Forum

மதுர ஜில்லா... மச்ச...
 
Notifications
Clear all

மதுர ஜில்லா... மச்சானே-29

6 Posts
6 Users
4 Reactions
204 Views
(@praveena-thangaraj)
Posts: 265
Member Admin
Topic starter
 
[#157]

அத்தியாயம்-29

இனியன்... காதலித்தான் என்பதே அகிலன் வீட்டிலிருந்தவர்களுக்கு முதல் அதிர்ச்சி. அதுவும் அந்தக் காதலித்த பெண்ணே... அவன் சொன்று, அவனது கன்னத்தில் அறைந்து, அனைவரின் முன்னிலும் கேள்வி கேட்டுவிட்டு சென்றால் என்றதும் அகிலன், அதியமானும், மீனாட்சியும், தூரிகாவும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

சில நொடிகள் அந்த அறையே அமைதியில் மூழ்கியது.

அந்த அமைதியை கலைத்தது ராஜாராமின் குரல். "காவ்யா... நாம கிளம்பலாம்மா. தெரியாம இங்க வந்துட்டோம். இவங்க வீட்டு பையனை, அவங்க வீட்டுக்குள்ளயே உட்கார்ந்து குறை சொல்லிக்கிட்டு இருக்கிறது சரியில்லை." என்று சங்கடமாக எழுந்தார்.

உடனே காவ்யா, "அய்யோ டாடி... ஒரு நிமிஷம்." என்று அவரை மீண்டும் அமர வைத்தாள்.

"இவரை நான் இப்ப தான் அடையாளம் கண்டுபிடிச்சேன்." என்று அகிலனைப் பார்த்தாள்.

"எங்க காதலுக்கு கிரீன் சிக்னல் வாங்கத்தான் இந்தியா போறேன்னு இனியன் சொன்னான். ஆனா நடுவுல அடிக்கடி இவரைப் பற்றியும் இனியன் ஓயாம பேசுவான்." அகிலன் புருவத்தைச் சுருக்கினான்.

"இவரு தேர்தல்ல எங்கப்பாவுக்கு எதிரா நின்னாரு. வேண்டும்னே எங்க குடும்பத்தை பழிவாங்கத்தான் அப்படி பண்ணுறாருன்னு சொல்லுவான். அதுவும் இல்லாம..." என்று சிறிது தயங்கினாள். ''நம்ம மதுர' சேனல்ல பாரு... எல்லாரும் இவனையே புகழுறாங்க. என்னை விட இவனுக்குத்தான் பேரு அதிகம்னு கடுப்பாகவே பேசுவான்." தூரிகா அதிர்ச்சியுடன் அகிலனைப் பார்த்தாள். இனியன் அண்ணனுக்கு சிறுவயது முதலே இதே எண்ணம் தான். திருமணம் என்றால் அவ்விடத்தில் அவன் மாப்பிள்ளையாக வேண்டும். இழவு வீடாக இருந்தால் பிணமாக மாற வேண்டும். ஆக மொத்தம் எவ்விடத்திலும் தன்னை பற்றி மட்டுமே பேச வேண்டுமென எண்ணுபவன் ஆயிற்றே.!

காவ்யா தொடர்ந்தாள் "நானும் கூட... அப்ப நீங்களும் தேர்தல்ல இறங்கி ஜெயிச்சிடுங்க.'ன்னு சொல்லி அவனை ஏத்தி விட்டிருக்கேன். ஆனா..." என்று தோளைச் சுருக்கினாள்.

"இப்படி திடீர்னு அத்தை பொண்ணையே கல்யாணம் பண்ணிப்பான்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல." என்று உண்மையான குழப்பத்துடன் சொன்னாள்.

அப்போது... மீனாட்சி மெதுவாக தொண்டையைச் செருமிக் கொண்டார். "அகிலனுக்கு... மதுரான்னா உயிர்மா. அவளைக் கட்டிக்கணும்னு ஆசைப்பட்டான். அது பெரியவருக்கு தெரிய வந்ததும்... அவசர அவசரமா இனியனுக்கே பேசி முடிச்சு கல்யாணம் பண்ணி வச்சுட்டாரு." என்றார்.

