மையலிட்ட சிற்பமே-4

அத்தியாயம்-4

இரவில் மின்விளக்கு அணைந்தப்பின், நடந்து முடிந்த கூடலில் தவமலரின் மிரட்சி நடுக்கம், வலி, பயம், போன்ற எந்த உணர்வும் கதிரவன் அறியவில்லை. உடல்மொழியில் அவள் நடுக்கத்தை கூட முதல் கூடலில் வந்த வெட்கத்திற்குரியதாக எடுத்துக்கொண்டான்.

தவமலரும் கத்தி அழுது சத்தமிடவில்லை. அவளிடம் காயத்ரி சொல்லி சென்ற காரணத்தாலும், சில படத்தின் காட்சி அமைப்பில் ஏதோ புத்திக்கு இந்த நேரம் அவ்விடத்தில் எதிர்வினையாக மறுப்பு தெரிவிக்க தெரியாமல் போனாள்.
உண்மையில் ஒரு குழந்தையை அறைக்கு சென்று முத்தம் வைத்து அத்துமீறினால் அக்குழந்தையால் எவ்விதமாக அமைதிக்காத்து விழிக்கும அந்த நிலையில் தவமலர் இருந்தாள்.
நள்ளிரவு இருட்டில் கதிரவனுக்கு தேடல்கள் முடிவடைந்து ஓய்வில் உறக்கத்தில் சென்றியிருந்தான். தவமலருமே அசதியில் உறங்கிவிட்டாள்.

அடுத்த நாள் அறையின் மெற்பரப்பில் இருந்த சிறு ஜன்னல் மூலமாக வெளிச்சம் அறையை நிறைக்க, எழுந்தபோது தேகம் வலியெடுக்க, தன்னிலையை கண்டவளுக்கு பகீரென்றது.

சேலை களைந்து காணாமல் போக, அதை உதடு கடித்து தேடினாள்.

நேற்றே காயத்ரி எழுந்ததும் குளித்து முடித்து இருக்க கூறி உடையை தந்து சென்றியிருக்க, சேலையை எடுத்து கட்ட துவங்கினாள்.
இதே தாவணி என்றால் நொடியில் கட்டிடும் தவமலர். இந்த சேலை, அதுவும் இந்த உடல் அசதியில் நடுக்கத்துடன் கட்ட துவங்கி ஏனோதானோ என்று சொருகி மேலே போர்த்திக்கொண்டாள்.

கதிரவன் இன்னமும் உறங்குவதை கண்டதும், கதவை திறந்து வெளியே கொக்கை போல தலைநீட்டி பார்த்தாள்.

குழியலறை வாசலுக்கு பக்கமாக அஞுப்பில் வெந்நீர் சூடாக, அங்கே கரிமை கொண்டு சாமுண்டிஸ்வரி பல்லை தேய்த்தார்.

தவமலரை கண்டதும், “எந்திரிக்க இம்புட்டு நேரமா? வெந்நீர் போட்டுயிருக்கு போய் குளிச்சிட்டு வா” என்றார்.

தவமலர் தலையாட்டி நடந்து செல்ல, அவளை சாமுண்டிஸ்வரி கூர்ந்து நோக்கினார்.

அவசரமாய் யாராவது பார்த்திடுவாரோ என்று குளியலறைக்கு ஓடினாள்‌. சாமுண்டிஸ்வரி வெந்நீரை கொண்டு வந்து ஊற்ற கதவை திறந்தார்.

தவமலரோ நடுக்கத்துடன் வலியை தாங்கியது தெரிய, “வெந்நீர்ல குளி உடம்பு வலி போகும்.” என்று செல்ல, கதவை தாழிட்டாள்.

தவமலருக்கு அழுகை உடைப்பெடுத்தது. குளித்து முடித்து அங்கேயே சேலை கட்டவும் முடியாது தடுமாறினாள்.

“ஏன்டி எம்புட்டு நேரம் குளிப்ப?” என்று சாமுண்டிஸ்வரி குரலில், “சேலை கட்டிட்டு இருக்கேன் அத்தை. நழுவிட்டே இருக்கு” என்று குரல் கொடுத்தாள்.

