சாரதி அண்ணா கிரேட் எஸ்கேப்" என்றாள் தேவி.
லாவண்யாவோ, "தினமும் எஸ்கேப் ஆவாரா?" என்று சாரதியையே பார்த்தாள்.
அவனோ முன்னால் கம்பியில் சாய்ந்து வரவு வைத்தபடி, வேலையில் இருந்தான். அவன் நின்ற தோரணையோ நாயகன் அவதாரமாக இருக்க, கூடுதலாக தான் ரசித்தாள்.
அந்த நேரம் இவர்களையே பார்த்த இளைஞன் ஒருவன், 'பவன் சொன்ன மாதிரி, இந்த பொண்ணும் அந்த கண்டெக்டரும் லவ் பண்ணறாங்க போலடா. அதான் அவன் கோபத்துல, அன்னிக்கு இவ மேல கை வச்சிருக்கான். இப்ப இந்த பார்வை எல்லாம் பார்த்தான் பவன் கஷ்டப்படுவான்டா." என்றான்.
"ஆமா அவன் பைக்ல தானே வர்றான்" என்று கேட்க, 'பின்ன.. இங்க நடந்த கூத்துக்கு மறுபடியும் வரமாட்டான். ஆனா வன்மம் வச்சியிருக்கான்டா. இந்த பொண்ணு மேல." என்று பேசிக் கொண்டார்கள்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 15)
ம்... கொஞ்சம், கொஞ்சமா காதல் பயிரை ரெண்டு பேரும் ஓரப் பார்வையும், ஒதுக்கமான பேச்சோட வளர்த்துட்டு வராங்க...
கூடவே வில்லன் என்கிற பேர்ல அந்த வீணாப்போன பவனும், அவனோட அன்னக் கைகளும் எப்படா முடிச்சு விடலாம்ன்னு வன்மம் வைச்சு காத்திருக்காங்க.
என்ன நடக்கப் போகுதோ தெரியலை...?
😐😐😐
CRVS (or) CRVS 2797
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-14
22 hours ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-13
2 days ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-12
3 days ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-11
3 days ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-10
3 days ago
Recently viewed by users: Kavi bharathi arunkumar 58 minutes ago.
- 25 Forums
- 331 Topics
- 1,594 Posts
- 2 Online
- 421 Members
