தகிக்கும் நிலவொன்று-44
அத்தியாயம்-44
ஷ்ரத்தாவை அழைத்து வந்தப்பின் அவள் பெரிதாக சத்ரியனை கடியவில்லை. அவளுக்கு தெரியும் சத்ரியனை பற்றி...
ஏதோ ருந்ரன் யதுநந்தனிடம் பேசியது மனதில் நிம்மதியானது.
அடுத்த ஒரு வாரமும் பகல் நேரங்களில் ஷ்ரத்தா மருத்துவப் படிப்பில் மூழ்கிக் கிடந்தாள்.
இரவு வந்ததும் பல வருடங்களாக பிரிந்திருந்த இருவரின் ஏக்கமும், காதலும் அவர்களை மீண்டும் மீண்டும் ஒருவருக்குள் ஒருவர் தொலைத்துக் கொண்டிருந்தனர். சத்ரியன் அவளை மோகத்தில் மூழ்கடித்தான்.
அப்படியே நாட்கள் ஓடின. ராயனோ தந்தையின் கைகளுக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருந்தான்.
சத்ரியன் வீட்டிலிருந்தபடியே பெரும்பாலான வேலைகளை போனிலேயே முடித்துக் கொண்டான். அவன் கட்டளைக்கு பிறந்த அதிகார வர்க்கத்தினன்.
ஒரு அழைப்பு, சில கட்டளை என்று கிங்பின் வாழ்க்கை மீண்டும் ஆரம்பத்தை நோக்கியது முன்பு அவனது வட்டம் இந்திய எல்லைக்குள் இருந்திருக்க, தற்போது இன்டர்நேஷனல் அளவிற்கு தன்னை வளர்த்துக் கொள்வதில் தீவிரமானான். நம் எதிரியின் அளவை பொறுத்து நமது நிலை உயர்ந்தாக வேண்டும், உயர்த்திக்க வேண்டுமே.
அவனது உலகம் மீண்டும் அவனைச் சுற்றி சுழல ஆரம்பித்திருந்தது. ஆனால் அந்த உலகத்திற்குள் ஒரு சிறிய உயிரை மட்டும் அவனால் சேர்த்துக்கொள்ள முடியவில்லை.
தியா.
அன்று மதியம் சத்ரியன் தனது அறையில் அமர்ந்து போனில் முக்கியமான ஒரு பேச்சில் இருந்தான்.
ராயன் அவனருகில் விளையாடிக் கொண்டிருந்தான். அவனுக்கு அருகில் தியா வந்துவிடக் கூடாது என்பதற்காக ஏற்கனவே ஒரு விதிமுறையையே வைத்திருந்தான்.
"தீபா... நந்திதா... யாராக இருந்தாலும் சரி. தியா என் ரூமுக்குள்ள வரக்கூடாது." என்று திட்டவட்டமாக சொல்லியிருந்தான்.
ஆனால்... குழந்தைகளுக்கு விதிமுறைகள் எங்கே புரியும்?
ராயனைத் தேடி வந்த தியா அவனோடு சேர்ந்து சத்ரியனின் அறைக்குள்ளேயே வந்து விட்டாள்.
சத்ரியன் போனில் பேசிக் கொண்டிருந்தபடியே அவளை பார்த்தான். அவனது முகம் உடனே இறுகியது.
"தியா..." அவனது குரலில் இருந்த எச்சரிக்கையை குழந்தை புரிந்து கொள்ளவில்லை. ராயனின் பின்னால் நின்றபடி அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அடுத்த நொடி... சத்ரியனின் அழைப்பில் பயந்தவளாக அவளது கை தவறி மேசையின் ஓரத்தில் இருந்த விலையுயர்ந்த கண்ணாடிப் பொருள் தட்டிவிட, கீழே விழுந்தது.
'டங்!' கண்ணாடி உடைந்து சிதறியது. அதே நேரத்தில் ஏதோ சத்தம் கேட்டு தந்தையை தேடி ராயன் ஓடி செல்ல, அவனது காலில் ஒரு சிறிய கண்ணாடித் துண்டு குத்தியது.
