மதுர ஜில்லா... மச்சானே!-69
அத்தியாயம்-69
மதுரையின் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண நாள். இதே நாளில் மதுரா இனியனின் திருமண நாளும் அமைந்திருக்க, காலையிலேயே மதுரா குளித்து முடித்து வரவும், இனியனாவே "இன்னிக்கு நம்ம கல்யாண நாள் மதுரா. உனக்கு நிச்சயம் இந்த நாள் மறந்திருக்காது. போன வருஷம் நீ இந்த நாளையே வெறுத்திருக்கலாம்.
பட்... இது இந்த முதல் வருட நம்ம கல்யாண நாளுக்காக வாங்கிய சீலை. உன்னோட அளவு ப்ளவுஸ் வச்சி அம்மா தைச்சி வச்சிட்டாங்க. கட்டிப்பியா." என்று நீட்டினான்.
பாவடை மட்டும் அணிந்து தலையில் கொண்டயிட்டு, தூங்கிக் கொண்டிருப்பான் என்று வந்தவளுக்கு, இனியன் இன்று அணிய வேண்டிய உடையை கொண்டா வந்து நீட்டவும், நெஞ்சில் கையை வைத்து நின்றவள், மெதுவாக வாங்கிக் கொண்டாள்.
"தேங்க்ஸ்.. தேங்க்யூ." என்று கன்னத்தில் முத்தமிட்டு கழுத்தில் கிளர்ச்சியை தந்துவிட்டு, மகிழ்ச்சியை வெளிப்படுத்தி மகிழ்ந்தான்.
மதுராவோ மெதுவாக "சேலை கட்ட ஆரம்பித்தாள்.
"நீ..நீங்க குளிக்க போங்க இன்னிக்கு கோவிலுக்கு போகணும்னு அத்த சொன்னாங்களே" என்றதும் அவசரமாக அவனும் குளிக்க ஓடினான்.
அன்று மதுரை நகரமே ஒரு பெரிய திருமண வீட்டைப் போல மாறியிருக்குமே.
வைகறையிலேயே வீதிகள் விழித்துக் கொண்டிருந்தது.
கோவிலை நோக்கிச் செல்லும் ஒவ்வொரு தெருவிலும் மக்கள் கூட்டம். பெண்களின் பட்டுப்புடவைகள் கண்ணைப் பறிக்க... ஆண்களின் வேட்டி, சட்டைகள் வெண்மையாக மின்ன... குழந்தைகள் புத்தாடைகளில் ஓடிக்கொண்டிருந்தனர். இனியனுக்கு பட்டு வேஷ்டி எல்லாம் கட்டிக்கொண்டு நெடுநேரம் கூட்டத்தில் நிற்க பயம். அப்படியொன்றும் வேஷ்டி சௌகரியமில்லை என்பான். அதனால் மதுரா சேலைக்கு ஏற்ற பேண்ட் ஷர்ட் தான் அணிந்தான்.
"நீங்க வேஷ்டி கட்டலையா?" என்றாள்.
"அய்யோ... இந்த ஓட்டறது கட்டறது கூட நமக்கு செட்டாகாது. கூட்டமா இருக்கும். எனக்கு இதான் சௌகரியம்" என்று கூறிட, மல்லிகை பூவை சூடினாள்.
அதன் வாசத்தில் கிறங்கியவன், உடனடியாக கீழே வந்து உணவை முடித்து கோவிலுக்கு கிளம்பினார்கள்.
மல்லிகை மணமும், கற்பூர வாசனையும், சந்தனத்தின் மணமும் கலந்து மதுரை காற்றே மங்களமாக வீசியது. நாதஸ்வரமும் தவிலும் தொலைவிலிருந்தே கேட்க ஆரம்பித்தது.
மதுரா இனியனுக்கு எழிலரசன் தான் முதலில் வாழ்த்தியது. "ஹாப்பி அனிவெர்சரி அண்ணி" என்றான்.
மதுர லேசான புன்னகை உதிர்த்தாள். "சேலை ப்ளவுஸ் எல்லாம் சரியா இருக்கா" என்று வேல்விழி கேட்க, "சரியா இருக்கு அத்தை" என்றாள்.
