மதுர ஜில்லா... மச்சானே-66
அத்தியாயம்-66
அமெரிக்காவுக்கு அனுப்பிய முதல் கண்டெய்னர் கிளம்பி சில நாட்கள் கழித்து, ராஜாராமிடம் இருந்து வீடியோ கால் வந்தது.
"காவ்யா... முதல் பேட்ச் எல்லாம் சேஃபா வந்து இறங்கிடுச்சு. இங்க இந்தியன் ஸ்டோர்ஸ்ல சாம்பிள் கொடுத்திருக்கேன். ரெஸ்பான்ஸ் ரொம்ப நல்லா இருக்கு. இன்னும் ரெண்டு நாள்ல எக்ஸ்ட்ரா ஆர்டர் கன்ஃபார்ம் ஆகிடும்." என்றதும் காவ்யா சந்தோஷத்தில் குதித்தாள்.
"பெரிய மச்சான் அப்பா பேசியதை கேட்டீங்களா?" என்று அருகில் நின்றிருந்த இனியனை பார்த்தாள்.
ராஜாராமிற்கு இனியனோடு சோர்ந்து காவ்யா தொழில் துவங்குவது முதலில் விருப்பமில்லை. அகிலனிடம் கூட, "இதெல்லாம் சிக்கலான உறவுக்குள் பழகணுமா?" என்று கேட்டார்.
"மாமா கல்யாணமே பண்ணிருக்கேன். உறவுன்னாலே உன்னதம் தான் மா. இதுல தப்பா போக வாய்ப்பில்லை. இனியனும் சரி காவ்யாவும் சரி இதெல்லாம் புரியாம இல்லை. அவங்களுக்கு அவங்க லிமிட் தெரியும். அதோட உறவும் புரியும். நீங்க பயப்பட வேண்டாம்" என்று தெரிவித்திருந்தான்.
அதன்பின் வந்த காலத்தில் எல்லாம் சரியாக தான் போனதும் ராஜாராமிற்குள் இருந்த பயமும் கூட குறைந்திருந்தது.
காவ்யாவின் ஆர்ப்பாட்டத்தை கண்ட இனியன் சிரித்தபடி, "நான் ஆரம்பத்துலயே சொன்னேன்ல... நம்ம முதல் ஆர்டரே ஹிட் ஆகும்னு." என்று நம்பிக்கையாக கூறினான்.
அதற்குள் பின்னால் நின்றிருந்த மதுராவை பார்த்த ராஜாராம், "மதுராம்மா... உன் கைப்பக்குவமும் இந்த பிசினஸ்ல கலந்திருக்குன்னு காவ்யா சொல்லிட்டா. வாழ்த்துக்கள்." என்றதும் மதுரா பதறி, "நா... நான் எதுவுமே பண்ணல" என்று சங்கடப்பட்டாள்.
"அட... உன் மசாலா ரேஷியோ இல்லாம இருந்தா இந்த டேஸ்ட் வந்திருக்காது. நான் ஒரு பேக்கேஜ் வாங்கி சுவைச்சேன். எங்கம்மா பக்குவம் கண் முன்ன கொண்டு வந்துட்ட." என்று கூறவும், காவ்யாவும் "எக்ஸாட்லி எல்லாமே நானும் டேஸ்ட் பண்ணினேன். ஏ ஒன்" என்று மதுராவை பெருமையாகச் சொல்ல, இனியனின் பார்வை முழுவதும் மதுராவின் மீதே நிலைத்தது.
"தேங்க்யூ சொல்லு" என்று இனியன் கூறவும், "ரொ..ரொம்ப நன்றி சித்தப்பா.. சித்தப்பாவா பெரிப்பாவா?" என்று சந்தேகம் வேறு கேட்டாள்.
"அட காவ்யாவை விட நீ சின்ன பிள்ளை தான்மா. இருந்தாலும் நீ தான் இனியன் பொஞ்சாதியாகிட்டியே. உனக்கு எப்படி கூப்பிடணுமோ கூப்பிட்டுக்கோ." என்றார்.