"ஆஆ..." என்று குழந்தை அழுதது. காலில் இருந்து ரத்தம் எட்டிப்பார்த்தது. அந்த காட்சியை பார்த்த சத்ரியனின் கோபம் வெடித்தது.
"எத்தனை தடவை சொன்னாலும் புரியாதா?" அவன் தியாவை நோக்கி கத்தினான். தியா பயந்து பின்னால் நகர்ந்தாள். அவளது கண்களில் உடனே கண்ணீர் நிரம்பியது.
"நான்... நான்..." என்று சொல்ல முயன்றாள். ஆனால் குரல் அழுகைக்குள் கரைந்து போனது.
"வெளியே போ!" என்றவனது கர்ஜனையில் குழந்தை தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள்.
அந்த நேரத்தில்... நந்திதா அறைக்குள் வந்தாள்.
காட்சியை பார்த்தவுடன் முதலில் ராயனை பார்த்தாள்.
"ராயன்." என்று காலில் ரத்தமிருக்க கவனிக்க செல்ல, அதைக் கண்டவள் உடனே அவனை தூக்கிக்கொள்ள முயன்றாள்.
ஆனால் சத்ரியன் அவளை தடுத்தான். "முதல்ல அந்த பொண்ணை இங்கிருந்து கூட்டிட்டு போ" என்று கூறி கர்ஜித்தான்.
"ஓகே பாஸ்" என்று நந்திதா அழைத்து சென்றாள். ஆனால் குழந்தை அழுதழுது தேம்பி காய்ச்சலை இழுத்துக் கொண்டாள். இருக்காதா பின்னே சத்ரியன் கர்ஜித்தால் ஷ்ரத்தாவே அதிர்ந்து போவாளே. சிறுப்பிள்ளை பயந்ததில் ஆச்சரியப்படவில்லை.
ஷ்ரத்தா வந்து காணும் போது, அவளுக்கு ஹை ஃபீவரில் இருந்தாள்.
தியா இன்னும் அழுதுகொண்டே இருந்தாள். அவளது உடல் சூடாக இருந்ததை ஷ்ரத்தா தொட்டுப் பார்த்ததும் உணர்ந்தாள். நந்திதா லட்சுமி சத்ரியன் பேசியதையும் தியா அழுதழுது இவ்வாறு ஆனதையும் கூறினார்கள்.
"தியா..." அவளை தூக்கிக்கொண்டாள். குழந்தை அழுதபடியே ஷ்ரத்தாவின் கழுத்தை கட்டிக்கொண்டாள்.
ஷ்ரத்தா மருந்து கொடுத்து, காய்ச்சலை கட்டுப்படுத்த முயன்றாள்.
அதே நேரத்தில் சத்ரியன் ராயனை தூக்கிக் கொண்டு வந்தான். "என் பையனோட கால்ல காயம் முதல்ல பெத்த குழந்தையை கவனிக்க வந்தியா?." என்று கூறியவன் அவளை தனது அறைக்குள் அழைத்து இழுத்துச் சென்றான்.
சில நேரத்தில் ராயன் மருந்து போட்டுக் கொண்டு சோர்வாக தூங்கிவிட்டதை காட்டினான்.
சத்ரியன் அவனது தலையை வருடிக் கொண்டிருந்தான்.
ஷ்ரத்தா தியாவை பார்த்துவிட்டு சத்ரியனின் அறைக்குள் வந்ததால், அவள் ராயனை பார்த்தபடியே பேச ஆரம்பித்தாள்.
"ஏன் சத்ரியா இப்படி இருக்க?" என்றாள்.
"ஏய்.. என் பையன் சாப்பிடாமலேயே தூங்கிட்டான்." என்று கத்திவிட்டு சிறிது நேரம் அமைதியாக இருந்தான்.
பிறகு.. ''அந்த பொண்ணை ஏதாவது போர்டிங் ஸ்கூல்ல சேர்த்துடு." ஷ்ரத்தா அவனை பார்த்தாள்.
"இல்லன்னா... யாராவது பாதுகாப்பான இடத்துல கேர்டேக்கர் மாதிரி வச்சு தனியா வாழ வழி பண்ணு. இங்க என் பங்களாவுல அவ இருக்கக்கூடாது." அந்த வார்த்தைகள் ஷ்ரத்தாவுக்குள் ஏதோ ஒன்றை உடைத்தன.
