மதுர ஜில்லா… மச்சானே!-5

அத்தியாயம்-5

அருளாளன் வீடு எப்பொழுதும் இயங்குவதை விட சுறுசுறுப்பாக இருந்தது.
    வெளிநாட்டிலிருந்து பெரிய மகன் வந்திருக்கிறான் என்பதாலோ என்னவோ, வேல்விழி வீட்டையே பளிச்சென்று சுத்தம் செய்து வைத்திருந்தார். வேலைக்காரரிடமும் சுற்றி இருந்தவர்களிடமும் சொல்லிவிட்டு எல்லாவிதமான காய்கறி, பழம், அசைவ உணவு என்று வகைவகையாக சமைத்தார்.

இனியனும் குளித்து முடித்து, வெள்ளை டீஷர்ட், கருப்பு ட்ராக் பேண்ட் அணிந்து ஹாலில் அமர்ந்திருந்து ருசித்தான்.‌
  
  சற்று ஒய்வு நேரம் கிடைக்க, தந்தையிடம் தான் ஒரு பெண்ணை காதலிப்பதை கூறவேண்டும், காவ்யாவை பற்றி தெரிவித்து சுமூகமாக வீட்டை மாற்றிவிட்டு காவ்யாவை அழைக்கும் யோசனையுடன் அங்கும் இங்கும் ஹாலில் நடந்தான். தந்தையிடம் காதலை பகிர்வதற்கு தயங்கினான்.
 
அந்த நேரம் வாசலில் இருந்து,
“அண்ணே” என்ற குரல் கேட்டது.
அத்தை இளையமதி வீட்டுக்குள் வந்ததும் பார்த்ததும் அறிந்தவன் எழுந்து நின்று வந்தான்.

அங்கிருந்த அருளாளனும் “வாம்மா தங்கச்சி” என்று உடனே எழுந்து வந்தார்.

அவரின் முகத்தில் கொஞ்ச நாட்களுக்கு முன் இருந்த கோபம் இல்லை. அன்பான அண்ணனாகவே வரவேற்றார்.
“என்னடா இனியா… அத்தை வந்திருக்காங்க. பார்த்தியா?” என்றார். இனியனும் உடனே “வாங்க அத்தை” என்றவன் மரியாதையாக புன்னகைத்தான்.

“எப்படிப்பா இருக்க?” என்று இளையமதி பாசமாக கேட்டார்.

“நல்லாருக்கேன் அத்தை. நீங்க மாமா மதுரா நிலானி எல்லாம் நல்லா இருக்கிங்களா?” என்று விசாரித்தான்.

  “உங்க மாமா தானே.. இன்னமும் அவர் குடும்பத்தோட பேச்சை கேட்டு தான் ஆடறார். நிலானி பன்னிரெண்டாவது படிக்கா. மதுரா தூரிகாவை பார்க்க ஓடியிருக்கா. நீ வந்ததா அப்பா சொல்லவும் பார்த்துட்டு போக வந்தேன்யா” என்று வீட்டில் விளைந்த மாம்பழங்கள் கொய்யா பழங்கள் வாழைக்காய், அவரை போன்ற காய்கறிகளை கொண்டு வந்த பொருட்களை அண்ணியிடம் தந்தார்.‌ இதெல்லாம் இளையமதி வீட்டில் விளைந்தது. கூடுதலாக மீனை பிடித்து, அதில் உப்பு காரம் போட்டு துழாவி வறுக்க கொண்டு வந்தார்.

அருளாளனோ தங்கையை அமர வைத்து வேல்விழியிடம், “காபி கொண்டு வா… அதோட இனியன் வாங்கிட்டு வந்த ஸ்வீட்டும் எடு” என்றார்.

இளையமதிக்கு சற்றே ஆச்சரியம்.
‘இத்தனை பாசமா பேசுறாரே?’ என்று தோன்றியது. ஆனால் அந்த பாசத்தின் நடுவிலேயே அருளாளன் மெதுவாக ஊசியை இறக்கினார்.

“ஏன் தங்கச்சி… உன் மக மதுரா எப்ப பார்த்தாலும் அதியமான் வீட்டுபக்கமே சுத்தறாளே? நம்ம வீட்டுக்கு வரமாட்டாளா?” என்றதும்  இளையமதியோ உடனே, “அண்ணா… சொன்னேனே மதுரவாணி அங்கன்னா தூரிகாவோட ஏதாவது பேசுவா. விளையாடுவா. இரண்டும் பொம்பளை பிள்ளைங்க பாருங்க.
இங்க நம்ம எழிலரசன் மட்டும் இருக்க வர்றது குறைவு அண்ணே. நீங்களும் சின்ன அண்ணனும் பேசிக்கறதில்லை. நாங்க அப்படியிருக்க முடியாதே. எனக்கு இரண்டு அண்ணனும் ஒன்னு தான்.” என்றார்.

