மதுர ஜில்லா... மச்சானே!-60
அத்தியாயம்-60
அருளாளனின் வார்த்தைகள் இனியனின் மனதை இன்னும் கனக்கச் செய்தது.
"ஏன்டா... ஏதோ இதைப் பண்ணணும், அதைப் பண்ணணும்னு ஓடிட்டு இருந்த. இன்னைக்கு என்ன வெட்டியா வீட்டுல உட்கார்ந்திருக்க?" என்று கேட்டார்.
"ஒண்ணுமில்லைப்பா..." என்றான் இனியன்.
"டேய்... ஏதாவது பண்ணுடா. இப்படியே இருந்தா எப்படி? கல்யாணம் கட்டி வச்சாச்சு. உத்தியோகம் புருஷ லட்சணம் டா. நீ என்ன வெட்டியா விட்டத்தை பார்த்துட்டு இருக்க" என்றதும் அதற்கு மேல் ஒரு வார்த்தை கூட பேசாமல் எழுந்து வெளியே சென்றான் இனியன்.
அரிசி களைந்து கொண்டிருந்த மதுரா, அவன் முகத்தில் தெரிந்த ஏமாற்றத்தைப் பார்த்து மனம் நொந்தாள்.
வேல்விழி அருகே வந்து, "என்னம்மா... என்னாச்சு? உங்களுக்குள்ள ஏதாவது சண்டையா?" என்று கேட்டார்.
மதுரா தயக்கத்துடன் "அய்யோ அதெல்லாம் இல்லைங்க அத்தை." என்றவள் நடந்ததை எல்லாம் கூறினாள்.
"நேத்து சொன்னாரு. எல்லா வேலைகளும் முடிஞ்சிடுச்சுன்னு. லோன் பணம் கைல வந்ததும் உங்களுக்குச் சொல்லணும்னு ரொம்ப சந்தோஷமா இருந்தாரு. ஆனா... காவ்யாக்கா ஆரம்பிக்கப் போற பிசினஸும் இதே தானாம். இப்ப தானும் இதையே ஆரம்பிச்சா... போட்டிக்கு பண்ணறதா பேசுவாங்களோன்னு யோசிக்கறாரு. அதனால பிசினஸையே விட்டுடற மாதிரி பேசுறாரு. அவர் பேசறப்ப இதெல்லாம் எவ்ளோ ஆசையா முயற்சி பண்ணியது தெரிந்தது." என்று வேறு கூறினாள்.
வேல்விழி பெருமூச்சு விட்டார்.
"இதுக்குத்தான் எல்லாத்துக்கும் போட்டி கூடாதுன்னு சொல்வாங்க. சில சமயம் சாதாரணமா நடக்கிற விஷயத்தைக் கூட போட்டியா எடுத்துக்குவாங்களோன்னு யோசிக்க வேண்டிய நிலை வந்துடுச்சு பாரு." அருளாளனும் வருத்தமாக, "முன்னாடி இருந்தா 'ஆரம்பிடா'ன்னு சொல்லிருப்பேன். இப்ப என்னத்த சொல்ல? வேற தொழில் பாருன்னு தான் சொல்லணும் போல.. நான் வேற அவனை பேசிட்டேன்" என்றார்.
மதுராவோ எதுவும் பேசவில்லை.
அமைதியாக சமையலறைக்குள் சென்று, இனியனுக்கு பிடித்த இரண்டு வகை கூட்டு, குழம்பு செய்ய மசாலா அரைக்க ஆரம்பித்தாள்.
அதே நேரம் தூரிகாவும் நிலானியும் வழக்கம்போல் கல்லூரிக்குப் புறப்பட்டனர்.
பேருந்து நிறுத்தத்தில் எழிலரசன் நின்றிருந்தான்.
"ஹாய் அக்கா... ஒண்ணும் பயமில்லையே?" என்று தூரிகாவிடம் கேட்டான்.
"இல்லடா... இரண்டு அண்ணனும் ஒரு தம்பியும் இருக்க என்ன பயம். பார்த்துக்கலாம்.'' என்று திடமாக கூறினாள்.
நிலானி அருகிலேயே நின்றிருந்தாள். ஆனால் எழிலரசன் அவளைப் பாராதது போல காட்டிக் கொண்டான்.
பேருந்து வந்ததும் மூவரும் ஏறினார்கள். ஒரு இருக்கை காலியாக இருந்தது. தூரிகா தோழி தான் அங்கே அமர்ந்திருக்க "அக்கா... நீ உட்காரு." என்று தூரிகாவை அமர வைத்தான் எழிலரசன்.