"கல்யாண நாள் வாழ்த்துகள் மா." என்றார்.
இனியனோ அப்பா அம்மாவை நிறுத்தி காலில் விழுந்தான்.
"சீக்கிரம் பேர புள்ளைய பார்த்துடணும். நல்லபடியா சந்தோஷமா இருங்க" என்றார் அருளாளன்.
மதுராவோ இனியனிடம் தவிப்பாக பார்த்தாள்.
ஏற்கனவே குழந்தை போனதால் தன்னை தினுசாக பார்த்து தவிப்பதாக நினைத்து, "கோ..கோவிலுக்கு போலாம்" என்று கைப்பிடித்து அழைத்தான்.
மதுராவோ தவிப்பாய் நின்றவள் அவனிடம் காதலை கூற வந்து, எல்லோரும் இருக்க, கூடவே வந்தாள்.
திருக்கல்யாணத்திற்கான நேரம் நெருங்க நெருங்க, கோவில் வளாகத்துக்குள் கூட்டம் பெருகிக் கொண்டே சென்றது.
மீனாட்சி அம்மன் மணமகள் அலங்காரத்தில் எழுந்தருளியிருந்தாள். பச்சை நிற பட்டாடை, தலையில் மலர் அலங்காரம், நெற்றியில் குங்குமம், கழுத்தில் நகைகள், காதுகளில் தொங்கிய ஆபரணங்கள் என்று அவளது முகத்தில் இருந்த அந்த அரசி கம்பீரத்துக்குள் கூட, மணமகளுக்கே உரிய மென்மை கலந்திருந்தது.
மதுரையின் அரசியாக இருந்தவள் இன்று மணமகளாகி நின்றாள்.
அவளைச் சுற்றிலும் மலர் மாலைகள், குடைகள், சாமரங்கள் என மங்களமான ஏற்பாடுகள்.
மறுபுறம் சுந்தரேஸ்வரரும் மணமகன் அலங்காரத்தில் எழுந்தருளினார். மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் திருக்கல்யாணத்திற்குரிய இடத்தில் அருகருகே எழுந்தருளியதும், சுற்றியிருந்த பக்தர்களின் சத்தம் மெல்ல அடங்கியது.
நாதஸ்வர இசை மட்டும் அந்த இடத்தை நிரப்பியது. வேத மந்திரங்கள் ஒலித்தன. சிவாச்சாரியார்கள் திருமணச் சடங்குகளை முறைப்படி நடத்தத் தொடங்கினர்.
அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த பெண்கள் சிலர் தங்கள் கழுத்தில் இருந்த தாலியைத் தொட்டுக் கொண்டனர்.
சிலர் கண்களை மூடி வேண்டிக் கொண்டனர். 'அம்மா... என் பொண்ணுக்கும் நல்ல வாழ்க்கை அமையணும்.' 'எங்க தாலி நிலைக்கணும்.' 'எங்க குடும்பத்துல சந்தோஷம் நிலைக்கணும்.' 'என் கணவருக்கு நீண்ட ஆயுளை தா' என்று ஆயிரம் வேண்டுதல்கள் அந்த மணமக்களை நோக்கிப் பறந்தன.
மங்கல நேரம் நெருங்கியது. நாதஸ்வரத்தின் ஓசை உயர்ந்தது. தவில் முழக்கம் அதிகரித்தது. சுற்றிலும் இருந்த கூட்டமும் எதிர்பார்ப்புடன் அந்த ஒரு தருணத்தை நோக்கிக் காத்திருந்தனர்.
மேளதாளங்கள் முழங்கின. மீனாட்சி அம்மனுக்கு அரோகரா!' 'சுந்தரேஸ்வரருக்கு அரோகரா!" என்று கூட்டம் முழங்கியது.
திருக்கல்யாணத்தின் முக்கிய சடங்கு நடைபெற்றது.
அந்த ஒரு கணத்தில், மதுரை முழுவதும் ஒரு திருமண வீடாகவே மாறியது.
அந்த கூட்டத்தின் ஓரத்தில் நின்றிருந்த மதுரா மட்டும் அமைதியாக இருந்தாள். அவளது பார்வை மீனாட்சி அம்மனின் மீது இருந்தது.
