மதுர ஜில்லா... மச்சானே!-58
அத்தியாயம்-58
அதியமான் நடந்ததெல்லாம் நினைத்து பெருமூச்சு விட்டார்.
"நீங்க எப்பய்யா வந்தீங்க?" என்றதும் அகிலன் சிரித்தபடி, "இப்பத்தான் அப்பா. வந்ததும் பெட்டியெல்லாம் இறக்கிட்டு இருந்தேன். தூரிகா தான் பதறிப் போய் இங்க நடந்ததை ஒரே மூச்சுல சொல்லிட்டா. உடனே கிளம்பி வந்துட்டேன். வர்ற வழில காலேஜ்ல விசாரிச்சுட்டே ரகுவிடம் ஒருபக்கம் வேலையை ஏவினேன். இந்தா.. புட்டு புட்டு வச்சிட்டாங்க" என்றான்.
அவன் பேச்சு முடிந்ததும், அவன் பார்வை இயல்பாக இனியனை காண, இனியனும் அவனைப் பார்த்தான்.
இருவரின் பார்வையும் சில நொடிகள் ஒன்றோடு ஒன்று மோதியது. மருத்துவமனையில் நடந்த சம்பவத்திற்குப் பிறகு, இப்படி நேருக்கு நேர் சந்திப்பது இதுவே முதல் முறை.
யாருமே பேசவில்லை.
இருவருக்குள்ளும் ஒரு மெல்லிய சங்கடம் மட்டும் நின்றிருந்தது. அந்த அமைதியை உடைத்தது காவ்யாவின் குரல்.
"அகில்... கொஞ்சம் தண்ணி வேணும் தாகமாயிருக்கு" என்றாள்.
"மது." என்று அழைக்க வந்தவன், ஒரு நொடி தன்னைத் திருத்திக் கொண்டு, "நிலானி கொஞ்சம் தண்ணி கொண்டா." என்றான்.
மதுரா மட்டும் அவன் தடுமாற்றத்தை கவனித்தாள். இந்த வீட்டிற்கு வந்தாலே அகிலன் உச்சரிக்கும் பெயர் மதுரா என்றதால், இந்த தடுமாற்றம்.
உடனே பார்வையைத் திருப்பிக் கொண்டாள். அந்த நேரம் ஏனோ மனதில் ஒரு பதற்றம் எழுந்தது. அறியாமலேயே அருகில் நின்றிருந்த இனியனின் தோளை மெதுவாகப் பற்றிக் கொண்டாள் மதுரா.
அந்த ஒரு தீண்டலே இனியனின் உதட்டில் புன்னகையை மலர வைத்தது. அவளைப் பார்த்தான். அவளோ அதை உணரவே இல்லை.
நிலானி தண்ணீர் கொண்டு வந்து நீட்டினாள். அதை வாங்கிய அகிலன், காவ்யாவிடம் கொடுத்தான்.
"தேங்க்யூ..." என்று குடித்தவள் அவனிடம் நீட்டினாள்.
"உள்ள போய் உட்காரு. நான் ஸ்டேஷன் வரைக்கும் போயிட்டு வந்துடறேன்." என்று கூறியவன் காரை நோக்கி நடந்தான்.
"அகில்... அகில் அகில்" என்று காவ்யா மெதுவா அழைத்தாள். "இங்க விட்டுட்டு எங்க போற?" என்றாள்.
"ஏய்... அம்மா, அப்பா, தங்கச்சி, எல்லாரும் இருக்காங்க. உன்னை தனியா விட்டுட்டு போறேன்னு பேசற?" என்றான்.
"அகில்..." என்று சிணுங்கினாள்.
"ப்ச்... காவ்யா... அடம் பிடிக்காத. கொஞ்ச நேரத்தில் வந்துடுவேன்." என்று சொல்லிவிட்டு காரை எடுத்துச் சென்றான்.
அவன் சென்றதும் மதுரா, இனியனின் தோளிலிருந்து கையை எடுக்க முயன்றாள்.
ஆனால் இனியன் விடவில்லை.
