மதுர ஜில்லா... மச்சானே!-61
அத்தியாயம்-61
அகிலன் பேசி முடித்ததும் காவ்யா முகத்தைத் திருப்பிக் கொண்டு நின்றாள். அவளருகே வந்தவன், மெதுவாக அவள் தாடையைத் தொட்டு தன்னைப் பார்க்க வைத்தான்.
"அவன்... இவன்னு நீ பேசறதே தப்பு காவ்யா. என்னை என்ன வேணும்னாலும் சொல்லு." என்றான்.
"போடா..." என்று முகத்தைச் சுளித்தவள், "இது என்னோட பிசினஸ். நான் எவ்வளவு கனவு கண்டேன் தெரியுமா?" என்றாள் கோபமாக.
அகிலன் அமைதியாக அவளைப் பார்த்தான்.
"நெஞ்சைத் தொட்டு சொல்லு காவ்யா... இது உன்னோட கனவா? இல்ல இனியனோட கனவா?
நீ அமெரிக்காவுல வளர்ந்த பொண்ணு. இந்தியாவுல... அதுவும்... மதுரை மாதிரி ஊர்ல இருந்து ஏற்றுமதி பிசினஸ் பண்ணணும்னு நீ யோசிச்சிருப்பியா?
இந்த ஐடியாவே இனியனோடது. அவன் பல நாளா இதுக்காக ஓடிட்டு இருக்கான். கல்யாணத்துக்கு முன்னாடியே எல்லா ஏற்பாடும் பண்ணிட்டான். இப்போ பேங்க் லோனும் சேன்ஷன் ஆயிருக்கு.
இப்ப நாம இதே நேரத்துல இதே பிசினஸ் ஆரம்பிச்சா... அவன் மனசுல என்ன தோணும்? கோபம் வராதா? பழி வாங்க தோணாதா?
அதனாலதான் நான் சொல்றேன்... நாம கொஞ்சம் சைலண்ட்டா விலகி வழி விட்டுடலாம்." காவ்யா உடனே மறுத்தாள்.
"என்னால எப்படி சும்மா இருக்க முடியும் அகில்? இந்த ஊர் ரொம்ப அழகுதான். பசுமை, அமைதி... எல்லாமே பிடிக்கும். ஆனா ஒரு கட்டத்துக்கு மேல என்னால சுயமா சம்பாதிக்காம இருக்க முடியாது.
உனக்கே தெரியும்... அமெரிக்காவுல ஸ்கூல் படிக்கறப்பவே பார்ட் டைம் ஜாப் பாக்க ஆரம்பிச்சிடுவாங்க. நான் பதினாலு வயசுல இருந்து சம்பாதிச்சு பழகியவ.
என்னால பின்னாடி போக முடியாது." என்று படபடவென கூற, அகிலன் ஆழமாக மூச்சை இழுத்தான்.
"அப்ப இனியன் மட்டும் பின்னாடி போவானா? அவன் இடம் பார்த்துட்டான்... லோன் வந்துடுச்சு... இது தெரிஞ்சதும் அவன் எவ்வளவு உடைஞ்சிருப்பான் தெரியுமா?
ஏற்கனவே மதுராவுக்காக அவன் வாழ்க்கை எவ்வளவோ கஷ்டப்பட்டிருக்கு.
இப்போ நம்மால ஒரு பிரச்சனை முளைக்கக் கூடாது காவ்யா. ப்ளீஸ்..." இருவருமே தங்கள் முடிவில் உறுதியாக இருந்தனர்.
ஒருவர் மீது ஒருவர் கோபம் கொள்ளாமல், ஆளுக்கொரு பக்கம் சென்று அமர்ந்தனர்.
மதியம் மீனாட்சி சாப்பிட அழைத்தபோது, இருவரும் முகத்தைத் தூக்காமல் வந்து அமர்ந்தனர்.
"என்னப்பா? என்னாச்சு?" என்று மீனாட்சி கேட்டதும், காவ்யா நடந்ததை எல்லாம் மளமளவென்று சொல்லிவிட்டாள்.