மணமகள் அலங்காரத்தில் அம்மனைப் பார்த்தபோது, அவளுக்குள் ஏதோ ஒரு உணர்வு எழுந்தது.
திருமணம் அந்த ஒரு வார்த்தையே அவளது மனதை வருடியது. அவளுடைய திருமணம் இப்படியா இருந்தது?
இல்லை அவளுக்குத் பிடிக்காமலேயே முடிவு செய்யப்பட்ட திருமணம். வேறு வழியின்றி விருப்பமில்லாமல் ஏற்றுக்கொண்ட வாழ்க்கை.
அந்த வாழ்க்கைக்குள் தன்னை இழுத்துக் கொண்ட மனிதன் இனியன்.
ஒரு காலத்தில் வெறுத்த அதே இனியன். இப்போது தினமும் தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கும் பார்வை, தினமும் காதலைச் சொல்லிக் கெஞ்சிக் கொண்டிருக்கும் குரல். தான் அறியாமலேயே அவனைத் தன் மனமும் தேடுகின்றது.
எல்லாமே ஒன்றாக நினைவுக்கு வந்தது. அவள் அருகில் நின்றிருந்த இனியன் அவளைப் பார்த்தான்.
அவளது கண்கள் அம்மனைப் பார்த்துக் கொண்டிருந்தாலும், அவளுடைய மனம் வேறு எங்கோ ஓடிக் கொண்டிருப்பதை அவனாலும் உணர முடிந்தது.
"மது..." என்று மெதுவாக அழைத்தான். அவள் திரும்பிப் பார்த்தாள். "ம்ம்ம்..." என்று குரல் தந்தாள்.
"என்ன யோசனை?"
"ஒன்னுமில்லை..." என்று தலையசைத்தாள்.
அவன் மீண்டும் அம்மனை நோக்கிப் பார்த்தான்.
திருக்கல்யாணச் சடங்குகள் நிறைவடைந்ததும் மீண்டும் மேளதாளங்கள் முழங்கின. பக்தர்கள் மலர்களைத் தூவி வணங்கினர்.
மணமக்களாக எழுந்தருளிய மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் அருள்பாலித்துக் கொண்டிருந்தனர்.
மதுரா இரு கைகளையும் கூப்பி கண்களை மூடினாள்.
"அம்மா..." என்று மனதிற்குள் அழைத்தாள். "எனக்கு இந்த வாழ்க்கை பிடிக்க ஆரம்பிச்சிருக்கு. அவரையும் பிடிக்க ஆரம்பிச்சிருக்கு. இனிமேல் அவரை விட்டு என்னை பிரிக்கிற மாதிரி எந்த சோதனையும் வரக்கூடாது. அவரிடம் என் காதலை சொல்ல எனக்கு தெரியலை தைரியமும் வரமாட்டேங்குது" என்றவள் அவள் கண்களைத் திறந்தாள்.
அவளுக்கு அருகில் இனியன் நின்றிருந்தான்.
இனியன் லேசான கண்ணீரோடு மதுரா உள்ளுக்குள் வெதும்புகின்றாளோ என்று நினைத்தான். அவளோ தள்ளாடி, "மூ..மூச்சடைக்குங்க" என்றாள்.
"நம்ம கல்யாணத்தை நினைச்சி பார்த்தியா. சாரிடி. நான் உனக்கு தகுதியில்லாதவன்.. திருத்தமுடியாத தப்பை செய்துட்டு முன்ன இருக்கேன். என்னால உன் வாழ்க்கையை மீட்க என்ன செய்யனு தெரியலை மது" என்று கூறி மன்னிப்பு வேண்டினான். அவள் தங்கள் திருமண நாளை எண்ணி இப்படி ஆகின்றாளென்று நினைத்து பேசினான்.
"எ..எனக்கு உங்களை பி..பிடிச்சிருக்கு. நானும் உங்களை காதலிக்கறேன் இனியன் மச்சான்." என்றாள். அங்கே ஒலித்த தெய்வீக மணமும், இசையும், அங்கே உலாவிய நேர்மறை எண்ணமும் கூட அவளை அசைத்துவிட்டது. எப்படியோ கூறிவிட்டாள்.