அவள் புரியாமல் அவனைப் பார்த்தாள்.
"அது... அவ அவ்ளோ சீக்கிரம் உட்காரவே மாட்டா. அகிலன் வர்ற வரைக்கும் வாசலையே பார்த்துட்டு இருப்பா. உங்க வீடு தானே.. உள்ள கூப்பிடுட்டு போ." என்றான் மெதுவாக.
மதுரா சரியென்று காவ்யாவிடம் சென்றாள். "உள்ள வாங்க... நின்னுட்டே இருக்காதிங்க." என்றாள்.
"தேங்க்யூ." என்று காவ்யா உள்ளே வந்து அமர்ந்தாள்.
இளையமதி சமையலறையை நோக்கி, "டீ போடவாம்மா? இவ்வளவு நேரம் பேசினதுல தொண்டை வறண்டு போயிருக்கும்." என்றதற்கு,
"நான் போடுறேன்ம்மா." என்று மதுரா எழுந்தாள்.
தூரிகாவும் அவள் பின்னாலேயே சென்றாள்.
"இப்ப எதுக்கு சமையல்கட்ட உருட்டற? நீயும் ஏதாவது படிச்சிருக்கலாம். லூசு அண்ணி." என்று உரிமையோடு திட்டினாள்.
"போடி... வராத படிப்பை நான் ஏன் வலிய வந்து படிக்கணும்?" என்று மதுரா சலித்தாள்.
"இனியன் அண்ணன் அமெரிக்கால படிச்சிருக்காரு. நீ பிளஸ் டூ ஃபெயில்... கேட்டா பிளஸ் ஒன் பாஸ்டினு சொல்லு." என்று சிரித்தாள்.
மதுராவும் சிரித்துவிட்டாள்.
அங்கே அமர்ந்திருந்த காவ்யா, நிலானியைப் பார்த்தாள். புது இடமென்றாலும் அகிலனுக்கு இவள் தந்த மதிப்பால் பேச முனைந்தாள்.
"ஒரு விஷயம் கேட்கலாமா?" என்று கேட்க, "கேளுங்க." என்றாள் நிலானி.
"இங்க எல்லாரும் ஏதேதோ சொல்லியும் கத்திட்டு இருந்ததை பார்த்தேன். அகிலன் மச்சான் வந்ததும் அமைதியா ஆயிட்ட. அவர்னா ரொம்ப பிடிக்குமா?" என்றாள்.
அங்கே இருந்தவர்கள் எல்லோரும் இயல்பாகவே காதை கூர்த்தீட்டினர்.
நிலானி மெதுவாகத் தலையசைத்தாள். "ஆமா... பிடிக்கும்." அம்மா, என்னை அவருக்கு கட்டிக் கொடுப்போம்னு கேட்டப்ப கூட... படிக்க விடாம அவரை கட்டிக்கிட்டாலும் பரவாயில்லன்னு நினைச்சேன்." என்றதும் அனைவரும் அமைதியாக இருந்தனர்.
"ஏன்னா... அவர் நல்லவரு. இங்க இருக்குற ஒவ்வொருத்தர்கிட்டயும் ஒரு தப்பு இருக்கு. ஆனா அகிலன் மச்சான்... அவர் தப்பா நடந்ததா நான் இதுவரைக்கும் பார்க்கலை. அதனால தான் அவர் பேசும் போது அமைதியா கேட்டேன்." என்றதும் அங்கே சில நொடிகள் அமைதி நிலவியது. காவ்யா புன்னகைத்தாள்.
நிலானியை பார்த்து "வாவ்... முதல்ல உன்னை சரியான முட்டாள்னு நினைச்சேன். ஆனா நீ யோசிக்கிற விதம் சரிதான்.
ஒரு குழந்தை அறிவுரை கேட்கணும்னா... அந்த அறிவுரை சொல்லுற ஆள்மேல முதல்ல நம்பிக்கை இருக்கணும். அந்த நம்பிக்கை உனக்கு அகிலன் மேல இருக்கு."
நிலானி அமைதியாக இருந்தாள்.