“அந்த ஈரத்துல என்னத்தை கட்டுவ. மேல போர்த்திட்டு உள்ளறைக்கு போய் கட்டு” என்று கூறவும் சேலையை போர்த்தி கதவை திறந்தாள்.

வேகமாக அறைக்கு வந்ததும், மீண்டும் தடுமாற்றம். சேலை கட்ட முடியாது தடுமாற, கதிரவன் அதற்குள் எழுந்து அவளை பின்னாலிருந்து அணைக்கும் நோக்கத்துடன் பூனை நடையிட்டு வந்து இடையை கட்டிக்கொள்ள, சேலையை நழுவவிட்டு, “அம்மா” என்று கத்தினாள்.

“ஏய்… மலரு நான் தான்” என்று கதிரவன் கூற, “அங்க என்னடி சத்தம். இன்னுமா சேலை கட்டற?” என்று கத்தவும், “அய்யோ அம்மா வெளிய தான் நிக்குது” என்று கதிரவன் வேஷ்டியை சரியாக அணிந்து வெளியேற முனைந்தான்.

கதிரவன் சென்றதும், சாமுண்டிஸவரி உள்ளே நுழைய, கீழே நழுவிய சேலையை எடுத்து கட்ட முடியாது விழித்தவளை, “கொண்டா…. சேலை கூட கட்ட தெரியலையா?” என்று சாமுண்டிஸ்வரியே சேலை கட்ட உதவினார்.

மாமியாரை கண்டு பயந்தாலும், சேலை கட்டும் லாவகத்தை கவனித்தாள்.

சாமுண்டிஸ்வரியும் சேலை கட்ட உதவுவது போலவே, மருமகள் மேனியை கூர்ந்திட, மாநிறமென்றாலும் ஆங்காங்கே ரத்தகட்டாக தடயத்தை கண்டதும் நிம்மதியானார்.

அவருக்கு வம்ச விருத்தி தான் முதன்மையானது. சின்ன பெண்ணின் நிலையை மனதை அவர் ஏன் அறியப்போகின்றார்.

“இட்லி அவிச்சு வச்சியிருக்கு. நாட்டுக்கோழி குழம்பும் செஞ்சாச்சு. தலையை காயவச்சி வாறிட்டு வா. டீ யும் இருக்கு. உங்க அப்பன் வீட்டுக்கு மதியத்துக்கு போகணும்ல” என்று கூறிவிட்டு சென்றார்.

எல்லாவற்றிற்கும் தலையாட்டிக் கொண்டாள். அவர்கள் சென்றதும் லேசாக முகத்துக்கு பவுடர் பூசி பொட்டு வைத்தாள்.
தலை கூட துண்டால் துடைத்து காயவைத்தபடி, இருக்க கதிரவன் மீண்டும் வந்து சிரித்தான்.

தவமலரை கட்டிப்பிடித்து கழுத்தில் மஞ்சள் வாசத்தை நுகர, கண்ணாடியில் நடுக்கமாய் உதடு தந்தியடிப்பதை கண்டான்.

”எதுக்கு மிரண்டுட்டு இருக்க? எனக்கு உன்னை கட்டிக்கிட்டே இருக்கணும்னு தோணுது.” என்று அவனது நிலையை மட்டும் விளக்கினான்.
அவளது நிலையை அவன் கவனிக்கவில்லை. அப்படியொன்று யோசிக்கவும் அவன் அறிவுக்கு தெரியவில்லை.

“அ..அத்தை. டீ குடிக்க வரச்சொன்னாங்க. ஏற்கனவே சேலை கட்ட லேட்டாகுதுனு சொன்னாங்க அப்பா வீட்டுக்கு வேற போகணும்.” என்றதும், “ஆமா ஆமா இந்த அம்மைக்கு கூரேயில்லை. நீ போ. நான் குளிச்சிட்டு ரெடியாகறேன்” என்று கன்னத்தில் முத்தமிட்டான்.

தவமலர் விட்டால் போதுமென்று வராண்டாவுக்கு வந்தாள்.
அங்கேகருப்பட்டி போட்டு சூடாக டீ இருக்க, வாங்கி குடித்தாள்.

