Forum

தகிக்கும் நிலவொன்று...
 
Notifications
Clear all

தகிக்கும் நிலவொன்று-47

10 Posts
9 Users
3 Reactions
150 Views
(@praveena-thangaraj)
Posts: 265
Member Admin
Topic starter
 
[#333]

அத்தியாயம்-47

மதுவை தொண்டையில் சரித்தபடி, ஷ்ரத்தாவைத்தான் தேடிக் கொண்டிருந்தான் சத்ரியன்.

அவள் இல்லாத ஒவ்வொரு நொடியும் அவனுக்கு எரிச்சலாக இருந்தது. "ஷ்ரத்தா..." அவன் குரல் அறை முழுவதும் அதிர்ந்தது.

"ஏய்... ஷ்ரத்தா!" அந்த சத்தம் கேட்டு ஓடி வந்த லட்சுமி, "மேம்... பாஸ் உங்களை கூப்பிடுறாரு." என்று அவசரமாக சொல்ல, அப்போது தான் ராயனுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்த ஷ்ரத்தா எழுந்தாள்.

"நீங்களே பார்த்துக்கோங்க." என்று ராயனை நந்திதாவிடம் ஒப்படைத்தாள். "தியாவையும் பார்த்துக்கோங்க." என்று தீபாவிடம் சொல்லிவிட்டு வேகமாக சத்ரியனின் அறைக்குச் சென்றாள்

கதவைத் திறந்தவுடன், அறைக்குள் மதுவின் வாடை அடித்தது. சத்ரியன் அவளை பார்த்ததும் கண்கள் சற்றே சிவந்த நிலையில் எழுந்தான்.

"எங்கடி போன?" அவன் குரலில் கோபமும் இருந்தது. அதே நேரத்தில் அவளை காணாமல் இருந்ததற்கான உரிமையும் இருந்தது.

"என்ன தேடிட்டு இருந்த? எப்பவும் என் கூடதானே இருக்கணும்?" அவள் அருகில் வந்ததும், "நானே கூப்பிடுற அளவுக்கு என்னை லோன்லியா விட்டுட்டு போற?" என்று அதட்டியவன், "வாடி இங்க." என்று கையை நீட்டினான்.

ஷ்ரத்தா அவனை முறைத்தாள். "என்னதான் பிரச்சனை உனக்கு? குழந்தைக்கு சாப்பாடு ஊட்டி தூங்க வைக்கிறதுக்குள்ள கத்தற. உன் குரல் கேட்டாலே குழந்தைகள் பயப்பட மாட்டாங்களா?" என்று மனைவியின் தோரணையில் அதட்டி, குழந்தைக்கு அன்னையாக அக்கறைப்பட்ட அவளை, சத்ரியன் சில நொடிகள் பார்த்தான்.

பிறகு அவளது கையை பிடித்து அருகில் இழுத்தான். "நானே... குழந்தை, குட்டி, வொர்க், பிசினஸ்னு முட்டி மோதி.. எல்லாம் உதறிட்டு, என் பொண்டாட்டியோட மடியை தேடி வந்திருக்கேன்." என்று சொல்லிக்கொண்டே அவள் கையில் இருந்த குழைவான பருப்பு சாதத்தை கவனித்தான்.

அதை அவளது விரல்களில் இருந்து நாவால் நக்கி சுவைத்தான். ஒவ்வொரு விரலாகவும் சாப்பிட்டு முடித்தவன், "பச் கையை கூட கழுவாம ஓடி வந்தேன்." என்றாள்.

அவள் சேலையில் கையை துடைக்க முயன்றாள். அவனோ அந்த சேலையை அவனை நோக்கி இழுத்தான்.

"சத்ரியா!" என்று அவள் பதறவும், அவன் சிரித்தான்.

"எனக்கு பயங்கரமா பசிக்குது. முதல்ல எனக்கு விருந்து வைடி" அவனது கண்களில் குறும்பு தெரிந்தது.

"மணி ஏழுதான் ஆகுது." என்றவள் தயங்க, சத்ரியனின் புருவம் உயர்ந்தது.

"சோ வாட்? இந்த சத்ரியனுக்கே நேரம் சொல்லறியா?" அவனது குரலில் போதையின் மயக்கமும், வழக்கமான திமிரும் கலந்திருந்தது.

ஷ்ரத்தா பெருமூச்சு விட்டாள். இவனிடம் இப்போது பேசிப் புரிய வைப்பது வீண் என்று முடிவு செய்தவளாக அவனை மெதுவாக மெத்தையில் தள்ளி விட்டு, அவனருகில் படுத்துக் கொண்டாள்.