"ராயன் சாப்பிடாம இருந்தது பசிக்காகத்தானே..." என்றாள் அவள் மெதுவாக. "உன் குழந்தைக்கு நீ சாப்பாடு கொடுத்திருக்கலாமே." என்றதும் சத்ரியன் அவளை பார்த்தான்.
"அதுக்கு பதிலா அந்த குழந்தையை ஏன் இப்படி தள்ளி வைக்கிற?" என்று வினாத்தொடுக்க அவனது முகம் இறுகியது.
"நீ முன்னாடி கெட்டவனா இருந்திருக்க. நிறைய தப்பு செய்திருக்க. அப்போ கூட உன் மேல எனக்கு இந்தளவு கோபம் வரல." சத்ரியன் ஷ்ரத்தாவை பார்வையிட, "ஆனா இப்ப..." அவளது கண்களில் கண்ணீர் திரண்டது.
"நீ தியாவை வெறுக்கறதை பார்க்கும்போது தான் எனக்கு உன் மேல கோபம் வருது. அந்த குழந்தை என்னடா பாவம் பண்ணுச்சு?" என்றதற்கு சத்ரியன் பதில் சொல்லவில்லை.
"சரி." ஷ்ரத்தா தன் குரலை அடக்கிக் கொண்டாள்.
"ஒத்துக்கறேன். தியாவைப் பார்த்தா... நீ ஹரிணியிடம் நடந்த தப்பை நினைச்சுக்கற. உனக்கு விசுவாசமா இருந்த வினோத் அண்ணாவுக்கு செய்த துரோகமா உனக்கு தோணுது. அதனால அவளைப் பார்க்க முடியல. ஆனா..." அவள் அவனை நேராக பார்த்தாள்.
"அவளை மறைச்சிட்டா நீ செய்த தப்பு அழிஞ்சிடுமா?" சத்ரியனின் பார்வை அசைந்தது. "அவளை ஏத்துக்காம இருக்கற ஒவ்வொரு நாளும்... இன்னொரு தப்பை நீயே செய்றேன்னு அர்த்தம்." அவன் எதுவும் பேசவில்லை.
"உனக்கு புரியல சத்ரியா. செய்த தப்புக்கு தண்டனை இல்லாம யாராலையும் தப்பிக்க முடியாது." ஷ்ரத்தாவின் குரல் மென்மையானது. சத்ரியன் அந்த தண்டனையை ஏற்றுக் கொள்ள வேண்டுமா என்ற ரீதியில் துடித்தான்.
"குழந்தைகள் நல்லவங்களாகத்தான் பிறக்கிறாங்க. அவங்க வளர்ற இடம்... அவங்களுக்கு கிடைக்கிற அன்பு... அவங்க பார்க்கிற மனிதர்கள்... அதுதான் அவங்களை நல்லவங்களாவும் கெட்டவங்களாவும் உருவாக்கும்." அவள் தியாவின் அன்னையாக பேசினாள்.
"நீ அவளை போர்டிங் ஸ்கூல்ல சேர்த்துட்டா... யாரோட பாதுகாப்புல விட்டுட்டா... அவளுக்கு என்ன குறை இருக்கும்னு தெரியுமா? அன்பு கிடைக்காது. ஒரு நாள் அந்த அன்புக்காக ஏங்குவா. அந்த ஏக்கத்துல யாராவது தப்பானவங்க கையை பிடிச்சா? டிரக்ஸ் எடுத்துக்கிட்டா? குடிக்க பழகிட்டா?, கண்டவனோட காதல் கீதல்னு ஹோட்டல்ல ரூம் போட்டா..? ஏன்.. உன் எதிரிகளோட சேர்ந்துக்கிட்டு உன்னை பழிவாங்கினா.. இதெல்லாம் நீ அந்த குழந்தையை நிராகரிச்சா அந்த குழந்தை தடம் மாறிடற விஷயம் சத்ரியா." சத்ரியன் மெதுவாக அவளை பார்த்தான்.
"அப்போ நீ என்ன செய்வ?" அவனிடம் எதற்கும் பதில் இல்லை.