"சரி சித்தப்பா" என்றாள். பேசி முடித்து போன் அணைத்திட, காவ்யாவோ வேலை பார்க்க சென்றாள்.
மதுராவை இனியன் கனிவுடன் பார்க்க, "எதுக்கு என்னயே பார்க்கறிங்க. வீட்ல தான் இப்படின்னா. இங்கயுமா? வேலை செய்யறவங்க பிறவு கேலி செய்வாங்க" என்று கூற, "ரசிக்காம இருக்க முடியலையே. நாள் முழுக்க உட்கார வச்சி பார்க்கலாம்." என்று பேச, நா... நான் காவ்யா கூட போறேன்" என்று அவனது மையல் பார்வைக்கு பயந்து ஓடினாள்.
இனியனோ அவளது நீண்ட ஜடையை கண்டும் பின்னழகிலும் சொக்கியபடி, நிறைவாக உணர்ந்தான்.
தொழிலில் நல்ல முன்னேற்றம் காண ஆரம்பித்தது ஒரு வகையில் மதுரா காரணமென தோன்றியது. சுவை தரமாக இல்லாமல் எப்பேற்பட்ட உணவு தொழிலையும் போகின்ற போக்கில் நடத்திட முடியாதே.
இப்படி தான் மதுராவை அப்படியே தொழில் பக்கம் நகர்த்தியிருந்தான் இனியன்.
அவனுக்கு காவ்யாவோட தனித்து நிற்பதை காட்டிலும், மதுராவும் கூடவே இருக்க தான் முதலில் அழைத்தான். ஆனால் நாளடைவில் மதுரா கைபக்குவம் முழுதாக தன் தொழில் விருத்திக்கு தேவையென புரிய, வேல்விழியிடம் கூட மதுரா என்னோட வந்துட்டா அவளை ஏதும் சொல்லாதிங்க. அவ தான் அங்க மெயினா கலவைக்கு சரியான பக்குவம் சொல்லறா' என்று கூறியிருந்தான்.
அன்றும் அப்படி தான். ஒரு பேட்ச் மசாலா அரைக்க தொழிலாளர்கள் தயாரானார்கள். மதுரா தூரத்திலிருந்து பார்த்தவள்,
"அண்ணா.. அண்ணா... கொஞ்சம் நில்லுங்க." என்று ஓடிவந்தாள். கையிலேயே மிளகாயை எடுத்துப் பார்த்தவள், "இதுல இன்னும் லேசா ஈரப்பதம் இருக்கு. இப்ப அரைச்சா தூள் நல்லா வராது. சீக்கிரமே பூஞ்சை பிடிச்சிடும். இன்னும் ஒரு நாள் நல்லா காய வச்சிட்டு அரைச்சா தான் கலரும் மணமும் சரியா இருக்கும்." என்றாள்.
தொழிலாளர்களும் பார்த்து,ஆமாம்மா... மன்னிச்சிடுங்க. அவசரப்பட்டுட்டோம்." என்று உடனே மூட்டைகளை மீண்டும் வெயிலுக்கு எடுத்துச் சென்றார்கள்.
அதை பார்த்த காவ்யா வியப்புடன், "அடடா... இதெல்லாம் எப்படி கண்டுபிடிக்கற மதுரா" என்று கேட்டாள். மதுரா மெதுவாக சிரித்தாள்.
"எல்லாம் அனுபவம் தான் காவ்யா" என்றாள். இந்த இடைப்பட்ட காலத்தில் மதுரா காவ்யா என்று இருவருமே பெயரிட்டு அழைக்கும் அளவிற்கு நட்பை வளர்த்திருந்தனர்.
"நான் தான் படிக்கலையே... இரண்டு மூணு வருஷம் வீட்டில்தான் இருந்தேன் காவ்யா.
'சமையலையாவது கத்துக்கோ'ன்னு அம்மா தினமும் புலம்பி, அடுப்படிக்குள்ள இறக்கிட்டாங்க." என்றதும் காவ்யா கதை கேட்டாள்.