நிலானி நின்று கொண்டிருந்தாள். எழிலரசனும் அவள் அருகிலேயே கம்பியைப் பிடித்தபடி நின்று நண்பர்களுடன் பேசிக் கொண்டே வந்தான். அவன் நண்பர்கள் வேறு இருவர் கூடயிருந்தனர்.
இரண்டு நிறுத்தங்கள் கடந்ததும் இரண்டு பேர் இறங்கினர்.
நிலானி உடனே சென்று அமர்ந்தாள். தூரிகாவை அழைக்க நினைத்தாள்.
ஆனால் தூரிகா அண்ணியின் வகுப்புத் தோழியுடன் புத்தகத்தை வைத்து ஏதோ படிப்பு விஷயமாக பேசிக் கொண்டிருந்ததை கண்டதும்
'பரவாயில்லை...' என்று ஜன்னல் பக்கம் திரும்பி அமர்ந்தாள்.
சில நொடிகளில் தன் அருகில் யாரோ வந்து அமர்ந்ததை உணர்ந்தாள். ஆனாலும் திரும்பிப் பார்க்கவில்லை.
'திரும்பினா... அந்த எருமையை தான் பார்க்கணும்...' என்று நினைத்தபடி வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள்.
பக்கத்தில் ஆண் குரல் கேட்டதும் சட்டென்று திரும்பினாள். அங்கே எழிலரசன் தான் நின்றுக் கொண்டிருந்த நண்பனுடன் உரையாடினான்.
"ஏய்.. நீ... நீ எதுக்கு இங்க உட்கார்ந்த?" என்று கீச்சு குரலில் கேட்டாள் நிலானி.
"அடிங்க..." என்று பல்லைக் கடித்த எழிலரசன். "நீயா? பல்லைத் தட்டிடுவேன். 'மச்சான்'ன்னு கூப்பிடு. உன்னை விட இரண்டு வருஷம் பெரியவன் நான். அத்தை பொண்ணாச்சேன்னு இத்தனை நாள் அமைதியா இருந்தேன். நீயாம் நீ." என்றதும் அவள் வாயைத் திறக்க முயன்றதும்,
"ஏதாவது எதிர்த்து பேசிப் பாரு... செங்கல்லை வச்சி வாயை மூடிடுவேன். இல்ல தையல் மிஷினால வாயை தைச்சிடுவேன்." என்று மெதுவாக மிரட்டினான்.
அவன் குரல் அவளுக்கு மட்டும் கேட்கும் அளவில்தான் பேசியிருந்ததான்.
சுற்றியிருந்தவர்கள் யாரும் கவனிக்கவில்லை. நிலானியும் அமைதியாகி விட்டாள்.
கல்லூரியில் இறங்கியதும் தூரிகா தன் வகுப்பிற்குச் சென்றாள். பிரபு போலி சான்றிதழ் விவகாரத்தில் கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டிருந்ததால் அவன் நிலானி வகுப்பில் இல்லை.
வசந்த் மட்டும் வழக்கம்போல் இருந்தான். ஆனால் தூரிகா எதற்கும் பயப்படாமல் தன் வகுப்பை நோக்கி நடந்தா
இங்கு அகிலன் வீட்டில்.
காவ்யா வழக்கத்தை விட தாமதமாக எழுந்தாள
"தூரிகா காலேஜ் போயிட்டாங்களா" என்று கேட்டாள்.
"ம்ம்ம் போயிட்டா." என்றான் அகிலன்.
"தனியாவா?" என்று அக்கறையில் கேட்டாள்.
"அதெல்லாம் பயப்பட மாட்டா. நான் இல்லைன்னு பயந்திருப்பா. எனக்கு பதில் இனியன் வந்து பேசவும் திடமாயிருப்பா. இனியன் வேற கூடவே வந்துட்டு போனானாம்.
இப்ப வசந்துக்கு வார்னிங் போனதால தூரிகா பக்கம் திரும்ப மாட்டான். நீ போய் டீ கொண்டா." என்றான்.
"ஹலோ... ஒரு பிசினஸ் வுமனை டீ போட ஏவுறீங்களா?" என்று இடுப்பில் கை வைத்தாள்.
"பார்டா... சமையகட்டுக்கு போனா எங்கம்மா தான் டீயை தந்து விடுவாங்க. பொம்மை மாதிரி வாங்கிட்டு இங்க வந்து நீட்ட என்னவாம்" என்றான் அகிலன்.
