அத்தியாயம்-10
அக்ஷயா மருத்துவமனையில் ‘அயலா அயலாப்பா. அப்பா.. என்னை விட்டு போகாதிங்க’ என்று அணத்த, உடல் தூக்கி போடுகின்றது.
டாக்டரும் நர்ஸும் பரபரப்பாய் இயங்கியும், அக்ஷயா அணத்தலை குறைக்க இயலாது போகவும், ஒரு கட்டத்தில், ஆதினியே “அக்ஷயா குட்டி… இங்கபாருடா.. அம்மா இருக்கேன். அயன் வருவார். உன்னை விட்டு அவர் போகமாட்டார்.’ என்று சமாதானம் செய்தும், “இல்லை.. அப்பா வரமாட்டார். அவர் வரமாட்டார்” என்று குழந்தை கூறியபடி மூச்சு திணறல் வரவும், “அப்பா கண்டிப்பா வருவார். அக்ஷயாவோட அப்பா அயன் வருவார்.
அயன்.. ப்ளிஸ் எனக்காக குழந்தைக்காக எங்கயிருந்தாலும் வந்துடுங்க. நான் உங்களை மணக்க விரும்பறேன். பிரதாப் மாதிரி பாதில விட்டுட்டு போக மாட்டேன்னு சொன்னிங்க. அயன் திரும்ப வந்துடுங்க” என்று புலம்பி திடுக்கிட்டு எழுந்தாள் ஆதினி.
நள்ளிரவு மணி ஒன்றரை இருக்க, ஆதினி கனவென்றாலும் திடுக்கிட்டு மாடிப்படி ஏறி ஓடினாள். அங்கே அயனும் அவள் எண்ணியது போல புறப்பட தயாராகி நிற்க, இருவருக்கும் அதிர்ச்சி.
அயனோ ‘இவ பார்க்கறதுக்கு முன்ன கிளம்பலாம்னு இருந்தேன்.’ இவளையும் அக்ஷயாவையும் பார்த்துட்டு என்னால வீட்டை தாண்ட முடியாது’ என்ற நிலையில் அவனிருக்க, ஆதினியோ “என்னையும் அக்ஷயாவையும் விட்டுட்டு போகலாம்னு கிளம்பிட்டியா அயன்?
பிரதாப் மாதிரி பாதில விட்டிட்டு போக மாட்டேன்னு அன்னிக்கு சொன்னிங்க? இன்னிக்கு நான் பதில் சொல்லலை என்றதும் போறிங்க. ஏன் அயன்… இவ்ளோ காத்திருந்த நீங்க எனக்காக இன்னமும் காத்திருக்க மாட்டிங்களா?” என்று வினவினாள்.
அயன் பார்வை கூர்ந்து நோக்க, கண்ணீரை துடைத்துவிட்டு “இந்த உலகம் என்னை என்ன சொல்லும்னு இனியும் யோசிக்க மாட்டேன். எனக்கு நீங்களும் அக்ஷயாவும் போதும். இந்த உலகம் வேண்டாம். நான்.. நான்.. உங்களை மணக்க சம்மதிக்கறேன்.
எனக்கும் அக்ஷயாவுக்கும் இனி நீங்க மட்டும் தான் உறவு.
அக்ஷயாவுக்கு நீங்க நல்ல தகப்பனா இருப்பிங்க தானே?” என்று பேசவும், அயன் ஆதினியை இழுத்து அணைத்துக் கொண்டான்.
“இனி இந்த உலகம் என்ன சொல்லும்னு யோசிக்க மாட்டால்ல? நான் அக்ஷயா நீ மூன்று பேரும் நம்ம வாழ்க்கைக்கு போதும் தானே? இனி இந்த உலகம் உனக்கு வேண்டாம்ல? இனி நமக்கான தனி உலகத்துக்கு போகலாம் அப்படி தானே?” என்று கேட்க தலையாட்டினாள்.
“நீ என்னை கணவனா ஏற்றுப்ப தானே? நாம கல்யாணம் செய்துப்போம்… அப்படி தானே?” என்றதும் ஆமென்றாள்.
அயனுக்கு போன உயிர் திரும்பி வந்தது.
“இதுக்காக தான் இங்க காத்திருந்தேன். எல்லாம் நல்லபடியா முடிந்தது.” என்று அவளை தழுவினான்.
ஆதினியும் அவன் அணைப்பில் கட்டுண்டு நின்றாள்.
நீண்ட நாட்களுக்கு பின் மனம் பஞ்சாக உணர துவங்கினாள்.
