Forum

பேருந்தில் நீயெனக்க...
 
Notifications
Clear all

பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-4

8 Posts
8 Users
1 Reactions
63 Views
(@praveena-thangaraj)
Posts: 265
Member Admin
Topic starter
 
[#342]

அத்தியாயம்-4

அம்பத்தூர் எஸ்டேட் வந்ததும், பேருந்து நிறுத்தத்தில் நின்றது. இருவரும் கூட்டத்தோடு பேருந்திலிருந்து இறங்கினர்.

படிக்கட்டில் இறங்கியபடியே இருவரும் காலேஜில் நடந்த விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.

"அப்புறம் அந்த மிஸ் வந்து அப்படிச் சொன்னாங்க தெரியுமா?" என்று தேவி ஏதோ சொல்லிக் கொண்டிருக்க, லாவண்யாவும் சிரித்தபடி அவளுடன் நடந்தாள்.

அதே நேரத்தில் சாரதி பேருந்திலிருந்து இறங்கி, தன்னுடைய ஸ்டாண்டை நோக்கி சென்றான். பயணிகள் வந்து கொண்டிருந்ததால் அவனுடைய கவனம் மீண்டும் வேலையின் பக்கமே திரும்பியது.

அன்றைய டியூட்டியில் ஓய்வு என்பதே பெயருக்குத்தான்.
அம்பத்தூர் எஸ்டேட் வந்து சேர்ந்ததும், அடுத்த ட்ரிப்புக்காக பேருந்தைத் தயார் செய்யும் முன் கிடைத்த பத்து நிமிட இடைவெளி மட்டுமே அவனுக்கான சிறிய ஓய்வு.
பேருந்தை டிப்போவில் உரிய இடத்தில் நிறுத்தியிருக்க, "முத்து அண்ணா… பத்து நிமிஷம் உட்கார்ந்துட்டு வரலாமா?"
"போப்பா… நானும் கொஞ்சம் கால் நீட்டிக்கிறேன்." என்றார் முத்து.

சாரதி அருகிலிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து, கையில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து இரண்டு மடக்கு குடித்தான். முத்துவோ அமர்ந்தே இருப்பதால் வண்டு ஓட்டுவதால் முதுகுக்கு ஓய்வாக படுத்துக் கொண்டார்.

காலை முதல் நின்று கொண்டே அலைந்த கால்கள் சாரதி அமர்ந்து போனில் வேடிக்கை பார்த்தான்.

ஆனால் அந்த ஓய்வும் சில நிமிடங்கள்தான். மீண்டும் பேருந்து புறப்பட வேண்டிய நேரம் வந்ததும், எழுந்து தன் டிக்கெட் பையையும் பணப்பையையும் சரிபார்த்துக் கொண்டு முத்துவும், சாரதியும் பேருந்தில் ஏறினார்கள்.

மீண்டும் அதே பயணம்.
அம்பத்தூர் எஸ்டேட் முதல் பிராட்வே. பிராட்வே முதல் அம்பத்தூர் எஸ்டேட்.
நிறுத்தங்கள் மாறினாலும், அவனுடைய வேலை மட்டும் மாறவில்லை.

இங்கே லாவண்யாவும் தேவியும் தங்களுடைய வழியில் நடந்துக் கொண்டிருந்தனர்.
"அடியே… இன்னைக்கு என்னை நம்பி வந்த, நாளையிலிருந்து காலேஜ்ல எந்த பில்டிங் எங்க இருக்குன்னு நீ தான் சொல்லணும்." என்றாள் தேவி.
"ஏய்… அதுக்குள்ள எல்லாம் கத்துப்பேனா?" என்றாள் லாவண்யா.

"நீ தான் புத்திசாலியே. இதெல்லாம் பழகு" என்றாள்.

புதிய ஊர் என்ற தயக்கம் காலையிலிருந்த அளவுக்கு இப்போது அவளிடம் இல்லை.
காலை பேருந்தில் ஏறியபோது இருந்த அந்தச் சிறு பதற்றம், மாலை நேரத்திற்குள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்திருந்தது.
தேவியுடன் பேசிக்கொண்டே நடந்தவள், "ஓகே.. டன்" என்றவள் தன்னுடைய சித்தப்பா வீட்டை அடைந்தாள்.