"ஓ... மை காட்..." என்று வாயைப் பொத்திக் கொண்டாள் காவ்யா.

"பொதுவா தேர்தல்ல தான் போட்டின்னு நினைச்சேன். இந்த... காதல்லயும் போட்டியா? நீங்க விரும்பற பொண்ணு மேல" என்று வியப்புடன் கேட்டாள்.

அகிலன் உடனடியாக  மெதுவாக. "ஒரு சின்ன திருத்தம். விரும்புற பொண்ணு இல்லை. விரும்பிய பொண்ணு." என்று கடந்த காலத்தை அழுத்தமாகச் சொன்னான்.

மேலும் அமைதியாக இருந்த அகிலன் மெதுவாக பேச ஆரம்பித்தான். "நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்காதீங்க. இனியன் ஒருகாலத்துல உங்களை காதலிச்சிருக்கலாம். ஆனா இப்ப... அவன் வேறொரு பொண்ணோட புருஷன்.

அந்த வாழ்க்கைக்குள்ள இனிமே யாரும் குறுக்க வரக்கூடாது. உங்களுக்கு நல்ல வாழ்க்கை கண்டிப்பா அமையும். அதை தேடி போங்க." என்றான் நிதானமாக.

காவ்யா வெளியே சிரித்தாலும் உள்ளுக்குள் மட்டும், 'அவ்வளவு சீக்கிரமா அவனை விட்டுடணுமா? அவன் செஞ்சதுக்கு தண்டனை கிடைக்காம?' என்று மனதிற்குள் முணுமுணுத்துக் கொண்டாள்.

அந்த நேரம் வெளியே மழை இன்னும் பலமாகக் கொட்டியது.

அதியமான் ஜன்னல் வழியாக வெளியே பார்த்துவிட்டு,

"இந்த மழை இன்னும் சீக்கிரம் விடுற மாதிரி தெரியல." என்றார்.

"நல்லதோ... கெட்டதோ... இப்ப நீங்களும் எங்களுக்கு சொந்தம் மாதிரி தான். ஏர்போர்டுக்கு எப்ப போகணுமோ அப்ப போங்க. அதுவரைக்கும் இங்கயே இருந்துட்டு போங்க." என்றார் மனமார.

ராஜாராம் உடனே மறுத்தார்.

"இல்லைங்க... உங்களுக்கு சிரமம்." என்றார்.‌

அப்போது காவ்யா ''ஒரு விஷயம் கேட்கலாமா? என்றாள். "கேளும்மா." என்றார் மீனாட்சி.

"அப்பா உடனடியாக போகணும்னு சொல்லறார். ஆனா நான்.. ரெண்டு மூணு நாள் இங்க தங்கிக்கலாமா?" என்று கேட்டதும் மீனாட்சி திடுக்கிட்டு அகிலனைப் பார்த்தார்.

அகிலனும் அன்னையின் முகத்தையே பார்த்தான்.

காவ்யா சிரித்தபடி விளக்கினாள்.

"இந்தியாவுக்கு வந்ததும் மறுநாளே திரும்ப முடியாது. நான் இனியனை அடி வெளுத்துட்டு டூரிஸ்ட் விசால ஊர் சுத்திப் பார்க்கணும்னு தான் வந்திருக்கேன். அப்பாவையும் அப்படியே பிளான் பண்ணி தான் அழைச்சிட்டு வந்தேன். இங்க எங்களுக்கு யாரையும் தெரியாது. அதனால தான் கேட்டேன்." அகிலன் மெதுவாகத் மறுப்பாக தலையசைத்தான்.

"அது சரியா வராதுங்க. இனியனுக்கு இது பிடிக்காது. ஏற்கனவே எது செய்தாலும் வேண்டும்னே செய்றோம்னு தப்பா நினைப்பான். இப்ப உங்களை இங்க தங்க வச்சா அதுக்கும் ஏதாவது பேசுவான். கூடவே மதுராவை காயப்படுத்தினாலும் செய்வான்." என்றான் அகிலன்.