“அட நான் என்ன தப்பா சொன்னேன் மதுராவுக்கும் அடிக்கடி பெரிய மாமா இருப்பதையும் சொல்லிவை.” என்று சிரித்தார் அருளாளன்.

இனியன் மட்டும் அந்த பேச்சை கவனமாக கேட்டுக் கொண்டிருந்தான். ‘அகிலன் காளையால் காயம் உண்டான போது மதுரவாணி தாவணி கிழித்து கட்டியதாக கூறியிருக்க, அகிலன் பின்னாடியும் ஒருத்தி சுத்தறாளா?’ என்ற எகத்தாளம்.

‘பெயரை பாரு மதுரவாணி’ என்று நகைத்தான். அதே நேரம் அருளாளன் உள்ளே சென்று இரண்டு கவர்களை எடுத்து வந்தார்.

“இந்தா தங்கச்சி… ஊர்ல இருந்து வந்ததும் நம்ம டவுனுக்கு போனவன், அவன் அம்மைக்கு சேலை வாங்கிட்டு வந்தான். அப்படியே உனக்கும்… மதுராவுக்கும் கூட வாங்கியிருக்கான்.” என்று கொடுத்தார்.

இளையமதி உடனே, “இதெல்லாம் எதுக்கு அண்ணா” என்று வாங்க தயங்கினார்.

“வாங்கிக்கோங்க மதினி… பெரியவன் ஆசையா நினைவு வச்சி வாங்கியிருக்கான்.” என்றார்
வேல்விழி. கூடுதலாக “மதுராவுக்கு இந்த கலர் ரொம்ப அழகா இருக்கும்” என்றார்.

இளையமதி தயக்கத்தோடு வாங்கிக் கொண்டார். தனக்கு இரு மகள்கள் இருக்க, ஒருத்திக்கு மட்டும் வாங்கி வந்து நீட்டினால் எப்படி எடுத்துக் கொள்வதென்று.

இனியனோ தான் வாங்காத சேலை, தந்தை தாய் இருவரும் தான் வாங்கியதாக பொய்யுரைக்க, அவனும் அதற்கு தோதாக, “பிடிச்சிருக்கானு பாருங்க அத்தை” என்றான். அவன் குரல் மரியாதை நிமித்தமான அமைதி இருந்தாலும், இளையமதிக்கு ஏனோ அசௌகரியம். அதெல்லாம் நல்லாயிருக்கும் என்று பார்த்து புன்னகைத்தார்.

சில நிமிடங்கள் பேசிவிட்டு எழுந்தார். “சரி அண்ணா. நான் கிளம்பறேன். இனியனை பார்த்து போகலாம்னு தான் வந்ததே. அவனுக்கு மீன் பிடிக்குமேனா கொண்டு வந்தேன். 
    இனியன் சீலை எல்லாம் வாங்கிட்டு வர்ற அளவுக்கு நினைவு வச்சது நினைச்சா சந்தோஷமா இருக்கு.” என்று ஆனந்தமாக விடைப்பெற துடித்தார்.

“ம்ம் போயிட்டு வாம்மா.” என்று அருளாளன் வழியனுப்பினார்.

இனியனிடமும், “நல்லா இரு பா” என்று கூறிவிட்டு வெளியேறினர்.

அவர்கள் சென்றதும் இனியன் எழிலரசனை பார்த்தான். இதெல்லாம் ஏதோ நாடகம் போல வேடிக்கை பார்த்த எழிலரசன் அண்ணன் பேச்சு கேட்டதும் திடுக்கிட்டு திரும்பினான்.

“டேய்… ஊரை சுத்தி காட்டுறியானு கேட்டா முழிக்கற” என்று கூப்பிட “போலாம் அண்ணா.” என்று இருவரும் பைக்கில் கிளம்பினார்கள்.

  இனியன் பைக்கை உதைத்து ஓட்ட, எழிலரசன் பின்னால் அமர்ந்து வந்தான்

அலங்காநல்லூர் தெருக்கள்,
தேயிலை கடை, பஞ்சாயத்து அலுவலகம், எல்லாவற்றிலும் கடந்து இனியன் அமைதியாக பார்த்துக் கொண்டே வந்தான். படிக்க செல்லும் முன் இருந்த வீதிகள் சற்று மாற்றம் அடைந்ததாக தெரிந்தது.