"அதுக்கப்புறம் முதல்ல மசாலா எல்லாம் தப்பாத்தான் அரைச்சேன். அம்மா ரொம்ப திட்டுவாங்க. அவங்க திட்டுறதுக்கு மேல நல்லா செய்யணும்னு பிடிவாதம் வந்துச்சு. ஒவ்வொரு மசாலாவும் எந்த பதத்துல அரைச்சா நல்லா இருக்கும்... எந்த வத்தலை எவ்வளவு காய வைக்கணும்... ஊறுகாய்க்கு உப்பு எவ்வளவு... எல்லாமே பார்த்து பார்த்து செய்ய செய்ய கத்துக்கிட்டேன். அதோட அவங்களை விட நான் தான் நல்லா சமைப்பேன்.." என்றவள் ஒரு நொடி அமைதியாக நின்றவள்,
"எங்க வீட்டுல வசதி பெருசா இல்ல காவ்யா. வீட்டுக்குப் பின்னாடி விளைஞ்ச மிளகாய், மல்லி, கறிவேப்பிலை, மாங்காய்... இப்படி விளைச்சல் கொஞ்சம் உண்டு. அதுதான் எங்களுக்கு சொத்து. அதனால ஒவ்வொரு பொருளையும் வீணாக்காம பயன்படுத்த பழகிட்டேன்." என்றாள்.
அவள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த காவ்யாவின் முகத்தில் மதுரா மீதான மரியாதை தோன்றியது.
"உண்மையா சொல்றேன் மதுரா... நீ புத்தகத்துல படிக்கலை. ஆனா லைஃப்பை படிச்சிருக்க. உன்னை பார்த்தா பொறாமையா இருக்குப்பா. இந்த சமையல் எனக்கு சுட்டு போட்டாலும் வராது. அகிக்கு எல்லாமே அத்தை தான் சமைக்கறாங்க. ஒருநாள் நானும் உன்னை மாதிரி சமைச்சி அசத்தணும்." என்றாள்.
அந்த நேரம் வந்த இனியன்,
"இப்ப எங்க வீட்டுல அம்மாவை விட மதுரா சமையல்தான் எனக்கு ஃபேவரைட் ஆகிடுச்சு" என்று சொல்லிவிட்டு சாதாரணமாக நடந்து சென்றான்.
மதுராவின் கன்னங்கள் சிவந்தன. அதை பார்த்த காவ்யா உடனே சிரித்தாள்.
"ஏய்.. மதுரா.. உன் முகம் வெட்கத்துல சிவக்குது." என்று உன்னிப்பாக கவனித்தாள்.
"இ... இல்லையே." என்று மதுரா தடுமாறி வெட்கத்தை மறைத்திட முயன்றாள்.
"பொய் சொல்லாத... நீ இனியன் மச்சானை லவ் பண்ண ஆரம்பிச்சிட்ட." என்றாள்.
"அய்யோ... இல்ல..." என்று மறுத்தாள்.
"அப்ப ஏன் அவர் புகழ்ந்ததும் இப்படி சிவந்துட்ட? உன்முகம் ரோஸ் பவுடர் போட்டது போல இருக்கு. இதுக்கு பேரு வெட்கம். அதுவும் காதலால் ஏற்படுற வெட்கம்" என்றதும் மதுரா பதில் சொல்ல முடியாமல் தலையைக் குனிந்தாள்.
காவ்யா அவள் தாடையைப் பிடித்து நிமிர்த்தினாள்.
"காதலிச்சா காதலிக்கறேன்னு சொல்லு. உன் ஹஸ்பண்ட்கிட்ட சொல்ல என்ன தயக்கம்?" என்றதும் மதுரா மெதுவாக சிரித்தாள்.
"எனக்கே... என்ன நடக்குதுன்னு புரியலை காவ்யா.