அது தேவியின் வீட்டுக்கு சற்று தள்ளி இருந்ததால் நடந்தாள்.  "நான் டிரஸ் மாத்திட்டு உங்க வீட்டுக்கு வர்றேன். கொஞ்ச நேரம் பேசிட்டு இருப்போம்." என்று சொல்லிவிட்டு தேவி  வீட்டுக்குள் சென்றாள்.

லாவண்யாவும் தனியாக சித்தப்பா வீட்டில் இருப்பதால் வேகமாய் தலையாட்டினாள்.

  அப்பொழுது லாவண்யா தங்கும் வீட்டை அடைந்தததும், வாசலில் இருந்த சித்தி இலக்கியா, அவளைப் பார்த்ததும் முகம் மலர்ந்தார்.
"வா லாவண்யா… முதல் நாள் காலேஜ் எப்படி இருந்துச்சு?" என்று கேட்டார்.

"நல்லா இருந்துச்சு சித்தி." என்றவள், பையை ஓரமாக வைத்துவிட்டு உள்ளே சென்றாள்.

அவள் கொண்டு சென்றிருந்த மதிய உணவுப் பெட்டியில் இருந்த தேங்காய் சாதத்தை சாப்பிட்டு முடித்திருந்தாள். அதனால் வயிறு ஓரளவு நிறைந்திருந்தது. டிபன் பாக்ஸையும் கழுவியிருந்தாள்‌. ஆனாலும் வீட்டில் ஒருமுறை கழுவ சிங்கில் போட்டுயிருந்தாள்.

உடை மாற்றிக்கொண்டு வெளியே வந்தவளை இலக்கியா மீண்டும் அழைத்தார்.
"வா… இங்க உட்காரு. முதல் நாள் எப்படி இருந்துச்சுன்னு முழுசா சொல்லு." அருகில் சுரேஷும் அமர்ந்திருந்தார்.

"காலையில பஸ்ல போனது எல்லாம் சரியா இருந்துச்சா?" என்று சுரேஷ் கேட்டார்.

"ம்ம்… நல்லாதான் இருந்துச்சு சித்தப்பா. தேவி கூட இருந்ததால பயமா எதுவும் தெரியலை." என்றாள்.

"காலேஜ் எல்லாம் பிடிச்சிருக்கா?" என்று கேட்க,  "ரொம்ப பிடிச்சிருக்கு. கிளாஸ்ல எல்லாருமே நல்லா பேசினாங்க. மிஸ்ஸும் நல்லா பழகினாங்க. இந்த இங்கிலிஷ் தான்... எனக்கு சரியா வரலை. ஆனா கத்துப்பேன் சித்தப்பா." என்று லாவண்யா காலையில் நடந்த ஒவ்வொரு விஷயத்தையும் ஆர்வமாகச் சொல்ல ஆரம்பித்தாள்.

அண்ணா நகரில் இறங்கியது முதல் வகுப்பறையைத் தேடியது வரை, முதல் நாள் அறிமுகங்கள், ஆசிரியர்கள், புதிதாகப் பழகிய தோழிகள் என்று எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டிருந்தாள்.
"அப்பாவுக்கும் போன் பண்ணி எல்லாம் சொல்லிட்டேன் சித்தி. காலேஜ் நல்லா இருந்துச்சுன்னு சொன்னதும் ரொம்ப சந்தோஷப்பட்டார்." என்றார்.

"அப்படியா… நல்லது. உங்கப்பா அம்மா மனசு நிம்மதியா இருந்தா போதும். நீ இங்க நல்லா படிச்சு பெயர் எடுக்கணும்." என்றார் இலக்கியா.

"கண்டிப்பா சித்தி." என்று சிரித்தவள் தேவி வரவும் பார்வை அங்கே சென்றது. 

