அத்தியாயம்-7
ஒரே வீட்டில் இருந்துக் கொண்டு எதிரெதிரே வருபவரை தவிர்ப்பது எல்லாம் அத்தனை சுலபமில்லை.
ஆனால் ஆதினிக்கு கல்லை குடித்து ஏப்பமிடும் அளவுக்கு வரும் போல.
அயன் வந்தால் நாசுக்காக தவிர்க்க முனைந்தாள். அவள் மட்டும் அப்படி செல்ல, அக்ஷயாவோ அயனை திரும்பி திரும்பி பார்த்து புன்னகைத்து நின்றாள்.
அன்னையிடமிருந்து அறைக்குள் அடைத்திடும் முன், ஹால்ல டிவி பார்க்கணும்’ என்று அடம் பிடித்தாள்.
ஹாவில் அமர வேண்டுமென வீம்பு பிடிக்க செய்ய, ஸ்கூலிலிருந்து வந்ததும் வராததும் ஹாலிலேயே இருக்க முனைந்தாள்.
அக்ஷயாவுக்கு தற்போது தான் அன்னையிடமிருந்து நழுவ கற்று தேர்ந்திருந்தாள்.
ஆதினி கத்தி கத்தி புலம்பி அறைக்கு அழைக்க, அக்ஷயாவோ வரமறுத்தாள்.
படியில் அமர்ந்து அயன் அக்ஷயாவை ரசித்து சமிக்ஜை மொழியில் பேசி கொள்வார்கள்.
ஆதினி அதை அறிந்தாலும் இதையும் தடுக்க மனமில்லை.
அக்ஷயாவுக்கு என்ன புரிந்ததோ, தனது அயலாவுக்கும் அன்னைக்கும் ஏதோ சண்டை என்றதால், சமிக்ஜை மொழியில் பேசி சிரிப்பாள்.
அயனோ விதவிதமாக அவள் கற்றிட அல்லது புரியும் விதமாக கைகளை ஆட்டி ஆட்டி பேச, அக்ஷயாவோ மெதுவாக ‘புரியலை அயலா’ என்று கிசுகிசுப்பாய் ரகசியம் கூறுவது போல கரத்தை வைத்து கூறுவாள். மாடியிலிருந்தவனோ லிப் ரீடிங் போல பேச, அதுவோ ஒன்றும் பாதியுமா அக்ஷயாவுக்கு புரிந்து பதில் அளிப்பாள்
துரத்தில் அரை கண்ணால் அடிக்கண்ணால் ஆதினி இதை கண்டு, இவர்கள் பேசுவதையும் கவனித்தாள். அதெப்படி தான் இந்த அக்ஷயாவுக்கு விளங்குமோ? சிறுவயதில் பேச தெரியாத மகள். தற்போது அயன் செய்கையில் உதட்டசைவில் பேசுவது கூட விளங்குவதில் ஆச்சரியம் கொண்டாள்.
அன்று வீட்டிற்கு வந்ததும், பள்ளியிலிருந்து அழைப்பு வந்தது. ஏதோ அவசரமென பள்ளியில் அழைத்திருக்க, குழந்தை சோபாவில் உறங்கவும் விட்டுவிட்டு ஜமுனா ஆன்ட்டியிடம் கூறிவிட்டு சென்றாள்.
ஜமுனாவும் கூடவேயிருந்தார்.
“ஏன் தம்பி முன்ன மாதிரி பேசிக்கறதில்லையா?” என்று கேட்க தோளைக் குலுக்கி இல்லையென்றான்.
அதே நேரம் ஜமுனா வீட்டில் செல்வம் மனைவியை அழைத்து, “பொண்ணு கால் பண்ணறா. குயிக்கா வா.” என்று கூப்பிட, வேறு வழியின்றி அயனை பார்த்துக்க கூறி ஜமுனா சென்றார்.
மாடியில் படியில் அமர்ந்திருந்தவன் மெதுவாக ஒவ்வொரு அடியாக அடியெடுத்து வைத்து ஹாலுக்கு வந்தான்.
அக்ஷயா உறங்கவும், அவளை தன் கரத்தால் சிகையை தீண்ட, அவளோ ‘அயலா அப்பா… அயலா… அப்பா’ என்ற முனங்கலை கண்டான்.
அயனுக்கு அதிர்ச்சியும் ஆச்சரியமும் உருவானது.