அதியமான் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தவர், "பையன் சொல்றதும் சரிதானேம்மா..." என்றார்.
அந்த பதில் காவ்யாவுக்குப் பிடிக்கவில்லை.
எதுவும் பேசாமல் சாப்பிட்டு முடித்தவள் நேராக அறைக்குள் சென்றுவிட்டாள்.
மீனாட்சியும் அதியமானும் அகிலனைப் பார்த்து,
"ஏய்யா... சண்டை பெருசாகாம பார்த்துக்கோ. பொறுமையா புரியவை." என்றார்.
"சரிம்மா..." என்றவன் அறைக்குள் வந்தான்.
மெத்தையில் படுத்தபடி நகத்தை கடித்துக் கொண்டிருந்தாள் காவ்யா.
அமைதியாக அருகில் அமர்ந்த அகிலனின் கை, அவள் இடையை மெதுவாக வருடியது.
அதைத் தட்டிவிட மனம் வரவில்லை. குறுகுறுப்பாக நெளிந்தவள், திடீரென்று அவன் கன்னத்தில் வெறித்தனமாக கடித்து வைத்தாள்.
"அய்யோ... வலிக்குது காவ்யா." என்று சிரித்தபடியே வலியைத் தாங்கினான். அவள் கோபம் தீரும் வரை அமைதியாக அந்தக் கடியை வாங்கிக் கொண்டிருந்தான். சில நொடிகள் கழித்து அவனை விட்டவள் அவனை கூடுமானளவு முறைத்து விட்டு திரும்பினாள்.
அகிலன் கன்னத்தை தேய்த்து, வலியை தாங்கியிருக்க, காவ்யா அகிலன் முன் வந்தாள். "என் கூட வாங்க." என்றாள்.
"எங்க?" என்றான் புரியாமல்.
"பெரிய மச்சான்கிட்ட பேசணும்." என்றாள்.
"காவ்யா..." என்று மறுக்க முயன்றான் அகிலன்.
"பெரிய மச்சான்னு மரியாதையா தான் பேசுறேன். எந்தப் பிரச்சனையும் பண்ண மாட்டேன். நீங்க கூட வந்தா மட்டும் போதும்." அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டே வெளியே வந்தாள்.
எப்படியும் மருத்துவமனையில் அகிலனிடம் முதிர்ந்தவளாக தான் பேசினாள். அதே போல நிலானி வீட்டிலும் இனியன் இருந்த போதும் ஏதும் பிரச்சனை இல்லாமல் போனதை நம்பி இங்கும் அழைத்து செல்ல புறப்பட்டான்.
வேறு வழியில்லாமல் அகிலனும் புல்லட்டை எடுத்தான். அவன் ஏறி அமர்ந்ததும், இருபுறமும் கால் போட்டு அவன் பின்னால் ஏறி அமர்ந்தாள் காவ்யா.
"ஆங்... அவன் வீட்டுக்கு போங்க..." என்று கூற, அகிலன் கண்ணாடியில் பார்க்க ''ஸப்பா... பெரிய மச்சான் வீட்டுக்கு போங்க." என்று திருத்திக் கொண்டாள்.
அகிலனுக்குள் லேசான புன்னகை பிறந்தது.
இனியன் வீட்டை நெருங்கிய பொழுது, புல்லட்டின் சத்தம் கேட்டதும் மதுரா கிச்சனில் இருந்தவாறு 'அகிலன் மச்சான் வண்டி. அடுத்த நொடியே தலையசைத்தாள்.
'இல்ல... அவர் இங்க வர மாட்டாரு.' என்று நினைத்தவள், மாங்காய் ஊறுகாய்க்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டிருந்தாள்.
ஆனால் சில விநாடிகளில் புல்லட் வீட்டின் முன் நின்ற சத்தம் கேட்டது.
கூடத்தில் அமர்ந்திருந்த இனியனும் எழுந்து நின்றான்.
