அயலா… அயலா…-11

அத்தியாயம்-11

காலை வெளிச்சம் மெதுவாக ஜன்னல் வழியே ஊர்ந்தது.

மஞ்சள் ஒளி சுவற்றை வருடி, அங்கிருந்த சிறிய குடும்பத்தின் மீது ஒரு புது நாளாக  ஆதினிக்கு ஆசீர்வாதம் போல விழுந்தது.

ஆதினி கண்விழித்தபோது, சமையலறையிலிருந்து தேயிலை வாசனை வந்து சேர்ந்தது.

அவள் புருவம் சுருங்கியது. அயனா டீ தயாரிப்பது என்று அவசரமாக பல்லை விலக்கிவிட்டு முகம் கழுவி, தலையில் ஒரு க்ளிப்பை மாட்டி வந்தாள்.

அயன் ஏற்கனவே எழுந்ததால், மெதுவாக அக்ஷயாவை படுக்கையிலிருந்து பக்குவமாய் தலையணையில் நகர்த்திவிட்டு, ஒரு முத்தம் தந்து, சத்தமின்றி மாடிப்படிகளில் இறங்கி சமையலறை வாசலில் நின்றாள்.

அயன் ஸ்டவ் முன்னால் நின்று டீதூளை கொதித்து வைத்து டீயை தயாரிக்கின்றான்.
    அதிகப்படியான வெப்பமான நீராவி அவனைச் சுற்றி மெல்ல எழுந்திட அவனையே ரசித்தாள்.

அயன் நெற்றியில் துளி வேர்வை இல்லை. குளித்து முடித்து வந்த புத்துணர்வு மட்டுமே. அந்த ஸ்டவ்வின் சூடு, டீயின் கொதிநிலையில் அவன் சருமம் அப்பொழுதும் குளிர்ந்த நிலையில் தேகமருந்தது.

ஆதினி அவன் கையை பிடித்தாள். கவனித்தாள்.

அவன் பார்வை நேராக டீகப்பில் இருந்தது.

“நீங்க ஏன் இவ்வளவு நல்லவரா இருக்கிங்க?” என்று புன்னகை கலந்து கேட்டாள்.

அவன் தலையை சற்றே சாய்த்து அவளை ஊடுருவி பார்த்தான்.
அந்த நேரம் அயன் கண்கள்  நொடியில் பச்சை வண்ணத்தில் பிளாஷிட்டு பிரதிபலித்தது.

“உனக்கு இந்த நல்லவனை பிடிச்சிருக்கா?” என்று எதிர் கேள்வி கேட்க ஆதினி முறுவலிட்டாள்.

“பிடிக்காமலையா…. என் மீதி வாழ்க்கை உங்களோடு முடிவெடுத்தேன். உங்களை நல்லவரா தெரிந்து கவனிச்சி தான் திருமணம் செய்தது” என்றாள்.

அயனும் அமைதியாகச் சொன்னான்.
“நானும் உன்னை அப்சர்வ்  பண்ணுவேன்” என்று மூக்கை நிமிட்டி விட்டான்.

  டீயை பருகியபடி “ஆமா… நீங்க போன் அதிகமா யூஸ் பண்ண மாட்டிங்களா?” என்று நீண்ட நாள் சந்தேகத்தை கேட்டாள்.

அயனோ “போன் யூஸ் பண்ணறது குறைவு ஆதினி. எனக்கு இந்த மக்கள் மூன்றாவது கை மாதிரி அதை வச்சிட்டு சுத்தறது கொஞ்சமும் பிடிக்கலை.

  எதிர்ல இருக்கற மனிதர்களை பார்த்து பேசணும். பழகணும், இருக்கற இடத்தை பாதுகாக்கணும். அதை விட்டு அவனவன் போன்லயே குடித்தனம் செய்யறான். எப்பவும் இருக்கும் போது அதோட அருமை தெரியாம போவங்களே அப்படி இருக்காங்க” என்று இகழ்ந்தான். 

அக்ஷயா ஓடிவந்து அவன் காலில் மோதினாள்.

“அப்பா… எனக்கு பால்” என்றாள்.
அவன் உடனே பாலை கொதிக்க வைத்து மெதுவான சூட்டில் தயார் செய்தான்.

குழந்தையை தூக்கி மடியில் வைத்தான். அவன் கை குழந்தையின் முதுகை தடவியது.