"ம்கூம்... பிசினஸ் ஆரம்பிச்சதும் உங்களுக்கு முன்ன வேலைக்கு ஓடிடுவேன்" என்று கூறி சென்றாள்.
"அத்தை டீ ரெடியா" என்று வந்தவளிடம், "அதெல்லாம் ரெடியா இருக்கு. இதோ... எடுத்துட்டுப் போம்மா." என்று இரண்டு டம்ளர்களை அவளிடம் கொடுத்தார் மீனாட்சி.
காவ்யா 'தேங்க்யூ" என்று டீயுடன் அறைக்குள் திரும்பி வந்தாள்.
அகிலன் கைபேசியை பார்த்துக் கொண்டிருந்தான்.
அவள் அவன் கையிலிருந்த போனைப் பிடுங்கி கட்டிலில் போட்டுவிட்டு அவன் அருகில் அமர்ந்தாள்.
"ஓய்... என்னடி? போனை தூக்கி போடற" என்றான் அகிலன். சில நேரம் கொஞ்சும் பேச்சில் 'டி' எட்டி பார்த்தது. அந்தளவு நெருங்கியிருந்தான்.
"எப்ப பாரு போன். நான் இங்க இருக்கேன்" என்றாள்.
"ரகுவைப் பார்க்க போகணும் காவ்யா. நான் இல்லாதப்ப தங்கச்சிக்கு ஒன்னு என்றதும் அவனும் ஒரு அண்ணாவா முன்ன வந்து நின்னுயிருக்கான்." என்றவன் டீயை பருகினான்.
"போகலாம். போகலாம்" என்று கூற, "அப்ப போனை கொடு." என்று எடுக்க முனைய,
"மாட்டேன்." என்றாள்.
"காவ்யா..." என்றவன் அவளது குழந்தைத்தனமான அழிச்சாட்டியத்தில் அவளை பார்க்க, "கொஞ்ச நேரம் கூடவே இரு." என்றாள்.
அவன் சிரித்தபடி "ராத்திரி முழுக்க கூடத்தானே இருந்தேன்." என்றான்.
"இப்பவும் இரு." என்று அவன் நெஞ்சில் விரலால் கோலம் போட்டாள்.
"சரிவராது.... பிசினஸ் படுத்துக்கும்." என்று எழ முயன்றவனை தள்ளிவிட்டு மேலே சாய்ந்தாள்.
"கருத்த மச்சானே... கச்சத்தனம் பண்றியே ஹனிமூன் கூட போகலைடா" என்று அவன் கன்னத்தில் மெதுவாகக் கடித்தாள்.
"அடிப்பாவி... வேம்பயர் பொண்டாட்டிடி நீ. இப்படிக் கடிச்சு விளையாடிட்டு இருக்க... நான் திருப்பிக் கடிச்சேன்னா தாங்க மாட்ட." என்று சிரித்தபடி அவளை மெதுவாகக் கீழே தள்ளினான்.
"கல்யாணமே ஹரிபரியா நடந்துடுச்சு. இதுல நாம இரண்டு பேருமே லவ் பெயிலியர் கேஸ். கொஞ்சம் கூட ஸ்பேஸ் இல்லாம இருக்கோம்." என்று கூற, "ஆமா ஆமா ஸ்பேஸ் இல்லாம தான் இருக்கோம்" என்று இறுக்கமாக இடைவெளியின்றி'ஸ்பேஸ்' இல்லாமல், அவனை தன் மீது கட்டிக்கொண்டவளாக கூறினாள்.
"ம்ம்ம்.. அப்படியிருக்க ஹனிமூன் பத்தி பேசற." என்றான் அவளது மூக்கை கிள்ளி.
"போப்பா... வீட்லயேயிருந்தா போரடிக்கு" என்றாள்.
அகிலனோ "இன்னிக்கு இடம் பார்த்துட்டு வர்றேன். பிறகு மெஷின் எங்க கிடைக்கும் ஏதுனு லோன் பத்தி கேட்டு வைக்கேன். அதுக்கு முன்ன ரகுவை பார்த்துட்டும் வர்றேன். சரியா." என்றான்.
காவ்யா சரியென்று கூறவும், சட்டென எழு முற்பட, "பிறவென்ன? என்ன ரிலீஸ் பண்ணலாமே!" என்று காவ்யா அவள் கட்டிபிடித்தே கிடக்க, கூறினான்.