"ஆனா... லவ்ல மட்டும் ஏன் அவசரப்பட்ட? அதுவும் அந்த ரெஜிஸ்டர் பேப்பர்ல கையெழுத்து போடுற அளவுக்கு? நீ காலேஜ் ஜாயின் ஆகியே ஒன் இயர் கூட கம்பிளிட் ஆகல தானே. உனக்கு பதினெட்டு ஆகலை என்றதும் யோசிக்கலையா?" என்றதும் நிலானி ஆழமாய் மூச்சு விட்டாள்.
"ஆக்சுவலி... நான் காதலிக்கணும்னு நினைக்கவே இல்ல. அகிலன் மச்சான் காலேஜ்ல சேர்த்து விட்டப்ப... நல்லா படிக்கணும்னு மட்டும் தான் நினைச்சேன். ஆனா... வீட்டுல என்னை மாமன் மகனுக்கே கட்டி வச்சிடுவாங்களோன்னு உள்ளுக்குள்ள பயம் இருந்துச்சு. அந்த நேரத்துல பிரபு பேச ஆரம்பிச்சான். முதல்ல கண்டுக்கலை. அன்னிக்கு அக்காவை பார்க்க அவங்க வீட்டுக்கு போனப்ப, அக்கா முகத்துல டீ ஊத்தினதை பார்த்ததும் ரொம்ப பயந்துட்டேன். இந்த வீட்டுக்கு மருமகளா வந்தா நானும் இப்படித்தான் ஆகிடுவேன்னு தோணிச்சு." மதுரா அமைதியாகத் தலையைக் குனிந்தாள்.
"அடுத்த நாள் பிரபு ரொம்ப அமைதியா பேசினான். அந்த நேரத்துல... இப்படிப் பட்டவனைக் கட்டிக்கிட்டா நல்லா இருப்பேன்னு நினைச்சேன். அதனால தான் அவன் காதலுக்கு சம்மதம் சொன்னேன். ஆனா... அவனைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. கிளாஸ்ல பேசினது... சிரிச்சது... அவ்வளவுதான். அப்புறம் தினமும்... உன்னை வீட்டுல வேற எவனுக்காவது கட்டிடுவாங்க... நாம வேற காஸ்ட், அதுயிதுனு சொல்லி, நாம ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்...'ன்னு சொல்லிக்கிட்டே இருந்தான். எனக்கும் பயம் அதிகமாயிடுச்சு. அதான்... அந்த பேப்பர்ல கையெழுத்து போட்டேன். அதுக்கப்புறம் எங்கயும் போயி கல்யாணம் பண்ணிக்கல. காலேஜ் கட் அடிச்சதே இல்ல. கிளாஸ்ல பேசினது மட்டும் தான்." என்றுரைக்க, அப்போது காவ்யா மெதுவாகச் சொன்னாள்.
"இது காதல் இல்ல நிலானி." என்று அவள் அனைவரையும் பார்த்தாள். "வீட்டுல கிடைக்காத பாதுகாப்பை... பிரபுகிட்ட கிடைக்கும்னு நீ நம்பியிருக்க. அந்த பாதுகாப்பு உணர்வை காதல்னு நினைச்சுட்ட. அவ்வளவுதான்."
நிலானி சில நொடிகள் யோசித்தாள்.
"அப்படி கூட இருக்குமா.?" பிறகு மெதுவாக, "இருக்கலாம்..." என்றாள்.
அதை கேட்ட எழிலரசன் அமைதியாக நின்றான்.
தன்னை விட அண்ணன் இனியனை ஒரு அளவுகோலாக வைத்து நிலானி பேசுவது ஏனோ அவன் மனதை சுருக்கென்று குத்தியது.
அதே நேரம் மதுரா மெதுவாக வந்து நிலானியை அணைத்துக் கொண்டாள். நிலானியும் அவளை இறுகக் கட்டிப் பிடித்தாள்.
இருவரின் கண்களிலும் கண்ணீர் வழிந்தது. "இனிமே இப்படி முட்டாள்தனமா எதுவும் பண்ணாத. ஏதாவது பிரச்சனைன்னா மச்சான்கிட்ட சொல்லு." என்றாள்.