“டீ நல்லாயிருக்கா?” என்று சாமுண்டிஸ்வரி கேட்க, தலையாட்டினாள்.

“பால் நம்ம மாட்டுல கரந்தது.” என்று விளக்கம் தர, நல்லாயிருக்கு அத்தை” என்றாள்.

“விரசா… பாலை கறக்க கத்துக்கோ. நாளைப்பிறவு நீ தான் கறக்கணும்” என்று இடியை இறக்க, அதற்கும் மறுக்காமல் தலையாட்டினாள்.

சற்று திகிலுடன் அங்கே கட்டியிருந்த மாட்டை வேடிக்கை பார்த்தாள்.
எல்லா மாடும், கொம்பு கூர்மையாக இருக்க, துள்ளலாய் நின்றது. பார்க்கவே குத்தி கிழித்திடுவேன் என்ற ரகத்தில் இருக்க, டீயை விழுங்கி பார்வையிட்டாள்.

“அம்மோவ்… எனக்கு டீ” என்று கதிரவன் வந்தான். தலையை சரியாக துவட்டாமல் உடலில் ஈரம் வைரமாய் தோளில் நெஞ்சில் வீற்றிருக்க, இடுப்பில் லுங்கி மட்டும் அணிந்திருந்தான்.

“ஏன்டா… தலையை துவட்டமாட்ட” என்று எழுந்து வந்தவர் டீயை அவன் கையில் திணித்து, சேலை முந்தாணையில் தலையை துவட்டியும் விட்டார்.

அதை தவமலர் கண்டு அம்மாவின் அன்பை கவனித்து ஏக்கமாய் பார்வையிட, கதிரவனோ கிடைத்த தருணத்தில் கண்சிமிட்டி, அவளை நத்தை ஓட்டுக்குள் அஞைப்பது போல குறுக வைத்தான்.‌

டீயை குடித்துவிட்டு, அங்கிருந்த பாத்திரத்தை பார்த்தாள். சாமுண்டிஸ்வரி ஏள்கனவே இட்லி குழம்பு செய்ததால் அங்கே பாத்திரம் விளக்க நிறைந்திருந்தது.

ஏற்கனவே இந்த வேலையெல்லாம் தவமலருக்கு கை வந்த கலை என்பதால், சேலையை தூக்கி சொருகி பாத்திரம் விளக்கினாள்.

சாமுண்டிஸ்வரி தடுக்கவில்லை, மடமடவென பாத்திரம் விளக்கியவளை கண்டு மனதிற்குள் மெச்சிக்கொண்டார்.

கண்ணன் அவசரமாய் வந்தவர், “ஏம்மா… நீ ஏன் பாத்திரத்தை விளக்குற?” என்று கேட்டுவிட்டு மனைவியிடம், “ஏன்டி கல்யாணமான அடுத்த நாளே பாத்திரத்தை தேய்க்க விட்டுட்ட” என்று கேட்டார்.

“மாமா.. அத்தை எதுவும் சொல்லலை. நானா தான் சும்மா இருக்கேனேனு விளக்கினேன்.” என்று கூறினாள்.

“இப்ப என்ன தேய்ச்சா… நாளைபிறவு அவ தானே எல்லாம் செய்யணும். செய்யட்டுமே… வந்து இட்லியை வயித்துக்கு பிச்சி போடுங்க” என்றார்.‌

மருமகளை கண்டு, சாப்பிட சென்றார்.
“நேத்து வந்தவளுக்கு இன்னிக்கே சாதகமா பேசறிங்க. இத்தனைக்கும் போடறதா சொன்ன நகை நட்டு கூட போடலை. தாய்மாமன் போட்ட இரண்டு சவரன் நகயை வச்சிட்டு கைவீசி அனுப்பிட்டாங்க. இப்ப வேலை செய்தா தான் என்னவாம்” என்று இட்லியை பரிமாறியபடி அப்படியே சப்பணமிட்டு அமர்ந்தார்.