"என்னடி பையை வச்சிட்டு ஓடிவந்தியா" என்று இலக்கியா கேட்க, "ஆமா… பக்கத்து வீடுதானே. கொஞ்ச நேரம் பேசிட்டு வர்றேன் சொல்லிட்டு வந்துட்டேன்." என்றாள் தேவி.

இங்கே தேவி வீடு பக்கமென்பதால் இதுவொரு வசதி. தேவியின் அம்மாவும், இலக்கியாவும் தோழிகள் என்பதால் தேவி பழக்கம். இத்தனை நாள் இலக்கியாவுக்கு இஷிதா என்று ஐந்தாம் வகுப்பு படிக்கும் பெண் மட்டுமென்பதால் தலைகாட்டமாட்டாள். லாவண்யா இங்கு வந்த சில நாளில் தேவியோடு நன்றாக பழகிவிட்டதால் வந்தாள்.

  சித்தப்பா வீட்டில் இரண்டு அறைகள் ஒரு ஹால் கிச்சன் பாத்ரூம் மட்டுமே இருக்க, லாவண்யாவும் தேவியும் மாடியில் சென்று கதை அளந்தார்கள். ஆவுடையப்பன் தாத்தா கூட கால்நடையாக அவரது நண்பர்களோடு உலாவினார்.

   லாவண்யா பெரும்பாலும் அவளது ஊரை பற்றியும், முன்பிருந்த சூழலையும் கூறினால், தேவி இங்கே அவளது தோழிகள் வெவ்வேறு கல்லூரியில் சேர்ந்து விட்டதை தெரிவித்தாள்.

அப்படியே பேச்சு நீண்டது, அப்பொழுது காற்றடிக்க, லாவண்யா துப்பட்டா தோளிலிருந்து ஒருபக்கமாய் நழுவியது. பேசியபடி நடந்துக் கொண்டிருக்க, தேவியோ துப்பட்டா மிதித்தாள், " ஏன் லாவண்யா இந்த துப்பட்டாவை வீட்டுக்கு வந்ததும் ஓரமா கழட்டி வைக்க மாட்டியா? இப்பவுமா கழுத்துல சுத்திட்டு இருக்க. பாரு கால்ல மிதிப்பட்டுடுச்சு" என்றதும், துப்பட்டாவை உதறி, "இன்னிக்கு மட்டும் ஏன் தான் இப்படி ஆகுதோ' என்று மேலே போட்டவளுக்கு கன்டெக்டர் நினைவு வந்தது.

  அதை ஒதுக்கி விட்டு, "எங்க வீட்ல துப்பட்டா போடலைன்னா எங்கம்மா அலமேலு திட்டும். எங்கம்மா சராசரி பெண்மணி. நான் இப்படி தான் இருக்கணும். இப்படி தான் டிரஸ் போடணும். இது படிச்சா போதும்னு பேசற ஆளு. இங்க வந்து படிக்கறது கூட அம்மாவுக்கு பிடிக்கலை. அப்பா தான் படிப்பு முடிஞ்சா வேலைன்னு இங்க தானே பார்ப்போம்னு படிக்க விட்டார். அதுக்கூட சித்தப்பா வீடு இருந்ததால தான். அதோட.. அக்கா மாலதி எங்க வீட்டோட தான் இருக்கா. படிச்சி முடிச்சிட்டா. ஒரு வேலையில இருக்கா. ஆனா வரன் எதுவும் அமைய மாட்டேங்குது. இதுல நான் வேற எங்க அக்காவுக்கு குறுக்கே வந்துடுவேன்னு தான் இங்க கேட்டதும் ஓகே சொல்லிட்டாங்க. இல்லைன்னா வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை." என்றாள்.