இதெப்படி சாத்தியம்? இதனால் தான் ஆதினி தன்னை குழந்தையிடமிருந்து பிரித்து வைத்தாளா? ஆனால் பிரித்தாலும் இந்த உறவு அவனுக்கு தேவையென்று அல்லவா கூறுகின்றது. அப்படியென்றால்…. இதற்கு வழி? என்று பலமாக யோசித்தான். அக்ஷயாவுக்கு முத்தம் தந்துவிட்டு, தரையில் நீட்டி நிமிர்ந்து படுக்க, அக்ஷயாவோ அவன் நெஞ்சிலேறி படுத்துக்கொண்டு அவனை கட்டிக் கொண்டாள்.
அயனுக்கு இந்த அனுபவம் மிகவும் பிடித்திருந்தது. தந்தை மீது மகள் உறங்கும் பேரழகு… அதீத உரிமை. இது ஏன் தனக்கு வாய்க்கக் கூடாதென்ற எண்ணம்.
அப்படியே நித்திரையின் பிடியில் செல்ல ஆதினி கதவை திறந்து வந்தாள். அங்கே ஜமுனா இல்லை. அதற்கு பதிலாக அயன் தரையில் படுத்திருக்க, மகளும் அவன் மீது உரிமையாக அப்பாவை கட்டிப்பிடித்து படுத்து உறங்கும் விதமாக இருந்தாள்.
குழந்தைக்கு தந்தை நினைவு வருவதால் பிரதாப் புகைப்படத்தை கண்டாள்.
மானசீகமாக ‘பிரதாப் குழந்தைக்கு அப்பா வேண்டும்னு உன் பிரெண்ட் அயனை அப்பாவா நினைக்கிறாடா. இப்ப நான் என்ன செய்யறது. உன் பிரெண்டை வீட்டை விட்டு அனுப்பிடலாம்னாலும் தயக்கமாயிருக்கு. ஆனா இது இப்படியே போனா அனுப்பாம இருக்க முடியாது.
குழந்தை மனசுல ஏக்கம் உருவாகும்.
நான் என்ன செய்ய பிரதாப். உன் பிரெண்ட் ஏன் இங்கயிருந்து அவருக்குன்னு தனி குடும்பத்தை தேட மாட்டேங்கறார்.
அவரோட நோக்கம் தான் என்ன? நான் தனியா இருக்கறதால் அவர் கூடயிருந்தா உலகம் தப்பா பேசும்னு அவருக்கு புரியலையா? மகள் பாசத்தை பார்க்கறவருக்கு, என்னை ஊர் உலகம் எப்படி பேசும்னு தெரியாமலா இருக்கார்.
இன்னிக்கு பிடி சார் ஸ்கூலை விட்டு போனது உங்களோட பெர்சனல் இஸ்ஸுவா? பிடிசார் உங்களிடம் ஏதாவது மிஸ்பிகேவ் பண்ணியதால், அவரை உங்க வீட்ல தங்கியிருக்கற அயன் போய் மிரட்டினாரா?
இப்ப ஸ்கூலுக்கு பிடிசார் இல்லை. இதுக்கு நீங்க எக்ஸ்பிளைன் பண்ணுங்கனு சொல்லறார் பிரின்சிபால். அப்படியெல்லாம் இல்லைனு சொல்லறப்ப, அப்ப எதுக்கு இமான் மூஞ்சில தூனு துப்பியிருக்கிங்கனு கேட்கறாங்க.
நான் எப்படி நம்ம பொண்ணுக்கிட்ட அவன் தப்பா நடந்துக்கிட்டதா சொல்ல முடியும்?
அயனை எப்படியாவது இங்கிருந்து போக வை பிரதாப்.’ என்று மனதோடு கேட்டு மன்றாடினாள்.
இங்கே அயன் ஆதினி வந்தப்பிறகும் எழாமல் அவளது மனப்போராட்டத்தை தான் கவனித்தான். பிரதாப்பிடம் ஏதோ மனதில் பேசுகின்றாளென்று புரிய அவளை தான் கவனித்தான்.
நொடியில் தான் இங்கேயிருப்பது அவளுக்கு பிடிக்கவில்லையா? ஏதேனும் காரணம் கூறி வெளியே போக கூறினால்? இதே எண்ணத்துடன் நின்றான். அவள் போக கூறினால் தான் ஏன் மறுக்கின்றோம்? குழந்தை அக்ஷயாவுக்காகவா? அல்லது பிரதாப்பிற்காகவா? என்றவன் மனம் எந்த பக்கம் சாய்கின்றதென்று தெரியவில்லை.