கதிரவனையும் உட்கார கூற, புதுமனைவியுடன் அமர்ந்து சாப்பிட ஆசைப்பட்டவனோ அவளை கண்டு சங்கடமாய் அம்மா சொன்னதற்காக தந்தையோடு அமர்ந்தான்.

கண்கள் மட்டும் மனைவியை தேடியது. அன்னையிடம் பேசி யார் திட்டு வாங்குவது.

“ஏன்டா… இன்னிக்கு மறுவீட்டுக்கு போயிட்டு தங்கலாம் வேண்டாம். வீட்டுக்கு வந்து சேரு. இவ சித்திக்காரி சமைச்சி நீ ஒன்னும் தகங்க வேண்டாம். ஏன் தங்கலைனு கேட்டா… முதல்ல எட்டு சவரன் நகையை போட்டா தான் அடுத்து வீட்ல கை நனைப்பேன்னு கறாரா சொல்லிடு.” என்றார். கதிரவன் பதிலாக தலைகூட அசைக்கவில்லை.

“என்னடா… புரிதா?” என்று அதட்டவும் “சரிம்மா.” என்று கடுப்பாய் மொழிந்தான்.

“தங்கம் விக்கற விலைக்கு அவஅவ கிலோ கனக்குல வரதட்சனை தர்றாளுங்க. சரி நம்மளும் அந்தளவு வசதியில்லை. படிப்பில்லைனு தான் பத்து சவரனாவது போடறாங்கனு தலையாட்டினோம். இப்ப வெறும் கையோட அனுப்பினா என்ன அர்த்தம். சித்திக்காரி தரலைன்னா அப்பனுக்கு எங்க போச்சு புத்தி. மக வாழணுமா வேண்டாமானு யோசிக்கலை. அப்ப கை நனைக்காம வர்றது தானே சரி” என்று பேசவும், பாத்திரம் வகளக்கிய தவமலர் காதில் வாங்கினாலும் பாத்திரத்தே தேய்த்து கழுவி, குடையில் கவுத்தி, கையை சேலையில் துடைத்து, அப்படியே கதிரவன் உடையையும் இவளது உடையையும் துவைத்து உதறி காயப்போட்டிருந்தாள்.

உள்வராண்டாவிற்கு வரவும் மாமனாரும் கணவரும் சாப்பிடுவதை கண்டவள், “ஏதாவது வேலையிருக்கா அத்தை” என்று கேட்டு நின்றாள்.

“ஆஹ்.. உன் புருஷன் பக்கத்துல உட்காரு சாப்பிடு” என்று கூறினார்.

கதிரவனுக்கு வாயெல்லாம் பல்லாக, தவமலரோ அமர்ந்தாள்‌.

“துணிகூட துவைச்சிட்ட போல” என்று கேட்க, “ஆமா அத்தை கையோட வேலையை முடிச்சிடலாம்னு” என்றாள்.

கதிரவனுக்கு வயிறு நிரம்பிவிட்டாலும், மனைவியோடு சாப்பிட ஆசைப்பட்டதால் சும்மாவே ஒரு இட்லியை வைத்து அவ்விடத்திலேயே இருந்தான்.

“சமைக்க தெரியுமா?” என்று கேட்க, “தெரியும் அத்தை. சோறு வடிச்சிடுவோன். குழம்பு கூட வைப்பேன். ஆனா உங்க அளவுக்கு வராது. முதல் முதல்ல சோறு வடிக்கறப்ப கையில ஊத்திக்கிட்டேன். இந்த தழும்பு அப்படி தான் வந்துச்சு” என்று சுட்டிக் காட்டினாள்.

கதிரவன் வாயுக்கு கொண்டு போன இட்லியை அப்படியே வைத்து பார்வையிட்டான்.

தவமலரின் மென்கரத்தில் உற்று பார்த்தால் அந்த தழும்பு தெரிந்தது.

“உனக்கு சமைக்க சொல்லி தர அவசியமில்ல. நல்லது… ஏன்னா… எனக்கும் மேலுக்கு முடியலைனு தான் கதிரவனுக்கு உன்னை கட்டி வச்சது. வீட்டு வேலையும் சமையலும் கத்துக்கிட்டு வந்தது நல்லதுக்கு தான்.” என்று கறியை அள்ளி அவள் தட்டில் நிறைத்தார்.