அன்பான தந்தை அரவணைத்து மகளை நேசிக்கும் காட்சியாக ஆதினி பார்த்தாள். அந்த நேரம் குற்றவுணர்வு தலை தூக்கியது. பிரதாப் கூட அக்ஷயாவிடம் இப்படி பழக வேண்டியது. பிரதாப் இப்படி என்னை தவிக்க விட்டு சென்றுவிட்டாரே! என்று எண்ணவும், அயன் கட்டிய தாலி அவளை நிகழ்வுக்கு கொண்டு வந்தது.

குழந்தை அயனின் கட்டுப்பாட்டில் விட்டுவிட்டு அறைக்கு வந்து லாக்கரை திறந்து, அயன் அணிவித்த மோதிரத்தை கழுட்ட முயன்றாள்.

மரகத கல் மையத்தில் பளபளக்க அம்மோதிரமோ கழட்டமுடியவில்லை‌.
   அவள் புருவம் சுருக்கினாள். மீண்டும் கழற்ற முயன்றாள். சற்றே பிடிவாதமாக இருந்தது.

“நீ எதுக்கு அதை ரிமூவ்  பண்ணற. அதை ரிமூவ் பண்ண என்னால தான் முடியும்” என அயன் குரல் கதவுக்குப் பின்னால் கேட்டது.

  “குழந்தை எங்க?” என்று கேட்க, “டிவி” என்று கூறி அயன் ஆதினிஅருகே வந்தான்.

“நேத்து நமக்கு பஸ்ட் நைட்” என்றான்.

“சாரி… அக்ஷயா தூங்கிட்டானு நினைச்சேன். அவ நமக்கு நடுவுல தூங்க வந்துட்டா. உங்களுக்கு ஏமாற்றமா இருந்திருக்கலாம்” என்று நெளிந்தபடி கூறினாள்.

  “ஐ நோ பேபி… நான் ஒன்னும் உன்னை சூறாவளியா முழுங்க வரலை‌. தேன் எப்ப பருகினாலும் தேன் தான். நம்ம குழந்தை இருக்கறப்ப அதற்கு ஏற்றது போல தான் நாம இருக்கணும்” என்று வார்த்தையில் கணிவை தந்தான்.

அவன் பேசியபடி அணைத்திருக்க, அதில் உரிமை கூடுதலானது. மென்மையான அணைப்பு கழுத்தில் அழுத்தமான முத்தமொன்றை தந்து விலகினான்.‌

   அயனின் இந்த கழுத்து முத்தம் அவளுக்குள் இதத்தை தர, மகளை காண ஓடினாள்.

  அன்றைய நாள் முழுதும் காமத்தை தவிர்த்து காதலும் அன்பும் பரவியது.

  ஜமுனாவும் செல்வமும், அடிக்கடி இவர்களை பார்த்து புன்னகைத்து கொண்டார்கள்.

அன்றைய இரவு மாடியில் குளிர்ந்த காற்று வீசியது.
அக்ஷயா விளையாடிய அசதியில் அசந்து தூங்கிவிட்டாள்.
அயன் கைப்பிடியில் சாய்ந்து வானத்தை பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் பார்வை நிலவைக் கடந்து, நட்சத்திரங்களுக்கு அப்பால் சென்றது.
ஆதினி அருகில் வந்து நின்றாள்.

“என்ன ரொம்ப நேரம் மேலேதான் பார்க்கறிங்க” என்றாள்.

“நட்சத்திரம் பார்க்கறேன். உனக்கு நட்சத்திரத்தை பார்க்க பிடிக்குமா?” என்று மெதுவாக பேச்சை ஆரம்பித்தான்.

“ஆமா. சின்ன வயசுல எல்லாம் நட்சத்திரத்தை எண்ணி பார்த்திருப்பேன். இப்ப நட்சத்திரத்தை பார்க்க ஏது நேரம்” என்றாள்.

“ஒரு நாள்… ரொம்ப நெருக்கமாக காட்டுறேன்.” என்று கிறக்கமாக அயன் பேச ஆதினி சிரித்தாள்.

“ஏன் ராக்கெட் வாங்க போறிங்களா?” என்று கிண்டலாக கேட்க, அவன் மெதுவாக அவளை நோக்கி திரும்பினான்.

“ராக்கெட்  இல்லாமலேயே போகலாம். அப்ப நீ என் மேல மயக்கத்துல இருப்ப” என்று கிசுகிசுத்தான்.

   அயன் வெட்டவெளியில், அவனது அறைக்கு பக்கத்தில் பால்கனியில், அவளை இழுக்க காற்று சற்று குளிர்ந்தது.