"ம்ஹூம்... உன் புருஷன்கிட்ட பேசவே மாட்டேன்." என்றாள் நிலானி.
மதுரா சங்கடமாக சிரித்தாள்.
"சரி... அகிலன் மச்சான்கிட்டயாவது சொல்லு."
அதற்கு நிலானியும் தலையாட்டினாள்.
சமையலறையிலிருந்து டீயுடன் வந்த இளையமதி அனைவருக்கும் கொடுத்தார்.
அந்த நேரம் மீனாட்சி, வேல்விழியிடம், "அங்க எப்படி இருக்கு?" என்று கேட்டார்.
வேல்விழி மெதுவாக மதுராவை பார்த்து "இப்ப கொஞ்சம் பரவாயில்லை மீனா. இனியன் மதுராவை சுத்தி சுத்தி வர்றான். மதுராவும் பேசுறா. ஆனா மன்னிச்சிட்டேன்னு மட்டும் இன்னும் சொல்லலை." அதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த மதுரா, காவ்யாவை நோக்கி, "ஆமா... அடுத்து என்ன பிளான்? நீங்க இங்கயே செட்டிலா? இல்லை அமெரிக்காவுக்கு போக போறிங்களா?" என்று கேட்டாள்.
காவ்யா உற்சாகமாகத் தலையசைத்தாள்.
"ஆமாம். இங்கதான் இருக்கப் போறோம். அமெரிக்கா எல்லாம் உங்க மச்சான் பத்து நாளைக்கு மேல இருக்க மாட்டேன்னு செல்லிட்டார். நான் இங்க எக்ஸ்போர்ட் பிசினஸ் ஆரம்பிக்கப் போறேன். ரிசப்ஷன்ல சில பேரை மீட் பண்ணியிருக்கேன். மெஷின் வாங்கி நம்ம ஊரு ப்ராடக்ட்ஸை வெளிநாட்டுக்கு எக்ஸ்போர்ட் பண்ணலாம்னு பிளான்." என்று கூற, அதை கேட்ட இனியனின் புருவம் மெல்ல சுருங்கியது.
நேற்று வரை அதற்கு தான் அலைந்து திரிந்து வந்தான்.
அது தன்னுடைய கனவு என்று தொன்னுற்று ஒன்பது சதம் முடிவடைய, இப்போது காவ்யா அதை நடைமுறைப்படுத்தாவதாக கூற அதிர்ந்தான்.
காவ்யாவை காதலித்த பொழுது இதெல்லாம் பிசினஸ் செய்ய பேசி வைத்தது. அப்படியிருக்க அவள் அதை செய்ய முனையவும் குழப்பமாய் இருந்தான். இதை பற்றி இப்பொழுது பேசினால் சரிவருமா? என்று நெஞ்சடைத்தது இனியனுக்கு.
அவனுக்கு இதுவரை பட்ட கஷ்டமெல்லாம் எண்ணி பார்த்துவிட, அகிலன் கார் வரும் சத்தம் கேட்டதும் ஏறிட்டான்.
அகிலன் அமெரிக்காவிலிருந்து இங்கு நேரிடையாக வந்ததால், பேண்ட் ஷர்ட் என்று தான் இருந்தான். காவ்யா "என்ன சொன்னாங்க.. திரும்ப வாலாட்டுவாங்களா?" என்று கேட்க, "அதெல்லாம் பண்ண மாட்டான். அவங்க அப்பா அம்மாவை வரச்சொல்லி நேர்ல பேசிட்டு வந்திருக்கேன். வசந்த் அவனோட அப்பா அம்மா தெரிந்தவங்க தான். அதனால பேசிட்டேன். அவங்க அப்பா நேத்தே வந்திருக்கார். இன்னிக்கு அவங்க அம்மா வந்து நாலடி மொத்தி மன்னிப்பு கேட்க வச்சாங்க. கடுகடுன்னு முகத்தை வச்சிட்டு தங்கச்சி பக்கம் வரமாட்டேன்னு சொல்லிட்டான்.
