மதுர ஜில்லா… மச்சானே-6

அத்தியாயம்-6

வீட்டு வாசலில் பசும்பாலை கறந்து வைத்து இளையமதி சீம்பால் காய்ச்சிக் கொண்டிருந்தார். மண் அடுப்பில் எழுந்த புகை வாசம், மாடுகளின் மணி சத்தம், தொலைவில் கோவிலில் ஒலித்த சுப்ரபாதமென, எல்லாம் சேர்ந்து கிராமத்து காலையை உயிரோடு நிறுத்தியது.

மதுரவாணியோ வீட்டுக்குள் அகிலன் வாங்கித் தந்த மயில் பச்சை சேலையை, அவள் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு உறங்கிவழிந்து, நினைப்பிலேயே சிவந்தாள்.

அகிலன் அவள் கைப்பிடித்து, ‘இன்னொரு சேலையையும் தட்டுல வச்சு ஊரறிய கொண்டு வந்து தரணும்னு ஆசை’ என்று சொன்னது மீண்டும் மீண்டும் காதில் ஒலித்தது. அதை தொடர்ந்து, கல்யாண கனவுகளை கண்டாள்.

“ஏன்டி… இன்னும் என்ன தூக்கம் வேண்டி கிடக்கு. பொட்டப்பிள்ள எந்திரிச்சு வேலையை பார்ப்பியா இல்லையா?” என்று கத்த மதுராவின் தந்தை கல்யாண சுந்தரமோ “ஏன்டி என் மக ராணி. அவ எதுக்கு இப்பவே எழுந்துக்கணும்” என்றார்.

“இந்த சின்ன குட்டி நிலானி காலையிலிருந்து எல்லா வேலையையும் பார்க்கா. பெரிய கழுதை இன்னமும் எந்திரிக்கலை. போறயிடத்துல கெட்ட பெயர் வாங்கவா?” என்று இளையமதி குரலில் திடுக்கிட்டாள் மதுரா.

‘சே… கனவா… மச்சான் மேடையிலிருக்க, கல்யாண சேலை கட்டி அது பக்கத்துல போகறப்ப தான் இந்த அம்மையும் அப்பாவும் கத்துவாங்க” என்று சிடுசிடுப்பாக எழுந்தாள்.

தந்தை கல்யாண சுந்தரமோ “எம் பொண்ணு போறயிடத்துல ஏன்டி கெட்ட பெயர் வாங்குவா. அவளுக்கு வேலை செய்ய ஆளிருக்கும்” என்றார்.

எதார்த்தமாக கட்டிலில் கிடந்த மற்றொரு கவர் மதுரா பார்வையில் பட்டது. பெரியமாமாவின் மகன் இனியன் மச்சான் வாங்கித் தந்த சேலை. அதை எடுத்துப் பார்த்தாள். நல்ல விலையுயர்ந்த சேலை.
‘இவருக்கு என்ற பெயரே தெரியுமானு சந்தேகம். இதுல சீலை எல்லாம் எப்படி வாங்கியிருப்பார்? என்ன அதிசயமோ’ என்று நிறத்தை கூட பாராது வைதாதுவிட்டாள்.  மீண்டும் அகிலன் வாங்கிய சேலையையே வருடினாள்.

“மதுரா… கடம்பம் ரெடியாச்சு. கிளம்பலாம் டி… குளிச்சிட்டுயா? ஏய் நிலானி.. உங்கக்காவை எழுப்புடி” என்ற இளையமதியின் குரலில் அவசரமாக வெளியே வந்தாள்.

நிலானியோ தொட்டிக்கு குடத்தால் தண்ணீரை நிரப்பிக் கொண்டிருந்தாள்.

“ம்மா… என்ன அவசரம்” என்று வந்தாள்.  “ஏன்? கிளம்பினா தான் என்ன?” என்றார்.

“அது இல்ல… பெரிய மாமா வீட்ல பேசவே யோசிப்பாங்க. நான் ஏன் போகணும்?” என்று மறுத்தாள்.

“அட போடி.” என்று கடிய, கல்யாண சுந்தரமோ, “தாயி.. வெளிநாட்டுல படிச்சவங்க. கடம்பபால் ரொம்ப நாளுக்கு பிறகு சாப்பிட விரும்பியிருக்கலாம். நேர்ல கொடுத்துட்டு வரலாமே. இதுல என்ன தப்பு? நீயும் தங்கச்சியும் போயிட்டு வாங்க” என்றார்.
   உடனோ மதுராவுக்கும் அதோ யோசனையில் நிலானியை அழைத்து வெளியே செல்ல முடிவெடுத்தாள்.