அகிலனும் காவ்யாவும் உள்ளே வந்தனர். "வாய்யா அகிலா... வாம்மா..." என்று வேல்விழி வரவேற்றார்.
அருளாளனும் உள்ளிருந்து வெளியே வந்தார்.
காவ்யா சிறிது பதட்டத்துடன்,
"நல்லாயிருக்கேன் பெரிய அத்தை... நான்... பெரிய மச்சான்கிட்ட பேச வந்திருக்கேன் அத்தை" என்றாள். அந்தச் சூழலின் இறுக்கம் கொஞ்சம் தளர்ந்தது.
அப்போது உள்ளிருந்து வந்த மதுராவிடம், "ஐஸ் வாட்டர் கொஞ்சம் கொண்டு வா." என்றான் இனியன்.
மதுரா உடனே ப்ரிட்ஜ் தண்ணீரை எடுத்து வந்து கொடுத்தாள்.
'காவ்யாவுக்கு கொடு.' என்றது போல கண்ணசைக்க "தேங்க்யூ..." என்று வாங்கிக் குடித்தாள் காவ்யா.
"உட்காருங்க..." என்று அகிலனை அமர வைத்தான் இனியன். அனைவரும் அமைதியாக அமர்ந்ததும்,
"என்ன பேசணும்?" என்று கேட்டான்.
அகிலன் காவ்யாவைப் பார்த்தான். அவளே பேச ஆரம்பித்தாள்.
காவ்யாவே மெதுவாகத் தொண்டையைச் செருமிக் கொண்டு பேச ஆரம்பித்தாள்.
"நான் இந்தியாவுக்கு வந்து கல்யாணம் பண்ணிட்டு இங்கேயே செட்டில் ஆனதும், ஒரு பிசினஸ் ஆரம்பிக்கணும்னு முடிவு பண்ணியிருந்தேன். அமெரிக்காவுல ரிசப்ஷனுக்கு வந்த சில பிசினஸ்மேன்கள்கிட்ட கூட பேசினேன். அவங்ககிட்ட இருந்து ஆர்டரும் வாங்கியிருக்கேன்.
அதுக்கப்புறம் இடம், மெஷின், லோன் எல்லாத்தையும் பார்த்து ஆரம்பிக்கலாம்னு யோசித்தது.
ஆனா... நாங்க பார்க்க நினைச்ச அதே இடத்தை..." என்று பேசிக் கொண்டிருந்தவள் ஒரு நொடி அகிலனைப் பார்த்தாள்.
அகிலன் கண்களாலேயே, 'மெதுவா பேசு...' என்று சைகை செய்தான். "அதே இடத்தை... நீங்க விலைக்கு கேட்டிருக்கீங்கள்னு தெரிஞ்சுச்சு. பாதி அமௌன்ட் கூட கொடுத்தாச்சுனு சொன்னார்." அவள் பேசி முடிக்கவும், இனியன் அமைதியாக தலையசைத்தான்.
"ஆமா... பாதி பேமெண்ட் கொடுத்துட்டேன். லுக் அது உங்களுக்குப் போட்டியா இல்லை. நான் ஏற்கனவே முடிவு பண்ணி, அதுக்கான எல்லா வேலையும் முடிச்சிட்டிருந்தேன்.
உண்மையைச் சொல்லணும்னா. நீயும் இதே பிசினஸை இங்கே ஆரம்பிக்கப் போறேன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல.
இப்பவும் சொல்றேன்...
எனக்கு யார்கிட்டயும் போட்டி போடணும்னு இப்ப தோணலை.
பிரச்சனை வளர்க்கணும்னும் இல்லை. என்னோட வாழ்க்கையை... மதுராவோட நிம்மதியா வாழணும்.
அவ்வளவுதான்." அவன் பேச்சு முடிந்ததும் சில நொடிகள் அமைதி நிலவியது.
காவ்யா அவனை நேராகப் பார்த்தாள். "நானும் போட்டிக்காக இதை பண்ணல பெரிய மச்சான். எனக்கும் பிசினஸ் ஆரம்பிக்கணும்னு ஆசை. அதைதான் சொல்ல வந்தேன். ஆனா..." என்று இழுத்தாள்.