அடுத்த சில நொடிகளில்... அவள் கண்களை மூடியதுதான் நினைவில் இருந்தது.

அதற்குப் பிறகு. இரவு எப்போது கடந்தது என்பதே தெரியவில்லை.

சூறாவளியை போல அவளை ஆக்கிரமித்து விடுவித்து எப்பொழுது கண்ணயர்ந்தார்கள் என்று அவளுக்குமே தெரியவில்லை. 

அதிகாலை ஜன்னல் வழியாக வந்த வெளிச்சம் முகத்தில் விழுந்தபோது தான் ஷ்ரத்தா கண்களைத் திறந்தாள்.

சோம்பலை முறித்தபடி எழுந்தவள், நேரத்தை பார்த்ததும் வேகமாக எழுந்தாள்.

சத்ரியன் இன்னும் உறங்கிக் கொண்டிருந்தான். அவனை எழுப்பாமல், அவசரமாக குளித்து முடித்து, வேறு உடை அணிந்து, தலைமுடியை கிளிப்பால் அடக்கிக் கொண்டு குழந்தைகளை தேடி கீழே வந்தாள்.

அவள் வந்ததும் தியா ஓடிவந்தாள். "குட் மார்னிங் மம்மி!" என்று மலர்ந்த முகத்துடன் சொல்ல, ஷ்ரத்தாவும் "குட்மார்னிங்" என்று  சிரித்தாள்.

"குட் மார்னிங் கண்ணா." என்று ராயனுக்கு கூற, ராயன் மட்டும் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

ஷ்ரத்தா அதை கவனித்தாள். "என்ன ராயன்?" என்று அருகில் சென்றாள்.

"நந்திதாக்கா..." என்று அவளை பார்த்தாள்.

"என்ன ஆச்சுக்கா?" என்றாள். 

"தெரியலை மேம். இவ்வளவு நேரம் பால் கொடுத்தோம். சமத்தா குடிச்சாரு குட்டி பாஸ்." ஷ்ரத்தா ராயனின் அருகில் அமர்ந்தாள்.

"என்னடா? அக்கா ஏதாவது விளையாட்டு பொருள் தரமாட்டேன்னு சொல்லிட்டாங்களா?" என்றாள். ஏனெனில் அடிக்கடி நடக்கும் குட்டி சண்டை அது தான். 

ராயன் முகத்தைத் திருப்பிக் கொண்டே, "அக்கா குட் கேர்ள். சிறிது இடைவெளிக்குப் பிறகு, "நீ தான் பேட் கேர்ள்." என்றான்.

அங்கே இருந்த தீபா, நந்திதா, லட்சுமி மூவரும் புரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.

ஷ்ரத்தா அவனை தூக்கிக் கொண்டு, "என்னடா கண்ணா? அம்மா மேல என்ன கோபம்?" என்று கேட்டாள்.

ராயன் அவளது கழுத்தை சுற்றி கைகளை போட்டான்."நீங்க எனக்கும் தியாக்காவுக்கும் அம்மாவா மட்டும் இருந்தீங்க பட்..  டேடி வந்ததும் டேடி கூட தான் இருக்கிங்க" என்றதும் அந்த வார்த்தை கேட்டதும், தீபா நந்திதா லட்சுமி மூவரிடமிருந்தும் அடக்கப்பட்ட சிரிப்பு வெளியேறியது.

ஷ்ரத்தா நாணத்துடன், "அப்படியெல்லாம் இல்லையே. அம்மாவுக்கு நீங்கதான் இம்பார்ட்டெண்ட்." என்றாள். 

ராயன் உடனே மறுத்தான். "நோ மம்மிக்கு டேடிதான் இம்பார்ட்டெண்ட்." அவன் குற்றப்பத்திரிகையை தொடர்ந்தான்.

"நேத்து பப்பு மம்மம் பாதி ஊட்டிட்டு அப்படியே போயிட்டீங்க. என் ஸ்டமக் ஃபுல்லா ஆச்சான்னு கூட பார்க்கலை. குட்நைட் கிஸ் தரலை.

  டேடிக்கு மட்டும் குட்நைட் கிஸ்ஸா" என்றான்.

ஷ்ரத்தா வாயடைத்துப் போனாள். இரண்டு வயதை தாண்டிய குழந்தை இப்படி கணக்கு வைத்துக் கொண்டிருக்கிறதே என்று நினைத்து சிரிக்கவும் முடியவில்லை.