அவன் ஆதினியை மஞ்சத்தில் சாய்த்து அருகில் நிதானமாக நின்றான். அவள் கண்களில் ஒரு துணியை கட்டி, “இமேஜின் பண்ணு ஆதினி. நீ பார்த்த நட்சத்திரம் வானம், அந்த குளிர்ந்த காற்று, வானத்து நிலவையே கண்ணடிச்சு வசீகரிக்கர நட்சத்திரம் உன்னை நெருங்கி வந்து பிரகாசிக்கிது.” என்று பேசி பேசியே அவளிடையை மெதுவாக பற்றிக் கொண்டான்.

அந்த மென்மையான அழுத்தத்தில் அயனின் தாபம் புரிந்தது.

“ஆதினி” என்று அயன் குரல் மெதுவானது.

“ம்ம்ம்” என்றவளுக்கு மூச்சு முட்டியது.

“நீ என்னை விரும்பற தானே?” என்று கேட்க அவளும் ஆமென்றாள்.

“அப்படின்னா… நான் உன்னை எனக்கானவளா எடுத்துக்கலாமா?” என்று கேட்க அவள் சிரித்து தலையசைத்தாள்.

அதன்பின் அவர்களுக்கான தனிமைக்குள் முழ்கியிருந்தனர்.

  கழுத்தில் அவன் நாவால் வருடி தரும் முத்தம் அவள் உடலெங்கும் சிலிர்த்திட கண்ணை கழட்ட முயல, “நோ.. ஆதினி இந்த வேட்கை தீரும் வரை, நீ என் மிருகத்தனமான ஆளுமையை பார்க்க வேண்டாம்.” என்று செல்ல கடிகளை பரிசாக தந்து அவளை ஆக்கிரமிப்பு செய்தான். அந்த கருப்பு துணி அவள் கண்ணிலிருந்து விடுப்படாமல் பார்த்து கொண்டார்கள். ஆதினிக்கும் இந்த அணுகுதல் புதுமையாக இருக்க ஏற்றுக் கொண்டாள். 

  ஆதினிக்கு வேறு உலகத்தை காட்டியவன் அவள் அசந்து உறங்கும் வரை தன் நெஞ்சில் சாய்த்து கொண்டான்.

அதிகாலை ஆதினி எழுந்த நேரம் மிக நேர்த்தியாக போர்த்தி அவர்களது அறையில் படுத்திருந்தார்கள். அங்கே அக்ஷயாவும் இருந்தாள்.

ஆதினிக்கு இரவெல்லாம் ஏதோவொரு மாய உலகில் சஞ்சரிக்க, அயனின் வெற்று மார்பில் அக்ஷயா உறங்க, தந்தையிடம் சாய்ந்து படுத்துறங்கும் அழகை கண்டாள்.

  தன்னிலையை கண்டு, வெட்கம் கொண்டு குளிக்க சென்றாள்.
 
ஆங்காங்கே எறும்பு கடிகள் போல தடிப்புயிருக்க, சுடத்தண்ணீரில் குளித்தாள்.  

  கொஞ்சம் கொஞ்சமாய் தடிப்பு குறைய, யோசனைவயப்பட்டவளாக ஈரக்கூந்தலுடன் வெளிவந்நாள்.

“குட் மார்னிங்” என்றான் அயன்.

  “குட் மார்னிங்” என்றவள் எதையோ தேடினாள்.

“என்னாச்சு?” என்றான். முதல் கூடல் முடிந்து வெட்கத்துன் எழுந்து சென்றவள் யோசனையுடன் வெளிவரவும் காரணம் கேட்டான்.‌

”உடம்பெல்லாம் லேசான தடிப்பு இருக்கு அயன். ஏன்னு தெரியலை?” என்றாள்.

  “மேடம் நேத்து பால்கனில நம்ம நைட் செலிபிரேட் பண்ணியது. கேம் முடிஞ்சு அங்கயே படுத்துட்டோம். ஆப்டர் கண் விழிச்சப்ப நள்ளிரவு. கொசு எல்லாம் ஜாம்பி மாதிரி கடிச்சிட்டு இருந்துச்சு. நான் தான் அங்க இனியும் தூங்க வேண்டாம்னு கீழ் ரூம்ல தூக்கிட்டு வந்தேன்.
   மேடத்துக்கு கிறக்கம் குறையலையா? அங்க தூங்கினோம். இங்க எப்படி வந்தோம்னு யோசிக்கலை. குழந்தையை இங்க தூங்க வச்சிட்டு அங்க போயிட்டு மறுபடியும் குழந்தையோட கட்டிப்பிடிச்சிட்ட தூங்கறோம் யோசிக்கலையா?” என்று கேட்டான்.‌

தலையில் கைவைத்து, “கொசு கடியா… நான் கூட நீங்க தான் கடிச்சி தடிப்பு உண்டாக்கிட்டிங்கனு நினைச்சேன்.” என்றாள்.