“தங்கச்சியை அழைச்சிட்டு போயிட்டு வா” என்று தந்தை கூற, தாயின் அதட்டலிலும் விருப்பமின்றி நடந்தாள்.

அருளாளன் வீட்டுக்கு மதுரா மற்றும் அவள் தங்கை நிலானி மெதுவாக நடந்து வந்தார்கள்.

வாசலில் வேல்விழி யாரையோ ஏவிக் கொண்டிருந்தார்.
“வா மதுரா… ஏய் நிலானி.. நல்லா வளர்ந்துட்ட” என்று  மகிழ்ச்சியாக வரவேற்றார்.
மதுரவாணியும் சீம்பால் கடம்பத்தை நீட்டி, “அம்மா சீம்பால் கொடுத்துட்டு வரச் சொல்லுச்சு. அத்த” என்று நீட்டினாள்.
“அட இனியனுக்கு ரொம்ப பிடிக்கும்” என்றதால் மகிழ்ச்சியாக வாங்கிக் கொண்டார் வேல்விழி.

மதுரவாணி மட்டும் சற்றே தயக்கத்தோடு நின்றாள். நிலானி பெரிய மாமா வீட்டை வேடிக்கையாக பார்த்தாள். அகிலன் மச்சான் வீட்டை எல்லாம் அடிக்கடி வருவது தான். இங்கு கூட வந்து சென்றிருக்கின்றாள்.

அந்த நேரம், “அம்மா… காபி…” என்று உள்ளிருந்து வந்த இனியன், வாசலில் நின்ற மதுராவை பார்த்து ஒரு நொடி ஸ்தம்பித்து நின்றான்.

தாவணி அணிந்திருந்த மஞ்சள் முகம், நீளமான பின்னல். நெற்றியில் சிறிய குங்குமம்.
கிராமத்து பெண்ணுக்கே உரிய அந்த இயல்பான அழகு.
‘பெயருக்கு ஏத்த மாதிரி தான் இருக்கா’ என்று மனதுக்குள் நினைத்தான். அவன் அமெரிக்கா சென்றப்பின் அதிகமாக அத்தை மகளை கண்டதில்லையே.

ஆனால் அடுத்த நொடி, ‘இவ தான் அகிலன் பின்னாடி சுத்தறளா?’ என்ற எண்ணம் மீண்டும் மனதில் எழுந்தது.
“ஹாய்.. நீ தானே மதுரா. நீ நிலானி? ரைட்” என்று சாதாரணமாக கேட்க,
“ஆமா மச்சான் எப்படி இருக்கிங்க?” என்று தயக்கத்தோடு மதுரா பதில் கேட்டாள்.

இனியன் பார்வை அவள் அணிந்த தாவணியில் நின்றது.

“நல்லாயிருக்கேன்… நீ சுடிதார் போடமாட்டியா? இப்பலாம் கிராமத்துல கூட சுடிதார் தான் அதிகம் போடறாங்க.” வார்த்தை சாதாரணமாக இருந்தாலும் பார்வை கூர்மையானது.

“அதுவும் போடுவேன் மச்சான்.” என்றாள். நிலானி சும்மாயில்லாமல், ”அதெல்லாம் அக்கா தாவணியும் உடுத்தணும்னு அம்மை வையும்” என்று கூற ‘இப்ப ரொம்ப முக்கியம்’ என்று மதுரா முனங்கினாள்.

“என்னது?” என்றான். மதுரா ”ஒ.. ஒன்றுமில்லை” என்றாள். மதுராவோ போகலாமென்று நிலானியிடம் சமிக்ஜை செய்து சீண்ட நிலானி எங்கே கவனித்தாள்.

  “சேலை பிடிச்சிருக்கா” என்றான் இனியன். ‘எநத சேலை..?’ என்று முழிக்க, “நேத்து அம்மா தந்தாங்களே” என்று நிலானி நினைவுப்படுத்த, “ஆ..அதுவா? நல்லாயிருந்தது மச்சான்” என்றாள்.