அந்த நேரத்தில் பின்னால் இருந்து சத்ரியனின் குரல் கேட்டது. "ஆமாடா... அவளுக்கு நான் தான் முக்கியம். நான் தான் ஃபர்ஸ்ட் பிளேஸ்." என்று அழுத்தமாய் பதில் தந்தபடி, குளித்து முடித்து, புத்துணர்ச்சியுடன் அறையிலிருந்து வெளியே வந்திருந்தான் சத்ரியன்.

"எனக்குத்தான் குட்நைட் கிஸ்." என்று சட்டையின் பட்டனை சரிசெய்தபடி வந்தவன் ராயனை பார்த்து சிரித்தான்.

நேற்றைய மதுவின் வாசனை முழுவதும் மறைந்திருந்தது.

ராயன் உடனே, "பார்த்தீங்களா!" என்று ஷ்ரத்தாவை பார்த்தான்.

சத்ரியன் பார்க்க அவனை முறைத்தாள் ஷ்ரத்தா. "ஏன் இப்படி எரியிற நெருப்புல எண்ணெய் ஊத்துற?" என்றபடி ஷ்ரத்தா சத்ரியனை நோக்கி அனல் பார்வை வீசினாள்.

அந்த நேரமே சத்ரியனே எதிர்பாரா விதமாக "டேடி!" என்று தியா ஓடிவந்தாள்.

சத்ரியன் அந்த குரலை கேட்டதும் திடீரென்று திரும்பினான். அவள் தன்னிடம் ஓடி வருவாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.

அதிலும் அவள் மீண்டும் தன்னை கட்டிக்கொள்ள முயல்வாள் என்று நினைக்கவே இல்லை. அவன் இயல்பாகவே ஒரு அடி பின்னால் நகர்ந்தான்.

ஆனால் தியா அவனிடம் தாவிவிட்டாள். வேறு வழியில்லாமல் அவளை பிடித்துக் கொண்டான்.

அந்த நொடியே ராயனும் ஓடி வந்தான். சில நொடிகளுக்கு முன்பு வரை கோபமாக இருந்தவன், தியா தந்தையின் கைகளில் இருப்பதை பார்த்ததும், "டேடி!" என்று கத்திக் கொண்டு அவனிடம் ஓடி வந்தான்.

சத்ரியன் சிரித்தான். "ஏன்டா? என்னை பிடிக்காத மாதிரி பேசினியே? இப்ப ஏன் வந்த?" ராயன் உடனே, "நோ டேடி." என்று தலையசைத்தான்.

"நீங்களும் எங்களைதான் லவ் பண்ணணும். மம்மியும் எங்களைதான் லவ் பண்ணணும்." சிறிது யோசித்தவன்,

"பட்... மம்மி உங்களை லவ் பண்ணக்கூடாது." சத்ரியன் புருவத்தை உயர்த்தினான்.

"அது சரி... முதலுக்கே மோசம் வைக்கறான் பாரு." என்று முணுமுணுத்தவன், தியாவை மெதுவாக ஷ்ரத்தாவிடம் ஒப்படைத்துவிட்டு ராயனின் கன்னத்தை கிள்ளினான்.

ராயன் சிரித்தான். ஆனால்... தியாவை தூக்கியபோது சத்ரியனின் கைகளில் ஏதோ ஒன்று மீதமிருந்தது. அது குழந்தையின் எடை மட்டும் அல்ல. அந்த சிறிய கைகள். அவனை சுற்றிய விதம்... 'டேடி' என்று அழைத்த குரல்., அவனது மனதில் இன்னும் ஒலித்துக் கொண்டிருந்தது.

அவன் தன் இரு கைகளையும் பார்த்தான்.

ஒரு கணம் அந்த கைகளில் தெரியாத வண்ணத்துப்பூச்சியின் நிறங்கள் ஒட்டிக் கொண்டிருப்பது போல உணர்ந்தான். அந்த எண்ணத்தை உடனே தள்ளிவிட்டவன், "திரும்ப மதியத்துக்கு மேல ஆகும். நீ ஹாஸ்பிடல் கிளம்பு. குழந்தைங்க இவங்க பார்த்துப்பாங்க." என்று மட்டும் சொல்லிவிட்டு கிளம்பினான்.

மறுபுறம் ஷ்ரத்தாவும் மருத்துவமனைக்குச் செல்ல தயாரானாள். அவளது இன்டர்ன்ஷிப் நாட்கள். கல்லூரி வாழ்க்கையின் கடைசி கட்டம்.