உடனே காவ்யா சிரித்தாள்.

"சார்... நீங்க எனக்கு உதவி பண்ணும்போது... நான் இனியனோட எக்ஸ்னு உங்களுக்கு தெரியுமா? வீட்டுக்கு வந்த பிறகு தானே தெரிஞ்சது? அப்புறம் எப்படி வேண்டும்னே செய்றதா ஆகும்? இனியன் என்ன நினைச்சாலும்.

ஐ டோன்ட் மைண்ட்." என்று தோளை குலுக்கினாள்.

அதியமான் ஒரு நிமிடம் யோசித்தார். பிறகு, "சரி. எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. இங்கயே தங்கிக்கோங்க." என்றார். எத்தனை காலம் தான் தவறே செய்யாமல் அண்ணன் வீட்டில் தவறாக எண்ணுவார்கள் என்றெண்ணி வாழ்வது. இம்முறை எதுவென்றாலும் பார்க்க வேண்டுமென அவரின் மனசாட்சி எடுத்துரைத்தது. அதற்கு காரணம் மகனின் வலியை நேரில் உணர்ந்தால் இருக்கலாம்‌. 

ராஜாராம் நன்றியுடன் எழுந்து, "ரொம்ப நன்றி. எங்களை தப்பா எடுத்துக்காம பேசறதுக்கு." என்றார்.

அன்றிரவு... ராஜாராம் அதியமான் இருவரும் நிறைய பேசினார்கள். எல்லாமே பொதுவானதாக தான் பேசினார். ராஜாராமுக்கு துணையாக அதியமான் படுத்துக் கொண்டார்.

காவ்யா, தூரிகா அறையிலேயே தங்கினாள். மீனாட்சி அடிக்கடி வந்து அவளுக்கு தேவையானதை கேட்டு கேட்டு செய்தார். தூரிகாவோ மதுராவை பற்றி தான் நிறைய பேசினாள். அகிலனின் காதலை மனதில் புதைத்து இனியனோடு எப்படி வாழ்கின்றாளோ என்று துடித்தாள். இதில் இனியன் மதுராவிடம் எப்படியெல்லாம் துன்புறுத்தி உள்ளானென பட்டியலிட்டு கூற காவ்யாவுக்கே இப்படி ஒருவனையா காதலித்தோமென திகைத்தாள். 

அவள் பார்த்த வரை இனியன் இனிமையானவனாக தான் கண்டது. இப்படி கசப்பானவனாக எந்த காலத்திலும் இல்லை. இப்படி அதிரடியாக மாறியது எதனால்? அதுவும் மதுராவிடம் பிசிகல் ரிலேஷன்ஷிப்பில் இருக்கின்றது கூடுதல் அதிர்ச்சி. 

  காதலித்த தன்னிடம் கூட எட்டி நின்று நல்லவனாக தானே இருந்தான் அல்லது ஏன் இப்படி? என்று புரியாது மதுராவின் கதையை கேட்டாள். மதுராவின் படிப்பு முதல், அவள் வாழ்ந்த முறை, இப்பொழுது அவள் அனுபவிக்கும் இன்னல் என்று தூரிகா கூறி அழுதாள். அவளும் எத்தனை நாள் தான் மனதில் பூட்டி வைத்திருக்க இன்று அதை கேட்க வந்த பெண்ணிடம் கொட்டி தீர்த்தாள். 

  கூடுதலாக 'நீ விரும்பிய இனியன் அண்ணாவின் லட்சணம்' என்று புட்டு புட்டு வைக்கும் நோக்கமும் இருந்தது. 

  இன்று காலையில் இனியன் வீட்டில் நடந்தவைகளை காவ்யா நினைத்து பார்த்தாள். 

இனியன் வீட்டின் வாசலில் காவ்யா கார் வந்து நின்றது.