  தேவியோ "சரிதான்" என்று கிலுக்கி சிரித்தாள். இருவரும் வீட்டுக்குள் செல்ல, சைக்கிளில் சாரதி அவனது வீட்டிற்கு செல்ல வேகமாய் மிதித்து சென்றான்.‌
 
   சாரதி அவனது ஷிப்ட் முடிந்து, டிப்போவில் பணப்பையையும் டிக்கெட் பையையும் தந்துவிட்டு, வீட்டுக்கு வந்தான்.
  வரும் வழியில் மரவள்ளி கிழங்கு விற்றுக்கொண்டிருக்க, அன்னைக்காக வாங்கியிருந்தான். அதை  கையில் எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழையவும், வியாழன் என்று காமாட்சி அம்மன் விளக்கை புளி போட்டு தேய் தேய்யென தேய்த்தார்.

"அம்மா.. இங்க தான் இருக்கிங்களா? மரவள்ளி கிழங்கு அவிச்சது?" என்று நீட்ட, "கையெல்லாம் புளியும் சோப்புமா இருக்கு. கிச்சன்ல வையா.. வந்து சாப்பிடறேன்." என்றார்.

"ஏன்மா... எப்ப வீட்டுக்கு வந்தாலும் ஏதாவது செய்துட்டே இருக்கியே. எப்ப தான் ரிலாக்ஸா டிவி பார்ப்ப? இல்லை எப்ப பாட்டு கேட்ப. நீ ரெஸ்ட் எடுத்து நான் பார்த்ததில்லைம்மா." என்றான்.

   சாரதி அன்னை காஞ்சனா பக்கத்தில் சுடிதார் ப்ளவுஸ் தைத்து கொடுக்கும் பணியை செய்வதால் பெரும்பாலும் தையலில் நேரம் சரியாக இருக்கும். வீட்டு வேலை எல்லாம் நடுநடுவே செய்வார்‌. அதனால சாரதி காணும் போது கூட வேலைகள் எப்பொழுதும் லைன் கட்டி நிற்கும்.

  "அட நானே வீட்ல சும்மா இருக்கேன். ஏதோ பக்கத்துல தெரிந்தவங்க துணி கொடுக்கவும் தச்சு தர்றேன். போரடிக்கு சாரதி." என்று கூற, அன்னையையே பார்வையிட்டான்.

   இதற்கு முன் அம்மா பெரிதாக வீட்டில் வேலைகளை இழுத்து போட்டு செய்து சாரதி பார்த்ததில்லை. தந்தை சண்முகம் இறந்தப்பின் ஏதாவது செய்துக் கொண்டிருப்பதை கண்கூடாக கவனித்துவிட்டான்.

   பணத்தேவை அதிகமாகியதா? அல்லது அன்னைக்கு தந்தையில்லாமல் மனதை வேறு பக்கம் திசை திருப்ப எதிலாவது செலுத்துகின்றாரா? இதில் கேள்வி வேறா? தந்தை சண்முகம் இறந்ததும் தான் காஞ்சனா கவனத்தை எதிலாவது செலுத்த முற்படுவது புரியவும், கண்ணீர் துளிர்த்தது.

அன்னை எதிரே கண் கலங்கினால் அவரோ மனம் கேளாமல் வருந்துவாரென, உடனடியாக கிச்சனுக்கு சென்று தட்டில் கிழங்கின் தோளை உறித்து சர்க்கரை கொஞ்சம் வைத்து அன்னை முன் வந்தான்.

"ம்மா.. ஆ காட்டும்மா." என்றான்.

  "அட அங்க வைப்பா.. நானே அப்பறம் சாப்பிடறேன்" என்றார். "நான் ஊட்டி விடறேன்மா" என்று ஊட்டவும், கற்பூர தட்டை தேய்த்தவர் பிள்ளை கையால் 'ஆ' வாங்கிக்கொண்டார் காஞ்சனா.

   காஞ்சனாவுக்கு சாரதியை கண்டதும் கணவர் சண்முகத்தின் நினைவு எழுந்தது. அவரும் இப்படி தான், ஆசையாக ஏதாவது வாங்கிக் கொண்டு வருவார். சாரதிக்கு ஒரு பங்கு எடுத்து வைத்துவிட்டு, தனக்கு ஊட்டிவிடுவார்.
  
  "உங்கப்பாவை மாதிரியே இருக்கியே ராஜா" என்றார்.