பல வருடங்களாக தந்தையின் கனவாக அவள் சுமந்து வந்த மருத்துவப் படிப்பின் நிறைவு நெருங்கிக் கொண்டிருந்தது.

தீபாவிடம் தியாவை ஒப்படைத்தாள். "அவளுக்கு கொஞ்சம் படிப்பு சொல்லிக் கொடுங்க." என்று கூறிவிட்டு ராயனை நந்திதாவிடம் விட்டாள்.

லட்சுமி அவளுடன் மருத்துவமனைக்குப் புறப்பட்டாள். காரில் அமரும்போது, ஷ்ரத்தாவின் முகத்தில் முன்பிருந்த அந்த சோகத்தின் நிழல் இல்லை.

பல வருடங்களாக தன்னை விட்டு பிரிந்திருந்த சத்ரியன் திரும்பி வந்திருந்தான்.

ராயன் அவளருகில் இருந்தான். தியா மெதுவாக அந்த வீட்டின் ஒரு பகுதியாக மாறிக் கொண்டிருந்தாள்.

அவளது மருத்துவக் கனவும். இன்னும் சில மாதங்களில் நிறைவேறப் போகிறது.

அவளது தந்தை ஒருநாள் கண்ட கனவின் கடைசி படிக்கட்டில், இப்போது ஷ்ரத்தா நின்று கொண்டிருந்தாள்.

மருத்துவமனை வாசலில் கார் நின்றது. அவள் கதவைத் திறந்து இறங்கினாள்.

முகம் முழுவதும் புன்னகை. கண்களில் நம்பிக்கை.

முன்பு போலவே உடைக்கு உள்ளே புல்லட் ப்ரூப் போன்ற பாதுகாப்பு ஆர்மர் அணிந்து தான் வந்திருந்தாள். ஆனால் முன்பு போல பயமில்லை. அவளுக்கு சத்ரியன் வந்தப்பின் அவளது நிழலையும் யாராலும் நெருங்க இயலாதென்ற கர்வம் இருந்தது. 

அந்த கர்வத்திற்குரியவனோ தனது இன்டர்நேஷனல் டீலிங்கை பேசி தீர்க்கும் முடிவுடன் கிங்பின் வாழ்க்கைக்கு எப்பொழுதும் போல தாவியிருந்தான்.

சத்ரியன் உலகம் மாறவில்லை. அவன் மாறியிருந்தாலும், அவனது தொழில் மாறவில்லை.

கிங்பின் வாழ்க்கை என்பது அவனுக்கு வெறும் பெயர் அல்ல. அது சத்ரியனின் சுவாசம்.

கிங்பின் வாழ்வு என்றாலும், குழந்தைகளை வைத்து எந்த பிசினஸும் அவன் காதுக்கு வரக்கூடாது. அதை தவிர மற்ற தொழில் என்றாலும், அது சட்டத்திற்கு உட்பட்டதா, வெளியிலோ என்ற கேள்வியே அவனுக்கு பெரிதாக இருக்கவில்லை.

பணம், அதிகாரம், ஆட்கள்...அவனது உலகத்தில் எல்லாமே ஒரு கணக்குதான். தமிழ்நாட்டின் அரசியல் முதல் சர்வதேச வியாபாரம் வரை...அவனது நிழல் எங்கே விழுகிறது என்பதை பலருக்கே தெரியாது.

  இப்பொழுது கூட தமிழ்நாட்டில் முதலமைச்சருக்கு எதிராக கோஷமிட ஆட்களை வண்டி வண்டியாக இறக்கிவிட ஆணையிட்டு, முதலமைச்சருடன் பிரேக்பஸ்ட் முடித்தான். எந்த ஆட்சியிலும் ஆட்களை இறக்குவது பெரிய விஷயமில்லை. எல்லாம் பணம் பேசும் விஷயம் அவ்வளவே. 

  அடுத்து வண்டி வண்டியாக கன்டெய்னர் பணத்தை அனுப்பிவிட்டு, மத்திய அரசுக்கு பணவுதவி செய்துவிட்டே, இன்டர்நேஷல் விஷயமாக பேங்க் மூலமாக சிலரின் பணத்தை கருப்பு பணமாக இல்லாமல் மாற்றி தரும் வித்தையை கண்ணசைப்பில் முடித்து விட்டான். 

தனஞ்செயனோ இவனின்றி தான் அந்த பதவிக்கு வந்ததாக நினைத்து நடத்திய அனைத்தும் சத்ரியன் வழியாக மட்டுமே ஆளப்பட்டதை அறிந்து, ரிதுராஜை போல சாகாமல், பாட்னராகவே இருந்துக் கொண்டான். 