அக்ஷயாவை அணைத்துக் கொண்டது. பிறகு நேரங்கள் நகர, அக்ஷயாவை தட்டி எழுப்பினாள்.
“அவளை எதுக்கு எழுப்பற” என்ற அயனின் குரலில் திடுக்கிட்டு போனாள் ஆதினி.
“சாப்பிடாம தூங்கறா” என்று கூறவும், “அக்ஷயா குட்டி… இங்க பாருங்க.. சாப்பிட்டு தூங்கலாம்” என்று கன்னம் தட்ட, “அயலாப்பா… நீயே ஊட்டி விடு” என்று கழுத்தை கட்டிக்கொண்டு கண்ணை திறவாமலே கூறினாள்.
“இரண்டு தோசை தானே.. சுட்டு எடுத்துட்டு வா. நானே ஊட்டி விட்டுட்டு தூங்க வச்சிடறேன்.” என்றான்.
ஆதினிக்கு அயன் கழுத்தை அக்ஷயா இறுக்கமாக கட்டிக்கொண்டு இருக்க, அதை கலையவும் மனமின்றி தோசை சுட்டாள்.
அவனுக்கும் சேர்த்தே சுட்டு முடித்து தட்டில் நிறைத்திட, மூன்று தோசையை ஊட்டி விட்டு தண்ணீர் புகட்டினான்.
எப்பொழுதும் ஒன்றரை தோசைக்கே ஆதினியை கெஞ்சி அழவிடும் அக்ஷயா, அவளாக அயன் ஊட்டவும் சமத்தாக உண்டதும் ஆதினிக்கு ஆச்சரியம்.
அக்ஷயாவை அறைக்கு கொண்டு சென்று மெத்தையில் படுக்க வைத்தான்.
அங்கே பிரதாப் புகைப்படம் தலையணை பக்கத்தில் இருக்க, அயன் கண்ணிலிருந்து தப்பவில்லை.
தினமும் பிரதாப் புகைப்படத்தை கட்டிக்கொண்டு உறங்குவதை யூகித்து விட்டான்.
அக்ஷயா லேசாக “அயலப்பா” என்று கூற அவளை தட்டிக் கொடுத்து போர்வை போர்த்தி விட்டு, ஹாலுக்கு வந்தான்.
அவனுக்கான தோசையும் தட்டில் இருக்க, அதை சுவைத்தான்.
எங்க போன? எதுக்கு போன? குழந்தை தனியாக இருந்தாளே? என்ன விஷயம் என்று இவனும் கேட்கவில்லை.
ஜமுனா ஆன்டியிடம் சொல்லிவிட்டு சென்றோமே, இங்கு வந்து பார்த்தால் இவன் இருக்கின்றான். அதுவும் இவன் நெஞ்சில் அக்ஷயா உறங்குகின்றாள். அதுவும் தரையில் ஏன் உறங்கினான்? இதையெல்லாம் ஆதினி கேட்கவில்லை.
“எனக்கு இன்னோரு தோசை” என்றான்.
ஆதினியோ வேகமாக அடுப்பங்கரைக்கு செல்ல, தன் நெஞ்சில் கையை வைத்து, ஏதேதோ முனங்கி நீவிக்கொண்டான்.
ஆதினி வரவும், “நீ சாப்பிட்டியா?” என்றான்.
தலையை மட்டும் ஆதினி ஆட்டவும், ஆழ மூச்சை விடுத்தான்.
லேசாக குரலை செருமி, “எனக்குன்னு யாருமில்லை ஆதினி. பிரதாப் மற்ற இரண்டு மூனு பேர் இறந்ததை நேர்ல பார்த்தேன்.
அதோட அபெக்ட் என்னை ரொம்ப பாதிச்சிடுச்சு. அதனால தான் அக்ஷயா வந்து கட்டி பிடிச்சி அவளை பார்த்ததும் அவளோட ரொம்ப அட்டாச் ஆகிட்டேன்.
குழந்தை பிரதாப்பை தேடுச்சு. நான் எனக்கான உறவா அவளை தேடினேன்.
‘அயலாப்பா’னு குழந்தை என்னை அப்பாவா நினைச்சி வாழ ஆரம்பிக்கறதை இப்ப தெளிவா தெரியுது. நீ பயந்தது இதுக்கு தான் என்றாலும் காலம் கடந்துடுச்சு.
குழந்தை எப்படி என்னை விட்டு இருக்க முடியாம கஷ்டப்படுவாளோ, அதே அளவு, ஏன் அதை விட நான் ரொம்ப பாதிக்கப்படுவேன்னு எனக்கு தெரியுது.