“குழந்தை கீழே இருக்கா. நீ போ.” என்று அயன் கூற, “எங்களை விட்டு போக மாட்டிங்களே” என்று கேட்க “சத்தியமா போகமாட்டேன்.” என்று நெற்றியில் முத்தமிட்டான்.
ஆதினிக்கு உடலெங்கும் சிலிர்த்து அடங்கியது.
அயனை பார்த்தபடி படியில் இறங்கினாள்.
அறைக்கு வந்து மூச்சை விட்டாள். அயனிடம் காதலிப்பதாக மணக்க சம்மதம் கூற ஆதினி மாடிபடியேறி ஓடவில்லை. ஆனால் அயன் செல்வதை கண்டு தானாக காதலை உதிர்த்து மணக்க சம்மதித்து வ்நது நிற்கின்றாள்.
ஏதோ ஒரு விதத்தில் அயன் தன் மனதை வென்றுள்ளான். இல்லையென்றால் பிரதாப்பை விரும்பிய இதயம், இன்று அயனை விரும்ப நினைத்திருக்குமா?
நிச்சயம் பிரதாப் தன்னை மன்னிப்பான். அவனும் எதார்த்தம் தெரிந்தவன். இன்று அவன் ஆன்மாவாக பார்த்து இருந்தால், இது போல சுழலில் உருவானால் திருமணம் செய்துக்கொள்.’ என்று தான் பேசியிருப்பான்.
ஏன் அவன் ஆன்மா நேரிடையாக வந்தாலும் கூட இதையே உரைக்கும்’ என்று தேற்றிக்கொண்டாள்.
பிரதாப்புடன் வாழ்ந்த வருடங்கள் கண் முன் வந்தது.
திருமணமாகி உடனே கருத்தரித்து அக்ஷயாவை பெற்றெடுத்த நினைவுகள் சென்றது.
பிரதாப்… தன்னை அப்படியே வாழு என்று நிச்சயம் சொல்ல மாட்டார்.’ என்று மகளை கட்டியணைத்தாள்.
அடுத்த நாள் காலை ஜமுனா செல்வம் இருவரும், நல்ல முடிவு தான் எடுத்திருக்க. அயனை மணந்து நல்லபடியா வாழும்மா” என்றார்.
“ஆன்ட்டி நான் ஏதும் தப்பான முடிவு எடுக்கலையே” என்று அபிப்ராயம் கேட்டாள்.
“ஏன்மா… கணவன் இறந்ததும் அந்த சடலத்தோட உயிரோட எரிக்கற காலத்துல இருந்து, இப்ப எந்த காலத்துல இருக்கோம்.
நிறைய திருமணம், பிடிச்சா வாழறாங்க. இல்லையா விவாகரத்து பெற்றுட்டு மறுமணம் பண்ணிக்கறாங்க. இங்க பிரதாப் தீ விபத்துல இறந்துட்டான். நீ தாரளமா மறுமணம் செய்துக்கலாம்.” என்றார் செல்வம்.
ஜமுனாவோ “நீ பிரதாப் காதலிச்சு கல்யாணம் செய்தவங்க. அவன் கூட எட்டு வருஷம் பழக்கமிருக்கு. இப்ப அவன் இல்லைன்னாலும் உனக்குன்னு ஒரு துணையை நீ தேர்ந்தெடுத்தா அவன் உன்னை புரிஞ்சுப்பான்.
எப்ப கல்யாண சாப்பாடு போடப்போற” என்று கேட்டார்.
“நான் அயனிடம் இதை பத்தி பேசலை ஆன்ட்டி. அவர் வந்ததும் முடிவெடுத்திடுறேன். என்னை பொறுந்தவரை சிம்பிளா கோவில்ல கல்யாணம் முடிச்சாலும் நல்லது தான்.” என்றாள் ஆதினி.
ஜமுனா ஆசிர்வாதமாக ஆதினி தலையில் அழுத்தம் தந்தார்.
செல்வமும் மகிழ்ந்தவராக வாசலை பார்த்தார். அங்கே அயன் அக்ஷயாவை தூக்கி சுமந்து வந்தான்.
“ஹாய்… அக்ஷயா எழுந்ததும் உன்னை தேடினா... நீ இங்க இருப்பியோனு டவுட்ல வந்தேன்.” என்று அக்ஷயாவை கீழேயிறக்க, “அம்மா… அம்மா… அயலா சொன்னது உண்மையா? அயலா.. இனி நம்மளோட இருக்க போறாரா? அயலாவை நான் இனி அயலப்பானு தாராளமா கூப்பிடலாம்னு சொன்னார். உண்மையா அம்மா?” என்று உலுக்கினாள்.