கண்களில் கண்ணீரோடு இனியன் "டூ யூ லவ் மீ" என்று தவிப்பாய் கேட்க, அதன் அர்த்தம் தெரியாதவளா, இனியன் தான் பலமுறை அவளிடம் கேட்டு கேட்டு மதுரா அமைதியாக நழுவினாளே. இன்றோ ஆமோதிப்பாய்.. தலையாட்டி, "ஆமா.. உங்களை நேசிக்கறேன்." என்று அவனது வலது கையை பிடித்து புஜத்தில் சேர்த்து அணைத்துக் கொண்டு நின்றாள்.
இறைவனின் கோவில் மணியோசை அவனுக்கு இன்பமாக ஒலித்திட, கண்கள் கலங்க, "இதை விட சந்தோஷம் என் வாழ்க்கையில இல்லை மது.. ஆனா எங்க வந்து சொல்லற. உன்னை அள்ளிக்க கூட முடியலை. ஊரோ சுத்தி இருக்கு" என்று அணைத்தபடி நின்றான்.
"எ..என்னால மூச்சுவிட முடியலை த..தண்ணி" என்று கூற அப்போழுது தான் முத்து முத்தாக வேர்த்து, உள்ளங்கையும் ஈரமாக இருக்க மதுராவை கவனித்தான் இனியன்.
காதலை சொல்ல இத்தனை தயக்கமா? அல்லது இத்தனை நாள் அடக்கி வைத்த பயமும் நடுக்கமும் வேர்த்து கொட்ட சற்று தள்ளி காற்றோட்டமாக இருக்குமிடம் அழைத்து வந்தான்.
அங்கிருந்த தண்ணீரை பருகி முடித்தாள்.
"ஹாஸ்பிடல் போகலாமா?" என்று இனியன் கேட்க மறுப்பாய் தலையசைத்து, "வீ..வீட்டுக்கு போகலாம்" என்று கூற, இனியன் கைப்பிடித்து நடந்தாள். அருளாளனும் வேல்விழியும், என்ன ஏதேன விசாரிக்க அவளது வேர்த்து கொட்டுது மூச்சு முட்டுதாம் என்றான். "சரிப்பா..வீட்ல போய் ரெஸ்ட் எடுக்கட்டும். நாங்க இங்க முடிஞ்சதும் உடனே வந்துடறோம்." என்றார்கள்.
இளையமதியோ "என்னடி பண்ணுது அம்மா வரட்டுமா?" என்று கேட்க மதுராவோ "இல்லை.. நீங்களும் அத்தை கூடவே வாங்க. நான் மட்டும் அவரோட போறேன்" என்று கூறிவிட்டாள்.
கல்யாணசுந்தரமும் "ஜாக்கிரதை மாப்பிள்ளை" என்று அனுப்பினார்.
தூரிகாவோ வேகமாக மீனாட்சியை இழுத்துக் கொண்டு "ஏ.. மதுரா அண்ணி.. என்னாச்சு" என்று கேட்க, "ஒன்னுமாகலைடி நீயும் சித்தியும் அம்ம கூட வாங்க" என்றாள்.
"நான் வேணும்னா உன் கூட இப்ப வர்றேன். இனியன் அண்ணா கார்ல தானே போவிங்க. நான் வர்றேன்." என்று நிற்க, இனியனோ மதுராவை காண, மதுராவோ சங்கடமாய் பார்த்தாள்.
அப்பொழுது வந்த காவ்யாவோ 'சொன்னியா இல்லையா?' என்ற ரீதியில் முறைக்க, மதுராவோ இனியன் கையை அழுத்திப்பிடித்தி, நின்றாள். மற்றொரு கையும் இனியனின் முழங்கையை தான் பிடித்திருந்தது. இத்தனை நாள் இனியன் தான் அவளை பிடித்து அமர வைப்பான். மதுராவின் கையை பிடித்தி நிறுத்தி பேசுவான். இன்றோ மதுரா பிடித்திருக்க, 'சொல்லிட்டியா?' என்றது போல முகம் மலர காவ்யா கேட்க, மதுரா வெட்கப்பட்டாள்.