  “எவ்ளோ மென்மையா கையாண்டேன். நான் இப்படி தடிப்பு வர்ற அளவு கடிப்பேன்னா? ஒரு வேளை ஆதினிக்கு கடிச்சி விளையாடினா பிடிக்குமோ? அப்ப ஓகே.. நாளையிலருந்து கடிச்சிடுவோம்” என்று கண் சிமிட்ட, தலையணையை அவன் மீது தூக்கி எறிந்தாள்.

   குழந்தை அக்ஷயா தூங்கி எழுந்த நேரம் பில்லோ பைட் என்றதும், அவளுமே தலையணையை தூக்கி போட, இனி சென்சார் போட்டு பேசவேண்டுமென தம்பதியர்கள் பூடகமாக சமிக்ஜையில் பேசிக் கொண்டாரகள்.

அயன் ஆதினி இருவரும் அக்ஷயாவை அன்புடன் வளர்த்திட, ஊர் வாய் தானாக மறமணம் செய்ததால் கணவன் மனைவியாக பார்த்தனர்.

முன்பு பின்னால் பேசிய கூட்டம் எல்லாம் முன்னால் நட்பு கரம் நீட்டியது.

    அயலப்பா” என்று அக்ஷயா தினமும் கதை பேச, அவளை கூட்டிக்கொண்டு அந்த ஏரியா முழுவதுமே என்‌ மகள் என்ற கர்வத்துடன் சுற்றினான் அயன்.

  என்ன தான் தனக்கான குடும்பம் மனைவி குழந்தை என்று பார்த்தாலும், மறுபுறம் அவனுக்கான பணியில தீவிரமாக இருந்தான்.
  விரைவில் அவனது வேலை, அவனுக்கான இடம் வீடு என்று செல்ல வேண்டுமென ஆதினியிடம் கூறிக்கொண்டிருந்தான்‌.

   அவளுமே அதுவரை தன் வீட்டில் அவனுடன் மணமொத்திய தம்பதியாக மாறினாள்.
 
பிரதாப் புகைப்படம் அறையிலிருந்து பூஜையறைக்கு சென்றது. பூஜையறையிலிருந்து ஸ்டோர் ரூம் சென்றது. ஒன்றன் பின் ஒன்றாக ஆதினியின் கணவன் பிரதாப் இல்லை. அயன் என்ற அறிவிப்பே வீடு முழுக்க வியப்பித்து போனது.
  அந்தளவு ஆதினி மனதில் வீட்டில் அயன் சுவடாகி போனான்.
  ஆதினிக்கே அவ்வாறு இருக்க, அக்ஷயாவோ ‘அயலப்பா’ என்றவள் தந்தை பெயர் யாராவது கேட்டால் நொடியும் தாமதிக்காமல் ‘அயன்” என்றாள்.
பிரதாப் என்ற பெயர் கூட அக்ஷயா மறக்கும் அளவிற்கு அவள் அப்பா பெயர் அயன் என்று பதிவாகினான்.

  அனைத்தும் நிறைவாக போனது.

அந்த நேரம் அனிதா அவளது வீட்டில், தனது போனில் ஸ்டோரேஜ் அதிகமாக உள்ளதால் எடுத்த செல்ஃபி சேவ் ஆகாமல் இருக்க, மெதுவாக மெத்தையில் படுத்து தேவையற்ற புகைப்படத்தை நீக்கினாள்.
  அப்பொழுது அயன் ஆதினிக்கு அளித்த பரிசு மோதிரத்தை பார்த்தாள்.
   இதே போல மோதிரம் வாங்குவதற்கு அவள் ஆன்லேன் ஷாப்பிங்கில் தேடினாள்.

கூகுளில் அந்த மோதிரம் தேடவும், அவளுக்கு திடுக்கிடும் தகவல்களை காண்பித்தது.
*இது போன்ற மோதிரம் அரிதானது.
*இது தலைவன் அணியும் மோதிரம்.
*சாதாரணமாக செய்ய கூடியதோ கிடைப்பதோ இல்லை…. ராயல்  பேமிலி… என்று ஒவ்வொன்றாக காட்ட வாசித்தவள் குழம்பிவளாக மாறினாள்.

  சாதாரணமா கிடைக்காது, தலைவன் அணியும் மோதிரம்னா என்ன தலைவன்? அயன் யாருக்கு தலைவன்?

-தொடரும்.
 பிரவீணா தங்கராஜ்
  

4 thoughts on “அயலா… அயலா…-11”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top