   அதிலும் அந்த தீவு ஆட்களிடமே முட்டி மோதி எண்பது தொன்னூறு விழுக்காடு மரணத்தை பரிசளித்து வந்ததை அறிந்து எட்டியே நிற்கின்றான். 

  என்ன வினோத் இறந்துவிட்டது மட்டும் கொஞ்சம் கஷ்டமானதாக அமைந்தது. சத்ரியனிடம் ஏதாவது காரியம் ஆகவேண்டுமென்றால் வினோத்திடம் அணுகினாலே போதும். இனி யோகேஷ் பீட்டர் எந்தளவு தங்களுக்கு செவி சாய்ப்பனரோ? அவர்கள் எல்லாம் சத்ரியன் சொல்லை தாண்டி எதையும் காதில் வாங்காதவர்களாயிற்றே. 

சத்ரியன் கடிகாரத்தை பார்த்து, எல்லோரிடமும் தலையசைப்பை தந்துவிட்டு வீட்டை நோக்கி பறந்தான். அவனது சின்னஞ்சிறு உலகத்தை காண... 

-தொடரும். 

-பிரவீணா தங்கராஜ்.

 


 
Posted : August 26, 2026 7:19 am
(@crvs2797)
Posts: 188
Estimable Member
 

தகிக்கும் நிலவொன்று.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 47)

ஆக மொத்தம், சத்ரியன், ஷ்ரத்தா, ராயன், தியான்னு வெல் செட்டில்ட்ன்னு ஆகி ரொட்டின் லைஃப்க்கு திரும்பிட்டான்.

அது சரி, ரெண்டோட நிறுத்துவானா... இல்ல இன்னும் ரெண்டு மூணுன்னு எண்ணிக்கையை ஏத்துவானா..
ஏன்னா அவன் போற ஸ்பீட் அந்த மாதிரி. அவன் போதும்ன்னு நினைச்சாலும் ரைட்டர் மேடம் விட மாட்டாங்க. ஏன்னா, அவன் கிங்பின் ஆச்சே.

போகட்டும், அந்த அப்பாவி ரெண்டு ஜீவன் ருத்ரன் & யதுநந்தன் அவங்களை அப்படியே டீல்ல விட்டுடாதிங்க. அவங்களுக்கும்
எப்படியாவது கொஞ்சம் தடை பண்ணி ஜோடி சேர்த்து விடுங்க.

😐😐😐
CRVS (or) CRVS 2797


 
Posted : August 26, 2026 7:49 am
Aishu Selva and Padma reacted
(@subhakumar85)
Posts: 112
Estimable Member
 

Dei panrathu  yellam mollamari vela ethula office poitu vara maathiri build up


 
Posted : August 26, 2026 7:55 am
(@ambikahashini)
Posts: 47
Eminent Member
 

Interesting sis 


 
Posted : August 26, 2026 8:07 am
(@guna-sundari)
Posts: 138
Estimable Member
 

Wow super super. Chatriyian for outside world he is kingpin. But in home lovable father and husband. Sharadha is kingpin in home. Fantastic narration sis. Rayan calculation is very cute. Very intresting sis.


 
Posted : August 26, 2026 9:25 am
(@kothaihari)
Posts: 125
Estimable Member
 

சூப்பர். குட்டி ராயன் சத்ரியிடமே போட்டி செம... தியாவையும் ஏத்துக்கிட்டா போதும்


 
Posted : August 26, 2026 9:38 am
(@kalidevi)
Posts: 140
Estimable Member
 

Chathriya unaku potiya un paiyane vanthutan eni love pathi pathi tha polaye athe mari konjam konjama diya varum ethukanum. Super sharadha ava life aim ah win pana pora athe mari chathriyanum kingfin velaiya pathalum crt time ku veetuku varan family kuda iruka  good oru nalla husband ah 


 
Posted : August 26, 2026 11:59 am
(@aishu-selva)
Posts: 31
Eminent Member
 

Super super 


 
Posted : August 26, 2026 4:31 pm
(@kavi-bharathi-arunkumar)
Posts: 126
Estimable Member
 

Chathriya unnoda paiyan la athu than unna mathiri yae irukan possessive la ne vazhu raja pondati pillai nu unnoda kingpin life nu avan vazhi la vazhundu kitu irukan


 
Posted : August 26, 2026 5:38 pm
(@ambikahashini)
Posts: 47
Eminent Member
 

Interesting sis 


 
Posted : August 27, 2026 8:44 am

Scroll to Top