"அண்ணா போலாம்" என்று தூரிகா நின்றாள். இதில் கூடுதலாக மதுராவின் கழுத்தில் நெற்றியில் தொட்டு "ஜுரம் ஏதாவது இருக்கா மதுராண்ணி" என்றாள்.
காவ்யாவோ தலையிலடிக்காத குறையுடன், 'அகி... உன் தங்கை கரடி வேலை பார்க்கறாப்பா. அவளை போகாம நிறுத்து. ஓவரா தான் பாசம் பொங்குது' என்று கிசுகிசுக்க, அகிலனோ காவ்யா சொன்னதை கேட்டு இனியனை கண்டான்.
இனியன் சற்றுமுன் அழுது மதுராவை பிடித்ததை ரகு சுட்டிக்காட்டினான்.
"ஏன்டா இந்த இனியன் இத்தனை பேர் இருக்க மதுராவை பார்த்து அழறான். அந்த புள்ளையும் ஏதோ கண்ணை கசக்கற மாதிரி இருக்கு' என்று கேட்ட பொழுது கவனித்தானே. அப்பொழுது இனியன் மதுரா முகமாற்றத்தையும் பார்த்ததால், "தூரிகா... இனியன் மதுரா போகட்டும். நீ அம்மாவோட இரு." என்றான்.
''அண்ணா... மதுராவுக்கு ஏதோ பண்ணுது." என்று கூற, ''பச்.. தூரிகா... உன்னை இந்த கூட்டத்துல பொண்ணு பார்க்க மாப்பிள்ளை வீட்ல வர்றாங்க. இந்த நேரம் அங்க போனா சரிபடாது. இனியன் மதுரா போகட்டும். இனியன் பார்த்துப்பான். நீ போ இனியன்" என்று கண்காட்டி அனுப்ப, "தேங்க்ஸ்டா" என்று மதுராவை இழுத்துக் கொண்டு ஓடாத குறையுடன் விரைந்தான்.
"என்ன அண்ணா இப்ப வந்து சொல்லற. அப்பா அம்மா ஏதும் சொல்லலையே." என்று பதட்டமாய் பதறினாள். அவளை பெண் பார்க்க வந்ததை சொல்லி கூட்டிக்கொண்டு வந்திருக்கலாம் என்ற எண்ணம்.
"அய்யோ.. தரகர் தான் மதுரை திருவிழாவுக்கு நீ இருப்பனு சொன்னதும், திருவிழா அப்ப திருவிழாவை பார்க்கலாம்னு இன்னிக்கு வந்துட்டாங்க. அப்படியே உன்னை பார்க்கலாம்னு. அப்பாவிடம் இப்ப தான் சொன்னேன். நீ அம்மாவோட போயிரு." என்று தூரிகாவை அனுப்பினான்.
காவ்யாவோ "மதுரா இனியனிடம் லவ்வை சொல்லிட்டா போல." என்று குதிக்காத குறையாக காவ்யா மகிழ, "கொஞ்சம் கத்தாம நிற்கறியா." என்றான். தன்னிடம் சொல்ல வராத காதல் எப்படியோ இனியனிடம் கல்யாணமாகி யுதல் வருடத்தில் சொல்கின்றாளென்ற வருத்தத்திற்கு மாறாக சிரிப்பு தான் அகிலனுக்கு வந்தது.
"போடா... நீயும் உங்க ஊரும்." என்று தூரிகாவை தேடி போனாள் காவ்யா.
இங்கே காரில், "ஏன் வேர்க்குது. ஹாஸ்பிடலே போயிருக்கலாம். நீ என்னடான்னா.. வீட்டுக்கு போன்னு சொல்லற." என்று வண்டியை ஓட்டியபடி அவள் கையை நெஞ்சில் வைத்துக் கொண்டான்.
"உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும். அதனால தான் வீட்டுக்கு போக சொன்னேன்." என்றாள்.
"நீ என்னை நேசிப்பது நிஜமா மதுரா." என்று கேட்க, ஆமென்றாள். நொடியில் அவளது நெற்றியில் முத்தமிட்டு காரோட்டுவதிலும் கவனம் செலுத்தினான்.