"நான் ராஜாவா? அடப்போமா. ஆமா அப்பாவுக்கு என்ன இப்படியா சுருட்டை முடி? நான் உன்னை மாதிரில்லமா இருக்கேன்" என்றார்.

காஞ்சனாவுக்கு தான் சுருட்டை முடி. அலைஅலையான  இருக்கும். சண்முகம் இறந்தப்பின் கொண்டைப்போட்டுக் கொண்டார்.

"அடேய்.. அப்பா மாதிரின்னா பாசத்துல அவரை போலிருக்கடா. அவரும் இப்படி தான் எந்த வேலையாவது செய்யறேன். அப்பறம் திங்கறேன்னு சொன்னா கூட கேட்க மாட்டார். மூஞ்சிக்கு நேர சாப்பிடு சாப்பிடுனு நீட்டுவார்." என்று பகிரவும், "ஏன்மா.. நான் பிறந்தப் பிறகுமா? நான் இதுவரை பார்த்ததில்லையே." என்று கேட்டான்.
"அட.. நீ காலேஜ் போறவரை அப்படி தான்டா. என்ன உன் எதிர்ல அதெல்லாம் வச்சிக்க மாட்டார்.  நீ அங்க வர்றேன்னாலே அவர் கவனிச்சிடுவார். என்னை விட்டு நாலடி தள்ளி நிற்பார்" என்று ஏதோ நினைவலையில் சிரித்து கூறிட, சாரதியோ ''எனக்கு பிறகு நீங்க ஏன்மா இன்னொரு பாப்பாவோ தம்பியோ பெத்துக்கலை?" என்று வருத்தமாய் கேட்டான்.
ஏனெனில் வீட்டில் தற்போது அன்னையும் அவனும் மட்டுமிருக்க ஏதோ ஆனந்தமாக தோன்றினாலும், வாழ்க்கையில் வெறுமை தான் எஞ்சியது போல ஒரு மாயை.

"அட... அமையலடா. ஆனா உங்கப்பாவுக்கு பொம்பள பிள்ளைன்னா உசுரு. சின்ன வயசுல வெளிய பெண் குழந்தைங்க யாரையாவது பார்த்தா 'அழகா இருக்கா'னு தூக்கி வச்சிட்டு சுத்துவார்.
   கடைசியா நீ வளரவும், 'என்னடி.. உன்‌மகன் இப்படி நெடுநெடுனு வளருறான். அவனுக்கு பொண்ணு பார்த்தா அதுக்கு ஏத்த மாதிரி பார்க்கணுமா? வரவர ஏதாவது பொண்ணுங்க பஸ்ல ஏறினா, சாரதிக்கு இந்த மாதிரி பொண்ணு அமைஞ்சா நல்லாயிருக்கும்னு தோணுதுடி. முன்ன மக பிறக்கலையேனு மனசுல ஓடும். இப்ப எல்லாம், மருமகளா கண்ணுக்கு தெரியறாங்கனு சொல்வார்." என்றதும் கிழங்கை ஊட்டிவிட்டவன், "அம்மா.. போதும்.. பேச்சு ஸ்டாப் தாண்டி போகுது. கை எல்லாம் ஈரமாகுது. முதல்ல ஈவனிங் டைம் தண்ணில கை வச்சிட்டே இருக்காத. எந்திரிம்மா‌" என்று கூற, "இதோ.. முடிஞ்சிடுச்சுடா." என்று பூஜை பாத்திரத்தை உருட்ட, எல்லாவற்றையும் தண்ணீரில் போட்டுவிட்டு, "அம்மா போதும்மா" என்று விளக்கு ஊதுபத்தி ஸ்டான்ட், கற்பூர தட்டு, சாமிக்கு மணியடிப்பது, என்று எல்லாவற்றையும் தண்ணீர் அண்டாவில் போட்டு உதறி எடுத்து, வீட்டுக்குள் துண்டை எடுத்து தந்தவாறு, "நான் உன்னை ராணியா வாழ வைக்க நினைச்சா நீ சமையக்காரியாவே வீட்ல அங்கீகாரம் ஆகறம்மா" என்று குறைப்பட்டான்