“என்ன கலர் சேலை வாங்கி தந்தேன்?” என்று கையை கட்டி கேட்க, “சி..சிவப்பு இ..ல்ல ஆரேஞ்சு?” என்று தடுமாறினாள்.
   “பேஸ்டல் பிங்க்.. அப்ப சரியா பார்க்கலை” என்றான். சேலையின் நிறத்தை கூட மதுரா சரியாக பார்வையிடாமல் இருப்பதை கணித்தான் இனியன்.

அந்த நேரம் எழிலரசன் உள்ளே வந்து, “அண்ணா… வெளியே ஊர் பசங்க வந்திருக்காங்க.” என்றான்.

“இதோ வர்றேன்.” என்ற இனியன் வெளியே சென்றான்.

நிலானியோ பெருமூச்சை விடுத்து,  “ஆளு அகிலன் மச்சான் மாதிரி இவரும் உசரமா இருக்கார். ஆனா அகிலன் மச்சானை விட நல்ல கலரு. ஏன்க்கா… ஏசிலயே இருப்பாரா? வெளியே வரமாட்டாரா” என்று கேட்டாள்.

“என்ற அகிலன் மச்சானும் நல்ல கலரு தான். அவரு வேகாத வெயிலில்ல அலைந்து திரியரவரு.” என்று தங்கை அகிலனை குறைத்து மதிப்பிட வாயை அடைத்தாள்.

மதுரா பேசியதை கேட்டபடி இனியன் வீட்டு வாசலுக்கு வெளியே சில இளைஞர்கள் நின்றிருக்க அவர்களை நோக்கி நடந்தான்.

“வாங்க அண்ணே.”
“காலைலேயே தொந்தரவு பண்ணிட்டோமா?” என்று இருவர் கேட்க, “அட அதெல்லாம் இல்ல.” என்று பேசினான் இனியன்.

ஆனா அவர்கள் கண்களில் இருந்த தயக்கம் அவனுக்கு புரிந்தது.
அவர்களில் ஒருவன், “அண்ணே… பஞ்சாயத்து எலக்ஷன் விஷயம் பேச கூப்பிட்டதா கேள்விப்பட்டேன்” என்று கூற
“ம்ம்ம்…” என்று இனியன் அவர்களிடம் பேசி செல்வது ஒலித்தது.

  ‘அகிலன் மச்சானுக்கு எதிரா இவர் நிக்கறாரா? ஆனா இவர் ஊருக்கு வந்ததே இப்ப தான். அதோட இவருக்கு வேண்டாத வேலை. இதற்கெல்லாம் பெரிய மாமா தான் காரணமா இருக்கும்’ என்று மனதில் நினைத்து வேல்விழியிடம் ”இனியன் மச்சானுக்கு கடம்பபால் பிடிக்கும்னு அம்மா கொடுத்து விட்டாங்க” என்று நீட்டினாள்.

“ஏன்டி… அவன் அங்க தானே இருக்கான். நீயே கொடு” என்று கூற, “நானா?” என்று முழித்தாள்.

  பிறகு அவசரமாக தட்டில் வைத்து நிலானியுடன் செல்ல, வாசலில் சிலரோடு பேசிக்கொண்டிருந்த சமயம் கடம்பபாலுடன் நீட்டினாள்.

“வெயிட் பண்ணு” என்று மற்றவர்களிடம் பேசுவதில் பிஸியாக, மதுரா அங்கே கால் கடுக்க நின்றாள்.

நிலானி நைஸாக அக்கா கையை விடுவித்து, வேல்விழியோடு ஹாலில் டிவி பார்க்க, மதுரா இனியன் வாங்கி விட்டால் நழுவவே காத்திருந்தாள்.

ஆனால் அவன் தான் வேண்டுமென்றே திரும்பாமல் பேச, அதே நேரம்… அகிலன் வயல் பக்கம் இருந்து பைக்கில் வந்து கொண்டிருந்தான்.

தூரத்திலேயே அருளாளன் வீட்டு வாசலில் நின்ற மதுரவாணி அவன் கண்களில் பட்டாள்.

பைக் வேகம் தானாக குறைந்தது.
‘மதுரா’  என்றவன் அவள் பெயரை உச்சரிக்க, அவள் உள்ளே செல்ல முயல, இனியன் அழைத்து வேண்டுமென்றே ஏதோ பேசிக் கொண்டிருந்தான்.

அந்த காட்சி அகிலனின் முகத்தை இறுக்கியது. அவன் பெரிப்பா வீடென உள்ளே செல்லவில்லை. இனியனை கண்டு வாசலிலேயே நின்றான். அந்த நேரம் மதுராவும் அகிலனை பார்த்துவிட்டாள்.