மதுராவுக்கு இன்னமும் வேர்த்து போயிருக்க, "உனக்கு என்னவோ பண்ணுதா.. கார்ல ஏசி ஆன் பண்ணிட்டேன். ஆனாலும் பதட்டமா இருக்க. ஏய் என்ன பண்ணுதுடி. பயமாயிருக்கு. ஏதாவதுனா சொல்லு" என்று கூற, "சொல்லறேன் வீட்டுக்கு போங்க" என்றாள்.
வீட்டேக்கு வந்ததும் காரை நிறுத்திவிட, வேகமாய் ஓடி வந்து தண்ணீரை நீட்டினான்.
அதை பருகியவாறு, மேலே பார்த்து "நம்ம ரூமுக்கு போகலாம்" என்றாள்.
"வேர்க்குது நம்ம ரூமுக்கு எதுக்கு. இங்க இரு. முதல்ல கொஞ்ச நேரம் உட்காரு" என்று கூற, "மச்சான் வாங்கனு சொல்லறேன்ல" என்று கைப்பிடித்து அழைத்து சென்றாள்.
இந்த நேரம் மதுரவாணி காதலை சொல்லவும் ஆசையாக முத்தமிட தோன்றியது. ஆனால் மதுரவாணி முகம் வேர்த்து கொட்டி, ஒருமாதிரி சோர்ந்தவளாக தெரிய, அணைக்கவும் அவசரம் காட்டாமல் இருந்தான் இனியன். இல்லையென்றால் இந்நேரம் அவன் தங்கள் அறைக்கு தூக்கிக் கொண்டு கட்டிலில் அவளை களவாடியிருப்பான்.
அவர்கள் அறை வந்தப்பின்னும், ஏசியை போட்டுவிட்டான். தண்ணீரை தண்ணீரை குடித்தவள், கட்டிலுக்கு கீழே குனிந்து, எதையோ எடுக்க முனைந்தாள்.
அவளுக்கு அது எட்டாமல் போகவும், "கீழேயிருப்பதை மெதுவா வெளியே எடுங்களேன்" என்றாள்.
இவளென்ன ஹாஸ்பிடல் வேண்டாமென மறுத்துவிட்டு, கீழே ஹாலில் கூட உட்காராமல் மேல வந்ததும் கட்டிலுக்கு அடியில் எதையோ உருட்டுகின்றாளென மதுரா சொன்னதை எடுக்க மண்டியிட்டு கையை நீட்டினான்.
அவன் கை நீளமென்பதால் அகப்படவும், வேகமாய் இழுக்க முனைய "மெதுவா..மெதுவா வெளிய எடுங்க" என்று பதறினாள்.
மதுராவை பார்த்தவாறு, இழுக்க, ஒரு காய்கறி டிரேவில் நெல் தானியத்தை விதைத்து வளரவிட்டு, அதற்கு மேல தானியத்தில் சிலதை வைத்து, அப்பா குருவி, அம்மா குருவி, இருக்க நடுவே குட்டி குருவியை எப்படியோ ஒட்டி வைத்திருந்தாள். அதற்கு அருகே இரண்டு தட்டில் நீறும் டிரேவை சுற்றி அழகுக்கு சில செடியை நட்டு வைத்திருப்பதை பார்த்தான்.
மதுரவாணியோ மென்குரலில், "இன்னிக்கு... நம்ம கல்யாண நாள். தாலி கட்டின அன்னிக்கு எனக்கு அது பிடிக்காத கல்யாணம் தான். ஏன் அதுக்கு பிறவும் என் வாழ்க்கை எனக்கு பிடிக்காம தான் எல்லாமே நடந்துச்சு.