அயனோ “சாரி குழந்தை எழுந்ததும் உன்னை தேடி அழுதா… நீ பிரதாப் அப்பாவை தேடி செத்துட்டதா நினைச்சு தேம்பி அழ ஆரம்பிச்சிட்டா.
அதெல்லாம் இல்லை… ஆதினி அம்மா பக்கத்துல இருப்பானு சொன்னேன். குழந்தை அழுகையை நிறுத்தலை. அதான்.. நானும் அம்மாவும் மேரேஜ் பண்ணிட்டு ஒரே வீட்ல ஒன்னா வாழ்வோம். அம்மா எங்கயும் போயிருக்க மாட்டானு சொன்னதும் நம்பலை. இங்க உன் தலை தெரியவும் நேர்லயே கூட்டிட்டு வந்துட்டேன்.
செல்வம் சாருக்கும் ஜமுனா ஆன்ட்டிக்கும் சொல்விட்டியா?” என்று கேட்டான்.
“அதெல்லாம் இப்ப தான் சொன்னா தம்பி. ரொம்ப சந்தோஷமா இருக்கு. இனிமேலாவது ஊர் என்ன சொல்லும்னு பார்க்காம வாழுங்க. ஏன் தம்பி கேட்கறேன்னு தப்பா எடுத்துக்காதிங்க. இதுவரை நீங்க வீட்லயே இருக்கிங்க. அடுத்து வேலைக்குனு ஏதாவது போவிங்களா? இல்லை திரும்ப இஸ்ரோல..” என்று கேட்கும் முன், “இல்லை ஆன்ட்டி… பிசினஸ் தான் பார்க்கலாம்னு இருக்கேன். பேங்க் பேலன்ஸ் பார்த்துட்டு முடிவெடுக்கணும்.” என்றான்.
“ஓ.. சரிங்க தம்பி” என்றார் ஜமுனா.
பிரதாப் இறந்து ஒராண்டு நிறைவுற்ற பத்தாவது நாள், கோவிலில் வைத்து மாங்கல்யம் அணிவித்தான் அயன்.
அதற்கு செல்வமும் ஜமுனாவும் மட்டுமே வாழ்த்த வந்தனர். கூடவே ஆதினியின் தோழி அனிதா வந்திருந்தாள்.
அயன் வினோதமான மோதிரத்தை எடுத்து ஆதினி கையில் அணிவிக்க, “இதென்ன வித்தியாசமா இருக்கு?” என்றாள் ஆதினி.
“தாலி மாதிரி வச்சிக்கோயேன்.” என்று தோளைக்குலுக்கி, ஆதினி எதிர்பாராத நேரத்தில் அவளது சங்கு கழுத்தில் முத்தமிட்டு நாக்கால் சீண்டவும் ஆதினி சிலிர்த்து விதிர்த்து போனாள்.
மற்றவர்கள் கவனம் அவன் அணிவித்த மோதிரத்தில் இருக்க, அயனின் சேட்டையை ரசிக்க தவறினார்கள்.
“அயலப்பா… அம்மாவுக்கு பெரிய மோதிரமா போட்டிருக்கிங்க” என்றாள்.
“ஆமாடா.” என்றான்.
“அம்மா… இதை தினமும் போடுவாங்களா? அய்யோ… மேத்ஸ் டேபிள்ஸ் படிக்கலைன்னா, நான் ஒழுங்கா சாப்பிடலைன்னா என் தலையில கொட்டுவாங்களே? இவ்ளோ பெரிய மோதிரம் என்றால் வலிக்குமே” என்று அவளது கஷ்டத்தை கூற, அவ்விடம் சிரிப்பலை படர்ந்தது.
அயனோ “அதெல்லாம் அம்மா இந்த மோதிரத்தை டெய்லி போடமாட்டாங்க. தேவைப்படற இடத்துல போடலாம்.” என்றான்.
“தேவைப்படற இடம்னா?” என்று கேட்க, “தேவைப்பட்டா போடலாம்னு” இல்லையா அயன்” என்று ஜமுனா கேட்க, அயனோ குழந்தைக்கு எப்படி புரிய வைக்க, “எக்ஸாட்லி… உரிமையான இடம், பண்டிகை மாதிரி அப்ப கண்டிப்பா இதை போடலாம். அதர்வைஸ்.. இதை லாக்கர்ல வச்சிக்கலாம்” என்றான்.