"ஆனா...?" என்று இனியன் கேட்டான். காவ்யா ஆழமாக மூச்சை இழுத்தாள். "நாம தனித்தனியா ஆரம்பிக்கறதுக்கு பதிலா... முன்னாடி பேசியது மாதிரி... பாதி இன்வெஸ்ட்மெண்ட் நீங்க...
பாதி இன்வெஸ்ட்மெண்ட் நான்... இரண்டு பேரும் சேர்ந்து ஆரம்பிக்கலாமா?" என்றாள்.
அவள் கேட்ட அந்த ஒரு கேள்வியில் அறையே அமைதியாகிப் போனது.
அகிலன் கூட அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தான்.
"காவ்யா..." என்று அவன் மெதுவாக அழைத்தான்.
"நான் பேசிட்டு இருக்கேன் அகில்..." என்று கையை நீட்டி அவனை அமைதிப்படுத்தினாள்.
பிறகு மீண்டும் இனியனைப் பார்த்தாள்.
"அமெரிக்கா சைட்ல இருக்கிற ஆர்டர்ஸ், கிளையன்ட்ஸ், மார்க்கெட்டிங்... அதை நான் பார்த்துக்கறேன்.
இங்க தயாரிப்பு, விவசாயிகள், பேக்கிங், வேலைகள்..
அதை நீங்க பார்த்துக்கோங்க.
ரெண்டு பேருக்கும் தெரிஞ்ச விஷயத்தை ரெண்டு பேரும் சேர்ந்து பண்ணலாமே." இனியன் பதில் சொல்லாமல் அகிலனைப் பார்த்தான்.
அகிலனோ சங்கடமாக பார்வையிட்டு "நான் எவ்வளவோ சொல்லிட்டேன். இந்த பிசினஸே வேண்டாம்னு..
கேட்கவே இல்ல. இதுல பார்ட்னரா ஆரம்பிக்க இங்க வந்து பேசறா. நீ வேண்டாம்னு சொன்னா... அதுக்கேத்த மாதிரி சமாதானப்படுத்தி கூட்டிட்டு போயிடுவேன்." என்றான் இனியனிடம்.
இனியன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது தான் அகிலனின் கன்னத்தில் லேசாக இருந்த பல் தடம் அவன் கண்ணில்பட்டது.
ஒரு நொடி புருவத்தை உயர்த்திப் பார்த்தவன்,
இனியனுக்கு லேசாக புரிந்தது. ஏற்கனவே காவ்யா அகிலன் சொல் பேச்சை மீற, அகிலன் தடுத்து, அதற்கு கடித்து வைத்து அழைத்து வந்திருப்பது.
அகிலனுக்கும் இனியன் பார்வையையும் காவ்யா செய்த வேலையை யூகித்திட்டானென உடனே புரிந்துவிட்டது. அவன்
அறியாமலே கையை எடுத்துக் கன்னத்தைத் தடவினான்.
அப்போதுதான் பல்தடம் இன்னும் அழியாமல் இருப்பதை உணர்ந்தவன், சட்டென்று கன்னத்தை மூடிக் கொண்டான்.
அதைப் பார்த்த இனியனின் உதட்டோரம் வெளிப்பட்ட சிரிப்பு அடக்கினான்.
அறையில் இருந்த இறுக்கம் கொஞ்சம் தளர்ந்தது.
சிறிது நேரம் யோசித்த இனியன், மீண்டும் காவ்யாவை நோக்கிப் பார்த்தான். "எனக்கு எக்ஸ்போர்ட் சைட்ல ஆட்கள் இன்னும் ரெடியா இல்லை. உன்னோட பார்ட்னரான
அந்த வேலை குறையும். ஆனா... இந்த காம்பினேஷன் சரியா வருமா?" என்று மலைத்தான்.
"ஏன் வராது?" என்று உடனே கேட்டாள் காவ்யா.
இனியன் மெதுவாகத் தலையசைத்தான்.