காலம் நாம நினைச்சிப்பாராத மாற்றத்தை நிகழ்த்திடுச்சு. அதே காலம் தான்.. நீங்க என்னை அன்பா பார்த்துக்கிட்டு, மன்னிப்பு கேட்டு காலப்பிடிச்சப்பவும், காதலிப்பதா சொல்லவும், ஒரு வாய்ப்பு கொடுக்க மனசு சொல்லுச்சு. சமீபகாலமா உங்க அன்புக்கு பதிலா நானும் நேசிக்க ஆரம்பிச்சிட்டேன். அதை சொல்ல தயக்கமிருந்துச்சு. ஒரு இருபது நாளாவே நானும் நேசிப்பதை சொல்ல ஆசைப்பட்டேன். ஆனா திருமண நாளுக்கு ஏதாவது பரிசு தந்து காதலிப்பதை சொல்லலாம்னு இருந்தேன். எனக்கு வேற பரிசு தர தெரியலை. கடவுளுக்கே உங்களுக்கு நான் எந்த பரிசு தந்தா பிடிக்கும்னு தெரிந்து, எ..என் வயித்துல.. உ..உங்க.. உசுரை வளர விட்டுட்டார். அதான்.. எனக்கு தெரிந்த முறையில இப்படி அந்த விஷயத்தை சொல்ல நினைச்சேன்" என்றாள். அவனுக்கு பார்த்ததும் அர்த்தம் புரிய, இதில் மதுரா பேச பேச, இனியன் நெல் முளைத்திருந்த அந்த தட்டையே பார்த்துக் கொண்டிருந்தான்.
இரண்டு பெரிய குருவிகள்...
அவற்றுக்கு நடுவில், மற்ற இரண்டையும் விடச் சிறியதாக ஒரு குட்டிக் குருவி.
அவனுடைய புருவம் சுருங்கியது.
'குட்டி குருவி?' வேறு இருக்க அதை பற்றி குழப்பத்துடன் அவளை காண மதுரா தயங்கி தயங்கி காதலையும், அவனுக்கான திருமண பரிசாக அவன் இழந்த உயிரையும் மீட்டு தந்தவளாக காதலை வெளிப்படுத்தினாள்.
இனியனின் கண்கள் அந்தக் குட்டிக் குருவியிலிருந்து மெதுவாக அவளது வயிற்றை நோக்கிச் சென்றது.
ஒரு நொடி அவனாலும் மூச்சு விட முடியவில்லை.
"மது." அந்த ஒரு வார்த்தைக்குள் அவனுடைய, சந்தோஷமும், காதலும் எல்லாமே கலந்து இருந்தது.
மதுரா மெதுவாகத் தலையசைத்தாள்.
"ஆமா... நம்ம குழந்தை. அடுத்த நொடியே அவன் அவளை தன்னோடு இழுத்து அணைத்துக் கொண்டான்.
ஆனால் இம்முறை அவன் அணைப்பு முன்பைப் போல அவசரமானதாக இல்லை.
அவளுக்குள் வளர்ந்து கொண்டிருக்கும் அந்தச் சிறிய உயிரை நினைத்தபடி, மிகவும் கவனமாக அவளைத் தழுவிக் கொண்டான்.
அவன் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் மதுராவின் தோளில் விழுந்தது. இறுக அணைத்தவன் அவள் தாடையை நிமிர்த்தி, முகமெங்கும் முத்தத்தை தந்து, மீண்டும் கட்டிக்கொண்டான்
அங்கே இனியனால் வார்த்தைகள் கோர்த்திட முடியவில்லை. செய்த தவறுக்கெல்லாம் சேர்த்து தண்டனை அனுபவித்து, தற்போது வரம் பெற்ற பாக்கியவனாக தன்னை உணர்ந்தான்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்
மதுர ஜில்லா மச்சானே !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 69)
ஓ... எதிர்பார்த்தேன். இப்படித்தான் தன் காதலை வெளிப்படுத்துவான்னு. குழி பிள்ளை வயித்துக்குள்ளன்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க...? இதோ வந்திடுச்சுல்ல திரும்பவும் வயித்துக்குள்ள. இனியனுக்கு இன்னைக்கு டபுள் தமாக்கா கிடைச்சிடுச்சு போங்க.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Wow super super. Madura excellent way of telling love to him. Super eniyian u got super surprise feom ur lovable wife. Very intresting sis.
-
மதுர ஜில்லா... மச்சானே!-28
7 days ago
-
மதுர ஜில்லா... மச்சானே-43
3 weeks ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-67
3 weeks ago
-
மதுர ஜில்லா... மச்சானே-70 (முடிவுற்றது)
3 weeks ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-39
3 weeks ago
- 25 Forums
- 330 Topics
- 1,589 Posts
- 2 Online
- 420 Members