காலை வெயில் சற்று ஏறியிருந்தாலும் மழைக்கான அறிகுறியாக இறுக்கமாய்  இருந்தது. வீட்டிற்குள்ளும் ஒரு விதமான இறுக்கமான அமைதி நிலவியது.

  கூடத்தில் சோபாவில் அமர்ந்து கணக்குப் புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தார் அருளாளன்.

வேல்விழி சமையல் அறையிலிருந்து காபி வடித்து கொண்டு வந்தார்.

மதுராவோ அமைதியாக தரையைத் துடைத்துக் கொண்டிருந்தாள்.

இனியன் மட்டும் கைபேசியில் ஏதோ பார்த்தபடி சாய்ந்து அமர்ந்திருந்தான்.

அந்த நேரம்... வாசல் கதவு திடீரென படாரென்று திறந்தது.

அனைவரின் பார்வையும் ஒரே நேரத்தில் வாசலை நோக்கித் திரும்பியது.

வாசலில்... ஜீன்ஸ், நீளமான குர்தா, தோளில் கைப்பை... பயணக் களைப்பு முகத்தில் இருந்தாலும், கண்களில் மட்டும் தீயுடன் நின்றிருந்தாள் காவ்யா. அவளுக்குப் பின்னால் சற்றுத் தயக்கத்துடன் ராஜாராம்.

இனியன் அவளைப் பார்த்த நொடியே... உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது போல எழுந்து நின்றான்.

"கா... காவ்யா...!" என்றவனது குரலில் அதிர்ச்சி, பயம்,  நம்ப முடியாத திகைப்பு.

"நீ...?" என்று அவன் வாய்விட்டுப் பேசுவதற்குள்...

சடாரென்று... காவ்யாவின் கை அவன் கன்னத்தில் இடியாய் இறங்கியது.

இரண்டடி அறைந்த சத்தம் அந்த வீட்டையே அதிர வைத்தது.

வேல்விழி கையிலிருந்த டம்ளரை தவறவிட்டார்.

அருளாளன் எழுந்து நின்றார்.

மதுராவும் துடைப்பத்தை கையில் பிடித்தபடியே அசையாமல் நின்றாள்.

இனியன் கன்னத்தைப் பிடித்தபடி காவ்யாவையே பார்த்தான். "காவ்யா... வாட் ஆர் யூ டூயிங்...?" என்றான் அவமானத்துடன். ஒரு பெண் கையால் அறை வாங்கிவிட்டானே.

"ஷட் அப்..." என்று காவ்யா சீறினாள். "இனிமே என் பேரை உன் வாயால சொல்லாத." என்றவள் அவனது ஷர்ட்டை ப்றறி முழு வீட்டையும் சுற்றிப் பார்த்தாள்.

"இங்க இருக்கிற எல்லாருக்கும் தெரியணும். நீ எந்த மாதிரி ஆளுன்னு" என்ற போதும் இனியன் லேசான பதட்டத்துடன் "காவ்யா... நீ முதல்ல..." என்று பேஞ, "ஸ்டாப்." என்று கையை நீட்டி நிறுத்தினாள்.

"ஒரு அடி கூட முன்னாடி வந்த.. மறுபடியும் கன்னத்துலயும் நாலறை வாங்குவ." என்றாள்.

அருளாளனுக்கு காலனதலித்த பெண் என்று தெரிந்தாலும் மதுரா எதிரே காட்டிக்கொள்ளாமல்,

"யாரும்மா நீ?" என்று கேட்டார்.

காவ்யா அவரை நேராகப் பார்த்தாள்.

"உங்க பையனோட.. காதலி. முன்னால் காதலி" என்றதும் அந்த வார்த்தைகள்... அந்த வீட்டில் குண்டு வெடித்தது போல இருந்தது.