அவர்கள் பஞ்சாயத்து அலுவலகம் அருகே வந்ததும் சில இளைஞர்கள் அருளாளனின் பெரிய மகன் என்று மரியாதைக்கு எழுந்து நின்றார்கள்.

சிலர் “வாங்க அண்ணே. இப்ப தான் ஊருக்கு வரத்தோனுச்சா” என்று மரியாதையாக வரவேற்றார்கள்.
ஆனால் அந்த உற்சாகம் முழுமையில்லை. ஏனென்றால்…
அவர்களில் பெரும்பாலானோர் அகிலன் பக்கம் இருந்தவர்கள்.

இனியனும் அதை பேச்சு வாக்கில் புரிந்துக் கொண்டான். “என்னடா… இவ்வளவு சைலண்ட்டா இருக்கிங்க? இவன் ஊருக்கே வரமாட்டானு நினைச்சிங்களா” என்று சிரித்தான்.

ஒருவன் தடுமாறி, ”அப்படி இல்ல அண்ணே” அதற்குள் அங்கிருந்த பெரியவர்கள் சிலர், “அருளாளன் சொன்னது போலவே இனியன் தம்பி வந்துட்டாரே. அவர் சார்பில் தேர்தல்ல நிறுத்த போறதா சொன்னார். இனியன் தம்பி அப்பாவுக்காக படிச்ச படிப்பு நாட்டை விட்டுட்டு வந்திங்களா?” என்று பெருமையாகவே நினைத்தார்.

”வெளிநாட்டுல படிச்ச பையன். பஞ்சாயத்து தேர்தல்ல நின்னா நல்லாதான் இருக்கும்.” என்று பேச்சை கிளப்பினார்கள்.

அந்த வார்த்தை இளைஞர்களுக்கு சங்கடமானது. அவர்களது முகம் மாறியது. அகிலன் தான் அடுத்த தேர்தலில் நிற்பதென்று தெரிய, இனியன் வரவும் இந்த பேச்சு கசந்தது.

இனியன் மட்டும் எதுவும் தெரியாதவன் போல சிரித்தான். அடுத்தடுத்த வேலையில் பஞ்சாயத்து தேர்தலில் நிற்க முடிவெடுத்தவனாக இனியன் ஊரில் மேற்பார்வையிட்டு உலாவினான். தந்தைக்காக பஞ்சாயத்து தேர்தலில் நின்றால், அவர் தனக்கு பிடித்த காவ்யாவை கட்டி வைக்க சம்மதிப்பாரென்ற திட்டம். அருளாளன் ரத்தம் ஓடுகின்றதே. அவரை போல திட்டமிட்டு காய் நகர்த்துகின்றான்.‌


இங்கே அகிலன் வீட்டில், மதுரவாணி தூரிகா இருவரும் கல்லாங்காய் விளையாடியபடி பொழுதை கழித்தனர்.

அகிலன் ஓய்வெடுத்திருந்தவன் அந்த கவரை மீனாட்சி கையில் திணித்து ”அம்மா… போய் கொடுங்க” என்று கிசுகிசுத்தான். அவளது தாவானியை கிவித்து அகிலனுக்கு கட்டிவிட்டதால், சேலை வாங்கி தர முடிவெடுத்திருந்தான். இன்று தான் அதற்கு நேரம் அமைந்தது. நேரிடையாக கொடுக்க தயக்கமிருக்க, அன்னையிடம் தந்தான்.

மீனாட்சியும் மகனிடம் வாங்கி மதுராவாணி கையில் திணிக்க வந்தார். “ஏழு கழுதை வயசாகுது. கல்லாங்காய் ஆடிட்டு இருக்க. இதை பிடி” என்றார். அமர்த்தலாக.

“என்னது அத்தை இது?” என்று கேட்டாள்.

“ஆஹ்.. அகிலனை உங்க பெரியப்பா வளர்த்த மாடு முட்டி ரத்த வழிய, உன்ற தாவணியை கிழிச்சு கட்டினியாமே. அதுக்கு புது சீலையா என்ற மகன் எடுத்தாந்தான். உனக்கு கொடுக்க சொன்னான்.” என்றதும் வாயை பிளந்து மதுரா அதை ஆர்வமாக வாங்கிக் கொண்டான்.