“ஓ..” என்று அன்னை கையை பிடித்து பார்த்தவள், “அயலப்பா… எனக்கும் இந்த மாதிரி மோதிரம் வேணும்.” என்றாள் அக்ஷயா.
அயனோ சிரித்தவாரு, “நம்ம இடத்துக்கு போனதும், உனக்கான கால நேரத்துல இதே போல ரிங் உனக்கும் தேடி வரும்.” என்றான்.
“நம்ம இடம்னா?” என்றதும், அயன் ஆதினியை கண்டு, “அப்பா பிசினஸ் பண்ணற பிளேஸ்.” என்றான்.
“என்ன தம்பி சொல்லறிங்க? அப்ப வேற ஊருக்கு போறிங்களா?” என்று ஜமுனா கேட்க, “உடனே இல்லை ஆன்ட்டி. கொஞ்ச நாள் கழிச்சு. பிசினஸுக்கு தேவையானதை, நான் பிறந்த ஊர்ல ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். அதுக்கு இன்னும் சில மாதம் ஆகும்.” என்றான்.
செல்வமோ “சும்மா… கேள்வி கேட்காத” என்று அடக்க, பிரதாப்-ஆதினிக்கு நெருக்கமான தோழி அனிதாவோ, “ஆதினி… இந்த மோதிரத்தை ஒரு பிக் எடுத்துக்கறேன்டி. ரொம்ப அழகாயிருக்கு. வித்தியாசமாவும் இருக்கு” என்று தன் போனில் நாலைந்து படமாக எடுத்துக் கொண்டாள்.
அதன்பின் அங்கே தள்ளியிருந்த உயர்ரக உணவகத்தில் யாருக்கு என்ன விருப்பமோ சாப்பிட கூறிடவும், ஆளாளுக்கு சுவைத்திட அமர்ந்தனர்.
அனிதாவிடம் மற்றொரு தோழியோ “ஆதினி மச்சக்காரி. பிரதாப் இருந்தப்பவும் அவளை தேடி வந்து காதலிச்சு கல்யாணம் செய்தான். குழந்தை குட்டினு ஆதினிக்கு கிடைச்சி சந்தோஷமா இருந்தா. பிரதாப் இறந்தப்பிறகும் பாரு… இப்ப அயன்னு ஒருத்தன். சும்மா சொல்லக்கூடாது… அவன் கண் சம்டைம் க்ரீன் வித் ப்ளுனு டால் அடிக்கறப்ப அப்படியே வசீகரிக்கு.
இப்பவும் இவனா வந்து ஆதினியை கல்யாணம் பண்ணி பிரசண்ட் தர்றான். பிரசண்டை பார்த்தியா? மரகதம் மாதிரி க்ரீன் கலர், கலந்து ஒரு மாதிரி பிளாட்டின கலர்ல மோதிரமே வித்தியாசமா இருக்கு.” என்று ஏக்கமாக அயனை நோட்டமிட்டாள்.
ஆதினி கவனத்தில் இந்த பேச்சும் விழவும் லேசாக கண்கலங்க, அயனோ இங்கிருந்தே அனிதாவிடம் பேசிய பெண்ணை எரிக்காத குறையாக பார்த்து வைத்தான்.
“இவளை மாதிரி ஆட்களை எல்லாம் கல்யாணத்துக்கு கூப்பிடணுமா?” என்று கேட்க, “பிரதாப்கும் எனக்கும் இருக்கற பிரெண்ட் அயன்” என்று மெதுவாக கூற, “பிரதாப் பிரெண்ட்ஸை தயவு செய்து கூப்பிடாத. உன்னை காயப்படுத்தற எந்த நண்பர்களும் தேவையில்லை” என்றான்.
ஆதினிக்கும் அயன் கூறுவதே சரியென்று தோன்ற, “நீ பிசினஸ் பார்க்க வேற ஊருக்கு போயிட்டா மொத்தமா கட் ப்ணணிடலாம். இப்ப அவளை முறைக்காத சாப்பிடு” என்று அவன் கையை பிடிக்க, அயனோ “பஸ்ட் டச் ஆதினி” என்றான்.
ஆதினியோ மிரண்டு அயனை கண்டு, தலைகவிழிந்தாள்.
“அக்ஷயா பாப்பா.. சாப்பிட்டிங்களா” என்று திரும்ப, “அயலப்பா… இரண்டு பேரும் மாறி மாறி பேசிட்டு எனக்கு ஊட்டவேயில்லை” என்று குறைப்பட்டாள்.
“அச்சோ… என் செல்லமே. நான் ஊட்டறேன்” என்று அயன் தந்தையாக பொறுப்பை ஏற்றான்.
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்