தவமலர் திடுக்கிட்டு சாமுண்டிஸ்வரியை பார்த்தாள்.

“என்ன?” என்று அதட்டலாய் கேட்டார்.

“இல்லை… என் தட்டுல இம்புட்டு கறியை இன்னிக்கு தான் பார்க்கறேன். எப்பவும் கடைசியா சாப்பிடுவேன். ஆனா கறித்துண்டு காலியாகியிருக்கும். இப்பவும் கடைசியா தான் சாப்பிட வந்தேன். ஆனாலும் கறியை அள்ளி வச்சியிருக்கிங்களா… எனக்கு ஆச்சரியமா இருக்கு.” என்று கூறினாள்.

சாமுண்டிஸ்வரி புருவம் சுருங்க பார்வையிட, கதிரவனோ மனைவியை அணைத்துக் கொள்ள ஆறுதல் கூற துடித்தான்.

அன்னை எதிரில் பேசவே பயமாக இருக்க, மௌனமானான்.
சாமுண்டிஸ்வரியோ “உன் வயிற்றுக்கு என்ன தேவையோ அதுக்கு ஏத்த அளவு நீ எப்பவும் சாப்பிடு. சாப்பிட்டா தான் வீட்டு வேலையை பார்க்க முடியும். சும்மா.. குருவி கொத்தி சாப்பிட்டு வேலை செய்ய முடியாம இருக்க கூடாது‌. அதே போல உனக்கு பிடிச்சதையும் செய்து சாப்பிடு. இப்படி ஒடிசலா இருந்தா புள்ள பெத்துக்க முடியாது.” என்று சாப்பிட்டு அவரும் கையை கழுவி ஒரு செம்பு தண்ணீரை தொண்டையில் நிறைத்து கீழே வைத்தார்.

சாமுண்டிஸ்வரி சென்றதும் கதிரவன் தவமலரின் கையை பிடித்து, அவளதே தழும்பை பார்வையிட்டு, “எப்ப இப்படி ஆச்சு?” என்று கேட்டான்.

“ஐந்தாவது படிக்கறப்ப” என்றாள். அவனுக்கு திகைப்பு, ஐந்தாவது என்றால் பத்து வயசு இருக்குமே. அப்பொழுதே சாதம் வடிக்க விட்டதை எண்ணி துடித்தான்.

“எங்க அம்மை சொன்ன மாதிரி நல்லா சாப்பிடு. சுருக்குனு ஏதாவது பேசுமே தவிர, சாப்பிடறதுக்கு எல்லாம் கணக்கு பார்க்காது.” என்றான்.

கதிரவனின் நேற்றைய ஆளுமையில், தீண்டலில், இப்பொழுதும் திடுக்கிட்டு பயந்தவள், அவன் பேசியதை கேட்டு நிம்மதியானாள். அந்த நேரம் அவன் தீண்டல் கூட மயிலிறகாக வருட, அவன் கையில் இட்லியும் கறியும் எடுத்து அவளுக்கு ஊட்டிவிட, ‘ஆ’வாங்கி கொண்டாள்.

கதிரவனோ கூடுதலாக அவளது கன்னத்தில் உதட்டை ஒற்றி எடுத்து ஓடினான்.

இந்த வீட்டில் இனி தனது வாழ்வு எப்படி? என்று கூட சிந்திக்காமல் கதிரவனின் சிறு முத்தம் நேற்றைய கூடலை விட இதத்தை தந்தது என்னவோ உண்மை.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

4 thoughts on “மையலிட்ட சிற்பமே-4”

  1. M. Sarathi Rio

    பவாயில்லை, மாமியார் கொஞ்சம் நல்லங்களாத் தான் இருக்கிறாங்க போலயிருக்கு.

    😜😜😜
    CRVS (or) CRVS 2797

  2. Dharsini Priya

    Super sis nice epi 👍👌 mamiyar ennadhan vela vaanginaalum paravaella saapadu nalla podrangaley andha alavuku nalladhu😐

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top