   அகிலன் மறைவிருந்து பார்த்து சிரித்தான். ‘ஆளைப்பாரு ஆளை.. அம்மை ‘அகிலன்’ என்ற பெயரை சொல்லி நீட்டவும் பொசுக்குனு வாங்கிட்டு வாயெல்லாம் பல்லு.’ என்று மனம் குளிர நினைத்தான்.
 
அந்த நேரம் தூரிகாவோ “அம்மா  எனக்கு எதுவுமில்லையா” என்று அம்மாவிடம் கேட்க, “சும்மாயிருடி. உங்கண்ணன் கல்யாணத்துக்கு புதுசு வாங்கி தருவாப்ல. இது உங்க அண்ணன் அவரோட அத்தை மகளுக்கு வாங்கியிருக்கு” என்று கேலி செய்தார். மதுரவாணி கால் தரையில் படாமல் வாங்கிக் கொண்டாள்.

மதுரா வெட்கத்துடன் தூரிகாவை இழுத்து அவளது அறைக்கு சென்றாள்.

  “நான் உன்ற ரூமுல உடுப்பை மாத்தணும்” என்று அரக்கப்பறக்க தவித்தாள்.

“ஆங்… மாத்து மாத்து” என்று தூரிகா கூறிட, தாவணி மீது கையை வைத்து அவிழ்க்க நினைத்த மதுராவோ, “ஆங்..  நீ இங்கனயே நின்னா எப்படி? நான் உடுப்பை மாத்தணும். நீ வெளியே போ.” என்று கூற, “ஏன்.. உன்ற கோலத்தை எங்கண்ணா தான் காணணுமோ?” என்று கேட்க மதுராவோ இவளது பேச்சை யாராவது கேட்டு தொலைத்து விட்டனரோ என்று பயந்து தலையை சுற்றிமுற்றி பார்த்தாள்.
யாருமில்லை என்றதும் “அப்படி தான் வச்சிக்கோ. ஆனா அதுக்காக தூரிகா இப்படி பேசாத. எனக்கு ஒரு மாதிரி இருக்கும். நீ இங்கன இருக்க வேண்டாம். கொஞ்சம் போல வெளியே போடி.” என்றாள்.

“அட… இப்பவே வெளியே தள்ள பார்க்கறியே.. சரி சரி.. சேலை கட்டிட்டு வா” என்று தூரிகா சிரிப்புடன் வெளியேறினாள். மதுரா மனதில் அண்ணன் அகிலன் இருப்பதை தூரிகா கண்டுக்கொண்டதன் விளைவு சில நேரம் இப்படி வாய் துடுக்காக பேசுவாள். வீட்டில் மற்றவர் காதில் விழாத அளவிற்கு பார்த்துக்கொள்வாள்.

மயில் பச்சை கலரில், அகிலன் வாங்கி தந்த சேலையை பாந்தமாக அணிந்து அவள் நின்ற விதமே தேவைதை அம்சமாக இருந்தது.
 
  தனக்காக அகிலன் மச்சான் வாங்கியதிலேயே மதுரா துள்ளி குதித்தாள். இதில் அவசரமாய் அணிந்து வெளியே வர, அகிலன் அவளை பார்த்தவுடன் சில நொடிகள் பார்வையை மாற்றவே இல்லை.

மதுரவாணி வெட்கத்தில் நெளிந்து நின்றாள். மீனாட்சியோ “அம்சமா தான் இருக்க.” என்று கூறி மகனை பார்த்துவிட்டு, மகள் தூரிகாவை இழுத்து செல்ல, அகிலன் மெதுவாக அருகே வந்து மதுரா கையை பிடித்து நிறுத்தினான்.

“சேலை பிடிச்சிருக்கா?” அவள் மெதுவாக தலையாட்டினாள்.

“கையோட இன்னொரு சேலையும் வாங்கி… தட்டுல வச்சு… ஊரறிய கொண்டு வந்து தரணும்னு ஆசையிருக்கு. ஆனா தேர்தல் வேலை நிறைய கிடக்கு” என்றான்.
அந்த வரியில் இருந்த அர்த்தம் மதுராவை தலைகுனிய வைத்தது.

“போங்க மச்சான்” என்று வெட்கப்பட்டு நின்றாள்.

அவன் உதடு பிரிக்காமல் சிரித்தான். அவள் முகத்தை பார்த்துக் கொண்டே நின்றான். சேலையில் கூடுதலாக அழகாக தெரிந்து தொலைத்தவளை ரசிக்க,
அந்த பார்வையை தாங்க முடியாமல் மதுரவாணி அவளது வீட்டுக்கு ஓடிப்போனாள்.