"அவளை நல்லபடியா நம்ம கூட வச்சு வளர்த்திருக்கலாமேன்னு நீ நினைக்குற நேரத்துக்கு... காலம் கடந்திருக்கும்." அவளது குரல் உடைந்தது.
"ராயன் எப்படி நம்ம பையனோ... அப்படியே தியா நம்ம பொண்ணு. இதுல எந்த மாற்றமும் இல்லை. ஏன்னா அந்த குழந்தை முகத்துல ஹரிணி சாயல் இல்ல. நான் உன் சாயலை பார்த்திருக்கேன்" அந்த வார்த்தை சத்ரியனின் நெஞ்சில் நேராக இறங்கியது.
"தேவையில்லாம... தியாவை நீ இன்னொரு முறை காயப்படுத்தினா... நான் என் அப்பா வீட்டுக்குப் போயிடுவேன்." சத்ரியன் அதிர்ச்சியுடன் அவளை பார்த்தான்.
"ராயனை தரலன்னாலும்... நான் தியாவை மட்டும் கூட்டிட்டு போயிடுவேன். ஏன்னா.. எனக்கு தியா ஹரிணியோட பொண்ணுனு நான் பார்க்கலை. உன்னோட மறுவுருவமா பார்க்கறேன். அவளை என் பொண்ணா தான் பார்த்துட்டு வர்றேன்.." அவ்வளவு சொல்லிவிட்டு வேறு எதுவும் பேசாமல் தியாவின் அறைக்குச் சென்றாள்.
அவளருகில் படுத்துக் கொண்டு குழந்தையின் நெற்றியில் கை வைத்தாள்.
தியா காய்ச்சலின் மயக்கத்தில் கூட ஷ்ரத்தாவின் விரல்களை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.
அந்த இரவு ராயன் தந்தையின் அறையிலேயே தூங்கிக் கொண்டிருந்தான். ஆனால் சத்ரியனுக்கு மட்டும் உறக்கம் வரவில்லை.
அவன் கண்களை மூடினான். ஷ்ரத்தா சொன்ன வார்த்தைகள் மீண்டும் மீண்டும் காதில் ஒலித்தன. யாருக்காக மலையோடு மோத சென்று மலையை காட்டிலும் பெரியதாக மாறி நிற்கின்றான். அப்படியிருக்க ஷ்ரத்தா பட்ட அவஸ்தைகள் கொஞ்சம் நஞ்சமா? அதெல்லாம் மீண்டு இணைந்தது எதற்காக? இப்படி பிரிவை பேசுவதற்காகவா?
"ராயன் எப்படி நம்ம பையனோ... தியாவும் நம்ம பொண்ணு."
அவன் திரும்பிப் படுத்தான். மறுபுறம் புரண்டு புரண்டு திரும்பினான். கண்களை மூடினான்.
பல வருடங்களுக்குப் பிறகு... அவன் மனதில் மறந்து விட்டதாக நினைத்த ஒரு கதவு திறந்தது.
அவன் சிறுவனாக இருந்த காலம். அவன் அப்பா அம்மா சண்டையிட்டு பிரிந்திருந்த காலம், அம்மா தாத்தா வீட்டிற்கு சென்றிட, சத்ரியன் தந்தையின் பாதுகாப்பில் வாழ்ந்தான்.
தந்தையின் வீட்டில் அவன் கழித்த இரவுகள். அவனுக்கென வீடு இருந்தது, பணம் இருந்தது, வேலையை செய்ய ஆட்கள் இருந்தார்கள். ஆனால்... அம்மாவின் மடியில் கிடைத்த அந்த ஒரு பாதுகாப்பு மட்டும் இல்லை.
அன்புக்காக ஏங்கிய அந்த சிறுவனின் முகம்... இன்று திடீரென்று அவனுக்குள் ராயன் தியா இருவரின் முகமாக தோன்றியது.
அவன் கண்களை இறுக்கமாக மூடினான்.
"இல்ல..." என்று தனக்குத்தானே முணுமுணுத்தான்.
ஆனால் மனம் கேட்கவில்லை. தியா அவனை என்ன செய்தாள்? எதுவும் இல்லை. அவள் செய்தது ஒரே ஒரு தவறு. ஹரிணி வயிற்றில் உதிர்த்து விட்டாள். அதற்காக அவள் தண்டனை அனுபவிக்க வேண்டுமா? ஹரிணியை தீண்டியது தன் கைகள் தானே.