"நானும் வரட்டா இடம் பார்க்க?" என்று கேட்கவும், "என் ஜோலியை பார்க்க விடாம கூடவே பிசாசு போல வர பிளான் போடற" என்று கேட்க, ஆமென்று தலையாட்டினாள்.
"ரகுவை பார்த்துட்டு வந்து கூட்டிட்டு போறேன்." என்றதும் விடுவித்திட, அகிலன் புறப்பட தயரானான்.
மீனாட்சியிடம் "அம்மா... அவளுக்கு போரடிக்கு போல. ஏதாவது கூப்பிட்டு வச்சி சொல்லி தாங்கம்மா. ரகுவை பார்த்துட்டு வந்து, இவளோட பிசினஸ் சம்பந்தமா கூட்டிட்டு போய் இடம் பார்த்துட்டு வந்துடறேன்." என்று அங்கிருந்த கேழ்வரகு கூழை தொண்டையில் சரித்து சென்றான்.
மீனாட்சியோ மகன், காவ்யாவை சரளமாக 'அவளுக்கு' என்ற வார்த்தை சுட்டி பேசியதே அகமகிழ்ந்தார்.
"சரிப்பா" என்றார்.
அகிலன் புல்லட்டை எடுத்து ரகுவை காண சென்றான். ரகுவிற்கு அப்படியென்றும் பெரிய அடியில்லை கீழே தள்ளிவிட்டதில் கையில் லேசான சிராய்ப்பு மட்டும்.
அகிலனை வரவேற்று அமர வைத்து மோர் கடைந்திட கூறினான்.
அவன் மனைவியும் அகிலனுக்கு மோரை தந்துவிட்டு, "என்னன்னா வீட்ல பிரச்சனைனு சொன்னாங்க. எல்லாம் சரியாகிடுச்சா? அண்ணி என்ன சொன்னாங்க.. அமெரிக்கா எல்லாம் எப்படி இருந்தது" என்று விசாரித்தார்.
"அட சொல்லிட்டானா... தூரிகா பிரச்சனை போய் நிலானி பிரச்சனை வந்துடுச்சும்மா." என்று நண்பனும் அங்கிருக்க பகிர்ந்துகொண்டான்.
"அடப்பாவி... இந்த வசந்த் தான் அவனை ஏத்திவிட்டிருக்கணும். ஆனா அகிலா.. இது இப்ப தெரிந்தது நல்லதா போச்சு.
நிலானி மனசை தந்தேன்னு சொல்லிட்டு எங்கயாவது இழுத்துட்டு போயிருந்தா.. ஸப்பா. இப்ப நிலானி புரிஞ்சிக்கும்ல" என்று கூற அகிலனும் ஆமோதிதாதவனாக தலையாட்டினான்.
"ரொம்ப நன்றிடா. நீ அன்னிக்கு தூரிகாவுக்காக வந்ததுக்கு." என்றான்.
"அட நான் வரலைன்னாலும் அந்த இனியன் வந்துட்டான்டா. சொல்லப்போனா என்னை அடிச்சதுக்கும், தங்கச்சியை அழவச்சதுக்கும் தூக்கி போட்டு மிதிச்சி, போலீஸை வரவழைச்சி தள்ளிட்டான். நீ செய்ய வேண்டிய இடத்துல அவன் நின்னான்டா.
எனக்கே ஆச்சரியமா போச்சு. பையபுள்ள திருந்திட்டானாடா" என்று கேட்டு சிரித்தான்.
அகிலனோ 'தெரியலை.. மதுரா கர்ப்பத்தை அழிச்சதும் அவன் அவனோட தவறை புரிந்திருக்கலாம். அதோட காவ்யாவிடம் வம்பு பண்ண வேண்டாம்னு, ஒதுங்கலாம். நான் மதுரா வாழ்க்கை எதுவும் சங்கடமாகிடக்கூடாதுனு ஒதுங்குவது போல அவனும் நினைச்சிருக்கலாம்." என்று சரியாக யூகித்தான்.
"அதோட தூரிகா மேல பாசம் இருக்கு." என்றான்.
ரகு ஆமோதிப்பாக உம் கொட்ட, 'டேய்.. இதெல்லாம் உனக்கும் தங்கச்சிக்கும்." என்று அமெரிக்காவிலிருந்து வாங்கிக் கொண்டு வந்தவையை தந்தான்.
"சரிடா.. ஒரு வேளை இருக்கு.. கிளம்பறேன்." என்று எழுந்து கொள்ள, "சாப்பிட்டு போங்களேன் அண்ணா" என்றாள் ரகுவின் மனைவி.