வேல்விழியின் கால்கள் தளர்ந்தன. அருளாளன் இனியனைப் பார்த்தார். இங்கே மகன் ஒரு பெண்ணை விரும்பியது வேல்விழி அருளாளன் அறிந்ததே என்றாலும், இப்படி இனியனை கன்னத்தில் அறைந்து பேசுவாளென யார் கண்டது?! இதில் அருளாளன் பார்வை வீடு வரை வந்து கேள்வி கேட்கும் வகையில் நிறுத்திவிட்டாய் என்பது போல பார்வையால் இனியனை எரித்தார்.

மதுரா மட்டும்... எந்த உணர்வும் காட்டாமல் அமைதியாக நின்றாள். 

காவ்யா தொடர்ந்தாள்.

"கல்யாணம் பண்ணிக்கறேன்னு ஆசை காட்டின. என்னோட வீட்ல சொல்லி, அப்பா அம்மாகிட்ட காதலை சொல்லி சம்மதம் வாங்கி பொண்ணு பார்க்க வர்றதா சொன்னான். நானும் முட்டாள்தனமா நம்பினேன்." இனியன் அவசரமாக, "காவ்யா... லிஸன்..." என்று சொல்ல...

"யூ லிஸன்." என்று மீண்டும் கத்தினாள்.

"கல்யாணம் ஆயிடுச்சுன்னு ஒரு வார்த்தை சொல்லலை. இன்னும் கல்யாணமே ஆகலன்னு பொய் சொல்லிட்டு... இங்க..." என்று மதுராவை நோக்கி திரும்பினாள்.

"ஏற்கனவே ஒரு பொண்ணோட வாழ்க்கையை ஆரம்பிச்சிட்டு இருக்க." வேல்விழியின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

அருளாளனோ "இனியா..." என்று மகனைப் பார்த்தார்.

ஆனால் அவனால் பதில் சொல்ல முடியவில்லை.

காவ்யா சிரித்தாள். அந்த சிரிப்பில் வலி மட்டுமே இருந்தது. "நான் அமெரிக்காவுல இருந்து... உன் குடும்பத்துக்கும் நம்ம காதலுக்கும் சம்மதம் வாங்கிட்டேன்னு நம்பினேன்டா. ஆனா இங்க வர்றதுக்கு முன்னயே,  உன் உண்மையான முகம் தெரிஞ்சது.'' என்றவள்

அருகே சென்று இனியன் சட்டையை மீண்டும் பிடித்தாள்.

"என்னை ஏமாத்தினது பரவாயில்லை. ஆனா... ஒரே நேரத்துல... இரண்டு பொண்ணுங்க வாழ்க்கையோட விளையாட நினைச்ச பாரு. அதுக்கு... உன்னை மன்னிக்கவே முடியாது." என்று அவனை தள்ளிவிட்டாள்.

இனியன் இரண்டடி பின்னால் நகர்ந்து தலைகுனிந்து நின்றான். 

  மதுரா அவனைப் பார்த்தாள். அவளது உதட்டில் மிக மிக மெல்லிய கசப்பான புன்னகை. 

காவ்யா கைப்பையை தோளில் மாட்டிக் கொண்டாள்.

"எனக்கு இப்ப உன் மேல கோபமே இல்ல. உன் மேல அருவருப்பு தான் வருது" என்று கூறிவிட்டு வாசலை நோக்கி நடந்தாள்.

வாசலைத் தாண்டுவதற்கு முன் ஒருமுறை மட்டும் திரும்பிப் பார்த்தாள்.

"அந்த கடவுளுக்கு தேங்க்ஸ் சொல்லணும். உன்னை மாதிரி ஒரு பொய்யனைக் கட்டிக்காம தப்பிச்சிட்டேன்." என்று விட்டு வெளியேறினாள்.

அவளுக்குப் பின்னால் தலைகுனிந்தபடி ராஜாராமும் அதிர்ச்சி அடைந்து வெளியே வந்தார். அவருக்கு மகளின் இந்த நிலையை கண்டு பேரதிர்ச்சி. ஏதோ திருமணம் செய்ய நாள் பார்க்க ஆரம்பிக்க வேண்டுமென்ற ஜோரில் இருந்தவருக்கு, இனியனை கண்டபடி திட்டி அடித்து மகள் ஆவேசத்தை தீர்த்தை கண்டு பேச்சிழந்து போனார். ஒரு வகையில் இனியனை அவருக்கு ஏனோ பிடிக்கவில்லை. அதனால் அதிர்ச்சியை மறைத்து, மகளிடம் பேசிக்கொள்ள நினைத்து திரும்பினார். 