அவன் திரும்பிப் பார்த்தான். அருகில் தூங்கிக் கொண்டிருந்த ராயனை பார்த்தான்.
பிறகு தியாவின் முகம் நினைவுக்கு வந்தது. அவன் கத்தியதும் பயந்து அழுத அந்தக் கண்கள். எப்பொழுதும் ஷ்ரத்தாவை பார்த்ததும் ஓடி சென்று ஒட்டிக் கொண்ட அந்த சிறிய உடல். அவனது உள்ளுக்குள் ஏதோ மெதுவாக அசைந்தது.
"நான் தியாவை ஏத்துக்கிட்டா..." அவன் நினைத்தான். "நான் செய்த தப்பை ஏத்துக்கிட்ட மாதிரி ஆகிடுமா?" அதுதான் அவனை அதிகமாக பயமுறுத்தியது. ஆனால்... அதே நேரத்தில் இன்னொரு கேள்வி அவனை துரத்தியது. "நான் அவளை ஏத்துக்காம விட்டுட்டா... நான் மேலும் மேலும் தவறு செய்தவனா மாறிடுவேன். குழந்தையை கொடுத்துட்டு ஏமாத்தின பாவியா இருப்பேன். அந்த பாவத்தை வேற சுமக்கணுமா?
ஷ்ரத்தா தியாவோட போயிட்டா, ராயன் நிலை? ராயன் என்னை போல அம்மாயின்றி தவிப்பானா?'
சத்ரியனின் மனதில் தோன்றும் பல்வேறு கேள்விக்கு அவனிடம் பதில் இல்லை. முதல் முறையாக... எதிரிகளை எதிர்கொள்ளும் போது கூட நடுங்காத சத்ரியன்... ஒரு சிறிய குழந்தையை எப்படி நேசிப்பது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்தான்.
அந்த இரவு முழுவதும்... ராயன் அவன் அருகில் அமைதியாக தூங்கிக் கொண்டிருந்தான். ஷ்ரத்தா ராயனை காண கூட வரவில்லை.
சத்ரியனின் கண்களுக்கு அதனால் உறக்கம் வரவில்லை. தியாவை ஏற்றுக்கொள்ள மனம் மறுத்தது. அவளை நிராகரிக்க மனசாட்சியும் அனுமதிக்கவில்லை.
இரண்டிற்கும் நடுவில் ஒரு தந்தையாக மாற வேண்டிய பாதையில், சத்ரியன் முதல் முறையாக தனியாக முடிவெடுக்க தெரியாதவனாக நின்றிருந்தான்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
தகிக்கும் நிலவொன்று.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 44)
ஏலேய் கிறுக்குப் பிடிச்சவனே !
அந்த தியாவுக்கு அம்மா வேணுமின்னா ஹரிணியா இருக்கலாம், ஆனால் தியா உன்னோட உயிரணுவில பிறந்த குழந்தைத்தானே ? யாருக்கோ பிறந்த குழந்தை மாதிரி இந்த சத்ரியன் ரொம்பத்தான் பண்றான் ?
ஷ்ரத்தா ஒரு நல்ல மனைவியா, ஒரு நல்ல தாயா அழகா உண்மைகளை எடுத்துச் சொல்லிட்டா... இதற்கப்புறமும் சத்ரியனோட மரமண்டையில ஏறலைன்னா, இனி அந்த களிமண்ணுக்கு புரிஞ்சது அவ்வளவுதான்னு போயிட்டே இருக்க வேண்டியது தான்.
😐😐😐
CRVS (or) CRVS 2797
-
தகிக்கும் நிலவொன்று-50 (முடிவுற்றது)
2 weeks ago
-
தகிக்கும் நிலவொன்று-49
2 weeks ago
-
தகிக்கும் நிலவொன்று-48
2 weeks ago
-
தகிக்கும் நிலவொன்று-47
2 weeks ago
-
தகிக்கும் நிலவொன்று-46
2 weeks ago
- 25 Forums
- 330 Topics
- 1,588 Posts
- 1 Online
- 420 Members