"ஏற்கனவே நிறைய கெட்ட பேரை வாங்கிட்டேன்.
போட்டிக்காரன்... பொறாமைக்காரன்... என்னென்னவோ....இப்ப சேர்ந்து ஆரம்பிச்சிட்டு நாளைக்கு ஏதாவது சின்ன பிரச்சனை வந்தாலும்... அது மறுபடியும் என் வாழ்க்கையையே பாதிக்குமோன்னு இருக்கு." அவன் இதுவரை காவ்யாவைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தவன், இம்முறை மெதுவாக மதுராவைப் பார்த்தான். "ஏற்கனவே நான் இழந்ததை... திரும்பக் கிடைக்கும்னு நம்பி இப்போ தான் வாழ ஆரம்பிச்சிருக்கேன்.
மறுபடியும் எந்த பழியும்... எந்த அவப்பேரும்... என் வாழ்க்கை மேல விழுந்தா...அதை என்னால தாங்க முடியாது..." என்று மெதுவாகக் கூறினான்.
அவன் பார்வையை சந்தித்த மதுரா அமைதியாக நின்றாள்.
அவன் மனதில் இருந்த பயம் அவளுக்குப் புரிந்தது.
அறையில் மீண்டும் சில நொடிகள் அமைதி நிலவியது.
இனியன், மெதுவாக நிமிர்ந்து காவ்யாவைப் பார்த்தான்.
"நான் பெர்சனலை நுழைக்க எனக்கு எதுவுமில்லை. இது பிசினஸ்" என்றாள் காவ்யா.
"அப்ப... சேர்ந்து ஆரம்பிக்கலாம்னு சொல்லறியா?" என்றான் இனியன்.
"அதுக்குத்தான் இவ்வளவு தூரம் வந்து பேசிட்டு இருக்கேன் பெரிய மச்சான்." என்றாள் காவ்யா புன்னகையுடன்.
அகிலன் இன்னும் நம்ப முடியாமல் இருவரையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தான்.
"அப்போ... கம்பெனிக்கு என்ன பேர் வைக்கலாம்?" என்று இனியன் கேட்டான்.
அந்தக் கேள்வி வந்ததும் காவ்யா ஒரு நொடி அமைதியானாள்.
முன்பு காதலர்களாக பேசிக் கொண்டிருந்தபோது, 'இனிகவி' என்று பெயர் வைத்தால் நன்றாக இருக்கும் என்று இருவரும் பேசியது நினைவுக்கு வந்தது.
இப்போது அந்தப் பெயர் பொருந்தாது. சில நொடிகள் யோசித்த காவ்யா மெதுவாக "பெயரையும் நீயே வச்சிடு" என்றாள்.
அகிலனோ அருகிலிருந்து "நீங்க" என்று சட்டென திருந்தினான்.
"பெயரை... நீங்களே சூஸ் பண்ணுங்க பெரிய மச்சான்." என்றாள் காவ்யா.
இனியன் அருகில் நின்றிருந்த மதுராவைப் பார்த்தான்.
அவளோ புரியாமல் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சில நொடி மடமடவென கணக்கிட்டு, "மகா அக்ரோ பிரைவேட் லிமிடெட்..." என்று மெதுவாக உச்சரித்தான்.
"மகா...?" என்று காவ்யா புருவம் உயர்த்தினாள். இனியன் புன்னகைத்தான்.
"Ma... மதுராவோட முதல் எழுத்து... Kaa... காவ்யாவோட முதல் எழுத்து...இரண்டையும் சேர்த்தா 'MaKaa'. நான் ஆல்ரெடி மதுரா அக்ரோ பிரைவேட் லிமிடெட் தான் பிளான் பண்ணினேன். பட் பாட்னரா இருந்தா ஒரு பக்கமா நேம் சார்ந்திடும்ல. இப்பன்னா.. உன்னோட நேம் கலந்திருக்கும்" என்றான்.
"தமிழ்ல படிச்சா 'மகா'."வேல்விழி உடனே முகம் மலர்ந்தார்.