அவர் இங்க வந்தப்ப, என்னை பொண்ணு பார்த்துட்டு போனப்ப எல்லாம், இவருக்கு என்மேல காதல் எல்லாம் வருமானு ஆச்சரியப்பட்டிருக்கேன். அதே போல இவரோட கல்யாணத்த அன்னிக்கு தாலி ஏறியதும், இவர் மேல நமக்கு காதல் வருமானு ஒரு காலத்துல நினைச்சிருக்கேன். ஆனா இப்ப அவர் மாறி மன்னிப்பு கேட்டு, பகையை மறைந்து, பாசமா பழகி, உறவோட மதிப்பு தந்து, தூரிகாவுக்கு, நிலானிக்குனு முன்ன வந்து நின்னப்ப, அகிலன் மச்சனுக்காக உங்களுக்காக இந்த தொழிலை கூட விட்டுட்டு போறதா பேசினப்ப, கொஞ்சம் கொஞ்சமா மதிப்பு உருவாகிடுச்சு.
இதுல சுத்தி சுத்தி வந்து கட்டிப்பிடிச்சு... காதலிக்கறேன்னு சொன்னா.. அதுவும் தினம் தினம் எனக்குன்னு பார்த்து பார்த்து பேசி நல்லபடியா சொன்னா... மனசுக்கு கேட்க நல்லாயிருக்கு. கல்யாணமாகி ஒரு வருஷமாக போகுது காவ்யா. இனியும் தண்டிக்க முடியலை. மன்னிச்சு விட்டு ஒரு வாய்ப்பு தாயேன்னு தான் மனசு அவர் பக்கம் சாயுது." என்று கூறினாள்.
"இதுல தப்பில்லையே மதுரா. இனியன் மச்சான் அப்படியொன்னும் கெட்டவர் இல்லை. நீ தாராளமா காதலிப்பதை சொல்லு. அதான் ஒரு வருஷமாகுதே.. பேசாம ஏதாவது அசத்து." என்றவாறு காவ்யா கண் சிமிட்ட,
மதுராவும் முதல் முறையாக மனம் விட்டு சிரித்தாள்.
அந்தச் சிரிப்பைப் பார்த்த இனியன், தூரத்தில் நின்றபடியே புன்னகைத்தான். அவளுடைய பேச்சு அவனுக்கு கேட்கவில்லை. ஆனால் அவளது சிர்ப்புக்குண்டான அந்த மாற்றம்... அவன் பல மாதங்களாக காத்திருந்த வெற்றி என்பதை அவன் மட்டும் உணர்ந்தான்.
மதுராவும் இனியன் தன்னிடம் காதலை எதிர்பார்த்து காத்திருப்பதால் ஏதாவது புதுவிதமாக காதலை தெரிவிக்க யோசித்தாள்.
அதனால் கல்யாணமான அந்த நாளை புதிதாக அவனுக்குள் மறக்க முடியாத அளவிற்கு மாற்றிட நினைத்தாள்.
அதற்கான நாளுக்காக காத்திருந்தாள்.
மறுபக்கம், கல்லூரி முடிந்து மாணவர்கள் பேருந்தில் ஏறிக் கொண்டிருந்தனர். வழக்கம்போல் எழிலரசன், நிலானி அமரும் இருக்கையின் அருகே வந்து அமர்ந்தான்.
நிலானியோ ஜன்னல் பக்கம் திரும்பி அமர்ந்து வெளியே வேடிக்கை பார்த்தாள். அவனருகே வந்து அமர்வது இப்பொழுது எல்லாம் வாடிக்கையாகிவிட்டது.
"ஏன்... ஜன்னல் வழியா எப்பவும் திரும்பிக்கற? யாரையாவது தேடுறியா?" என்று எழிலரசன் குறும்பாகக் கேட்டான்.
அவள் திரும்பியே பார்க்கவில்லை. மாறாக, "யாரை தேடணும். நீ தான் நிழல் போல கூடவேயிருக்கியே. அப்பறம் யார் நெருங்குவா. இல்ல... நான் யாரை தான் தேடுவேன்" என்றவள் உதட்டை சுழித்தாள்.
"பஸ் முழுக்க சீட் இருக்கே... எப்பவும் என் பக்கத்துலதான் உட்காரணுமா?" என்றாள்.
"ஆமா. உன்னை பார்த்துட்டே வரணும்னு தோணுது." என்று இடக்காக கூறிட, அந்த ஒரு வார்த்தையில் நிலானியின் இதயம் ஒரு நொடி தடுக்கி நின்றது.