காஞ்சனாவோ "உனக்கு வர்றவ.. எதுல கொடுத்து வச்சவளோ இல்லையோ.. நீ அன்பா கவனிச்சுக்குவடா." என்று கூற, சாரதியோ "எனக்கு வரப்போறவளா... நல்லது.. நானே கன்டெக்டர் வேலையில பிசியா இருப்பேன். அந்த பொண்ணே என்னை தேடி வந்தா அப்ப பார்ப்போம். இப்ப  டீ போடும்மா" என்றான்.‌

"என் வேண்டுதலே அவ எங்க இருந்தாலும், எந்த ஊர்ல இருந்தாலும் உன்னை தேடி இந்த ஊர்ல உனக்கு முன்ன வந்து நிற்பா பாரு" என்று கூறினார்.

"ஆஹ்.. வரச்சொல்லுங்க அவளை" என்று அன்னை போடும் டீயில் சர்க்கரையை சேர்த்து கூறினான்.

காஞ்சனாவோ "நிஜம்டா. ஒருத்தி வருவா" என்று ஆருடம் கூறினார்.‌

-தொடரும்.
‌-பிரவீணா தங்கராஜ்.


 
Posted : September 1, 2026 6:54 am
Kalidevi reacted
(@kokila)
Posts: 5
Active Member
 

அவ தான் வந்துட்டாளே

அம்மா பையனின் உலகம் அழகு


 
Posted : September 1, 2026 7:47 am
(@crvs2797)
Posts: 188
Estimable Member
 

பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 4)

பரவாயில்லையே சாரதி ரொம்ப நல்ல பிள்ளையா இருக்கிறானே..
பெண் பிள்ளைங்க கூட பிறந்தவன் தான் நாலையும் யோசிச்சு அனுசரிச்சு போவாங்கன்னு சொல்லுவாங்க... ஆனால், இந்த சாரதி அப்படியில்லைப் போல. அன்பு காட்டுறதாகட்டும், அனுசரிச்சு போகறதாகட்டும் அசத்துறானே. ஒருவேளை, வீட்டோட தலைவன் அப்பா தன்னோட மனைவி கிட்ட எப்படி நடந்துக்கிறாங்களோ, அதைப் பார்த்தே பிள்ளைங்களுக்கு இதெல்லாம் ஆட்டோமெடிக்கா வந்துடும் போல.

எது எப்படியோ, அந்த தாயோட ஆசை கூடிய சீக்கிரம் பலிச்சு, அவங்களுக்கு ஏத்த மருமகள், சாரதிக்கேத்த மனைவி கூடி சீக்கிரம் வரட்டும். ததாஸ்து !

😐😐😐
CRVS (or) CRVS 2797


 
Posted : September 1, 2026 8:02 am
(@subhakumar85)
Posts: 112
Estimable Member
 

Athellam already vanthachu.. anna age gap neraya erukkumo🤔🤔


 
Posted : September 1, 2026 8:43 am
(@guna-sundari)
Posts: 138
Estimable Member
 

Wow sarathi super. Very soon u will meet ur better half. Very intresting sis.


 
Posted : September 1, 2026 9:21 am
(@kavi-bharathi-arunkumar)
Posts: 126
Estimable Member
 

Sarathi unnaku ah na jodi already entry kuduthachi chennai ku neyum parthachi aana enna athu ava than nu unnakum theriyala avalukku theriyala ah .

Shamnugam avar pondati rombhavae nalla vitham ah nadathi irukaru kanchana sollurathu la yae theriyuthu sarathy neyum apadi than irukanum 


 
Posted : September 1, 2026 11:26 am
(@kalidevi)
Posts: 140
Estimable Member
 

sarathy ponnu kedaikamala kandipa varuva vanthuta eni tha sarathy kathaila varuva


 
Posted : September 1, 2026 3:42 pm
(@kothaihari)
Posts: 125
Estimable Member
 

அம்மா பையனின் உலகமே தனி தான்


 
Posted : September 7, 2026 11:36 pm

Scroll to Top