மதுரா கண்கள் அகிலனை கண்டதும், உடனே மலர்ந்தது. அகிலன்-மதுரா இரண்டு பேருக்குள்ள இருந்ததை வார்த்தையில்லாமல் புரிந்துக் கொண்டான் இனியன். அவன் மெதுவாக கண்ணாடியை கழற்றினான். அகிலன் மட்டும் நேராக இனியனை பார்த்தான்.

அகிலன் என்ன நினைத்தானோ வேகமாய் வண்டியை முறுக்கிவிட்டு சென்றிட, மதுராவோ உள்ளுக்குள் வருத்தம் கொண்டு, அவ்விடம் நிற்க பிடிக்காமல், “மச்சான் இங்கன இருக்கு.” என்று சுட்டிக்காட்டிவிட்டு “நிலானி… வா போகலாம்” என்று கட்டளையிட்டாள்.

வேல்விழி ”கொஞ்ச நேரம் இருந்துட்டு போடி” என்றார்.

  அருளாளனும் “என்னம்மா போகணும்னு துடிக்கற” என்றார்.‌

“இல்லை மாமா… அம்மா பெரிய மச்சானுக்கு கடம்பபால் தந்துட்டு வர சொன்னாங்க. வீட்ல வேலை கிடக்கு. நிலானியும் எழுத வேண்டியது இருக்கு.” என்று அவசரப்படுத்தினாள்.
 
   நிலானி அக்காவின் பார்வையிலேயே எழுந்து வந்தாள்.

இனியனோ வழி மறைத்து, ஏதோ கூற வர, “வர்றேன் மச்சான்” என்று புயலாக அவனை மீறி செல்ல துணிய, இனியன் கையை பிடித்து, “சேரி பிடிச்சிருக்கா? எதுவும் சொல்லாம போற” என்றான்.‌

மதுரா அணலை விழுங்கி ஒரு பார்வை பார்த்தாள். அதில் கையை தீண்டியதற்கான கோபமிருக்க, இனியன் தானாக கையை விடுவித்தான்.

  “சீலை எல்லாம் நல்லா தான் இருக்கு மச்சான். சிவப்போ  பிங்கோ உசத்தியான சேலைனு தெரியுது. யாருக்குமே பார்த்ததும் பிடிக்கும். வர்றேங்க மச்சான்.” என்றவள் “நிலானி” என்று குரல் தர அவசரமாய் செருப்பு அணிந்து வெளியேறினாள்.

இனியனுக்கு அத்தனை பேர் எதிரிலும், இனியனை மீறி சென்றதில் லேசான காந்தல். அதிலும் அவன் தீண்ட, முறைத்தாளே.. அந்த காந்தலை இனியன் தேர்தலில் நிற்க பெயர் தந்து விட்டு, வேடிக்கையாக தந்தை பெயருக்கு பின்னால் வலம் வந்தவன், தடாலடியாக சொந்த செலவில் ஊரில் உள்ள பேருந்து நிலையத்தை சரிப்பார்த்திட பணத்தை செக்காக தந்தான்.‌

பெரும்பாலும் நிற்க நன்றாக இருந்தாலும் அமர்வதற்கு தோதாக மாற்றி தந்திடும் முடிவில் செயல் ஆரம்பித்தான். அந்த விஷயம் மடமடவென பார்க்கப்பட்டிருந்தது. அதற்கான தொகை தண்ணியாக செலவழித்தான்.

  இங்கே அகிலனுக்கு, மதுரா இனியன் முன்னே தட்டில் எதையோ வைத்து சாப்பிட கெஞ்சிய நிகழ்வு மனதை கொன்றது.

   அவனுக்கு ஏனோ இத்தனை நாள் மதுரா அங்கே பெரியப்பா வீட்டுக்கென்று அப்படியென்றும் போனதில்லை. இன்று இனியன் வந்ததும் மதுரா போனது பிடிக்கவில்லை. ஒருவிதமான கோபம் பொறாமை பொங்கியது. ஆனால் மதுராவை பார்த்தால் அவள் சந்தோஷமாக நிற்கவில்லை என்பதும் தெரிந்தது.

-தொடரும்.

பிரவீணா தங்கராஜ்.

5 thoughts on “மதுர ஜில்லா… மச்சானே-6”

  1. அடேய். அகிலா! என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சிக்கிட்டு
    கோப படுடா.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top