பிரபு அவங்க வீட்ல போலி பத்திரம் செய்ததால அது ஒரு கேஸ் உருவாச்சு. பிறகு பையனை கண்டிக்கறேன். இப்ப அந்த தொழிலை விட்டு ரொம்ப நாளாச்சு. இவனா தான் மார்க் ஷீட்டை அப்படி ரெடி பண்ணி காலேஜ் சேர்ந்ததா சொன்னார்.
அதனால பிரபு மட்டும் 15 நாள் வச்சிட்டு விடறதா பேசியிருக்கு." என்று வந்தவன் அங்கிருந்த தொட்டியில் முகம் அலம்பினான்.
நிலானி அவசரமாய் துண்டு எடுத்துக் கொண்டு வர, வழுக்கியது.
அகிலன் சட்டென கையை பற்றி நிற்க வைத்து, "இந்த இடம் வழுக்குதுன்னா வண்டல் மண்டை போட்டு விடலாம்ல. இல்லை.. சிமெண்ட் வச்சி இடத்துல தண்ணி நிற்காம பார்த்துக்குங்க மாமா. அத்தை விழுந்து வாறினா மேலுக்கு முடியாம போகக்கூடாது பாருங்க" என்றான்.
''செய்துடறேன் அகிலா. உட்காரு" என்று கல்யாண சுந்தரம் வரவேற்றார்.
மதுராவுக்கு இப்பொழுதே நெஞ்சில் பனிக்கட்டி இறங்கியது. வீட்டிற்கு வந்து 'நான் மாப்பிள்ளையா அவன் மாப்பிள்ளையா உங்கப்பா அவனை விழுந்து விழுந்து உபசரிக்கின்றார் என்பானோ?' அல்லது நிலானி பேசிய பேச்சுக்கு 'உன் தங்கச்சி
பொடிசு என்ன வாய். என்னை மதிக்காம பார்க்குது' என்று அதட்டுவானோ என்று பயந்தாள்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்
மதுர ஜில்லா மச்சானே !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 58)
உண்மை தான். ஒருத்தரோட அறிவுரையை காதால கேட்கணும்ன்னால் கூட, அவர் நம்ம நம்பிக்கைக்கு அப்பாற்பட்டவரா இருக்கணும்.
அகிலனோட பேச்சு, செய்கை எல்லாம் அப்படி இருக்கிறதாலத்
தான், அவனோட பேச்சுக்கு அத்தனை மதிப்பும் மரியாதையும் கிடைக்குது. ஆனால், அதுக்காகவெல்லாம் இனியன் மூஞ்சியைத் தூக்கி வைச்சுக்கிட்டால் ஒண்ணும் பண்ண முடியாது. நம்ம நடவடிக்கைத்தான் நமக்கான மதிப்பையும், மரியாதையையும், உரிமையையும் வாங்கித்தரும்.
உப்புத் தின்னவன் தண்ணி குடிச்சுத் தான் ஆகணும், தப்பு செய்தவன் தண்டனை அனுபவிச்சுத் தான் ஆகணும்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Nilani sollurathu unmai than oruthar oda advice ah ketka avanga side thappu illa ma irukanum inga ellar kita yum.apadi onnu iruku except akilan athu na la than avan pesum pothu nilani ketukita ah .
Iniya process almost mudicha appuram kaviya ah vum athae business ah pathi sollum pothu avanuku enna pannurathu nu puriyama irukan .
Madhura ku nilani pesunathu ippo Akilan pesunathu ellam serthu iniyan koba paduvano nu nenaika vaikuthu aana avan ippo business ah pathi than yosichi kitu irukan.
-
மதுர ஜில்லா... மச்சானே!-28
7 days ago
-
மதுர ஜில்லா... மச்சானே-43
3 weeks ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-67
3 weeks ago
-
மதுர ஜில்லா... மச்சானே-70 (முடிவுற்றது)
3 weeks ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-39
3 weeks ago
- 25 Forums
- 330 Topics
- 1,588 Posts
- 1 Online
- 420 Members