"இல்லைம்மா... வர்றப்ப தான் கூழ் குடிச்சது. காவ்யாவோட பிசினஸுக்கு ஒரு இடம் பார்க்கணும். அதனால அவளையும் அழைச்சிட்டு போகணும். இன்னொரு நாள் வந்து சாப்பிடறேன்மா" என்று மறுத்தான்.
ரகுவும் "குடும்பஸ்தன்ல. ஓடறான் பாரு.. என்னடா அமெரிக்காவுல தான் முதலிரவு கொண்டாடனும்னு முடிவு பண்ணி சமரசம் ஆயாச்சு போல" என்று சிரிக்க அகிலன் "ஏன்டா... அதான் தெரியுதுல்ல" என்று சிரித்துவிட்டு புறப்பட்டான்.
வழிநெடுக மனம் இலகுவாக மாறியிருந்தது. அப்பொழுது அவன் இடம் பார்க்கலாமென்ற இடத்தின் ஓனர் எதிரே வரவும், நிறுத்தி பேச ஆரம்பிக்க அகிலன் முகம் லேசாக மாறியது. அவர் பேசி சென்றப்பின், அகிலன் வீட்டுக்கு வர "அத்தை.. அவர் வந்துட்டார் நான் போயிட்டு வர்றேன்" என்று ஓட முயன்றவளிடம், "இரு காவ்யா.. உள்ள வரட்டும்." என்றார்.
அகிலன் முகம் வாட்டமாய் வரவும், "போலாமா?" என்று கேட்க, மீனாட்சியோ தண்ணீரை நீட்டினார்.
அதை வாங்கி பருகியவன், "கொஞ்சம் யோசிக்கணும் காவ்யா" என்று அறைக்குள் செல்ல, மீனாட்சியோ 'என்னாச்சுனு மெதுவா கேளும்மா. கோபப்படாத." என்று மருமகள் கைப்பிடித்து கூற, காவ்யா தலையாட்டி உள்ளே வந்து ''என்ன அகில்? என்ன யோசிக்கணும்." என்றாள்.
''நான் ஒரு நிலத்தை யோசித்து வைத்தேன்ல.. அந்த இடத்தை இனியன் விலைக்கு கேட்டிருக்கான். அதோட... அவனும் உன்னை போல ஏற்றுமதி பிசினஸ் பண்ணறதா தான் காரணம் சொன்னானாம்.
வர்றப்ப தெரிந்த்வர் பேங்க்ல வேலை செய்தவரையும் பார்த்தேன். அவரும் இனியனுக்கு ஏதோ லோன் எல்லாம் வந்துட்டதா சொன்னார். அதான் ஒரே யோசனையா இருக்கு." என்றான்.
''என்ன போட்டிக்குனு வர்றானா அவன். இந்த காவ்யாவை பத்தி தெரிந்தும் வம்பு வளர்க்கறான்." என்று கத்த அகிலனோ "காவ்யா..
அவன் எனக்கு அண்ணன். வார்த்தை அளந்து வரட்டும்" என்றான்.
காவ்யாவோ 'வாட். நான் என்ன தப்பா பேசறேன். என்ன அதட்டறிங்க.' என்றாள்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்
மதுர ஜில்லா மச்சானே !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 60)
அடிப்பாவி...! இந்த காவ்யா என்ன திடீர்ன்னு ரௌடி மாதிரி கத்த ஆரம்பிச்சிட்டாள்...? இவ வரதுக்கு முன்னாடியே இனியன் லோன், இடம் எல்லாம் வாங்கி வைச்சிட்டான் தானே. அவனும் இப்ப தயங்கி பிசினஸையே தள்ளிப் போட்டுட்டான் தானே..?
இப்ப இது எங்க போய் முடியப் போகுதோ தெரியலை..?
😀😀😀
CRVS (or) CRVS 2797
Kaviya ah vae than ah sonna indha idea aval um iniyan than serndhu yosichom apadi nu appo.ivaluku oppose ah panran nu eppudi solluva actually avan ella velai yum parthum iva just information ah convey pannathu ku yae avan drop panna lam nudecide pannitan athu theriyama iva kathi kitu iruku ah
-
மதுர ஜில்லா... மச்சானே!-28
7 days ago
-
மதுர ஜில்லா... மச்சானே-43
3 weeks ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-67
3 weeks ago
-
மதுர ஜில்லா... மச்சானே-70 (முடிவுற்றது)
3 weeks ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-39
3 weeks ago
- 25 Forums
- 330 Topics
- 1,589 Posts
- 2 Online
- 420 Members