"அட... மகாலட்சுமி பேராச்சே! ரொம்ப நல்லா இருக்கு பா." என்றார். அருளாளனும் வேடிக்கை பார்த்தவராய் நின்றார்.
அப்பெயரை கேட்டுக் காவ்யா ஆங்கிலத்தில் மனதிற்குள் எழுத்துகளை வரிசைப்படுத்திப் பார்த்தாள்.
"MaKaa...? H போடாம K போட்டிருக்கிங்களா?" என்று சிரித்தபடி கேட்டாள்.
"ஆமா..." என்று இனியன் தலையசைத்தான்.
"தமிழ்ல 'மகா'ன்னு வரணும். ஆங்கிலத்துல கொஞ்சம் வித்தியாசமா, டிரெண்டா இருக்கட்டும்னு MaKaaன்னு யோசனை. அதோட... அம்மா சொன்ன மாதிரி மகாலட்சுமி பேரும் வந்த மாதிரி இருக்கும். சாமி பெயருல" என்றான்.
"நைஸ்..." என்று காவ்யா மனதாரப் பாராட்டினாள்.
"எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு." என்றாள்.
அகிலனும் மெதுவாகச் புன்னகைத்தான். "பேரே அருமையா இருக்கு." என்றாள் காவ்யா.
இனியன் உடனே, "அப்போ... பார்ட்னர்ஷிப் அக்ரீமெண்ட் ரெடி பண்ணலாம். கம்பெனி ரெஜிஸ்ட்ரேஷன், ஜிஎஸ்டி, ஐஇசி, எக்ஸ்போர்ட் லைசென்ஸ் ஒண்ணொண்ணா ஆரம்பிச்சிடலாம்." என்று கேட்க, "டன்." என்று காவ்யா உடனே கையை நீட்டினாள்.
இனியனும் புன்னகையுடன் அவள் கையைப் பற்றிக் குலுக்கினான்.
அந்தக் கை குலுக்கலில் இரண்டு பேரின் பிசினஸ் ஒப்பந்தம் மட்டுமல்ல... இரண்டு குடும்பங்களுக்கு இடையே இருந்த மனக்கசப்பும் கொஞ்சம் கொஞ்சமாகக் கரையத் தொடங்கியது.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
மதுர ஜில்லா மச்சானே !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 61)
அகிலன் சொல்றதைப் பார்த்தால்
இந்த பிசினஸ் ஐடியாவே இனியனோடது தான். இனியனை காவ்யா கல்யாணம் பண்ணியிருந்தாலும் அமெரிக்காவில இருந்துத் தான் பார்த்திருப்பாளேத் தவிர, மதுரைக்கும் அமெரிக்காவிற்க்கும் ட்ரிப் அடிச்சிருக்கப் போறது இனியன் தான். இதுல அநாவசியமா எதுக்கு முகத்தூக்கலோ...? பேசாமல் உனக்கும் வேணா, எனக்கும் வேணான்னு நான் சொன்ன மாதிரி பார்ட்னர்ஷிப் போட்டு்ட வேண்டியது தான்.
ஐய்... கடைசியில நான் சொன்னது தான் நடந்தது. அதுமட்டுமில்லாம
இனியன் காவ்யாவோட பிசினஸ் டீலிங் அப்ரோச்மெண்ட் எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு. அதுலேயும் MaKaa மகா அக்ரோ பிரைவேட் லிமிடெட் பேர் ரொம்ப சூப்பர். ஆல் தி பெஸ்ட் இனியன் & காவ்யா.
😀😀😀
CRVS (or) CRVS 2797
-
மதுர ஜில்லா... மச்சானே!-28
7 days ago
-
மதுர ஜில்லா... மச்சானே-43
3 weeks ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-67
3 weeks ago
-
மதுர ஜில்லா... மச்சானே-70 (முடிவுற்றது)
3 weeks ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-39
3 weeks ago
- 25 Forums
- 330 Topics
- 1,588 Posts
- 6 Online
- 420 Members