வாசல் கதவு மூடிய சத்தம். அந்த வீட்டில் இருந்த ஒவ்வொருவரின் மனதிலும் எதிரொலித்துக் கொண்டே இருந்தது. அந்த அமைதியை உடைக்க அங்கே யாருக்கும் வார்த்தைகள் இல்லை.

எப்படியோ நேரில் சென்று இனியனை திட்டி தீர்த்துவிட்ட திருப்தியில் காவ்யா இங்கு அகிலன் வீட்டில் நிதானமாக மழையை வேடிக்கை பார்த்தாள். 

வெளியே மழை இன்னும் ஓயாமல் கொட்டிக் கொண்டிருந்தது. ஆனால்...

அந்த மழையோடு சேர்ந்து, அகிலன் வீட்டிற்குள் இன்னொரு புதிய உறவும், புதிய திருப்பமுமாக அமைதியாக நுழைந்து கொண்டிருந்தாள் காவ்யா.

-தொடரும்.

-பிரவீணா தங்கராஜ்.

 


 
Posted : July 10, 2026 6:50 am
(@guna-sundari)
Posts: 138
Estimable Member
 
  • Super kavya super. Eniyian need this punishment.  But kavya will pair to akilan. Very intresting  sis.

 
Posted : July 10, 2026 9:18 am
(@kavi-bharathi-arunkumar)
Posts: 126
Estimable Member
 

Iniyan you deserve this punishment aana arulaalan innaikku unga paiyan life ipadi irukavum avan oda behavior kum moola karanam yae ungaloda pazhivangura ennam than aarambam yae appo athukana thandanai ah yum nega anubavachi than aaganum 


 
Posted : July 10, 2026 9:47 am
(@crvs2797)
Posts: 188
Estimable Member
 

மதுர ஜில்லா..மச்சானே ..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 29)

அட.. அடிச்சாள், திட்டினாள், கோபத்துல வந்துட்டாள் எல்லாம் சரி, ஆனா நீ ஏன்மா அகிலன் வீட்டுக்கு வந்தே...? நீ இப்ப அகிலனை உத்து உத்து பார்க்கையில எங்க மனசு இல்ல லப்பு டப்புன்னு அடிச்சிக்குது.
நீ எங்க அகிலனுக்கு வேண்டாம்மா, ஏற்கனவே தம்பி காதலிச்சவளை அண்ணன் கட்டிக்கிட்டான், இப்ப அண்ணன் காதலிச்சவளை தம்பி வேற கட்டிக்கணுமா என்ன ? இங்க என்ன மேட்சிங் மேட்சிங் காம்ப்படீசனா நடத்திக்கிட்டடிருக்கிறோம். தவிர, எங்க அகிலன் அப்பிராணி, நல்லவனட, வல்லவன்...ஸோ அதனால அம்மாடி காவ்யா நீ அவனுக்கு வேணாம். நீ பேசாமல் பெட்டி படுக்கையை கட்டிக்கிட்டு உன் அப்பனோடவே அமெரிக்கா போய்ச் சேரு, அதான் உனக்கும் நல்லது, எங்க அகிலனுக்கும் ரொம்ப, ரொம்ப நல்லது

😔😔😔
CRVS (or) CRVS 2797


 
Posted : July 10, 2026 11:33 am
(@kothaihari)
Posts: 125
Estimable Member
 

செம ... காவ்யா‌பண்ணது செம


 
Posted : July 22, 2026 12:00 am
(@karthi1206)
Posts: 69
Trusted Member
 

Superb epi 


 
Posted : August 10, 2026 7:16 pm

Scroll to Top