இதுக்கு என்ன விடியல் இருக்கும்னு நினைச்சப்ப, எனக்கு மனசுல ஒரே விஷயம் தான் தோன்றுச்சு… அ..அது.. அது.. நான் ஏன் நிஜமாவே அக்ஷயாவுக்கு அப்பாவா மாறக்கூடாது” என்றதும் ஆதினி விசுக்கென எழ, தட்டு கீழே விழுந்து சிதறியது. அரை தோசையும் ஒரு கரண்டி குழம்பும் வீணாகியது.
பதட்டத்தை மறைத்து பேச்சு வராமல் ஆதினி நிற்க, தட்டு சப்தமிட்டு தரையில் ஒலி எழுப்பி அமைதியானதும், அதை கவனித்து அதே பார்வை மாற்றாமல் ஆதினியை கண்டான் அயன்.
“நான் ஏன் உன்னை கல்யாணம் பண்ணிக்க கூடாது. உனக்கு சம்மதம்னா உனக்கு ஆட்சேபனை இல்லைன்னா, அக்ஷயாவுக்கு நான் அப்பாவா இருப்பேன். இதே வீட்ல வாடகைக்கு இல்லாம குடும்பத்துல ஒருத்தனா, நீ நான் குழந்தைன்னு வாழலாம் தானே?’ என்று பேச, ஆதினி தொண்டை வரண்டது.
வீட்ல குடியிருக்க வச்ச உன்னிடம் இதயத்துல இடமிருக்கானு கேட்டு நிற்கறேன். இது தப்பா சரியா தெரியலை. பிரதாப் இருந்தா இந்த உறவு முறை ஜஸ்ட் ஷேக் அண்ட செய்து கடந்திருந்திருக்கும். அவ்ளோ தான்.
இப்ப கண்ணியமான உறவான உரிமையான உறவா, கேட்டு நிற்கறேன்.” என்று கூற ஆதினி அயன் கன்னத்தில் அறைந்து கையை கழுவாமலேயே அறைக்கு சென்று கதவை அடைத்தாள்.
அயன் எச்சி கையால் ஆதினி அறைந்திடவும், அதிர்ந்தான். ஆனால் இதுக்கூட செய்யாமல் ஆதினி இவ்விடம் விட்டு நகர்ந்திருக்க முடியாது. தான் இத்தனை பேசியதற்கு, அவளுக்கான கோபத்தின் உணர்வின் வெறுப்பை காட்டும் வடிகால் தான் இந்த அறை என்று எண்ணினான்.
மாடியை பார்த்து அறைக்கு செல்லவே மனமின்றி அதே தரையில் படுத்தான். அங்கே அக்ஷயாவின் ஆமை பொம்மை இருக்க, அதை எடுத்து தன் நெஞ்சில் போட்டுக் கொண்டு கட்டிக்கொண்டும் உறங்கினான். அவன் மனதில் உள்ளதை தான் ஆதினியிடம் கொட்டிவிட்டானே, அதனால் நன்றாக உறங்கினான்.
இங்கு ஆதினி தான் மகளை பார்த்து பார்த்து அழுதாள். அவள் அழுகையால் மகள் உறக்கம் கலைய கூடாதென்று வாயை மூடி அழுதாள். பிரதாப் புகைப்படத்தை வைத்து, மனதோடு ‘ஏன் பிரதாப் எனக்கு மட்டும் இப்படி நடக்கணும். உன் பிரெண்ட் என்னிடம் என்னென்ன கேட்டுயிருக்கான் பாரு. நீ இருந்தா எனக்கு இந்த நிலைமை இருக்குமா?’ என்று நெஞ்சு விம்ப கதறாத குறை. இதில் அக்ஷயாவோ ‘அயலப்பா… என் கூடவேயிருப்பியா? பிரதாப் அப்பா மாதிரி விட்டுட்டு போக மாட்டியே. அயலப்பா.. அயலா” என்று தூக்கத்தில் கூட புலம்பினாள்.
ஆதினியோ மகளை அவன் வசம் ஆக்கிவிட்டான். என்னிடம் அவன் காதலை பகிர்ந்துவிட்டான். இன்னமும் அயன் இங்கே இருப்பது சரியா? நாளைக்கே ஜமுனா ஆன்ட்டி செல்வம் அங்கிளிடம் கூறி அயனை வெளியேற்ற கூற வேண்டுமென முடிவெடுத்தாள்
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்