மீனாட்சி எட்டி பார்த்து மதுரா செல்லவும், அதியமானிடம் தெரிவிக்க நினைத்தார்.

இங்கே மதுரா அகிலன் மச்சான் தந்த சேலையை அணிந்தவாறு,  வீட்டிற்கு வந்ததும் இளையமதி “என்னதுடி இது? யார் தந்த சீலை” என்றார்.

“அகிலன் மச்சான் சேலை எடுத்து தந்தார்மா” என்று மாடு முட்டிய அன்று  தாவணி கிழித்து வந்த போது தன்னை திட்டி தீர்த்தாரே. அதற்கு பலனாக சேலை என்று கூறினாள்.

   “ஏய்.. அக்கா.. சூப்பராயிருக்கு” என்றாள் தங்கை நிலானி

  இளையமதி பதிலுக்கு எதுவும் பேசாமல், இனியன் வீட்டில் தந்த கவரை நீட்டினார்.

“இந்தா… உங்க பெரியமாமா வீட்ல தந்தாங்க. அவுங்களும் சீலை தந்தாங்க. வெளிநாட்ல படிச்ச இனியன் அவரா உனக்குனு வாங்கித் தந்திருக்கார்.” என்று கொடுக்க, “அய்யோ அம்மா… இந்த சேலை மச்சான் தந்தது இப்ப கழட்ட தோணலை. அதை அங்க வை” என்று தூக்கி போட்டாள்.

“இதுவும் உங்க இனியன் மச்சான் வாங்கியது. இதையும் ஒருமுறை பாரு. அப்படியே பெரிய மாமா வீட்டுக்கு போயிட்டு வா. அவர் நீ அங்க வரலைனு பேசறார்.” என்று இளையமதி கடுப்பாய் கூற மதுரவாணி முகம் சுருங்கியது.

“சும்மாவே அங்க போக முடியாதும்மா. தூரிகா மாதிரி அங்க பொட்டப்புள்ள இல்லையே.” என்று அலுத்துக் கொள்ள, “சும்மா எதுக்கு போற.. நாளைக்கு சீம்பால்ல கடம்பம் பண்ணி கொண்டு போவோம்.” என்றதும் நாளைக்கு தானே.. இன்னிக்கு என்ற அகிலன் மச்சான் வாங்கிய சேலையை அணிந்து கண்ணாடியிலே நின்றாள்.

அவள் அணிந்திருந்தது அகிலன் வாங்கிய சேலை. அதை நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.
பிறகு கண்ணாடி முன் நின்று நொடிக்கு ஒரு முறை தன்னை பார்த்தாள். மச்சான் வேறு கையை பிடித்து வெறொரு சேலை வாங்கி ஊரறிய தட்டில் வைத்து வரக்கூறுவதாக கூறியதன் அர்த்தம் புரிய, பொண்ணு கேட்டு வரும் நாளிற்கு ஏங்கினாள். சேலையை வருடிக் கொண்டாள்.

இனியன் அவன் இளையமதியிடம் தந்து மதுராவுக்கு வீட்டில் தந்த சேலை அப்படியே கட்டிலில் கேட்பாரற்று கிடந்தது. அதை நிலானி தான் விரித்து பார்த்தாள். அதில் இளையமதிக்கு தந்ததும் இருந்ததால், இரண்டு சேலையாக இருந்தது.

  இளையமதி மகளிடம் தரும்போது, அவனுக்கு வாங்கியதாக கூறாமல்,  ஒன்னு மதுராவுக்கு, ஒன்னு நிலானிக்கு என்று பிரித்திட்டே கல்யாண சுந்தரத்திடம் தெரிவித்தார். அந்த மனுஷனோ தனக்கான பாதையில் திளைத்திருக்க மகளை பற்றி கவலையின்றி குடித்தார்.

தொடரும்.

பிரவீணா தங்கராஜ்.

6 thoughts on “மதுர ஜில்லா… மச்சானே!-5”

  1. Dharsini Priya

    Super sis nice epi 👍👌 eppdi renduperum oru thittam podranga nadula endha ponnu dhan maattikitu muzhika pogudhu 😕🙄

  2. M. Sarathi Rio

    அப்பனும், பிள்ளையும் சேர்ந்து… அகிலன் மதுரவாணி காதல்ல
    கும்மி கொட்டாமல் இருந்தால் சரி தான்.

    😴😴😴
    CRVS (or) CRVS 2797

    1. Praveena Thangaraj

      என்னவென்று சொல்வதம்மா… வச்சியின் வாழ்வை. தெரியலையே.🤣

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top