ஆனால் வெளியில் காட்டிக்கொள்ளாமல்,
'ரொம்ப பேசறான்' என்று மீண்டும் ஜன்னல் பக்கம் திரும்பிக் கொண்டாள்.
கல்லூரி வாசலில் இறங்கியதும் இதையெல்லாம் கவனித்த தூரிகா, எழிலரசனை அழைத்தாள்.
"டேய். எழில் என்ன நடக்குதுடா?' என்று கேட்டாள்.
"என்னக்கா?" என்று பதறினான். இதுவரை தூரிகா முன் நிலானியிடம் எதுவும் பேசவில்லை. ஆனா அக்கா ஏதாவது கவனித்தாரா என்று பதறினான்.
"தினமும் அவ பின்னாடியே சுத்துற. அண்ணனுங்க எல்லாம் எங்களை பார்த்துக்க சொன்னார் தான். அதுக்காக அவளை நீ ஓவரா பாதுகாக்கற மாதிரி தெரியுது." என்று புருவம் உயர்த்தினாள்.
"அக்கா... அப்படியெல்லாம் இல்லை" என்று நடித்தான்.
"உனக்கு அவளை பிடிச்சிருக்கா?" என்று தூரிகா கேட்க எழிலரசன் நழுவ முடியாமல் நின்றான்.
"தெரியலக்கா... ஆனா அவ பக்கத்துல இருந்தா நல்லா இருக்கு." என்றான்.
தூரிகா அவன் தோளில் தட்டினாள். "பார்த்துடா... அந்த குடும்பம் காதலை மனசுல வச்சுக்கிட்டு வாயை திறக்காத குடும்பம். அவசரப்படாத. அவ மனசுல என்ன இருக்குன்னு புரிஞ்சிக்கிட்டு அப்புறம் பேசு. பிரபுவை எல்லாம் அவ பாஸிங் க்ளவுடா மறந்திருக்கலாம். ஆனாலும் உன்னை கட்டிக்க பயந்து தான் அந்த மேதாவி கிறுக்குத்தனம் பண்ணுச்சு.." என்று குறிப்பிட்டாள்.
"சரிக்கா. புரிது." என்றான்.
"முதல்ல படிப்பை முடி. அப்புறம் லவ்வு கிவ்வுனு இருந்தாலும் ஓடு.." என்று தலையில் கொட்டிவிட்டு சிரித்தபடி உள்ளே சென்றாள்.
எழிலரசனும் தூரத்தில் நடந்து சென்ற நிலானியை பார்த்தபடி,
"உண்மை தான்.. என்னை கட்டிக்க தவிர்த்து லூசுத்தனமா நடந்துயிருக்கா. இனியாவது என்மேல இருந்த பயத்தை களையணும்.." என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டான்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
மதுர ஜில்லா மச்சானே !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 66)
ஓ.. அப்படி போகுதா கதை..? எழில் ஆரம்பத்துலயிருந்தே நிலானி பின்னாடித்தான் சுத்தறான்.
இப்ப நிலானிக்கு கூட அவன் மேல நல்ல அபிப்ராயம் வந்துடுச்சு போலவே. இருக்கட்டும், இருக்கட்டும்.. மச்சானையே மச்சினிச்சி கட்டிக்க விரும்பினால் தப்பில்லைத்தானே..?
மதுராவும் கூடிய சீக்கிரம் தன்னோட காதலை இனியனுக்கு சொல்ற நாள் வெகுதூரத்தில்
இல்லைன்னுத் தோணுது.
😀😀😀
CRVS (or) CRVS 2797
-
மதுர ஜில்லா... மச்சானே!-28
7 days ago
-
மதுர ஜில்லா... மச்சானே-43
3 weeks ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-67
3 weeks ago
-
மதுர ஜில்லா... மச்சானே-70 (முடிவுற்றது)
3 weeks ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-39
3 weeks ago
- 25 Forums
- 330 Topics
- 1,589 Posts
- 1 Online
- 420 Members
